Wednesday, July 29, 2009

மக்கட் பதர்

அலுவலகத்திற்கோ அல்லது உங்கள் இல்லத்திற்கோ கொரியர் டெலிவெரி செய்பவரைக் கவனித்திருக்கிறீர்களா? ஆறு மாதத்திற்கு முன் வந்த அதே நபர்தானா? ஆமெனில் இன்னும் ஆறுமாதம் அல்லது ஓரிரு வருடங்கள் கழித்தும் இதே கொரியர் டெலிவரி பாயாகத்தான் இவரது வாழக்கை கழியுமா? இல்லையெனில் அவர் எங்கே?

யோசித்துப் பாருங்கள். கொரியர் டெலிவெரி செய்ய என்ன விதமான தனித் திறமை தேவை? கொடுத்த முகவரியில் டெலிவெரி கொடுக்க வேண்டும் குறித்த நேரத்தில்; அவ்வளவே. இரண்டு வருடங்கள் கொரியர் டெலிவெரி செய்தவருக்கும் இப்பொழுது புதிதாகச் சேர்பவருக்கும் பெரிய வித்தியாசமில்லை. சொல்லப் போனால் கொரியர் கம்பெனிகள் புதியவர்களைத்தான் விரும்புகின்றனர். குறைந்த சம்பளம். துடிப்பாக வேலை செய்வர்.

18 லிருந்து 25 வயதிருக்கும், ஒரு மொபைல் வைத்திருப்பார், காதில் எப்பொழுதும் இருக்கும் ஏர் போன். குறைந்த பட்சம் ஒரு டி வி எஸ் 50 அல்லது சைக்கிள். காலையில் 3 மணி நேரம் டெலிவரி மாலையில் 3 மணி நேரம் பிக்கப். சம்பளம் ஊருக்குத் தகுந்தாற்போல் 2500 லிருந்து 5000 வரை.

எல்லாம் சரி. எத்தனை வருடங்கள் இப்படி? அதன் பின்?

இன்னொரு இளைஞனைப் பாருங்கள் வெறும் 2000 ரூபாய் சம்பள்த்தில் பொறியியல் நிறுவனம் ஒன்றில் உதவியாளனாக வேலைக்குச் சேர்கிறான். ஆர்வமுடன் கற்றுக் கொண்டால் 4 வருங்களில் அவன் கையில் ஒரு தொழிலும் நல்ல சம்பளமும்.

ஆனால் பிரச்சினை என்னவென்றால் எல்லா இளைஞர்களும் அழுக்குப் படாமல் வேலை செய்யவே விரும்புகின்றனர். உடல் வருத்திப் பாடுபட எவரும் தயாராக இல்லை.

இவர்களையும் கவனியுங்கள்.

1. கிரிடிட் கார்டு பணம் வசூலிப்பவர்
2. பெர்சொனல் லோன் / கார் லோன் பணம் வசூலிப்பவர்
3. மொபைல் பில் / தொலைபேசி பில் பணம் வசூலிப்பவர்
4. டெலி மார்க்கெட்டிங் செய்பவர்கள்
5. டிவி, வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ் டெமான்ஸ்ட்ரேட்டர்கள்.
6. துணிக்கடை சேல்ஸ் மேன்கள்


இவர்கள் எல்லோருக்கும் பொதுவான அம்சங்கள் : எந்தவித உத்தியோக உயர்வும் சொல்லிக் கொள்ளும்படி சம்பளமும் கிடைக்காத இந்த வேலைக்கு மட்டுமே செல்லும் ஆர்வம்.

அடுத்த பத்தாண்டுகளில் இவ்வாறான இளைஞர்களால்தான் சூழப்பட்டிருப்போம். நிச்சயமற்ற எதிர்காலத்துடன் எதறகும் பிரயோசனப்படாத ஒரு இளைஞர் கூட்டம்.

இன்னொரு சுரண்டல் நடக்கிறது கார்ப்பொரேட் கம்பெனிகளில். 100 பேர் வேலை பார்க்கும் இடமொன்றில் நேரடியாக நிறுவனத்தில் சட்டப் படி வேலையில் இருப்பது 30 பேர்களே(ON ROLL). மீதப் பேர்களெல்லாம் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்கள் (OFF ROLL).

இந்த ஆப் ஆசாமிகள் ஆன் ஆசமிகள் சொல்லும் வேலைகளை இரவு பகல் பாராமல் செய்வதும், என்றாவது ஓரு நாள் நாமும் ஆன் ரோல் ஆசாமி ஆகிவிடுவோம் என கற்பனையில் இருப்பதும் நிறுவன ஆன் ரோல் உழியர்களுக்கு வரப் பிரசாதம்.

எதெல்லாம் ஆன் ரொல் ஆசாமி செய்யவேண்டியது எதெல்லாம் ஆப் ரோல் ஆசாமி செய்ய வேண்டியது என்ற தெளிவில்லாததால் 6 ஆயிரம் அல்லது 7 ஆயிரம் சம்பளத்துக்கு 40 ஆயிரம் சம்பளக்காரன் செய்ய வேண்டிய வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனந்த் ஒரு ஆப் ரோல் இளைஞன். அவர் தயாரித்த டாக்குமெண்ட் ஒன்றில் நான் கேட்ட சந்தேகம் எதையும் தெளிவுபடுத்த அவரால் முடியவில்லை.

நான் : “ஆனந்த், ஏன் 12% என்றால் ரிஜக்சன்?”

ஆனந்த் : ”அதெல்லாம் தெரியாது சார். 12%க்கு மேல இருந்தா அக்சப்டட். இல்லன்னா ரிஜக்சன். இதத்தானே நானும் 3 வருசமாச் செய்கிறேன்”

இவர் ஆன் ரோலில் வர வாய்ப்பில்லை என்பதை உணரும்போது இவருக்கு என்ன எதிர்காலம் இருக்கு?

அறுவடை முடிந்து களத்துமேட்டில அடித்துக் குவிக்கப் பட்ட குவியலில் இருந்து நெல் வீட்டுக்கும் பதர் குப்பைக்கும் போவதை ஒத்ததிது. தாங்கள் பதரென்பதை அறியாத வகைக்கு அறியாமை அவர்களை வஞ்சிக்கிறது

குறைந்தபட்சம் அவர்கள் மீதொரு சினேகப் புன்னகை புரிவோம். நம்மால் முடிந்தது அதுதான். சேவைக் குறைபாட்டுக்கு அவர்கள் மீது எரிந்து விழாமல் புரிந்து நடந்து கொள்வோம். சரிதானே?


.

Tuesday, July 28, 2009

சுயம் தொலைத்த மற்றொரு முகம்


எழுத்துக்காரனாக, ஆட்டக்காரனாக,
பாடகனாக, விளையாட்டு வீரனாக,
நடிகனாக, அரசியல்வாதியாக
இன்னும் ஏதோகாரனாக
எல்லோருக்கும் தேவைப்படுகிறது
சுயம் தொலைத்த
மற்றொரு முகம்.

அடர்ந்த இருளும் தனிமையும்
கைகோர்க்கும் கணமொன்றில்
அவிழ்ந்துவிடுகிற ஒப்பனைகள்
காட்டிக் கொடுக்கிறது
பிதுங்கி வழியும்
காமத்தையும், குரூரத்தையும்,
நம்பிக்கைத் துரோகத்தையும்,
பித்தலாட்டம் நிறைந்த
பேராண்மையையும்,
ஆக்டோபஸ் கைகளென
திசையெங்கும் நீளும்
ஏக்கங்களையும், பெருமூச்சுக்களையும்

ஆரம்பத்தில் அதி(ய)ர்ச்சியெனினும்
பழகிவிடுகிறது நாளடைவில்

என்றாலும்
கழிகிறது வாழ்க்கை
ஏதோவொன்றை நம்பி.


.

Tuesday, July 21, 2009

டிபன் ஹவுசில் எனக்குப் பிடித்த 10.


1. சூடா, ஆவிபறக்குற பஞ்சு பஞ்சான இட்லி மிகவும் பிடிக்கும்.

2. முறுகலாகவும் இல்லாம மாவாகவும் இல்லாம பதமா இருக்குற சாதா தோசை பிடிக்கும். பேருதான் சாதாவே தவிர தோசை சூப்பர்.

3. பட்டர் வாசத்தோட இருக்குற பட்டர் தோசை. தொட்டா உடையுற
மாதிரி இருக்கதுதான் குழந்தைங்களுக்குப் பிடிக்கும்

4. பட்டர் ஆப்பம். இதுதான் ஸ்பெசல். வெளிய முருகலாகவும் உள்ள பதமாவும், ஆனா நல்லா வெந்து இருக்கது பிடிக்கும். கெண்ட்டகி சிக்கனுக்கு ஈடா இருக்கும்.

5. மசால் தோசை. வெளியூர்ல எல்லாம் பூரி மசாலையே வச்சுத் தர்ராங்க. கோவையில மட்டும்தான் தோசைக்குன்னு தனியா மசால் செய்யுறது. அது புடிக்கும்.

6. வெங்காய தோசை. வெங்காயம் கசகசன்னு ஆகாமலும் பச்சை வாடை அடிக்காமலும் இனிப்பா இருக்கது புடிக்கும்.

7. பொடி தோசை. இட்லிப் பொடியத் தூவி வேக விட்டு மடிச்சுத் தர்றது பிடிக்கும்.

8. ஸ்பெசல் மசாலா தோசை. இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. மசால் தோசையே சூப்பரா இருக்கும். அதுல பட்டர் எல்லாம் போட்டு அசத்தலா இருக்கது பிடிக்கும்.

9.பூரி, நல்லா உப்பி, எண்ணெய் அதிகம் குடிக்காம, கை வச்சு அமுத்துனா உள்ள இருந்து ஆவி வருமே அது புடிக்கும்.

10. இதுக்கு சைடிஷ்ஷான கெட்டிச் சட்னி, வெங்காய சட்னி, புதினாச் சட்னி, தக்காளி கொத்ஸ், சாம்பார், பொடி, தக்காளி குருமா, பூரி மசால் இப்படி புடிச்சதச் சொல்லீட்டே போகலாம்.


Photo courtesy : www.flickr.com


.

Monday, July 20, 2009

புலம்பலின் காற்தடங்கள்


8 மணிக்குப் பெரியவள்
8.30 க்குச் சின்னவள்
9.00 க்கு மனைவி
கூடவே நானும்
என யாவரும்
வெளியேறிய பின்

பூட்டிய கதவுகளுக்குள்
தனிமையில் தவித்து
ஆவலாதிப் புலம்பல்களை
வெளியேற்றுகிறது வீடு

மாலை திரும்பி
வீடு திறக்கையில்
கிடைத்த இடைவெளியில்
முட்டி மோதி
வெளியேறுகின்றன
அரூபக் காற்தடங்களை
சுவரெங்கும் பதித்தபடி.





இதே பாடற்பொருளில், நண்பர் அ.மு. செய்யதுவின் கறையான்கள் அறித்த மீதிக் கதவுகள் பதிவையும் வாசியுங்கள்.


.

Friday, July 17, 2009

கதம்பம் - 17/07/09

பரிசல் காரன் - கிருஷ்ணாவை வேறெவரையும் விடச் சற்றதிகமாக தெரியுமெனக்கு. அவர்கள் நிறுவனத்தில் வேலைப்பளு காரணமாக் என்னுடன் உரையாடுவதைக் கூடக் குறைத்துக் கொண்டார். வலைப்பக்கமும் அதிகமாகக் காண முடியவில்லை. செப்டம்பர் வரை வரும் எல்லா ஞாயிறுகளிலும் வேலை செய்தால்தான் கையில் இருக்கும் ஆர்டரை குறித்த நேரத்திற்குள் செய்து முடிக்க முடியும் என்ற நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். சென்ற வாரம் நாங்கள் ஏறபாடு செய்திருந்த டூருக்கும் வரவில்லை.

இந்த நிலையில்தான் தமிழ்மண நட்சத்திரமானார். எப்படிச் சமாளிக்கப் போகிறார் எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல் வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து பதிவுகளைக் குறைத்துக் கொண்டார். எங்கே பதிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலையில் கவனக் குறைவாக இருந்து விடுவாரோ என்ற என் எண்ணத்தை புரிந்து கொண்டவர் போலவே நடந்துகொண்டார். அது சரி எப்பொழுதும் இருக்கும் துருவ நட்சத்திரம்தானே அவர்.

முன்னுரிமை அளிக்க வேண்டியது எது என்ற தெளிவோடு இருக்கும் அவரைப் பாராட்டுகிறேன்.


***********************************************************************************

அரசாங்க மருத்துவமனைகளில் இலவச இருதய அறுவை சிகிச்சை பெற உங்கள் வருட (கவனிக்கவும் வருட) வருமானம் ரூ 12,000 க்கும் குறைவானது என கிராம நிர்வாக அலுவலர் சான்றளிக்க வேண்டும். உண்மை வேறாக இருந்தாலும் கி நி அ வாங்குவதை வாங்கிக் கொண்டு சான்றளித்து விடுவார். அதைக் கொடுத்து அறுவை சிகிச்சை செய்து கொள்வார்கள்.

ஆனால் புதிதாக அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது கி நி அ க்களுக்கு. அதன்படி யாருக்கும் ரு.24000க்கு குறைவாக வருமானச் சான்றிதழ் வழங்கக் கூடாதாம்.

இதற்கு இலவச அறுவைச் சிகிச்சை நிறுத்தம் என அறிவித்திருக்கலாம்.

**********************************************************************************

டெல்லி மெட்ரோ வேலைகளில் ஏற்பட்ட விபத்து துரதிருஷ்டமானது. ஆனால் மற்ற அரசியல்வாதிகளைப் போலல்லாமல் உடனே ஸ்பாட்டுக்கு வந்து ஆறுதலளித்ததும் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ததும் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் மீதான நல்லெண்ணத்தை அதிகரித்தது.

அரசு அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது சரியான முடிவு. இவரைப் போன்றவர்களையும் அனுப்பி விட்டால் அவரை ஆதர்சமாகக் கொண்டு செயல்படும் மற்றவர்களுக்கு அது நம்ம்பிக்கையிழக்கச் செய்து விடும்.

மாதவராஜ் பதிவில் குறிப்பிட்டபடி பங்கேற்பவர்களுக்கு திட்டத்தின் மீதான belonging உடைபடாமல் காப்பாற்றுவது முக்கியம்.

பத்திரிக்கைகள் அவரைத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என எழுதுவது எதன் அடிப்படையில்? ஒரு வேளை பாலக்காடு தமிழ் நாட்டில் இருக்கோ?

**********************************************************************************

நாடோடி இலக்கியன் திருப்பூரில் இருக்கிறார். சென்ற வாரம் சனிக்கிழமை சந்தித்தேன். பொதுவாக ஒருவர் ரசிக்கும் பாடலகளை வைத்து அவரை எடை போடுவேன். அந்த விதத்தில் என் ரசனைக்கு 100% சதவீதம் ஒத்துபோகும் ஒருவர் அவர். 80 களில் வந்த இளையராஜா பாடல்களில் அதிகம் பேசப்படாத நல்ல பாடல்களைச் சொன்ன மாத்திரத்தில் பாடினார். இந்த வாரம் அவரது கவிதை ஒன்று.

எப்படித் தொலைப்பது?!

வழக்கமாகச் செல்லும்
இப்பாதையின்
இதே இடத்தில்தான்
முன்பொருமுறை
முக்கியமான பொருளொன்றைத்
தொலைத்தேன்,
ராசியில்லா இவ்விடத்தைக்
கடக்கும் போதெல்லாம்
இருக்கும் பொருட்களை
அனிச்சையாய் தடவிப்
பார்த்துக் கொள்கிறேன்,
பொருளைக் கண்டெடுத்தவனும்
இப்பாதையை வழக்கமாக்கி
கொண்டவனாய் இருப்பின்,
இதே இடத்தை
நன்றியோடு நினைவு கூர்ந்து
நகர்ந்து போகக் கூடும்,
எனக்கான பிரச்சனை என்னவெனில்
தொலைந்தப் பொருள் தொலைந்ததுதான்,
இவ்விடத்தைக் கடக்கயில் வரும்
இப்படியான நினைவுகளை
எப்படித் தொலைப்பது?!

ஒரு மறு வாசிப்பில் கவிதையில் வரும் பொருளைக் காதலியாக நினைத்துப் பாருங்கள்; இழப்பின் வலி புரியக்கூடும்.


********************************************************************************

ஜோசப் பால்ராஜ் தனது ஸ்டேட்டஸ் மெஸேஜாகச் சில பொன்மொழிகளைப் போடுவார். அது அந்தந்த சூழ்நிலைகளுக்குப் பொருத்தமாக இருக்கும். சமீபத்திய ஒன்று.

Engineers like to solve problems. If there are none, they create one.

இதில் Engineers என்பதற்குப் பதில் அவரவருக்குப் பிடித்ததைப் போட்டுக் கொள்ளலாம்.

********************************************************************************

மெயிலில் பின்னூட்டமிடுவதில் உள்ள சிரமங்களைப் புரிய வைத்த உங்களுக்கு நன்றி. நீங்கள் கேட்டுக் கொண்டதற்கினங்கி பின்னூட்டமிடும் வாய்ப்பு திறக்கப் படுகிறது; மட்டுறுத்தலுடன்.

அதே போல் பிறர் பதிவுக்கும் பின்னூட்டம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை மின்னஞ்சல் மூலமும் மின்னரட்டையிலும் உணரவைத்த உங்களுக்கு நன்றி. எனது பின்னூட்டம் தொடரும், நல்ல பதிவுகளுக்கு.

உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்; குறிப்பாக சஞ்சய், கிரி இருவருக்கும்.
முகம் தெரியாத எதிரியுடனான நிழல் யுத்தத்தில் நான் இழக்கவிருந்தது என்னவென்பதைப் புரிய வைத்ததால்.

மேலும் யாரோ ஓரிருவருக்காக, என்மீதபிமானம் வைத்திருக்கும் மீதித் தொன்னூற்றெட்டுப் பேரை விட்டு ஏன் விலக வேண்டும்?


.



Thursday, July 16, 2009

சபிக்கப்பட்ட பன்றிகள்


எழுதுவதென்பது பால்யத்தில் தொடங்கிய கனவு. எழுதுமுன் நிறைய வாசிக்க வேண்டுமென்ற அப்பாவின் அறிவுரையின் படி வாசிக்க ஆரம்பித்தேன். எழுதிக் காட்டியதையெல்லாம் இன்னும் பக்குவப்படவேண்டுமெனச் சொல்லி ஆற்றுப்படுத்தினார்.

பிறகு குடும்பம், குழந்தைகள் அதைச் சார்ந்த ஓட்டமென வாழ்க்கை வேறு திசைகளில் பயணிக்க, எழுத்தாசை தற்காலிகமாக பின்வரிசைக்குத் தள்ளப்பட்டது.

இணையத்தில் எழுதும் வசதி குறித்துக் கேள்விப்பட்டதும், 6 மாதங்கள் வரை வாசிக்க மட்டுமே செய்தேன். வலைப்பூ தொடங்கி எழுத ஆரம்பித்ததில் ஆரம்பத்தில் சிறிது தடுமாற்றம் இருந்த போதும் ஓரளவுக்கு கைகூடி வந்தது, சைக்கிள் பழகும் சிறுவனின் குரங்குப் பெடல் முயற்சிபோல்.

ஒத்த சிந்தனையுள்ள நண்பர்கள அமைந்ததும் அவர்களுடன் இணையம் தாண்டிய நட்பு மலர்ந்ததும் நான் பெற்ற பாக்கியங்கள் அதைக் குறித்து எழுதிய பதிவு என்ன தவம் செய்தேன்.

சமீபத்தில் ஒரு பதிவரின் நண்பரின் தாயார், வீட்டில் கோபித்துக்கொண்டு வெளியேறித் திக்குத் தெரியாமல் அலைந்ததும் இறுதியாக அவர் வேலூரில் இருப்பதை அறிந்து கோவையிலிருந்து அந்நண்பர் சென்று அவரது தாயாரை மீட்டு வர பதிவர்கள் செய்த உதவியும், அந்த சமயத்தில் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 16 பேர் கான்பிரண்ஸ் முறையில் பேசியதும் எதையும் சாதித்த உணர்வைத் தரவில்லையாயினும் நம்மைச் சுற்றி நண்பர்கள் பதிவர்களாக அறிமுகமாகியும் ஆகாமலும் சூழ்ந்திருக்கிறார்கள் எப்போதும் நம்மைக் கவனித்தபடியே என்ற ஆறுதலையளித்தது.

வலதுகை கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல் செய்யும் பதிவர்களை என்ன சொல்லிப்பாராட்ட? ஒரு பதிவரின் குடும்பத்தில் நின்றுபோகவிருந்த திருமணம் பதிவர்களின் உதவியால் ஜாம் ஜாமென நடந்திருக்கிறது. இந்த ஞாலத்தின் பெரிய காலத்தாற் செய்த உதவியெல்லாம் பழகிய ஒரே வருடத்திற்குள் என்பதுதான் இன்னும் விசேசமானது.

இருந்தும் யார் கண் பட்டதோ தெரியவில்லை, தற்போது சில புல்லுருவிகள் மன உளைச்சலை ஏற்படுத்தவும் அவதூறு பரப்பவும் ஆரம்பித்திருக்கிறார்கள். செய்யாத குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டி இருக்கும் நிலைதான் பேரழுத்தமேற்படுத்துகிறது

பதிவுலகம் பத்திரமான இடமல்ல என்பதான ஒரு நிலை இருக்கிறது. நீடிக்குமா இல்லை அமைதி திரும்புமா? எல்லோரும் தங்கள் எழுத்தாற்றலால் மற்றவர்களைக் கவர்ந்தும், மிஞ்சியும், பாராட்டியும், ஊக்குவித்தும் ஒன்றாக இருப்பார்களா?

இது போன்ற எண்ணற்ற கேள்விகள்; விடையேதுமற்றவை. தொழில்நுட்பத்தின் மூலம் அவர்களை அடையாளங்காண முடியுமென்றாலும் சில தொழில் நுட்பப் புலிகளும் இதில் இருக்கலாமோ என்ற சந்தேகமும் இருக்கிறது.

பிரபலமாவதும், அதிக ஹிட்களை, பின்னூட்டங்களை வாக்குக்களைப் பெற வேண்டி நடத்தப் படும் இந்த நாடகங்களில் பலியாவது பதிவர்களின் படைப்பாற்றல். இது போன்ற ஜாலங்கள் உடனடி பலனைத் தந்தாலும் நெடுநாட்கள் பம்மாத்துப் பண்ண முடியாது. அதே சமயம் நல்ல விஷயஞானமுடனும், நல்ல எழுத்துத் திறமையுடனும் எழுதப்படும் பதிவுகள் இன்றில்லாவிட்டாலும் நாளை அல்லது நாளை மறுநாள் பாராட்டப்படும். ஆனால் எல்லோரும் 15 நிமிடப் புகழுக்குத்தானே மாரடிக்கிறார்கள். அது நிரந்தரமல்ல.

எதற்கு வம்பு ஒதுங்கி இருப்பதே நல்லது. எழுதுவதை எழுதிப் பதிவிடுவதுடன் நிறுத்திக் கொள்ளவும், எவருடைய பதிவிலும் பின்னூட்டமிடுவதில்லையெனவும் முடிவு செய்திருக்கிறேன். மின்னஞ்சல் முகவரிக்கு பாராட்டி ஒரு மின்னஞ்சல் எழுதுவேன்; குறையேதுமிருப்பின் சுட்டியும். இது ஒரு தற்காலிக முடிவேதான். நிலமை சீரானதும் மீண்டு(ம்) வரலாம்.

நின்று போராடலாமே எனும் நண்பர்களுக்குச் சொல்ல ஒரு கதை மட்டுமேயுண்டு என்னிடம்.

யானை ஒன்று குளித்து சகல அலங்காரங்களுடன் சாமி உற்சவம் போகவென கோவில் நோக்கி வருகிறது். ஒரு சிறு பாலத்தைக் கடந்துதான் போக வேண்டும். எதிரில் இரண்டு பன்றிகள் வருவதைக் கண்டதும் யானை ஒதுங்கி பன்றிகளுக்கு வழி விடுகிறது, அழுக்காகிவிடக்கூடாதேயென.

யானையைக் கடந்து போகும் பன்றிகள் பேசிக் கொள்ளும், “நம்ம பலத்தப் பார்த்தியா? யானை பயந்துருச்சு” என

பயந்தது யானையாகவே இருந்து விட்டுப் போகட்டும். பன்றிகள் கொண்டாடட்டும்.

பன்றிகள் பன்றிகளாகவே மரிக்க சபிக்கப்பட்டவை. அவை ஒரு போதுமாகா யானைகளாக.


|

T.V. Radhakrishnan

to me
show details 12:13 (6 hours ago)


Follow up message
நல்ல பதிவு

ஆனாலும் என்னைப்போன்றோர்..உங்களைப் போன்றோரின் பின்னூட்டத்தை எதிர்ப் பார்க்கிறோம்.பின்னூட்டம் என்பது சவலைக் குழந்தைக்கு
பரிந்துரைக்கப்படும் டானிக் போல.அதைக் கொடுப்பதை நிறுத்தி பல புது
பதிவர்களான குழந்தைகளை சாகடிக்க வேண்டாம் ராஜேந்திரன்.மறு பரீசலனை
செய்யுங்கள் முடிவ


அய்யா,

உங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி. பின்னூட்டங்களை மின்னஞ்சலிலேயே செய்து விடுகிறேன். அதைப் பின்னூட்டத்தில் எடுத்துப் போட்டுக் கொள்வதில் எனக்கேதும் ஆட்சேபமில்லை.



உங்கள் பின்னூட்டங்களை இங்கே அனுப்பவும்


.

Monday, July 13, 2009

கல்கியில் நர்சிம் மற்றும் முத்துவேல்.

சகபதிவர்கள் மேலும் மேலும் பத்திரிக்கைகளால் அடையாளங் காணப்பட்டு அறிமுகப் படுத்தப் படும்போது மனது மகிழ்கிறது.

இந்த வாரக் கல்கியில் நண்பர் நர்சிம் மற்றும் ச.முத்துவேல் ஆகியோரின் வலைப்பூக்களை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள்.




உடன் அறிமுகப்படுத்தப்பட்ட மற்ற பதிவர்களுக்கும் என் வாழ்த்துகளை இங்கே பதிந்து கொள்கிறேன்.

நன்றி : கல்கி வார இதழ்.

.

Saturday, July 11, 2009

சைக்கிள் கூடை நிறையப் புன்னகைகள்





எதிர்பாராத திருப்பத்தில்
இடது பக்கம் ஒடிக்க
அவளும் இடது பக்கம் ஒடிக்க
மாற்றி வலது பக்கம் ஒடிக்க
அவளும் வலது பக்கம் ஒடித்து
நேராக்கி அவளும் நேராக்கி
மறுபடியும்
இடது வலது நேர்
அவளும் இடது வலது நேர்
கடைசியாக
இருவரும் கால் ஊன்றி
தகவல் இடைவெளியை
ஒரு புன்னகையில்
சரி செய்துக்கொண்டே
கடந்து வந்து விட்ட
ஒரு திருப்பத்தில்
எந்த தகவல் இடைவெளியும் இல்லை
அவளும் திரும்ப
நானும் திரும்ப

- ரவிஷங்கர்



நன்றி ரவி. தின வாழ்வின் இது போன்ற கணங்களைக் கவிதையாக்குதல் எனக்குப் பிடிக்கும். பாத்ரூமில் ஒட்டி வைத்த ஸ்டிக்கர் பொட்டுக்கள் பற்றி ஈரோடு தமிழன்பன் ஒரு கவிதை எழுதியிருப்பார். தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

.

Thursday, July 09, 2009

கத்திக் கப்பல்


பெருமழை நாளொன்றில்
முற்றத்தில் தேங்கிய
மழை நீரில்
கத்திக்கப்பல் விட
சென்ற வருட
கணக்கு நோட்டிலிருந்து
தாள்களைக் கிழித்து வைத்துக்
காத்திருந்தாள் அச்சிறுமி

வேலையாளை வரச்சொல்லி
அடைப்பைச் சரிசெய்ததில்
சட்டென வடிந்தது

சிறுமியின் உற்சாகம்.

.

Wednesday, July 08, 2009

எள்ளும் எலிப் புழுக்கையும்

”அண்ணாச்சி”

”சொல்லுடே அய்யப்பா?”

”மனசே சரியில்ல அண்ணாச்சி”

“என்னடே இப்பத்தாம் அந்தபுள்ள முத்தம்மா உன்னக் காதலிக்கிறேன்னுட்டாளே. பின்ன என்ன? “

“அவங்கண்ணனுக்குத் தெரிஞ்சு போச்சுன்னு சொல்லுதா?”

“எப்படிடே?”

“பொஸ்தவத்துக்குள்ள எம்போட்டாவ வச்சிருக்கா. அத அவம் பாத்துட்டான்.”

“என்ன கேட்டாம்?”

“இதெல்லாம் நல்லதுக்கில்ல. அம்புட்டுத்தாம்னு சொல்லியிருக்காம்.”

“நல்ல வேலை, அந்தப் புள்ளைய பகவதிபுரத்துக்குக் கூட்டீட்டுப் போயி நீ செஞ்ச காரியமெல்லாம் அவனுக்குத் தெரியாது. தெரிஞ்சுதோ ஒங்க அம்மைகிட்டகுடிச்ச பாலக் கக்க வச்சிருவாம் பாத்துக்கிடு. ஏம்டே இப்படி மோசி குடிச்ச மாடு கணக்கா அலயுதிய?”

“அண்ணாச்சி ரெம்பத்தான் கிண்டல் பண்ணாதியோ”

“சரிடே இப்பம் என்னை என்ன செய்யச் சொல்லுதே?”

“நீங்கதான் நல்லபடியா முடிச்சு வைக்கணும்.”

”ஏதோ சின்னப் பயலுவ. என்னத்தையும் பேசுதீயன்னு கண்டுங்காணாம இருந்தா, இப்ப தோளுல ஏறி காதுல மோளுங்கற கதையாவுல்ல இருக்கு”

”அப்படியெல்லாஞ் சொல்லப்பிடாது அண்ணாச்சி”

“சரிடே. அந்தப் புள்ள ஸ்ட்ராங்க இருக்காளா? இல்ல அவங்கப்பா சுப்பையனக் கண்டு பாவாடையில மோண்டுறுவாளா?”

“அதெல்லாம் இல்ல அண்ணாச்சி. டபுள் ஸ்ட்ராங்கு”

“இதுல உங்கூட யாரெல்லாம் உண்டும்”

“வீரைய்யா, அய்யம்பெருமாள், இசக்கி மூணு பேரும் இருக்கானுவ”

“சரி ஒரு காரியஞ் செய். கொஞ்சம் துட்டு உண்டாக்கு. ஒரு வாரத்துக்குள்ள உனக்கு ஒரு வழி செய்யலாம். அதுக்குள்ள அங்கன அவளக் காங்கப் போனம் எசலியாயிடுச்சுன்னு ஆவலாதி கொண்டாராதா”

“அண்ணாச்சி, எம்புட்டுத் துட்டு வேணும்?”

“அது வேணும் லச்ச ரூபா. தாலி கட்டணும்னு ஆசை வச்சிருக்க நீதாம்டே சொல்லணும் அத. கூடக் கொறைய வச்சாலும் பெரிய நோட்டு அஞ்சாவும் பாத்துக்கிடு”

அண்ணாச்சி அப்படித்தாம். மிலிட்டேரியில இருந்து ரிடையராகி வந்திட்டாருன்னும், இல்ல இவர வச்சுச் சமாளிக்க முடியாம வடநாட்டுப் பயலுவ அனுப்பிட்டாங்கன்னும் ஊருக்குள்ள பேச்சு. 40 வயசுக்கு மேல அவருக்கு வாக்கப் பட ஒருத்தியும் தயாரா இல்லை. தயாராக இருந்த ஒரு சிலவளுவள இவருக்குப் பிடிக்கல. அப்படியே காலங் கடந்துருச்சு. குடும்பம் குட்டின்னு ஒண்ணுங் கெடையாதுல்லா, எப்பவும் வயசுப் பசங்களோடதான் சாவகாசம் எல்லாம்.

அடுத்த வாரம், முத்தம்மாவும், ராசாத்தியும் செங்கோட்டைக்குச் சினிமாவுக்குப் போறோம்னு சொல்லீட்டு தெக்குமேடு பஸ்ல ஏறிட்டாங்க. அதுக்கு முன்னால அவளோட பத்தாப்பு டி சி ஜெராக்ஸ் காப்பியும் முக்கியமான ட்ரெஸ் ரெண்டயும் ஒரு வொயர் கூடையில போட்டு அண்னாச்சிகிட்டக் கொடுத்து வச்சிருந்தா.

இலஞ்சியில் இறங்கிட்டாங்க. பின்னால வண்டியில வந்தானுவ சேக்காளிக. மாலை புது வேட்டி, சேலை எல்லாம் ரெடி. இலஞ்சிக் குமாரர் கோய்ல்ல வச்சுக் கல்யாணத்த முடிச்சுட்டு நேரா தெங்காசி பஸ் ஏறிட்டாங்க ரெண்டு பேரும். அங்கன எறங்கி மதுர பஸ்ல ஏறுர வரை அவங்க ரெண்டு பேரு உயிரும் அவங்ககிட்ட இல்ல. கடையநல்லூர் தாண்டுனதும்தான் மூச்சே வந்துச்சு.

அண்ணாச்சி கொடுத்த மதுரை அட்ரஸ்ல போய் ரெண்டு நாள் நல்லா தங்கி இருந்த பின்னாடி மதுரா கோட்ஸ்ல ஒரு வேலையும் கெடைச்சது. முதல் மாசச் சம்பளம் வாங்குனதும் தனியா ஒரு வீடு பாத்து போய்ட்டாங்க.

ஆறு மாசத்துல ஒரு தடவைகூட ஊர்ப் பக்கம் வரவேயில்லை. முத்தம்மா புள்ளையாண்டதும் அவங்கம்மை ஞாபகம் வந்திருச்சு.

“ஏங்க எங்க அம்மையப் பாக்கணும்போல இருக்குங்க. கண்ணுக்குள்ளேயே நிக்கா”

“அதுக்கென்ன அண்ணாச்சிகிட்ட நோட்டம் பாக்கச் சொல்லியிருக்கேன். இன்னைக்குப் போன் பண்ணுதம்னு சொல்லியிருக்காவ. உங்க அண்ணம்தாம் இன்னும் குதிக்கானாம்”

”அதெல்லாம் என்னப் பார்த்தா எல்லாத்தையும் மறந்துருவாம்”

“சரி பார்ப்போம”

அண்ணாச்சி நோட்டம் பாத்து , “ ஏலே அதிர்ஷடக் காரப் பெயலே எல்லாஞ்சரியாயிருச்சு. அவுக வீட்டுலயும் உங்க வீட்டுலயும் பேசியாச்சு. ஒரு 10 நாள் லீவு எடுத்துட்டு வந்தன்னா ஊரறியக் கல்யாணம்னு சொல்லிட்டாவ. பத்து களஞ்சும் பத்தாயிரம் ரொக்கமும் போடுதம்னு சொன்னாக”ன்னு சொன்னாரு.

ரெண்டு பேருக்கும் சந்தோஷம் அள்ளுது. 10 நாளு லீவு எடுத்துட்டு ஊருக்குப் போனாங்க. பஸ்டாண்டுல நின்னு வரவேத்து ஆரத்தி எல்லாம் எடுத்து வீட்டுக்குக் கூட்டீட்டுப் போனாங்க.

பாலும் பழமும் சாப்பிடச் சொல்லீட்டு, “மருமவனே நீங்க உங்க வீட்டுக்குப் போங்க முகூர்த்தம் முடிஞ்சதும் நாங்களே அனுப்பி வெக்கோம்”னாங்க.

இவனும் ரெண்டு நாளா சேக்காளிகளோட எசலிக்கிட்டு ஒரே கும்மளமடிக்காம். ஆதாளி பண்ணுதாம். எப்படிக் கடத்துனாம், மொதல்ல எங்க கூட்டீட்டு போனாம் என்ன செஞ்சாம்னு கதைகதையாச் சொல்லுதாம்.

மூணாநாளு இவன் அங்கன போயி அந்தப் பிள்ளயப் பாக்கலாம்னு போறான். எல்லாரும் கூடி உக்காந்துக்கிட்டு வேற மாதிரிப் பேசுதானுவ. ”எலே நீ என்ன ஜாதி எங்க பிள்ள என்ன ஜாதி. உனக்கு எங்க ஜாதிப் பிள்ள கேக்குதோ?”ங்கானுவ ஆளாளுக்கு.

இவனுக்கு ஒண்ணும் புரியல. பைய நவண்டு வந்து அண்ணாச்சி கிட்டப் பேசுதாம், “ என்ன நடக்குது அண்ணாச்சி. எனக்குப் பயமா இருக்கு” ங்கான்.

“நம்மள ஏமாத்திக் கழுத்தறுத்துட்டானுவடே. நம்ப வச்சு மோசம் பன்ணீட்டானுவ. அந்தப் புள்ள வவுத்துல இருந்ததக் கலச்சிட்டானுவ. புண்ணு ஆறுனதும் அம்பாசமுத்திரக்காரனுக்கு கட்டிக் கொடுக்கப் போறானுவளாம்”


முத்தம்மாவுக்கு இப்பம் மூணு புள்ளீவ பெரியவ எட்டு படிக்கா அடுத்தவம் ஆறாப்பு. கடைக்குட்டி இப்பத்தாம் ஒண்ணாப்பு. புள்ளீவள பள்ளியோடத்துக்குப் பத்தி விட்டுட்டு அவ புருசன் மாடசாமி வச்சிருக்க டீக்கடைக்கு மே வேலைக்குப் போயிருவா. 10 மணிக்கு மேல வடை பஜ்ஜி போண்டா எல்லாம் சுடச்சுடப் போட்டுத் தருவா. வியாபாரம் ஓரளவுக்கு நடக்குது. இடம் வாங்கிப் போட்டிருக்காவ ரெண்டு பேரும். சீக்கிரம் வீடும் எடுத்துருவாவ.


அய்யப்பன் இப்பம் திருச்சியில இருக்காம். தெங்காசியிலதாம் பெண்ணெடுத்தது. மாமனார் வழியில ரயில்வேல காங்க்மேன் வேலை வாங்கியாச்சு. 25 களஞ்சும் 25 ஆயிரம் ரொக்கமும் குடுத்து தன்னோட பொண்ணையும் கொடுத்தாரு புண்ணியவான். ரயில்வே கோட்டர்ஸ்ல எல்லா வசதியும் இருக்கு. ஒரே பையன் கான்வெண்ட்டுல படிக்காம்.

என்னது? அண்ணாச்சி என்ன ஆனாருன்னா கேக்கிய? இந்தா இப்பம் குளிக்க கூட்டீட்டு வருவாவ பாருங்க. அந்தா நாலாவதா வாராரு பாருங்க அவருதான். ஆளு மெலிஞ்சு போய் மொகமெல்லாம் வத்திப் போயி.

ஏம்னா கேக்கிய? அவரு சனக்கைய எடுத்துட்டானுவ ரெண்டு வீட்டுக் காரனுவளும்.

குற்றாலம் வந்தீகன்னா குளிக்க மட்டுமில்ல அண்ணாச்சியையும் பாக்கலாம். வாரீயளா?

.

Tuesday, July 07, 2009

பால்யம் இழந்தவள்


அடியுரமாக ஆட்டுப் புழுக்கை
ரத்த நிறத்தில் செம்மண்
ஆற்றுமணல் எல்லாம்
கலந்து நிரப்பிய
தொட்டியிலிட்ட செடி
பூத்தது
மூன்றே மாதத்தில்
எல்லோரும் மகிழ.

முதல் பூவைச் சூடிச்சென்ற
ஏழாவது படிக்கும்
சின்னவள்
இன்று மாலை
பெரியவளானாள்

ஏனோ வலித்தது மனது.

.

Sunday, July 05, 2009

நன்றி நவிலல்

ஒரு வாரம் தமிழ்மண நட்சத்திரமாக இருந்தது ஒரு மாறுபட்ட அனுபவம். நட்சத்திரப் பதிவென பெரிதாகப் பேர் சொல்லும்படி எதையும் எழுதிவிடவில்லையெனினும் சோடை போகவில்லை என்பதொரு ஆறுதல். ஆனால் இவ்வாய்ப்பின் மூலம் ஒன்றைப் புரிந்துகொள்ள முடிந்தது; பத்திரிக்கைக்குத் தொடர்கதையோ, கட்டுரையோ அல்லது பத்தியோ ஏதோவொன்றை எழுதுபவர்கள் அனுபவிக்கும் நேரக்கெடுதரும் அழுத்தம் என்ன எனபதை.

நமது வலைப்பூவில் எழுதும்போது எந்தவித நேரக்கட்டுப்பாடுகளுமில்லை. எழுதினால் தொடர்ந்து எழுதலாம் எழுதாமலும் இருக்கலாம், ஒரு மாதம் போல இடைவெளியும் விடலாம்; சித்தன் போக்குச் சிவன் போக்கென. ஆனால் நட்சத்திரமாக ஆகும்போது நம்மீதான(சரியாகப் படிக்கவும் நமீதா மீதான அல்ல) எதிர்பார்ப்பு அதிகரித்து விடுகிறது. கூடவே அழுத்தமும்.

எபோதுமிருந்ததை விட இவ்வாரம் பணி நெருக்கடியும் அதிகம். நெருங்கிய உறவினர் வீட்டுக் காது குத்து (கெடா வெட்டு) இன்று. முடித்தே ஆக வேண்டிய வேலை நிமித்தம் போக முடியாமற் போயிற்று.

இடையே பதிவெழுதக் கொஞ்சம் நேரத்தையும் திருடிக் கொள்ள வேண்டியதாயிற்று, ஓரளவுக்கு நிறைவாகவே செய்திருக்கிறேன் என நினைக்கிறேன்.

அரசியல் மேடைகளில் முக்கியத் தலைவர் வருமுன் சேர்ந்திருக்கும் கூட்டம் கலைந்து போகாமல் இருக்க உள்ளூர் பிரமுகர் மொக்கையாகப் பேசுவது நியமம். அது போல் நாளை வர இருக்கும் பெரும் பதிவருக்கு முன் என்னை அழைத்ததின் பின்னணியில் இருக்கும் தமிழ்மணத்தின் உள் குத்தையும் ரசித்தேன்.

இந்நல் வாய்ப்பைத் ஈந்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு சொல்ல நன்றியல்லாது வேறேதுமில்லை என்னிடம் .

பதிவைப் படித்தும், பின்னூட்டமிட்டும், மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும், நேரிலும் பாராட்டி ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.


பின் குறிப்பு : ஒரு மொக்கைப் பதிவு எழுதியிருக்கலாமே என மொபைலில் கேட்டவரைக் குறித்து அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை. நான் எழுதுவதெல்லாம் மொக்கையல்லாது பின் வேறென்ன? (இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புது?)

பின் பின் குறிப்பு : வெயிலானின் நேர்மையான் விமர்சனம்.
14:09 நட்சத்திர வாரத்துல வெறும் மொக்கைப் பதிவுகளாவே வந்துட்டிருக்கு. ஏன்?

9 minutes
14:19 me: இதுக்கே நாக்கு தள்ளுது, தினமும் காலை 4 மணி வரை பிரஸ்ல இருக்கேன். மெஷின் இன்னும் முழு ஓட்டம் வரலை.

பின் பின் பின் குறிப்பு : என்னைத் திட்ட ஆனந்தமா ஒரு அனானி கிளம்பியிருக்காரு அவருக்காக அனானி ஆப்சன் தடை செய்யப் படுகிறது. நேர்மையாக என்னை விமர்சிக்கும் அனானிகள் மன்னிக்கவும்.

.

Saturday, July 04, 2009

ஒரு துப்பறியும் கதை

இந்தக் கதைய எழுதுற நான் நீங்களாகக்கூட இருக்கலாம், அது முக்கியமில்லை. ஆனா நானோ நீங்களோ இப்படி ஒரு சிக்கல்ல சிக்காம இருப்பதுதான் முக்கியம்.

என்ன நடந்துச்சுன்னு சொல்லுன்னு கோபமாக் கேக்குறீங்க. சரி சரி. புரியுது. ஆனா நீங்களும் என்னை மாதிரி போலீஸ் ஸ்டேசனுக்கெல்லாம் போய்ட்டு அவமானப் பட்டு வந்திருந்தீங்கன்னா நான் பட்ட கஷ்டம் உங்களுக்குப் புரியும்.

போன வாரம் ஒரு நாள் மதியம் சாப்பாட்டுக்கப்புறம் கட்டையச் சாய்க்கலாம்னு யோசிச்சிட்டிருக்கப்பத்தான் போன் வந்தது என் மனைவிகிட்ட இருந்து, “ஏங்க கொஞ்சம் ஸ்கூல் வரைக்கும் வர முடியுமா?”

“ஏம்ப்பா என்ன ஆச்சு?”

“ஒரு சின்னப் பிரச்சினைங்க”

“ஏன் உங்க ஹெச் எம் இல்லையா?”

“இருக்காரு. நீங்க வாங்க உடனே”

சரின்னு கிளம்பிப் போனா ஹெச் எம் கூட இன்னும் நாலஞ்சு டீச்சர்களும் இருக்காங்க. ஹெச் எம்முக்கு எதிரா ஒரு 35 வயசு மதிக்கிறாப்ல ஒரு பெண்மணி உக்காந்திருக்காங்க. நல்ல பணக்காரக் களை முகத்திலயும் உடையிலயும்.

“என்ன சார்”னு ஹெச் எம்மப் பார்த்துக் கேட்டேன்.

அதுக்கு அவரு பதில் சொல்லுறதுக்கு முன்னாடியே , “இவரு யாரு?”ன்னாங்க அந்தம்மா.

“டீச்சர் ஹஸ்பெண்டு”ன்னாரு ஹெச் எம்.

“இதுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? ஏன் வெளியாளுங்கள எல்லாம் இதில நுழைக்கிறீங்க?”

“அவரு எங்க வெல்விஷர்மா. ஸ்கூலுக்கு நெறைய உதவி பண்ணியிருக்காரு. அதனாலதான்.”

ஹெச் எம் என்னப் பார்த்து, “ சார் நம்ம ஸ்கூல் பசங்க ரெண்டு பேரு இவங்க வீட்டுக்குப் போய் தண்ணி குடிச்சிருக்காங்க. அதுக்கப்புறம் அவங்க செல் போனக் காணோம்னு புகார் தர்ராங்க”

“என்ன மாடல் மேடம்?”

“ சோனி எரிக்ஸன் கே 750 ஐ”

“எப்ப இருந்து காணோம்?”

“10.30 மணிக்கு ரெண்டு பசங்க வந்தாங்க. குடிக்கத் தண்ணி வேணும்னாங்க. குடுத்தேன். இன்னும் வேணும்னாங்க. உள்ள போயிட்டு வர்ரதுக்குள்ள போயிட்டாங்க. நான் வேற வேலைகளைப் பாத்துட்டிருந்தேன். அரை மணி நேரமா போனே வரலை. பார்த்தா போனையே காணோம்.”

“சார் பசங்க ரெண்டு பேரையும் வீட்டுல பார்த்தீங்களா?”

“வீட்டுக்கு ஆளனுப்பிப் பார்த்தாச்சு. ரெண்டு பசங்களும் வீட்டுல இல்லை”

“அப்ப நிச்சயம் ஆட்டையப் போட்டுட்டாங்க. சரி மேடம் ஈவினிங் வரைக்கும் டயம் கொடுங்க. கிடைக்கலைன்னா அவங்க பேரண்ட்ஸ் கிட்டச் சொல்லிப் புதுசு வாங்கித்தாரோம்”

அவங்க மனசில்லாமத்தான் போனாங்க. ஆனா போகும்போதே “சாயங்காலம் வரைக்கும்தான் காத்திருப்பேன். கிடைக்கலைன்னா போலீசுக்குப் போயிடுவேன். அது மட்டும் இல்லை டைரக்டரேட் வரைக்கும் புகார் பண்ணுவேன்”ன்னு மிரட்டிட்டுப் போனாங்க.

“சார் பணம் போனாலும் போகுது. ஆனா நம்ம ஸ்கூல் மானம் போயிறக் கூடாது. முக்கியமா பசங்க. ஏதோ தப்புப் பண்ணீட்டாங்க. அதுக்காக அவங்க ஃப்யூச்சர ஸ்பாயில் பண்ணக் கூடாது.” அப்படின்னு ஆதங்கப்பட்டாரு ஹெச் எம்.

அதுக்கப்புறம் நம்ம ஆபரேசன் மொபைல் செர்ச்ச ஆரம்பிச்சேன். ” சார் இந்த ஊர்ல மொத்தம் 10 இல்லன்னா 12 செல்போன் கடைதான் இருக்கும். நாம் ஒரு செகன் ஹேண்ட் மொபைல் வாங்குற மாதிரி கடைகடையா ஏறி இறங்கி இந்த மாடல்தான் வேணும்னா, நிச்சயமா மாட்டும். நாம ஒரு நாலு பிரி்வா பிரிஞ்சு போனா சீக்கிரமா கவர் பண்ணிடலாம்”னு ஆரம்பிச்சோம்.

ஒரு மணி நேரத்துல பி டி மாஸ்டர் என்னைக் கூப்பிட்டார், “ சார் கொஞ்சம் செல் ப்ளானெட்டுக்கு வாங்க.” அந்தக் க்டையில போய் விசாரிக்கிற மாதிரி விசாரிச்சா பையன் உண்மையச் சொல்லீட்டான். “ரெண்டு பசங்க கொண்டு வந்தாங்க சார். ரெண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கினேன்”ன்னு சொன்னான். “சரிப்பா அந்தப் பணத்த நாங்க கொடுக்குறோம் நீ செல்லத் தா”ன்னு கேட்டுட்டு இருக்கப்பவே போலீசு வந்திச்சு கடைக்குள்ள.

“இங்க யார்ரா சரவணன்?”

”நாந்தான் சார்”ன்னு பவ்யமா சொன்னான் கடைக்காரன்.

“ஏண்டா திருட்டு மொபைலா வாங்குறே”ன்னு ரெண்டு அடி போட்டாரு.

“இல்ல சார் இல்ல சார்”

“என்ன நொள்ள சார். நடரா ஸ்டேசனுக்குன்னு” அவனத்தள்ளீட்டுப் போயிட்டாங்க.

”என்ன சார் இது?”ன்னாரு ஹெச் எம். “அந்தம்மாதான் கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கணும் சார். சரி விடுங்க அவங்களே பாத்துப்பாங்க”ன்னு நாங்க வீட்டுக்குப் போயிட்டோம்


மொபைல் தொலைஞ்சு போச்சு அதுகிடைச்சிடுச்சுன்னு இதோட சுபம்னு போடலாம்னு பார்த்தா முடியல.


ரெண்டு நாள் கழிச்சு ஒரு கான்ஸ்டபிள் எங்க ஆபீசுக்கு வந்து, “ சார் கொஞ்சம் ஸ்டேசனுக்கு வர முடியுமா?”ன்னாரு

“எதுக்குங்க?”

“வாங்க எஸ் ஐ சொல்லுவாரு”ன்னாரு

சரின்னு அவருகூட ஸ்டேசனுக்குப் போனா, “நீங்கதான் துப்பறியும் சங்கர்லாலோ?”ன்னு நக்கலாக் கேட்டாரு எஸ் ஐ.

“சார் எனக்கு ஒண்ணும் புரியலை”

“செல் போன் திருடு போனா எங்க கிட்ட புகார் கொடுக்கணும் நாங்க விசாரிப்போம். அத விட்டுட்டு நீங்களா அதச் செய்யக் கூடாது”ன்னாரு

“இல்ல சார். படிக்கிற பசங்க பாழாயிடக் கூடாதுன்னுதான்”

“இப்படி விடக்கூடாது. இவனுங்கதான் பினாடி பெரிய பெரிய கேடியா வருவாங்க”

“சரி சார் இப்ப நான் என்ன பண்ணனும்?”

“நீங்க எல்லாம் இதுல உள் கையோன்னு எங்க டிபார்ட்மெண்டுல இப்ப டாக் இருக்கு. இனிமேல் இப்படிச் செய்யாதீங்க. சரியா?”

“சரி சார்”னு சொல்லீட்டு வந்திட்டேன்.


இந்த இடத்துல கூட இப்படியே நிறுத்திவிடலாம். எல்லாம் சுலபமா முடிஞ்சுதுன்னு எழுதி முடிக்கலாம் . ஆனா நாம நினைக்கிற மாதிரியா இருக்கு?


அந்தம்மாவுக்கு மொபைலும் கிடைக்கல(ஏட்டு அமுக்கீட்டாரு). அதுக்குப் பதிலா ஒரு டப்பா செட்டக் காமிச்சு இதுதான்ன்னு சொல்லியிருகாங்க. வெறுத்துப் போய் அவங்க புதுசாவே வாங்கீட்டாங்க.

ஸ்டேசன்ல பசங்களோட பேரன்ஸ்கிட்ட இருந்து மொபைல் வித்த பணம்னு ரெண்டாயிரத்தையும் கறந்துட்டாங்க.

பசங்க ரெண்டு பேரையும் டி சி வாங்கி வேற பள்ளிக்கூடத்துல சேத்துட்டாங்க.

இந்த மாதிரின்னு ஏ இ ஓ வுக்கும் புகார் கொடுத்துட்டாங்க, ஸ்கூலுக்கு என்கொயரி போட்டிருக்காங்க.


அந்தம்மா மட்டும் ஒரு அரை மணி நேரம் பொறுமையா இருந்த்திருக்கலாமேன்னு நீங்க பெருமூச்சு விடுறது எனக்கு இங்க கேக்குது என்ன செய்ய?



Life is a game of ifs and buts.


.

நட்சத்திரக் கதம்பம்.- 4/7/09

சென்ற வாரம் செமஸ்டர் முடிவுகளை வெளியிட்டார்கள். பாரதியார் பல்கலைக் கழகத்தின் வெப் செர்வர் (தமிழ்ல என்னப்பா?) தவங்கி விட்டது. பாவம் மாணவ மாணவிகள் தவியாய்த் தவித்து விட்டார்கள்.

தேர்வு முடிவுகளை அந்தந்த கல்லூரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவிடலாமே? ஏறக்குறைய அனைத்து மாணவர்களும் மின்னஞ்சல் முகவரி வைத்திருக்கிறார்கள். நேரடியாக அவர்களுக்கே கூட அனுப்பலாம். மென் பொருளில் இதெல்லாம் சாத்தியமே. பல்கலைக் கழகம் முயலுமா?


*******************************************************************************

கோவையில் அதிகப் பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும் கோவையின் சாபக்கேடான மேம்பாலங்களை மேம்படுத்தும் வழியொன்றும் தென்படவில்லை. இருப்பதே இரண்டு மேம்பாலங்கள்தான். இரண்டிலுமே தொழில்நுட்பக் கோளாறு. லேசாகத் தூறல் போட்டால்கூட பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கி விடுகிறது. உபயோகிக்க இயலாதாகிவிடுகிறது. சமயங்களில் நல்ல மழை பெய்யும்போது பாலத்தின் ஒரு புறமிருந்து மறுபுறம் செல்ல 45 நிமிடங்களாகி விடுகிறது. ரயில் ஏறச் செல்பவர்கள் படும் பதைபதைப்பு மனதை வாட்டக்கூடியதாக இருக்கிறது.

ஏதாவது ஒரு கல்லூரிப் பேராசிரியர் இதை ஒரு சவாலாக எடுத்துச் சரி செய்யலாம். இறுதியாண்டு மாணவர்களுக்கு இதை பிராஜக்டாகக் கொடுக்கலாம்.
வேலை முடிந்த மாதிரியும் இருக்கும் மாணவர்களுக்கு நேரடி அனுபவம் கிடைத்த மாதிரியும் இருக்கும்.


*******************************************************************************

அவினாசி சாலை மேம்பாலத்தில் செல்லும் வாகனங்களுக்குப் புதிதாக ஒரு கட்டுப்பாடு கொண்டு வந்திருக்கிறார்கள். இரு சக்கர வாகனங்கள் பாலத்திற்கு கீழேயும் நான்கு சக்கர வாகனங்கள் பாலத்தின் மேலேயும் என்று. இதைச் சரியாகக் கடைபிடிக்கிறார்களா எனச் சரிபார்க்க நான்கு புறங்களிலும் நான்கு காவலர்கள் வேகாத வெயிலில் நின்று சிரமப் படுகிறார்கள். சமயங்களில் பெண் காவலரும்கூட. அவர்களைச் சில சமயம் ஏமாற்றிவிட்டு இரு சக்கர வாகனங்கள் பாலத்தின் மேலே பயணிக்கின்றன. தனிமனித ஒழுக்கம் முக்கியம்.

*******************************************************************************

பின்னூட்ட வள்ளல் நைஜீரியா ராகவன் வந்திருந்தார் கோவைக்கு குடும்பத்துடன். நான், செல்வா, சஞ்சய் மற்றும் வெட்டிப்பீடியா சுரேஷ் எல்லோரும் போய் சந்தித்தோம்.

இரண்டு மணி நேர உரையாடல்களுக்குப் பிறகு உணவருந்தச் சென்றோம் விடுதியறையுடன் இணைக்கப்பட்ட உணவகத்தில். அநியாயத்திற்குக் காலதாமதம் செய்ததுடன், குறைந்த பட்ச சேவைகளைக்கூட ஒன்றுக்கு இரு முறை கேட்டுப் பெற வேண்டி இருந்தது.

ஒரு கட்டத்தில் உணவக மேலாளரை அழைத்து சேவைக் குறைபாடுகள் என்னென்ன என்பதைக் கோபப்படாமல் அதே நேரம் அழுத்தமாகச் சொன்னார். அவரது அணுகுமுறையின் விளைவை உடனடியாகக் கண்டுணர முடிந்தது.

இறுதிவரை எங்களுக்கு நல்ல உபசரிப்பும் தரமான சேவையும் கிடைத்தது.

*******************************************************************************

கோவை சூலூரைச் சேர்ந்த மதன் தற்சமயம் வேலை நிமித்தம் வசிப்பது பெங்களூருவில்.

“தாத்தன் சொன்ன அக்கினிக்குஞ்சாக ஆசை. ஞானப் பொறிக்காய் அலைகிறேன். பற்றிய மாத்திரத்தில் ஜ்வாலிப்பேன்” என்று தன்னைப்பற்றிச் சொல்லும் மதனின் எழுத்துக்களில் தென்படும் நல்ல மொழியாளுமையும் வார்த்தைகளில் வீச்சும் என்னைப் பிரமிக்க வைக்கிறது.

பாடம்

சொட்டிச் சொட்டி
வீணாகாமல் இருக்க
நீர்க்குழாயின் கைப்பிடியை
இறுக்கி, இறுக்கி
மூடி வைத்ததிலோ என்னவோ
திடீரென ஓர் நாள்
மறை தளர்ந்து விட்டது.
பின்வந்த நாட்களில்
குழாயை மூடுகையில்தான்
புரிகிறது
எந்தப் புள்ளியில்
இறுக்குதல்
நிறுத்தப்பட்டிருந்தால்
நீரும் ஒழுகாது
மறையும் மழுங்காது
என்பது.

- மதன்

*******************************************************************************


”சிங்கப்பூருக்கு ஒரு டூர் அடிக்கலாம்னு நினைக்கிறேன். எவ்வளவு செலவாகும்னு தெரியலை” ன்னு நண்பன் கிட்டச் சொன்னா, “நினைக்கிறதுக்கெல்லாம் ஒண்ணும் செலவாகாது” ன்னு சொல்லுறான்.

.

Friday, July 03, 2009

தமிழய்யாவுக்கு நன்றி


எல்லோருக்கும் நல்ல தமிழய்யா வாய்த்தால் நல்ல தமிழ் படிக்கலாம். மேலும் படிக்க ஆர்வம் வரும். எனக்கு ஒரு நல்ல தமிழைய்யா கிடைத்தார் 9,10 படிக்கும்போது. அவர் வகுப்பு என்றாலே எல்லோரும் ஆர்வமாக இருப்போம். லீவு எடுப்பதென்றால் அவரது வகுப்பு இல்லாத நாளாக இருக்க வேண்டுமே என நினைப்போம்.

புத்தகமேதும் எடுத்து வரமாட்டார். உள்ளே நுழைந்ததும் இன்று என்ன பாடம் என்பதையும் சொல்ல மாட்டார். புத்தகத்தில் உள்ளதுபோல் வரிசைக்கிரமமாக நடத்தவும் மாட்டார். பெரும்பாலும் கதைகள் மூலமே பாடம் நடத்திச் செல்வார்.

ஒரு கணவனும் மனைவியும் துணிக்கடைக்குப் போகிறார்கள். சில சேலைகளைப் பார்த்தும் பிடிக்காமல் ஒரு குறிப்பிட்ட சேலையை எடுத்துக் காட்டச் சொல்கிறார் மனைவி. அதற்குக் கடைக்காரர் , “அது சீமாட்டியும் வாங்க முடியாத சேலை” என்கிறார். காரணம் அதன விலை. கணவன் கையிலிருக்கும் காசுக்கான சேலை வாங்கித்தருகிறார். மனைவிக்குத் திருப்தியில்லை. ஏதேதோ புலம்பியவாறே வருகிறார். இதனால் கணவன் எரிச்சலடைகிறார்.

வீட்டிற்கு வந்து சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். சாப்பாடு சுவையாக இல்லை.
எரிச்சலுடன் “நாயும் தின்னாத சோறு” எனச்சொலியவாறே வெளியேறுகிறான்.

சீமாட்டியும், நாயும் இந்த இரண்டு வார்த்தையிலும் என்னடா புரிந்தது? ” என்பார்.

”அய்யா இரண்டிலும் உம் வருகிறது”

“சரி. என்ன வித்தியாசம்”

”தெரியலை அய்யா”

“ஒண்ணு உயர்வைச் சொல்லுது . மற்றது இழிவைச் சொல்லுது. ஒரே ”உம் ” இரு அர்த்தங்கள் தருகிறதில்லையா? ஒன்று உயர்வு சிறப்பு உம்மை. மற்றது இழிவு சிறப்பு உம்மை”

ஏறக்குறைய முப்பது வருடங்கள் கழித்தும் இன்னும் மறக்கவில்லை.

ராமச்சந்திரன் அய்யா உங்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்.

ஆனால் இப்பொழுது தமிழய்யாக்கள் அதிகம் இல்லை எல்லொரும் தமிழ் ஆசிரியர்கள் அல்லது தமிழ் டீச்சர். அவர்களிடம் பேசினால் தமிழில் பாரதிதாசனுக்குப் பின் புலவர்கள் யாருமில்லை என்பார்கள். அல்லது திரைப்படப் பாடலாசிரியர்கள்தான் கவிஞர்கள்.

உங்களுக்குத் தெரிந்த தமிழாசிரியர் யாருமிருந்தால் அவரிடம் சா.கந்தசாமி, நாஞ்சில் நாடன், பிரபஞ்சன், அசோகமித்திரன் ஆகியோரின் எழுத்துக்களை விவாதியுங்கள். உண்மை புரியும்.

பார்க்கும் வேலை வேறு வாழும் வாழ்க்கை வேறென்பதாக ஆகிவிட்டது அவர்களுக்கு.

பின் குறிப்பு : எல்லா தமிழாசிரியர்களுமே அப்படியல்ல; ஆனால் பெரும்பான்மையினர்.


Picture courtesy : fotosearch.com

வாருங்கள் வாழ்த்துவோம்




பின்னூட்டப் புயல் ராகவன்(நைஜீரியா) அவர்களின் செல்வன் அரவிந்துக்கு இன்று பிறந்த நாள்.

என் மனமார்ந்த வாழ்த்துகள்.

வாருங்கள் வாழ்த்துவோம்.

.

Thursday, July 02, 2009

மறுகூட்டலும் முதலிடமும்.



வருவதையெதிர் கொண்டு வாழ்வதென்பது வேறு. வைராக்கியத்துடன் வாழ்ந்து சாதிப்பது வேறு. பெரும்பாலோர் முதல்வகையினரெனினும், மேட்டூரைச் சேர்ந்த மாணவி பிரதிபா இரண்டாம் வகை.

வருடம் முழுவது சொல்லி வந்திருக்கிறார் மாநில அளவில் முதல் மூன்று இடங்களிலொன்று நிச்சயமென்று. சொல்லியதோடு நிறுத்திவிடாமல் முனைப்புடன் முயன்றிருக்கிறார். கவனம் அனைத்தையும் அவ்விலக்கை நோக்கியே குவித்திருக்கிறார். பெற்றோரும் ஆசிரியர்களும் அவரெண்ணத்தை அடைகாத்தவண்ணம் இருந்திருக்கின்றனர்.

தேர்வுகளை எழுதி முடித்தவுடன் அலசிப் பார்த்து ஒவ்வொரு பாடத்திலும் வரும் மதிபெண்களைத் துல்லியமாகச் சொல்லியிருக்கிறார். தேர்வு முடிவுகள் அவரது கணிப்புச் சரியென நிரூபித்தாலும் தமிழில் மட்டுமவரது மதிப்பெண் குறைந்திருக்கிறது.

தமிழ் - 183
ஆங்கிலம் - 194
கனிதம் - 200
இயற்பியல் - 200
உயிரியல் - 200
வேதியியல் - 199

ஆக மொத்தம் அவர் பெற்றது 1176. முதல் மூன்று இடங்கள் முறையே 1183, 1182 மற்றும் 1181 ஆகிய மதிபெண்கள் பெற்றவர்களது.

மாநில அளவில் இடங்களைப் பெற வேண்டியவர் மாவட்ட அளவில்கூட வரவில்லை. துவளவில்லை அவர். மறு மதிபீட்டுக்கு விண்ணப்பிக்கிறார். அவர் சந்தேகப்பட்டதைப் போலவே தமிழில் கூட்டல் பிழை இருந்திருக்கிறது. ஐந்து மதிப்பெண்களை கவனப்பிசகாகக் கூட்ட மறந்துவிட்டனர்.

விடுபட்ட ஐந்து மதிப்பெண்களைக் கூட்டினால் அவரது தற்போதைய மொத்த மதிப்பெண் 1181 மாநில அளவில் மூன்றாம் இடம்.

மதிபெண் எடுப்பதுதான் முக்கியமா? நம் கல்வித்திட்டமே தவறு என்பன போன்ற வாதங்களை விலக்கி வைத்து யோசிப்போம். பம்புக்கறி தின்னும் ஊர் சென்றால் நடுக்கறி எனக்கென்பதோர் சித்தாந்தம் வாழ்வியலின் ஆதாரமாகவிருக்கிறது.


நேற்றே எழுதிய இப்பதிவை இன்றுபதிவேற்றலாமென இருந்துவிட்டேன். காலை நாளிதழில் வந்த செய்தியொன்று இன்னும் மோசமாக இருக்கிறது.



கிருஷ்ணகிரி ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவன் பாலமுருகன் 1176 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். மறுகூட்டலுக்கு விண்ணப்பித்ததில் தமிழில் 8 மதிப்பெண்கள் குறைவாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. அவரது தற்போதைய மதிபெண் 1184.

1183 மாநில முதல் மதிப்பெண். அதை விட ஒரு மதிப்பெண் கூடுதலாகப் பெற்றிருந்தும் இவருக்கான எல்லா பெருமைகளும் மறுக்கப் பட்டிருக்கிறது. எனவே முதலிடம் இரண்டாமிடமாகவும் இரண்டாமிடம் மூன்றாமிடமாகவும் ஆகிறது. மூன்றாம் இடமென்று முதல்வர் கையில் மடிக்கணினி பெற்ற அனைவரும் தகுதியற்றவர்களாகிறார்கள்.அடுத்த முறையாவது இந்தப் பரிசுகளை மறு மதிப்பீடு/மறுகூட்டலுக்குப் பின் வழங்கலாமே?

ஏற்கனவே நன்மதிப்பை இழந்துவரும் ஆசிரியர் சமுதாயத்திற்கு இது பெரும் கரும்புள்ளி. இனியாவது கவனத்துடன் இருப்பார்களா?

பாலமுருகனுக்கும், பிரதிபாவுக்கும் எனது வாழ்த்துக்கள்.

நன்றி : தினமலர்.
.

Wednesday, July 01, 2009

எனக்குப் பிடித்த கவிதைகள்

அதிகமும் கவிதைகள் எழுதுபவர்களைப் பரிச்சயமற்றிருந்தாலும் நல்ல கவிதைகளைப் படிக்கிற பாக்கியம் வாய்த்திருக்கிறதெனக்கு. நல்ல கவிதைகள் பெரும்பாலும் பிரபலமாகாதவர்களால்தான் எழுதப் படுகிறது, அல்லது அவர்கள் பிரபலமாவதற்கு முன்பாகவே எழுதப்பட்டு விடுகிறது. வண்ணதாசன் போன்ற வெகு சிலரே எக்காலமும் நல்ல கவிதைகளை வாழ்க்கை அனுபவத்திலிருந்தெழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

கன்மணி குணசேகரனின் கவிதையொன்று எபோதும் என் நினைவில் இருப்பது

இழுத்து மூச்சுக்கட்டி
ஊத வேண்டிய நேரங்களில்
சீவாளியைப் பிரித்துச்
சரி செய்கிறது
வயதான நாயனம்.
இட்டு நிரப்பிச் செல்கிறது
இளந்தவில்.

முதுமையின் அவலத்தை இதைவிடச் சிறப்பாகச் சொல்லிவிட முடியாதல்லவா?
இதைபோல வார்த்தைச் சிக்கனத்தில் சொல்ல வந்ததைச் சொல்லும் ரகக் கவிதைகள் குறைவே. அவ்வாறான நான் ரசித்த சில பதிவர்களின் கவிதைகள் இங்கே. இக்கவிதைகளைப் படிக்கும்போதே காட்சிகள் உங்கள் கண்முன் விரியும்.


யாத்ரா என்ற பெயரில் எழுதிவரும் செந்தில் மிக இளைஞர். ஒரு வாழ்நாளுக்கான அனுபவங்களைத் தேக்கி வைத்துத் திரியும் இவரிடமிருந்து இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன். மிக உயரங்களைத் தொடுவார்.

வீட்டின் தரை கழுவி விடப்படும்போது எழும் நீர்க் கோலத்தை ரசித்துக் கவிதையாக்கியிருக்கும் இவரது கவிதைமனதெனக்குப் பிடித்திருக்கிறது.

தரை

கழுவி விடப்பட்டிருக்கும்
இந்தச் சிமெண்டுத் தரையின் ஈரம்
கொஞ்சம் கொஞ்சமாக
உலர்ந்து கொண்டேயிருக்கிறது காற்றில்
உலர உலர
நீர்ச்சித்திரங்கள்
மாறியபடியிருக்கின்றன
ஈரம் முழுதும் உலர்ந்து இப்பொழுது
காட்சிகள் முடிந்த திரையானது
மனதும் தரையும்
மீண்டும் ஈர
ஸ்பரிசத்திற்க்காய் காத்திருக்கிறோம்
இந்த உலர்ந்த தரையும்
உலர்ந்த நானும்.


முகுந்த் நாகராஜன் (வீனாப்போனவன்), வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் நிகழ்வையும் கவிதைக் கண்களால் காண்கிறார். இதையெல்லாம் கவிதையாக்க முடியுமாவென வியக்கும் வண்ணம் படைக்கும் இவரது கவிதைகளை ஒரு மழைநாள் முழுவதும் படித்தது எனக்குப் புது அனுபவம்.

என்னிடம் பெரிதாக

'வாழ்க்கை எப்படிப் போகிறது'
என்று கேட்டான்
ரொம்ப நாள் கழித்து
சாட்டில் வந்த நண்பன்.
முன் தினம்
சரவணபவனில்
பெரிய தோசை வேண்டும்
என்று அடம் பிடித்து வாங்கி
சாப்பிட முடியாமல்
முழித்துக் கொண்டிருந்த
சிறுமியைப் பற்றி சொன்னேன்.
'அப்புறம் பார்க்கலாம்' என்று
மறைந்து போனான்.
என்னிடம் பெரிதாக
எதையேனும்
எதிர்பார்க்கிறார்களோ.



அனுஜன்யா என்ற பெண் பெயரில் எழுதிவரும் மும்பைவாசி ஆண் இவர். பெரும்பாலும், கீற்று, உயிரோசை போன்ற இனையதளங்களில் இவரது கவிதைகள் தொடர்ந்து பிரசுரிக்கப்படுகிறது. வங்கி ஒன்றின் உயரதிகாரியெனினும் கர்வமேதுமற்றவர்.

நிழலின் நிஜங்கள்

அந்தத் திருமணப் புகைப்படத்தில்
கண்ணை மூடிவிட்டதாகவும்
ஓரந்தள்ளி விடப்பட்டதாகவும்
கொம்பு முளைத்திருப்பது பற்றியும்
சலித்துக் கொண்டனர் நண்பர்கள்
குதிகாலை இன்னும் சற்று
உயர்த்தி இருந்தால்
அவனைவிட உயர்ந்திருப்பேன்
என்று எண்ணியபடி
அவள் கண்களில்
ஈரத்தைத் தேடினேன்


முத்துவேல் (தூறல் கவிதைகள்) எனக்கு இளைய சகோதரன் போல. கல்பாக்கத்தில் வசிக்கும் இவரது வாசிப்பின் வீச்சு என்னைப் பிரமிக்க வைக்கிறது. ஆரம்பகாலக் கவிதைகளைவிட இவரது ச்மீபத்திய கவிதைகளில் இருக்கும் முன்னேற்றம் என்னை மகிழ்விக்கிறது.

வி(லை)ளை நிலம்

பக்கத்து நிலமும்
ஒருகாலத்தில் என்னைப்போலவே
வனமாகத்தானிருந்தது.

பொறுப்புள்ள ஒருவனின்
உடைமையானதும்
கொஞ்சநாள் நெல்
விளைவிக்கிறது.

கொஞ்சநாள் நிலக்கடலை
விளைவிக்கிறது.

கொஞ்சநாள் சூரியகாந்திப்பூக்களை
விளைவிக்கிறது.

கொஞ்சநாள்
ஓய்வாக இருக்கிறது.

தண்டவாளம் சுமந்துகிடக்கும்
என்மீது எப்போதும்
மூச்சிரைத்தபடியும்
இளைப்பாறியபடியும்
தடதடத்து ஊர்கின்றன...
விதவிதமாய் ரயில்கள்
கழிவுகளைத் துப்பியபடி...



கவிஞர் நரன் ஓவியம் புகைப்படம் போன்றவற்றிலும் நல்ல தேர்ச்சி உள்ளவர். நிறைய விஷயஞானமுள்ளவர். தமிழில் முதல் நேரடி ஜென் கவிதைகள் எழுதியவர்.


பிரசவ வார்டு

மருத்துவமனை பிரசவ வார்டில்
பரபரப்பாய் ஓடிக்கொண்டிருந்தன எறும்புகள்
ஈனும் வலியில்
"அம்...மா" வென அலறியது
பெண் எறும்பொன்று

அதே வார்டில்
பிள்ளைப் பெற்றிருந்தவளை
பார்க்க வந்திருந்தவர்கள்
எடுத்து வந்திருந்த பாட்டிலில்
ஹார்லிக்ஸை திருடிக்கொண்டிருந்தன
சில எறும்புகள்
பிள்ளைத்தாச்சிக்கென ...


தன்னைப் பற்றிய அறிமுகத்தில் ப்ரவீன்(பின்குறிப்புகள் ) இப்படிக் குறிப்பிடுகிறார்.

நான் சாலயோர பூக்களின் மௌனம்..... நான் பயணிகள் இறங்கிவிட்ட இரயில் வண்டி... நான் நதிக்கடியில் ஒரு கூழாங்கல் ! நான் தனிமையிலும் இல்லை... ஆனால் என்னை சுற்றியும் யாருமில்லை. நான் நானாகவே இருக்க முயற்சி செய்து தோற்பதே என் தலையாய பணியாய் இருக்கிறது.


தனிமை

தனிமையில் குடிக்கப்படும் தேநீர்-கள்
எந்த சுவையுமற்று இருக்கின்றன
அது உற்சாகத்தை அளிக்கத் தவறுவதுமட்டுமில்லாமல்
அடித்தொண்டையில் நீடித்திருக்கும்
கசப்பையும் உண்டாக்குகிறது!
தானே சமைத்து
தான் மட்டுமே உண்ணும் உணவுகள்
வாசணையற்று இருக்கின்றன
விரல் இடுக்குகளில்
மீந்திருக்கும் சாம்பார்கூட
ருசியற்று போய்விடுகின்றன!

(இதைக்காட்டிலும்
பல பட்டினிப்பகல்கள்
இன்னும் சந்தோஷமுற்றதாய்
இருந்திருக்கிறது)

திரையரங்கிற்கு
தனியே செல்ல நேர்கையில்
சிரிக்க நேரிடும் நகைச்சுவைக் காட்சிகள்
அதற்குப்பின்
நினைவில் இருப்பதே இல்லை!

இரவு முழுவதும்
ஓடிக்கொண்டே இருந்த தொலக்காட்சியை
நள்ளிரவு எழுந்து அணைத்த பின்பு
ஒரு நிமிடம் தாமதமாகவே
உறங்கச் செல்கிறோம்!

ஒரு நீண்ட பகலில்
தேசிய நெடுஞ்சாலை மத்தியில்
ஒரு கோர விபத்தில்
அகால மரணமடைய நேரிடும் பொழுதின் தனிமை
இது எதைக்காட்டிலும் ஏகாந்தமாய் இருக்கக் கூடும்..!



இவர்களின் பிற கவிதைகளை அவர்களின் தளத்தில் வாசிக்கலாம். உங்கள் நேர்மையான விமர்சனங்கள அவகளின்னும் வளர உதவும். நிறைகளைப் பின்னூட்டத்திலும் குறைகளென நீங்கள் நினைப்பவைகளைத் தனி மடலிலும் தெரியப் படுத்துங்கள்.


.

மெட்ரோ மேன் ஸ்ரீதரன்

metro-man-sreedharan-inner

கொங்கன் ரயில்வே பற்றித் தெரிந்திருக்கும் உங்களுக்கு. கொச்சியிலிருந்து மும்பை வரை மேற்குக் கடறகரையை ஒட்டி மலையைக் குடைந்தும் உயரமான பாலங்களமைத்தும் கட்டி முடிக்கப்பட்ட சிறப்பான ஒரு திட்டம்.

1990ல் ரயில்வே மந்திரியாக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் மனதில் உதித்த திட்டம். ஆனால் சாத்தியமில்லாத ஒன்று எனக் கைவிடப்பட்ட திட்டமும் கூட. திட்டம் கைவிடப்பட்ட செய்தி நாளிதழ்களில் வெளியான மூன்றாம் நாள் ஸ்ரீதரன் ஜார்ஜைச் சந்திக்கிறார். புதிய திட்டமொன்றைக் கொடுக்கிறார். “வழக்கமான முறைகளிலிருந்து வேறுபட்ட செயலமுறை அவசியமென்பதையும் உணர்த்துகிறார். அவரது திட்டம் பிடித்துப்போக மூன்றே நாட்களில் கேபினெட் ஒப்புதல் பெற்றுத் திட்டத்தைத் துவக்குகிறார்.

ரயில்வேயிலிருந்து ஓய்வுபெற்ற சில மாதங்களிலேயே மீண்டும் கொங்கன் ரயில் கார்ப்பொரேசனில் தனது பணியைத் துவங்கினார் ஸ்ரீதரன்.

மொத்தம் 760 கிமி தூரமுள்ள இத்திட்டம் 93 மலைக்குகைகளையும் (குகை மொத்த நீளம் மட்டும் 82 கி மி) 150 பாலங்களையும் உள்ளடக்கியது. இந்தியாவில் இதற்கு முன் இப்படி ஒருதிட்டம் செயல்படுத்தப் படவில்லை. மேலும் கட்டு, செயல்படுத்து, மாற்று (BOT - Build-Operate-Transfer) முறையில் கட்டப்பட்ட மத்திய அரசுத் திட்டமும் ஆகும். சொன்ன நேரத்திலும் திட்டமிட்ட செலவுக்குள்ளும் கட்டிமுடிக்கப்பட்டது இன்னுமொரு சிறப்பு.

ஸ்ரீதரன் இத்துடன் திருப்தியடைந்துவிடவில்லை. அடுத்த திட்டமாக டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தை முழுவதும் தயாரித்து அளித்தார். ஆரமபத்தில் சாத்தியமற்றது என எதிர்ப்பு இருந்தது, குறிப்பாக சாந்தினி சவுக் பகுதியில் இருப்பவர்களிடமிருந்தும் தெற்கு டெல்லிவாசிகளிடமிருந்தும். அவ்விடங்களில் தரையடி ரயில் பாதைகளை ஏற்படுத்தி திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான டெல்லிவாசிகள் இந்த 75 வயது இளைஞரை நன்றியுடன் வாழ்த்துகிறார்கள். பேருந்து நிலையங்களில் காத்திருந்த நாட்களெல்லாம் கனவாய்ப் போய்விட்டது அவர்களுக்கு. ஒரு மணிநேர பயணதூரம் அவர்களுக்கிப்போது பத்து நிமிடங்களாகக் குறைந்து விட்டது.

ஸ்ரீதரனின் தாரக மந்திரம்.

1. நேரம் தவறாமை

2. சரியான ஆட்தேர்வு

3. குழுவாகச் செயல்படுவது

4. காலகெடுவைக் கடைபிடித்தல்

தனது குழுவிலிருக்கும் ஓவ்வொருத்தரைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பார். அவர்களுடன் நெருக்கமாகச் செயல்படுவார். அவர் குழுவிலிருக்கும் அனைவரிடமும் ஒரு டிஜிட்டல் காலண்டர் இருக்கும். அவர்கள் திட்டம் முடிய் இன்னும் எவ்வளவு நாட்கள் அவகாசம் இருக்கிறது என்பதை அது காட்டும்.

பாலக்காடு மாவட்டம், கருகாபுத்தூர் கிரமாத்தைச் சேர்ந்த எலாட்டுவலபில் ஸ்ரீதரனுடன் படித்தவர் நமது முன்னாள் தேர்தல் ஆணைஆளர் டி என் சேஷன். படிப்பில் இருவருக்கும் போட்டி மிகப் பலமாக இருக்கும். காக்கிநாடா பொறியியல் கல்லூரியில் படித்து முடித்த ஸ்ரீதரன் சிறு சிறு வேலைகளில் இருந்து பின் 1954 ல் இந்திய ரயிவேக்குத் தேர்வு செய்யப் பட்டார்.

அவரது திறமை முதன்முதலில் வெளியே தெரியவாரம்பித்தது 1963ல். புயலில் சிக்கிய பாம்பன் பாலத்தை மீட்டுச் செப்பனிட 6 மாத கால அவகாசமே இருந்தது. ஸ்ரீதரன் அதை வெறும் 46 நாட்களிலேயே திறம்படச் செய்து முடித்தார்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்

திண்ணிய ராகப் பெறின்

என்ற வள்ளுவனின் வாக்கை மெய்ப்பித்திருக்கும் ஸ்ரீதரனை இந்திய அரசு உயரிய விருதான பத்ம விபூஷன் கொடுத்துக் மரியாதை செய்திருக்கிறது.