Sunday, May 31, 2009

யாத்ராவின் கவிதையும் அகநாழிகையின் வியத்தலும்

எதைக் கவிதையாக எழுதலாமென இளைஞர்களைக் கேட்பின் 99 சதவீததினர் சொல்லுவது “காதல்”. கண்ணே மூக்கே மணியே கற்கண்டே என விளித்து ஏக்கத்தைச் சொன்னால் முடிந்தது. ’கைபடாத சி டி’ எனவும்கூட விளித்தொரு பாடல்.


அது பருவம் சார்ந்த உணர்வின் வெளிப்பாடெனினும் அதைவிடுத்து புறவுலகின் சலனங்களைக் கவனிப்பது சிலரே. அதையும் கவிதையாக்கி படைப்பது அதிற் சிலரே. என்றாலும் நானறிந்த வகையில் முத்துவேல், ரெஜொவாசன், முகுந்த் நாகராஜன், யாத்ரா, அகநாழிகை, அனுஜன்யா போன்றோரின் வீச்சும் கவிதையின் ஆழமும் என்னை வசீகரிக்கிறது.


குறிப்பிட்டுச் சொல்ல நிறைய இருப்பினும் யாத்ராவின் சில கவிதைகள் என்னைச் சமயங்களில் செயலற்றவனாக ஆக்கிவிடுகிறது.


தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தவனின் உளச் சிக்கல்கள் விவரிக்க முடியாதவை எனினும் உயிர்களிடதிலன்பும் கருணையும் கொண்ட ஒருவன், தன்னுடைய கடைசி நிமிடங்களில் படும் வேதனையைப் பாருங்கள்.


நான் படித்தவைகளில், சம காலத்திய, மிகச் சிறந்த கவிதையாக இதை நான் கருதுகிறேன். இதை விடவும் சிறந்த கவிதை சமீபத்திலேதும் படித்த ஞாபகமேதுமில்லையெனக்கு.




திருவினை


திருவினையாகாத முயற்சிகளை நொந்து

கயிற்றைத் தேர்ந்தெடுத்தேன் கடைசியாக


அதற்கு முன்பாக

மலங்கழித்து விடலாமென கழிவறை போக

பீங்கானில் தேரைகளிருக்க


கழிக்காது திரும்பிவரும் வழியில்

எறும்புகளின் ஊர்வலத்திற்கு இடையூறின்றி

கவனமாக கடந்து வந்தேன் அறைக்குள்


கரிசனங்கள் பிறந்து விடுகிற

கடைசித் தருணங்களின் வினோதத்தில்

புன்சிரித்தேன் என்றுமில்லாமல்


அதிகமாய் வியர்க்க

பொத்தானையழுத்தப் போகையில்

சிறகுகளில் படர்ந்திருக்கும் சிலந்தி வலை

பார்வையில் இடறியது


40000 உயிர்கள் மாண்டுபோன

செய்தி தாங்கிய தினசரி அருகிருந்தது

விசிறயேதேனும் அகப்படுமாவெனத் தேடுகையில்


சாம்பல் கிண்ணத்தில் பிணங்களென்றிருக்கும்

துண்டுக் குவியல்களைக் கண்டு

கடைசி சிகரெட் பிடிக்கும் ஆசையையும்

கைவிட வேண்டியதாயிற்று


சட்டென்ற திரும்புதலில்

கலைந்த பிரதிகளுக்கிடையொன்றில்

பின்னட்டையிலிருக்கும் ஆத்மாநாமை

லேசாய் இதழ்விரிய முகம் மலர

சில கணங்கள் பார்த்து


உணர்வுமிகுதியில் ஒரு முத்தமிட்டு

காத்திருக்கும் கயிற்றிற்கிரையாகக்

கதவைச் சாற்ற


கதவிடுக்கில் நசுங்கியிரண்டான

பல்லியின் வாயிலிருந்து

தப்பிப் பறந்ததொரு பூச்சி


- யாத்ரா.


நல்ல கவிதை எழுதியவனை நல்ல விதமாக மரியாதை செய்ய இன்னுமொரு நல்ல கவிஞனாலதான் முடியும்.


அகநாழிகை என்றறியப்படும் பொன்.வாசுதேவன் இக்கவிதை குறித்து எழுதிய மதிப்புரை, இக்கவிதையை இன்னும் இன்னும் மேலே உயர்த்துகிறது.



என்னவொரு அருமையான பதிவும், பார்வையும்,ஒரு கவிதைக்குள் எப்பேர்ப்பட்ட வாழ்வனுபவம், விரக்தியும், தனிமையும், தோல்வியும் துரத்திக்கொண்டிருக்கும் ஒருவனுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் இரக்கப்பூக்கள், அவனது இறுதி மனோநிலையில் துளிர்த்துக் கொண்டிருப்பதை இதைவிட அழகாக யாரும் சொல்லிவிட முடியுமா ? வார்த்தைகளுடன் விளையாடி கவிதை நெய்வது வேறு. வாழ்வனுபவத்தை கவிதையாக்குவது வேறு. எத்துணை கூர்தீட்டிய வார்த்தைகள் வரிகள். ஒவ்வொரு வரியாக ஆழ்ந்துபடித்து, குளத்திறங்கி முழ்கிக்கொண்டிருப்பதைப் போல உணர்கிறேன்.


சிறு உயிர் குறித்தும் கவலை கொள்கின்ற ஒருவனின் வாழ் இறுதிப்பயண முடிவினைக் குறித்தான கவிதையில் எத்தனை உயிர்கடந்து செல்கின்றன. தேரை, சிலந்தி, நாற்பதாயிரம் உயிரிழப்பு, பிணக்குவியல் போன்ற சிகரெட்துண்டுகளின் சாம்பல், அல்பாயுசில் மறைந்த உன்னதக்கவிஞன் ஆத்மாநாமின் முகப்பிரதி, பல்லி, அதன் வாயிலிருந்து தப்பிப்பிழைத்த பூச்சி ,,,,


மனம் நெகிழ்கிறது. கவிஞன் அவன் வாழ்நாளில் கொண்டாடப்படுவதை விட வேறென்ன மகிழ்ச்சி அவனுக்கு கிடைத்து விட முடியும். நானும் கவிஞன்தான் என்றாலும், யாத்ராவின் கவிதைகளை அறியச் செய்ய சிறு கணமேனும் அசைவையேற்படுத்த இயலாதா என்ற ஆதங்கத்தில்தான் இதை பகிர்கிறேன்.


அந்தந்த கணத்தின் வாழ்வை அது சோகமானாலும், சுகமானாலும் அனுபவித்தும், சிலாகித்தும்,வர்ழ்கிற உன்னதன் நீ என்பதை உன்னோடும் முத்துவேலுடனும் கழித்த விடியும் வரை பேசிக்கொண்டிருந்த அந்த இரவில் அறிந்து கொண்டேன். வாசித்து முடித்ததும் போர்வைக்குள் புகுந்து கொள்வது போல ஓரிருண்மை உனது கவிதைகளை வாசித்தபின் ஏற்படுகிறது, நீ மகாமனிதனாய் இருந்திருப்பாய், கடந்த காலத்தில் வாழ்ந்த மிச்சங்களாய் உன்னை துரத்திக் கொண்டிருக்கின்றன கவிதைகள். கவிதையில் தென்படும் தனிமை,விரக்தி, காதல் எல்லாமே அனுபவித்தறிந்தவை என்பதையும் நானறிவேன். மேதமைக்கும் ஆயுளுக்கும் உள்ள அற்ப நூலிழையை உறுதியான கயிறாகச் செய்யத்தான் இந்த வாழ்க்கை.


நெகிழ்வோடும்,நெஞ்சம் நிறைந்த அன்போடும்...


‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்



இக்கவிதை குறித்து இதைவிடச் சிறப்பாகச் சொல்ல என்னிடத்திலேதுமில்லையெனினும் நான் சொன்னது இதுதான்


பிறரெல்லாம் கவிதை பண்ணிக் கொண்டிருக்கும் காலத்தில், கவிதகளைப் பின்னிக் கொண்டிருக்கிறார் யாத்ரா.

ஈரமான விரலிடுக்குகளில் சிக்கிக் கொண்ட மயிரிழையைப் பிரித்தெடுப்பதுபோல் வாழ்வனுபவங்களிலிருந்து அவ்வப்போது ஒரு பின்னத் துணுக்குகளைக் கவிதையாக்கிக் கொட்டுகிறார்.

எல்லோருக்கும் வாய்க்காதிந்த வரம்.


.

Saturday, May 30, 2009

சுட்ட அப்பளமும் ரசஞ்சாதமும்

காலை 10 மணிக்கே வெயில் சுள்ளென்று அடித்தது. காலையில் இருந்தே இன்றைக்கு நாள் நரகமாக இருக்கும் என சூசகமாச் சொல்லிக் கொண்டே இருக்கிறது ரம்யாவின் மனது.

காலையில் நடந்த சண்டையைத் தவிர்த்திருக்க முடியும்தான் இருந்தாலும் காலை நேர டென்ஷனில்ல் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யும் கணவனை என்ன செய்வது?

ரம்யா நாச்சிமுத்துப் பாலிடெக்னிகில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேசனில் டிஸ்டிங்க்சனில் பாஸ் பண்ணியவள். திருமணம் ஆகும்வரை வேலைக்குச் செல்லவில்லை. செல்லவும் விரும்பவில்லை. தனக்கென ஒரு குடும்பம் அதைப் பராமரிப்பது, மாலை வரும் கணவனுக்காக காந்திருப்பது என அவளது கனவுகள் வேறு விதமாக இருந்தன. ஆனால் கடவுள் அவளுக்கு விதித்திருந்த வாழ்க்கை மாறாக இருந்தது. திருமணம் ஆன இரண்டாவது வாரத்திலேயே வேலைக்கான உத்திரவு வந்தது. செண்ட்ரல் கவர்ன்மெண்ட் உத்தியோகம் நல்ல சம்பளம் என எல்லோரும் ஓதியதால் அவளும் சம்மதித்தாள். கூடுதல் சம்பளம் நினைத்தை வாங்க உதவ, மகிழ்ச்சியாக ஓடியது வாழ்க்கை.

15 வருடங்களில் எல்லாமே தலைகீழ் மாற்றங்களாகி விட்டது. இரு முறை உத்தியோக உயர்வும், இரு குழந்தைகளும் அவர்களைத் தயார் செய்து பள்ளிக்கு அனுப்பி, தானும் சாப்பிட்டு, இருவருக்கும் மதிய உணவும் தயாரித்து, மாலை மீண்டும் விட்ட இடத்திலிருந்து சமையலைத் தொடர்வது என செக்குமாடு போல ஆகிவிட்டது வாழ்க்கை. கணவன் சுகுமாரனுக்கு தனியார் கம்பெனி ஒன்றில் மேனேஜர் உத்தியோகம். இரவு எந்நேரம் திரும்புவான் என்பது அவனுக்கே தெரியாது. நன்பர்கள் வட்டமும் அதிகம்.

முதல் கஸ்டமர். 45 வயதிருக்கும். வணக்கம் மேடம்

சொல்லுங்க

லோக்கல் ஷிஃப்டிங் ரிக்வெஸ்ட் ஒண்ணு கொடுத்திருந்தேன்

உங்க டெலிபோன் நம்பரச் சொல்லுங்க

நம்பரைச் சொன்னார்.

சிஸ்டத்தில் அடித்துப் பார்த்து வொர்க் ஆர்டர் போட்டாச்சுங்களே! லை மேன் யாரும் வரலியா?”

இது வரைக்கும் வரலிங்களே

ஜே டி ஓவுக்கு டயல் செய்து , “2213 ஷிஃப்டிங் யாருக்குப் போட்டிருக்கீங்க மோகனுக்கா? ஸ்ரீனிவாசனுக்கா?. ..... சரி. ஸ்ரீனிவாசன எங்கிட்டப் பேசச் சொல்லுங்க

ஐந்து நிமிடத்தில் ஸ்ரீனிவாசனே நேரில் வந்தார் ஏம்ப்பா அந்த 2213 லோக்கல் ஷிஃப்டிங் என்ன ஆச்சு?”

டெக்னிக்கல் ஃபீசிபிலிட்டி இல்லை மேடம்

எதுனால?”

சார் வீட்டுப் பக்கத்துல நம்ம கணெக்சன் ஏதும் இல்லை மேடம். டி பி தள்ளி இருக்கு இவருக்கு லைன் இழுக்க 2 போஸ்ட் போடணும். ஸ்விட்ச்ல எம்ப்டி பேரும் இல்லை

சரி வாங்க பார்த்துடலாம். சார் நீங்க எதுல வந்தீங்க?”

பரவாயில்லை, என் கார்லயே போயிட்டு வந்திடலாம் மேடம்

சென்று பார்த்துவிட்டு முடியாதென்பதை அந்தக் கஸ்டமருக்கு விளக்கிவிட்டு அவருக்கு ஒரு வில் போன் பரிந்துரைத்தாள்.

”இவருக்கொரு வில் போன் அப்ளிக்கேசன் கொடுங்கஎன்றவாறே, உள்ளே வந்த ஸ்டோர் கீப்பரைப் பார்த்து ராமச்சந்திரன் எல் ஜே இ எவ்வளவு ஸ்டாக் இருக்கு?”

அது இருக்கும் மேடம் 50, 60”

“50 60ஆ D E ரிப்போர்ட் கேட்டிருக்கார். சரியா எண்ணிச் சொல்லுங்க. ஸ்டாக் நோட்டக் கொண்டாங்க”. சரி எனத் தலையாட்டிச் சென்ற ராமச்சந்திரன் நோட்டை நீட்டியவாறே, “45 இருக்கு மேடம்

அப்ப ஸ்டாக் நோட்டுல 55ன்னு இருக்கு

“10 ஷார்ட்டேஜ் மேடம். கண்டுபிடிக்கணும்

“எப்பக் கண்டுபிடிப்பீங்க? உங்களுக்காக ஒவ்வொரு மாசமும் நான் பொய் சொல்லிட்டு இருக்கேன். சரி வில் போன் வொர்க்கிங்க் கண்டிசன்ல எவ்வளவு இருக்கு?என ஸ்டாக்கில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. ஸ்டாக் நோட்டைப் பார்த்து 10 நிமிடத்தில் முடிய வேண்டிய வேலை. நோட்டில் இருப்பதும், பிஸிக்கலாக இருப்பதும் அவர் சொல்வதும் டேலி ஆகவில்லை. உடையெல்லாம் அழுக்கானது மட்டுமல்லாமல், உடலெங்கும் பிசுபிசுப்பு எரிச்சலை அதிகரித்தது.

அதற்கிடையில் இன்னொரு கஸ்டமரிடமிருந்து ஒரு போன். ஹலோ இண்டெர்னெட் கனெக்ட் ஆக மாட்டேங்குது மேடம்

கனக்சன் ஐகான் விட்டு விட்டு எரியுதுங்களா?”

எதுங்க?”

அதாங்க உங்க கம்ப்யூட்டரோட ரைட் சைடுல கீழ ரெண்டு சின்ன கம்பூட்டர் ப்ளிங்க் ஆகுதா?”

ஆமாங்க

அப்ப கனெக்சன் சரியாத்தான் இருக்கு உங்க செட்டிங்கச் செக் பண்ணுங்க

மற்றொரு கஸ்டமர், “மேடம் ஷிஃப்டிங் ஒண்ணு அப்ளிக்கேசன் கொடுத்திருந்தேன் உடுமலையில இருந்து

வொர்க் ஆர்டர் நம்பரச் சொல்லுங்க

”CB122401”

வொர்க் ஆர்டரை கம்ப்யூட்டரில் தேடியெடுத்து, “கண்ணனா? பேமெண்ட் ட்யூ இருக்குன்னு உங்களுக்கு நோட்டீஸ் வந்திருக்குமே?”

கட்டியாச்சு மேடம். கிளியர்னு AO நோட்டீஸ்லயே எழுதிக் கொடுத்திருக்கார் பாருங்க

அதை வாங்கிப் பார்த்துவிட்டு, D E க்குப் போன் செய்தாள், “ சார் நல்லா இருக்கீங்களா?”

நல்ல இருக்கேம்மா நீ எப்படி இருக்கே?”

நல்லா இருக்கேன் சார். உங்க இயர் எண்ட் ரிப்போர்ட் எல்லாம் ரெடியா?”

எங்கம்மா இன்னும் முடியல உங்க ரிப்போர்ட் எல்லாம் வந்தாத்தானே? மொத்தமா கம்பைல் பன்ணனும்.

அப்புறம் அன்னைக்கு G M கேட்டப்ப உடனே தர்ரேன்னு ஒத்துக்கிட்டீங்க சார்?”

அவரு கேட்டாச் சரின்னுதானே சொல்லனும்

சரி சார் ஒரு கேஸ், ஷிஃப்டிங். ட்யூ இருந்தத கட்டீட்டாங்க. A O க்ளியரன்ஸ் கொடுத்திருக்கார். ஆனா எனக்கு இங்க வொர்க் ஆர்டர்ல ரிலீஸ் ஆகல

வொர்க் ஆர்டர் நம்பர் சொல்லுங்க

சொன்னாள்

"அது D E க்ளியரன்ஸுக்காக நிக்குதும்மா

சார் இதெல்லாமா D E கிளியர் பண்ணுவார்? சாப்ட்வேர்ல அப்டேட் பண்ணச் சொல்லுங்க. பணம் கட்டியாச்சுன்னு A O சர்டிபை பண்ணுனா A E க்கு வர்ர மாதிரிச் செய்யச் சொல்லுங்க சார்

சரிம்மா நோட் பண்ணி வச்சுக்கிறேன். அடுத்த I T ரெவ்யூவில இதச் சொல்லலாம்

சரி சார். இத மட்டும் D E கிட்டச் சொல்லி ரிலீஸ் பண்ணுங்க நான் கஸ்டமர்கிட்ட டைம் வாங்குறேன்

தொடர்ந்து கஸ்டமர்கள் வருகையினால் மதிய உணவு 3 மனிக்குத்தான் சாப்பிட முடிந்தது.

இதற்கிடையில் கோடை விடுமுறையில் இருக்கும் குழந்தைகள் இருவரிடமும் போனில் பேசி. மற்ற எக்ஸ்சேஞ்சிலிருந்து வந்த போன்களுக்கு பதிலளித்து என நாள் முழுவதும் வேலை தன் ஆக்டோபஸ் கரங்களால் அவளை விழுங்கியது.

மாலை வீடு சேர மணி 7.00 ஆகி விட்டது உடம்பெல்லாம் அடித்துப் போட்டதுபோல் வலி. போன மாதம் எத்தனாம் தேதி என யோசித்ததில் நாள் நெருங்கி விட்டது புரிந்தது. அதற்கான வலியாகத்தான் இருக்கும். ஒரு பிராக்ஸிவான் போட்டுக்கொண்டாள். “பிராக்ஸிவான் அடிக்கடி சாப்பிடாதீங்க மேடம், பின்னால கிட்னி பிராப்ளம் வரும்என்ற மெடிக்கல் ஷாப் பையனின் அட்வைஸ் ஞாபகம் வந்தது. வேறென்ன செய்ய?

சுகுமாரனைப் போனில் அழைத்து ஏதாவது டிபன் வாங்கி வரச் சொல்லலாம் என செல்லை எடுத்தாள்.

sukku calling என அலறியது செல்.

“ரம்மு நம்ம கோபாலன் வந்திருக்கான். உங்கையால சுட்ட அப்பளமும் ரசஞ்சாதமும் சாப்பிடனும்னு அடம் பிடிக்கிறான். ரெண்டு பேரும் வீட்டுக்குத்தான் வந்திட்டிருக்கோம். 10 நிமிசத்துல வந்திருவோம்” என
செல்லைக் கட் செய்தான்.

Friday, May 29, 2009

என்ன தவம் செய்தேனோ?

பதிவர் ஒருவரின் குழந்தையை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது அவசரம் கருதி. பதிவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சென்னையில் அவருக்கு யாரையும் தெரியாது. நண்பர்களுமில்லை, உறவினருமில்லை. கையில் காசுமில்லை. என்ன செய்வது?

குறைந்த மாதங்களே அறிமுகமாகி இருக்கும் இன்னொரு பதிவருக்குத் தொலைபேசினார். அடுத்த 10 நிமிடத்தில் அந்தப் பதிவர் மருத்துவமனைக்கு வந்து குழந்தையை சேர்க்க எல்லா உதவிகளும் செய்துவிட்டுக் கிளம்பும்போது செய்த காரியம் இன்னும் பிரமிப்பூட்டுவதானது.

தனது வங்கி அட்டையைக் கொடுத்து அதற்கான பின்(PIN) என்னவென்பதையும் சொல்லி,

“எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தை முக்கியம்” என்றவாரே காரில் ஏறிப் போனார்.

அடுத்த நாளிரவு தவிர்க்க முடியாத ஒரு வேலை காரணமாக 4 மணி நேரம் வெளியே செல்ல வேண்டி இருந்தது. இன்னொரு பதிவர் இவர் முக வாட்டத்தைக் கவனித்து விவரமறிந்து தானே குழந்தை அருகிலிருந்து கவனித்துக் கொண்டார்.

இன்னொரு பதிவர்(மருத்துவர்) குழந்தைக்கு கொடுக்கப் படும் சிகிட்சை சரியானதுதான் சீக்கிரம் சரியாகி விடுமென ஆறுதல் படுத்தினார்.


இவர் வெளிநாடுவாழ் பதிவர். அவரது தந்தை சமீபத்தில் காலமாகி விட்டார். உடனே கிளம்பமுடியாத சிக்கல் ஒன்றில் இருந்தாரவர். எனக்கு விஷயம் தெரிந்ததும் இரண்டு பதிவர்களிடம் அவரது நிலை பற்றிச் சொன்னேன். சில மணி நேரத்திலேயே அவரது நாட்டுத் தூதரகத்தில் பேசி, அவருக்கு விமான டிக்கட் புக் செய்து, சென்னையிலிருந்து அவரது ஊர் செல்லக் கார் என எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டு எனக்குத் தகவல் தந்தனர். அவர் கிளம்பய்தில் இருந்து அவரது பயணம் குறித்த நேர்முகத் தகவல் அரை மணிக்கொரு முறை என் செல் பேசிக்கு வந்தவாறே இருந்தது.

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ வேலை செய்யும் ஒருவருக்கு அவரை நேர்முகமாகக் கூட சந்தித்திராத பலர், அவரது நிலை குறித்த கவலையும் அக்கறையும் பட்டது என்னை நெகிழச் செய்தது.


இன்னொரு பதிவரின் அன்னை சென்னையில் ஒரு அறுவை சிகிட்சைக்காக் இருந்த பொழுது அவருக்கு உதவி செய்தவர்கள் எண்ணிக்கை அவரது பதிவிற்கு வரும் கும்மிப் பின்னூட்டங்களைவிட அதிகம்.


இறுதியாக என் நேரடி அனுபவம். நான் சமீபத்தில் வீடு வாங்கியது உங்கள் அனைவருக்கும் தெரியும். தெரியாதது நான் பணம் போதாமல் தவித்தது. கட்டிய வீட்டை வாங்கியதால் சொன்ன தேதியில் பணம் கொடுத்தே ஆக வேண்டிய சூழ் நிலை. வேறொரு பதிவரிடம் இதைக் குறித்து வருத்தமாகப் பேசிக் கொண்டிருந்தேன். இதைத் தெரிந்து கொண்ட இன்னொரு பதிவர் தானே முன் வந்து எனக்குப் பணம் கொடுத்து உதவினார் சரியான சமயத்தில். உடுக்கை இழந்தவனின் இடுக்கன் களைந்த நட்பது.


பதிவரின் கதை பத்திரிக்கையில் வந்தால் உடனே அழைப்புகள் பறக்கின்றன, இன்னாருடைய பதிவு இத்தனாம் பக்கம் என. குழும மெயிலில் வாழ்த்துக்கள் பதியப் படுகின்றன. வாழ்த்துப் பதிவு உடனே இடப்படுகிறது. எவருக்கும் இன்னொருவர் மீது கிஞ்சித்தும் பொறாமை இல்லை. ஏதோ தன்னுடைய பதிவே வந்ததுபோல் ஒரு கொண்டாட்டம். இதெல்லாம் வேறிடத்தில் சாத்தியமா?

சிறுகதைப் போட்டிக்கு நானும் கதை அனுப்பலாமென்றிருக்கையில் என் மெயிலில் அபிப்ராயம் கேட்டு வரும் கதைகள் என்னை ஆச்சர்யப் பட வைக்கின்றன. சக போட்டியாளரிடமே போட்டிக்கான கதையைச் சொல்லுவது முதிர்ந்த எழுத்தாளர்களே செய்யாத ஒன்று. என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி.


இவர்களெல்லாம் யாரார் என நான் நேரடியாகச் சொல்லாமல் பூடகமாகச் சொன்னதின் நோக்கம் இரண்டு.

1. அவர்களே அதை விரும்பவில்லை. நமக்கு அது பெரிய விசயம் அவர்களுக்கு அது சாதாரணம் போலும்.

2. அவர்கள் யாரெனத் தெரிந்தால் கடவுள் ரேஞ்சுக்கு அவர்களை உயர்த்தி விடும் அபாயமும் உள்ளது. பின் அவர்கள் நம்முடன் சகஜமாகப் பழக இடமில்லாமல் போய்விடக் கூடும்.


உண்டென்றும்
இல்லையென்றும்
இருக்கலாமென்றும்
உணரப்படும் கடவுள்
அவருக்கும்
அவர் சார்ந்த குடும்பத்தினருக்கும்
இறையருள் பெய்யட்டும்
எல்லா வளமும் அருளட்டும்.


டிஸ்கி : பதிவர்கள் யாரெனத் தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்ல வேண்டாம்... ப்ளீஸ்


.

Thursday, May 28, 2009

யார் இந்த வடகரை வேலன்?

இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது நான் பதிவெழுதத் துவங்கி. ஒரு வருடத்தில் சில குறிப்பிட்டுச் சொல்லும் பதிவுகள் எழுதியிருந்தாலும், கதம்பத்திற்கு எனக்குக் கிடைத்த வரவேற்பு நான் எதிர்பாராதது. இப்பொழுதும் சில பதிவர்கள் என்னைக் கதம்பம் வேலனா என வினவுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

தனிப்பட்ட முறையில் அடைந்த மகிழ்ச்சி எனில் விகடனில் என் கதை வந்ததைச் சொல்ல வேண்டும். ஜெயகாந்தன் போன்ற எழுத்துலக ஜாம்பவான்கள் எழுதிய இடத்தில் ஒரு ஓரத்தில் என் எழுத்தும் இடம்பெற்றதை நான் பெருமையாகக் கருதுகிறேன். திருமண மண்டபங்களில் மணமக்களைவிட மகிழ்ச்சியாக பட்டுப்பாவாடையில் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டும் எல்லோர் மீதும் பன்னீர் தெளிக்கும் சிறுமியினது பெருமிதத்தை ஒத்ததெனது.

ராஜேந்திரன் என்ற இயற்பெயர் துறந்து வடகரை வேலனானது ஒரு நிமித்தம் கருதித்தான். வேலுச்சாமி என்பதென் தந்தையின் பெயர். அவரது ஜன்ம ஸ்தலம் வடகரை. எனவே வடகரை வேலனென்ற புனைபெயரில் கவிதை, கட்டுரை மற்றும் நாட்கங்கள் எழுதி அரங்கேற்றியிருக்கிறார்.

ஒரு உத்வேகத்துடன் சினிமாவில் கால் பதிக்கும் முயற்சியாக அவரெழுதி வெற்றி பெற்ற நாடகம் ஒன்றைச் செப்பனிட்டு தயாரிப்பாளர் ஒருவரையும் இதரக் கலைஞர்களையும் ஒருங்கிணைத்துச் செயல்பட்டார். அவரது பாடல் ஒன்றும் ரிக்கர்டிஙக் ஆகியது, சங்கர் கனேஷ் இசையில் எல் ஆர் ஈஸ்வரி பாட. திரைப்படத்தின் பெயர் ”ப்ரியமுள்ள பிரேமா”. ரோஜா ரமணி கதாநாயகி என ஞாபகம்.

எல்லா அரும்புகளும் மலர்வதில்லை என்ற இயற்கையின் நியதிக்கேற்ப, இந்த முயற்சியும் கருகிய மொட்டுக்கள் வரிசையில் இடம்பெற்றது. அதன் பின் பிரபல இயக்குனர்களிடன் துனை இயக்குனராகச் சேர முயற்சித்தார். ஒரு ஆறு மாத காலச் சென்னை வாசத்திற்குப் பிறகு அந்த முயற்சிகளை ஏறக்கட்டிவிட்டு வேலையில் மும்முரமாக ஈடுபடவாரம்பித்தார். அவர் சொன்ன காரணம் இன்னும் என் மனதிலிருக்கிறது. “ ஒருவன் கலைஞனாகவும் தன்மானமுள்ளவனாகவும் ஒரு சேர இருப்பதியலாது”.

அப்பொழுது பிரபல பாடலாசிர்யியராக வளர்ந்து கொண்டிருந்தவர் இவரது கவிதை நோட்டுக்களை மொத்த விலை பேசிய நாளன்று அவரடைந்த மனவேதனை ஆற்றமுடியாதது.

பத்திரிக்கைகளில் அவர் சேர எடுத்த முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. அந்தக் காலகட்டத்தில் பத்திரிக்கைத் தொழிலும் பரவலாக இல்லை. மேலும் ஒரு சிலரால் மட்டுமே ஆளப்பட்டு வந்தது.

அவரது நினைவுநாளைக் கொண்டாடிய சில நாட்களிலேயே அவரது பெயர் பத்திரிக்கையில் வந்ததை அவருக்கு நான் செய்த அஞ்சலியாகக் கருதுகிறேன். அந்த வெப் ஆப்செட் மெஷின் ஒவ்வொருமுறை வடகரை வேலன் என்ற பெயரை அச்சடித்திருக்கும் பொழுதெல்லாம் ஒரு ரோஜா ஒன்றை என் தந்தைக்குக் காணிக்கையாகச் செலுத்தியதாக உணருகிறேன்.

எனக்குக் கிடைத்தவைகளிலேயே ஆகச்சிறந்ததாக, ஆரோக்கியமான பதிவுலக நண்பர்கள் வட்டத்தை எனக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறதெனதெழுத்து.

அந்த நண்பர்களைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன். இந்தப் பதிவின் நீளம் கருதி முடிக்கிறேனிப்போது.

.

Wednesday, May 27, 2009

கதம்பம் - 27/05/09

சமீபத்தில் நண்பரின் இரு வயது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். குழந்தையின் எடையைக் குறித்துவரச் சொன்னார் மருத்துவர். பெற்றோர், தாதியர் அனைவரும் போராடினர் அக் குழந்தையை எடை பார்க்கும் எந்திரத்தில் நிற்கவோ, உட்காரவோ குறைந்த பட்சம் படுக்கவோ வைக்க. குழந்தையின் எதிர்ப்பின் தீவிரம் ஏறுமுகமாகவே இருந்தது.

எல்லோரையும் விலகச் சொல்லி விட்டு, முதலில் குழந்தையின் அம்மாவின் எடையைப் பார்க்கச் சொன்னேன். பின்பு, குழந்தையுடன் அவரது எடையைப் பார்க்கச் சொன்னேன். கழித்து பார்த்து குழந்தையின் எடையைத் தாதியிடம் சொன்னேன்.

நண்பன், தாதியர் உட்பட அனைவரும் நான் ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டேன் என்பது போல கூச்சப்படுமளவுக்குப் புகழ்ந்து தள்ளிவிட்டனர். இதை 5 ஆம் வகுப்பிலேயே படித்திருக்கிறோம்; கணக்குப் பாடத்தில். அதெல்லாம் வாழக்கைக் கல்வி அல்ல என்பதாக ஆகிவிட்டது.

*****************************************************************************

”மூன்றாம் பாலின் முகம்” என்றொரு புத்தகம். மூன்றாம் பாலினர் உள்ளாக்கப்படும் நிராரி்த்தல், பகடி, ஏளனம், எள்ளல், வன்முறை அதனால் அவர்களடையும் வேதனை, மன உளைச்சல், தன்னம்பிக்கை இழத்தல் எல்லாவற்றையும் பேசுகிறது.

இந்தப் புத்தகத்தின் சிறப்பு, எழுதியவரே ஒரு மூன்றாம் பாலினர் - ப்ரியா பாபு.

மூன்றாம் பாலினர் உங்களிடம் வேண்டுவது காசு பணமல்ல, அவர்களின் இயலாமையைப் புரிந்து கொண்டு அவர்கள் தங்களை இயல்பாக வெளிப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு. அவர்களை அறுவெறுப்புடன் நோக்காமல், அவர்கலின் குறைபாட்டை உள்ளுணர்தல். இதை அழுத்தமாக முன் வைக்கிறது இந்த நாவல்.

பதிப்பகம் : சந்தியா பதிப்பகம், கதவு எண் 57, 53 ஆம் வீதி, அசோக் ந்கர், சென்னை - 600083. தொலை பேசி : 24896979, 65855704

விலை : ரூ. 50.00

*****************************************************************************

சிலரது வீ்டு சுத்தமாக, தூசு தும்பு ஏதுமின்றி, பளிசென்று இருக்கும். அந்த வீடுகளில் நான் மிகவும லஜ்ஜையாக உணர்வேன். ஆரம்ப காலங்களிலிருந்தே எனக்கு மிலிட்டரி டைப் சுத்தம், கட்டுப்பாடு ஏதும் ஒத்துவருவதில்லை.

சமீபத்தில் செல்வேந்திரன் அறைக்குச் சென்றிருந்தேன். ஓரிரவு தங்கவும் செய்தேன். அறை நேர்த்தியாக இல்லையே என்ற குற்றவுணர்ச்சியுடனே பேசிக் கொண்டிருந்தார் செல்வேந்திரன். பிரம்மச்சாரியின் அறை வேறெவ்வாறாக இருக்க முடியும்? என்ன சொல்லியும் சமாதானப் படுத்த முடியவில்லை. நினைவுகளின் அடியாழத்தில் புதைந்திருந்த என் ஹாஸ்டல் தினங்களைத் திருப்பித் தந்ததற்கு நன்றி சொன்னேன்.

*****************************************************************************

கவிதைகள் என்பது ஒரு வெளிப்பாடு. நீங்கள் பார்த்த, ரசித்த, உணர்ந்த ஒன்றின் ஒரு பின்னத் துணுக்கு.

சமீபத்தில் பதிவர் ஒருவருடன் மின்னரட்டையில் இருந்த போது கவிதையாக ஒரு ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டிருந்தார். அவரைக் கூப்பிட்டுப் பாராட்டினால் ”நான் எழுதுவதெல்லாம் கவிதையா? சும்மா கேலி பேசாதீர்கள்” என்றார் ஒருவேளை பகடி செய்கிறேனோ என்ற சம்சயத்துடன்.

”எனக்குப் பிடித்திருக்கிறது” என்றேன்.

உங்களுக்கும் பிடித்திருந்தால் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள் blogsking@gmail.com என்ற முகவரிக்கு.

ரயில் பயணம்

எப்போதும் சுவாரஸ்யம் தான்
எதிர் திசை ஓடும் ஜல்லிக்கற்கள்
கூடவே பயணிக்கும்
பக்கத்துத் தண்டவாளம்
பச்சைக்கே தானம் தர தயாராய்
தென்னந்தோப்புகள்
கவனம் சிதறாத
சோளக்காட்டு பொம்மை
கோடையிலும்
தண்ணீர் சுமக்கும் குட்டைகள்
வானம் பார்த்த பூமிகளில்
வரிசையாய்க் கோரைப்புற்கள்
ஆங்கிலேயரை மறக்கவிடாத
கிராமத்து ரயில் நிலையங்கள்
சுவாரஸ்யமாய்
புது உலகத்தில் நான்..
“அண்ணா..”
கவனம் கலைக்கிறான்
கையேந்தி நிற்கும் சிறுவன்..

- சஞசய் காந்தி.

******************************************************************

மின்னரட்டையில் பதிவர் ஒருவர் என்னைக் குண்டன் என்றார் நான் கோபப்படுவேன் என்று. மாறாக நான் மகிழ்ந்தேன்.

குண்டர்கள் கேபினெட் மந்திரியாகப் பதவியேற்கும் போது, அதென்ன இழிச் சொல்லா? உண்மையில் அவரென்னை ஒரு மந்திரி உயரத்திற்குப் புகழ்ந்திருக்கிறார்.

******************************************************************

.

தேக்கமும் ஏக்கமும்

பொருளாதாரத் தேக்க நிலை குறித்து வந்த மெயில்களில் சிறந்ததாக நான் கருதுவது உங்கள் பார்வைக்கு.





சொந்தமாக வாகனம்...
சொகுசான பங்களா வீடு...
வங்கிக்கணக்கிலும்
பங்கு மார்க்கெட்டிலும்
வற்றிப்போகாத சேமிப்புகள்...

சமூகத்திலும்
சமூக மன்றங்களிலும்
சரியாத செல்வாக்கு...

அன்பான மனைவி...
அழகான குழந்தைகள்...

இப்ப்டியாக,
கைகூடிய கனவுகளெல்லாமே
அளவான ஆசைகள்தான்...
பேராசை என்று எதையுமே
பேரிட முடியாது...

திவாலாகப் போகிற
சேதி தெரியாமல்
கூடுதல் சம்பளம்
கொடுப்பதாகச் சொன்ன
புது நிறுவனத்தை நம்பி
இருந்த வேலையை
அண்மையில் விட்ட அந்த
அசட்டுத் தனத்தைத தவிர
வேறெதையுமே
பேராசை என்று பேரிடமுடியாது...

- ந. வி. விசய பாரதி

நன்றி திகழ்மிளிர்.

Tuesday, May 26, 2009

ரூல் பார்ட்டி சிக்ஸ்

புதிதாக வந்த காண்ட்ராக்ட் ஒன்றின் எஸ்டிமேசன் தயாரித்துக் கொண்டிருந்தான் சேது. ”சுகுணா எலிகான்ஸ்” நிறுவனத்தில் டிராஃப்ட்ஸ்மேன் என்ற பதவியென்றாலும் மற்ற வேலகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வான். எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகம். ஆனால் மிகவும் சென்ஸிட்டிவ்வான ஆசாமி.

”சேது” இண்டர்காமில் அழைத்தது அவனது முதலாளி வேணுகோபால்.

“என்ன சார்?”

“நாளைக்கு உனக்கு முக்கியமான் இன்ஸ்டலேசன் ஏதுமிருக்கா? ரூல் பார்ட்டி ஸிக்ஸ் இன்ஸ்பெக்சன் இருக்கு, காவேரிக்கும், ஹிந்துஸ்தானுக்கும். நீ சமாளிக்க முடியுமா? ”

“இன்ஸ்டலேசன் ஏதுமில்ல சார். எல்லாம் ரொட்டீன் மெயிண்டனன்ஸ்தான். ஐ வில் மேனேஜ். ஏ இ யாரு? ராஜகோபாலா?”

“இல்லப்பா விஸ்வநாதன்”

“அவரு எனக்குப் பழக்கமில்லையே சார்?”

“பிரச்சினை இல்லை. க்ளையண்ட் ரெண்டு பேருகிட்டயும் பேசீட்டேன். குப்தா கார் அனுப்புறேன்ன்னு சொல்லியிருக்கார். இதுதான் டிரைவர் செல் நம்பர். எப்ப வேணுமோ அப்பக் கூப்பிட்டுக்கோ. அட்வான்ஸ் ஒரு பத்தாயிரம் வாங்கிக்கோ. ”

“சரி சார் ஏ இ நம்பர் கொடுங்க”

டுத்த நாள் காலை 7 மணிக்கே சேதுவின் மொபைலுக்கு அழைப்பு வந்தது அவன் முதலாளியிடமிருந்து. “சேது அந்தாள் உனக்காகத்தான் காத்திருக்காராம்”

“சார் 9 மணிக்குப் போனாப் பத்தாதா?”

“இல்லப்பா இவரு கொஞ்சம் விவகாரமான ஆள். சீக்கிரம் போ”

“சரி சார்”

7.30 மணிக்கு ஏ இ இருக்கும் மேன்சனில் இருந்தான். ஷேவ் செய்யாத முகத்துடன் தோளில் ஒரு துண்டுமாகக் காட்சி தந்தவரை முதல் பார்வையிலேயே வெறுத்தான். எப்படி ஒரு நாள் முழுவதும் இந்தாளுடன் குப்பை கொட்டப் போகிறோம் என பயந்தான்.

“சார்”

“யாரு?”

“இன்னைக்கு இன்ஸ்பெக்சன், காவேரி ப்ளவர் மில்ஸ், ஹிந்துஸ்தான் ரீரோலிங் ரெண்டும்”

“உம்பேரு என்னப்பா?”

“சேது. எத்தனை மணிக்குக் கிளம்பனும் சார்? காரை வரச் சொல்லனும்.”

”உடனே வரச் சொல்லு வேலை இருக்கு.”

“சரி சார்” என்றவாரே வெளியே வந்து கார் டிரைவரை அழைத்தான்.

“கார் வந்திருச்சா”

“வந்திருச்சு சார்”

“சரி அண்ணபூர்ணா போய் இந்த ப்ளாஸ்க்குல காப்பி வாங்கி வரச் சொல்.”

டிரைவரிடம் காசு கொடுத்து காப்பி வாங்கிவர அணுப்பினான். 14 லட்சரூபாய்க் கார் ரெண்டு காப்பிக்காகப் பறந்தது. ரெண்டு காப்பிக்கே 15 ரூபாய்தான் ஆகும் அதுக்கு ஆகும் பெட்ரோல் செலவு?

வந்த காபியைக் குடித்துவிட்டு குளித்து பின், பூஜை செய்தார் அரைமணி நேரம் பக்திப் பழமாக. எல்லாம் முடிந்து வந்து காரில் ஏறியவாறே , “ டிபன் ஹவுசுக்கு விடச் சொல்லுப்பா அங்கதான் டிபன் சூப்பராக இருக்கும்”

அது நாம் போக வேண்டிய திசைக்கு எதிர் திசை எனச் சொல்ல வாயெடுத்தவன், அமைதியாக டிரைவருக்கு இடத்தைச் சொன்னான்.

சாப்பிட்டு முடித்ததும், “ கொஞ்சம் செக்சன் வரைக்கும் போய் இன்னைக்கான இன்ஸ்ட்ரக்சன் எல்லாம் கொடுத்துட்டு போகலாம்”. கார் மீண்டும் வந்தபாதைக்கே திரும்பியது. 11 மணிவரைக் காக்க வைத்துப் பின்தான் வந்தார்.

வரும்போதே “ஏதாவது நல்ல ஜூஸ் கடைக்கு விடச் சொல்லுப்பா. வெயில் தாங்க முடியல”


காவேரி பிளவர் மில்ஸ் ஊருக்கு வெளியே கோபித்துக் கொண்டு தனியே போனது மாதிரி தள்ளி இருந்தது; பொள்ளாச்சி ரோட்டில். மில் வளாகத்தினுள் கார் நுழைந்ததும் டிரைவர் கேட்டார், “ சார், ஆபீசுக்கா? பவர்ஹவுசுக்கா? ”

“ஆபீசுக்கே போப்பா” என்றார் ஏ இ.

உள்ளே நுழைந்ததும், “அப்ரூவ்டு டிராயிங்க் எங்கப்பா, அடிசனல் லோடு சாங்க்சன் லெட்டர் கொடு” என்றார். எல்லாவற்றையும் தயாராக வைத்திருந்த எலெக்ட்ரிக்கல் சூப்பர்வைசரிடமிருந்து வாங்கிக் கொண்டு தீவிரமாக ஆராய்ந்தார்.

“ஏம்ப்பா எல்லாம் ஸ்கீமேட்டிக் டிராயிங்க்ல இருக்க மாதிரி எரக்சன் பண்ணியிருக்கீங்களா? இல்ல உங்க இஷ்டத்துக்கு பண்ணி வச்சிருக்கீங்களா?”

“எல்லாம் டிராயிங்க்ல இருக்க மாதிரி பக்காவா இருக்கு சார்” என்றார் சூப்பர்வைசர் பவ்யமாக.

“இருந்தாச் சரி” என்றாவறே சேதுவைப் பார்த்தார். பார்வையின் அர்த்தம் புரிந்து உடனே அக்கவுண்டட்டைப் பார்த்தான் சேது. கைமாறியது கவர். கவரை வெளிப்புறமாகத் தடவிப் பார்த்தவர் கேள்விக் குறியுடன் சேதுவைப் பார்த்தார்.

“நீங்க சொன்ன அமவுண்ட் இருக்கு சார் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களா இருக்கு” என்று நம்பிக்”கையூட்டி”னான் சேது.

அதற்குள் அக்கவுண்டண்ட் கோதுமை ரவை, வெள்ளை ரவை, கோதுமை மாவு மூன்றும் தலா 5 கிலோ காரில் ஏற்றி விட்டார்.

”சரி” எனத் திருப்தியாகத் தலையாட்டியவர் ”போலாம்” எனச் சொன்னார்.

காரில் ஏறியதும், “அங்கண்ணன் கடை பிரியணி சாப்பிடணும்ப்பா ரெம்ப நாளாச்சு” என்றார். அவர் சாப்பிட்டதை விட டேபிளில் இறைத்ததுதான் அதிகம். பூண்டு வாசம் வீசும் ஏப்பத்துடன் மதியச் சாப்பாடு முடிந்ததும் அடுத்த கம்பெனி நோக்கி ஓடத் தொடங்கியது கார்.

ஹிந்துஸ்தான் ஸ்டீல் ரீரோலிங் மில். காலையில் நடந்த அதே சடங்குகள் இங்கும் நிறைவேறியபின், அறைக்குச் செல்வார் எனப் பார்த்தால் அலுவலகம் செல்ல வேண்டுமென்றார். மேலும் ஒரு இரண்டு மணி நேரம் காக்க வைத்து காத்துப் பின் 7.00 மணிக்கு வெளியே வந்தவர் சூர்யா ஹோட்டலுக்குக் காரை விடச் சொன்னார்.

பாரில் செட்டிலானவரை, நேரமாவதைச் சுட்டிக் காட்டிக் கைத்தாங்கலாக அழைத்து வந்து காரில் ஏற்றி அவரது அறையில் இறக்கி விட்டு காந்திபுரம் பஸ்ஸ்டாப்பில் இறங்கிக் கொண்டான் சேது.

காலைமுதல் ஆன செலவுகளைக் கணக்குப் போட்டு அதிர்ந்தான். தங்கச்சிக்கு செமஸ்டர் பீஸ் கட்ட அடமானம் வைத்த பைக்கின் ஆர் சி புக்கை மீட்டிருக்கலாம். ஊரில் வீட்டுக்கு ஓடு மாத்தியிருக்கலாம். ”ஹும்” பெருமூச்சுத்தான் விடமுடிந்தது.

காலியாக வந்த S9 பஸ்ஸில் ஏறி, இருக்கையில் தொப்பென விழுந்தான். அவனது உடல்மொழியைக் கவனித்த அருகிலிருந்தவர் கேட்டார், “தம்பி இவ்வளவு டயர்டா இருக்கீங்க. என்ன வேலை பாக்குறிங்க?”

“மாமா வேலை” என்றான்; ஒரு வாழ்நாளுக்கான வெறுப்பை மனதில் தேக்கியவாறு.

டிஸ்கி : ரூல் 46 : மின்வாரியம் அனுமதியளித்தப்டி மின்மோட்டார் மற்றும் உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளாதா என்பதை சோதனை செய்வது. உதவிப் பொறியாளர் நேரில் சோதனை செய்து அதை உறுதி செய்ய வேண்டும்.

.

Thursday, May 21, 2009

ஆதியின் அறைகூவல்

வடகரையாரை நோக்கி நான் கேட்கிறேன் " இளைஞர்களை காப்பாற்றும் பொருட்டு கல்யாணத்தின் ஆபத்துகளை குறித்து ஒரு பதிவாவது போட்டிருக்கிறீரா? கதைதான் எழுதியிருக்கீரா? அல்லது அடி வாங்கியதை பப்ளிக்காக ஒப்புக்கொண்டுதான் இருக்கிறீரா? அல்லது குறைந்த பட்சம் ஒரு எதிர் பின்னூட்டமாவது போட்டிருக்கிறீரா? "

இப்படி என்னைப் பார்த்துக் கேட்டது யாருன்னு நெனைக்கிறிங்க? நம்ம ஆதித்தாமிரா தான்.

சம்சார சாகரத்துல எப்படி நீந்தி கரையேறனும்னு பதிவெல்லாம் போட்டு விளக்க முடியாதுங்க. ஏன்னா அது ஆளாளுக்கு ஊரூருக்கு வித்தியாசப் படும். ஒருத்தருக்கு சரியா வர்ரது இன்னொருத்தருக்குப் புட்டுக்கிடும். காலே கால் கிலோ அல்வாவும், ஒரு முழம் மல்லியப்பூவும்னு கவுண்டர் காமெடி உங்களுக்கு ஞாபகம் வருதா?

ஆனாலும் நம்ம வீரத்தைக் கேள்வி கேட்டுட்டதால ஒரு சிறுகதை







எம்புருசன் எம்புட்டு நல்லவரு!

கதவைப் பூட்டி இழுத்துப் பார்த்துவிட்டு காரில் ஏறினேன். காரை ஸ்டார்ட் செய்யுமுன், மனைவிக்கு (குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு அம்மா வீட்டுக்குப் போயிருக்கிறாள்) ஒரு போன் அடித்தேன்.

“தங்கம், நானே பருப்புச் சாதம் வச்சுக்கிடலாம்னு பாக்கேன், எம்புட்டு அரிசிக்கு எம்புட்டுத் தண்ணி வைக்கனும்னு சொல்லுப்பா?”

“எதுக்குங்க இந்த வீண் வேலை? பேசாமா எங்கனயாச்சும் டிபனச் சாப்பிடுங்க”

“இல்லப்பா இப்பச் செஞ்சா அதையே மத்தியானத்துக்கும் வச்சிக்கிடலாமுல்லே அதான்”

“நீங்களாவது மத்தியானத்துக்கு வந்து சாப்பிடறாவது. நான் சமைச்சு வச்சுக் காத்துகிட்டு இருக்கும்போதே வர மாட்டீங்க. வீணா பொருளுக்குப் பிடிச்ச தண்டமா”

“பொறுப்போட ஒரு காரியம் செய்யலாம்னு உங்கிட்ட கேட்டேம்பாரு என்னை அடிக்கனும்”

“சரி சரி, சின்ன ஒழக்குல ஒரு ஒழக்கு அரிசி வையுங்க உங்களுக்கு ரெண்டு நேரத்துக்கு வரும்.”

“சரி பருப்பு எவ்வளவு போட”

”ஒரு கை அளவு பருப்புப் போட்டாப் போதும்.”

”தண்ணி எவ்வளவு?”

”சின்னச் செம்புல ஒரு செம்பு நெறையத் தண்ணி வைங்க.”

“ஒரு விசிலா? ரெண்டா?”

“ரெண்டாவது விசில்ல ஸ்டவ்வ ஆப் பண்ணிடுங்க. மறக்காம 10 நிமிஷம் கழிச்சு எடுத்து ஹாட் பேக்குல வச்சிடுங்க.”

“இவ்வளவுதானே ஜாமாய்ச்சுடலாம். அத்தை மாமா அதை எல்லாத்தையும் கேட்டேன்னு சொல்லு”

”ஸ்பீக்கர் போன்ல நீங்க பேசுறதக் கேட்டுட்டு இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் ஒரே சந்தோஷம் நீங்க இவ்வளவு பொறுப்பா இருக்கதப் பாத்து. எனக்கு இப்பத்தாங்க நிம்மதி. நான் இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வர்ரங்க”

”சரிம்மா. நாளைக்குப் புளிச்சாதம் செய்யலாம்னு இருக்கேன்”

போனை ஆப் செய்துவிட்டு காரை அண்ணபூர்ணாவுக்கு விட்டேன். மதியம் கொக்கரக்கோவில் சாப்பிட்டாப் போச்சு.

டிஸ்கி : இத யாராவது கடைபிடிச்சு அடி வாங்கினா கம்பெனி பொறுப்பில்லை. குறிப்பா என்னோட ஃபாலோவர்ஸ். என் பிளாக்க மட்டும் பாலோ பண்ணுங்க.

.

Wednesday, May 20, 2009

கொல்லும் தெய்வம்?


ஒரு மனிதன் எவ்வளவு கீழ்த்தரமானவனாக இருந்தாலும் அவனது மறைவு குறித்து பொதுவாக நல்லவிதமாகப் பேசாவிட்டாலும் கேவலமாகப் பேசமாட்டோம். அதுதானே குறைந்தபட்ச நாகரீகம்?

ஆனால் அதுவே ஒரு இனத்தைக் காக்க தன் வாழ்நாள் முழுவதும் காடுகளிலும் கரடுகளிலும் மறைந்து வாழ்ந்து தன் சுக துக்கங்களை தன் இனத்துக்காகவே அர்ப்பணித்த ஒரு இனப்போராளி எனில் இதைப் பற்றிக் கவலை இல்லாமல் எதை வேண்டுமானாலும் சொல்லலாம், எழுதலாம், பேசலாம் அவதூறு பரப்பலாம். அப்படித்தானே?
இறந்தது இன்னும் உறுதி செய்யப்படாத போதே இவ்வளவு விஷ(ம)மா?
இந்த போஸ்டர் எந்த விதத்தில் சரி? இவர்களா நம் நாட்டை
ஆளத்தகுதியுள்ளவர்கள்?

ராஜபக்‌ஷேவைத் தெய்வமெனச் சொல்வது என்ன விதமான குரூர மனப்பான்மை? இலங்கைப் பிரச்சினையில் இவர்கள் யார் பக்கம்?

இந்த கிளைக் கேள்விகள் எதற்கும் பதில் கிட்டாது.


படம் உதவி : http://enathu-pathivukal.blogspot.com/2009/05/blog-post_20.html
.

Monday, May 18, 2009

கதம்பம் - 18/05/09

பொள்ளாச்சித் தொகுதியில் கொ மு பேரவை பெஸ்ட் ராமசாமி கண்டிப்பாகத் தேர்வாகி விடுவார் என எல்லோரும், மற்றுக் கட்சியினர் உட்பட எண்ணிக் கொண்டிருக்க அவர் டெபாசிட் இழந்திருக்கிறார். தேர்தல் அலுவலுக்கு என் மனைவி சென்ற வாக்குச்சாவடியில் கூட அவருக்குத்தான் அதிக வாக்குகள் விழுந்திருக்குமெனச் சொன்னார்.


மக்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை.


இத்தனை வருட அரசியல் அனுபவமுள்ள மணி சங்கர், சிதம்பரம், இளங்கோவன், வைகோ போன்றோர் தடுமாற ரித்தீஷ் போன்றோர் வெற்றி பெற தேர்தலின் சமன்பாடு என்னவெனப் புரியவில்லை.

*************************************************************************

சென்ற வாரம் எனது கதை ஒன்று விகடனில் வெளியாகியது. நேரிலும், தொலைபேசியிலும், அலைபேசியிலும், மின்னரட்டையிலும், மின்னஞ்சல் மூலமாகவும் பாராட்டிய உங்கள் அனைவருக்கும்... வேறென்ன சொல்ல நன்றியைத் தவிர.


பைத்தியக்காரன் பாராட்டியவிதம் பிடித்திருந்தது. பிறிதொரு பதிவில் அதைப் பகிர்கிறேன்.


*************************************************************************

சென்ற வாரம் ஜ்யோராம் சுந்தர் கோவை வந்திருந்தார். நானும் சஞ்சயும் அவருடன் ஒரு பின் மாலையைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டோம், நல்ல விவாதங்களுடன் கருத்துப் பகிர்தலுடனும்.


முதலில் தான் ஒரு வாசகன் என்று தன்னைப் பற்றிச் சொல்லும் சுந்தர் நல்ல படிப்பாளி. அவரது படிக்கும் முறை ஆச்சர்யம் தரக்கூடும். ஒரே சமயத்தில் நாலைந்து புத்தகங்களை வைத்துக் கொண்டு இதில் சில பக்கங்கள் இன்னொன்றில் சில பக்கங்கள், பிறிதொன்றில் சில பக்கங்கள் எனப் படிப்பாராம். ஒரு எழுத்தாளரைத் தொடர்ந்து படிப்பதால் ஏற்படும் ஆயாசத்தை இது தவிர்க்குமெனச் சொன்னார். முயல வேண்டும்.


*************************************************************************


அசோகமித்திரனின் “ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்” என்னும் சிறுகதைத் தொகுதியைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் எனக்குப் பிடித்த கதையான புலிக் கலைஞன் உள்ளது. ஆனால் ரிக்‌ஷா, ரிஷ்கா என்ற இரு வார்த்தைகளைப் பிரதானமாகக் கொண்டு அவர் எழுதியுள்ள ரிக்‌ஷா ஒரு வித்தியாசமான கதை. மேலும் சில ஆச்சர்யங்கள் இத்தொகுதியில். 1957 முதல் 1999 வரை அவர் எழுதியுள்ள கதைகளின் தொகுப்பு இது. இந்தக் கால கட்டத்தைப் புரிந்தவர்களுக்கு இது நல்ல வாசிப்பனுபவத்தைத் தரக் கூடும். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இத்தொகுப்பினைத் தொகுத்தவர் அரவிந்தன்.


*************************************************************************


பிழைத்தல் வேண்டிச் செய்யும் செய்கைளினூடாக வழியும் பாவங்களைக் களைதல் பற்றிய யாத்ராவின் கவிதை இம்முறை


பிழைத்தல்


கசப்பின் முள் கிரீடத்தின் ஊடே
குருதி வழிய
வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பவர்களுக்காக
பாரம் சுமக்கப்போகிறவர்களின்
உள்ளங்கைகளிலும் கால்களிலும்
அறையப்போகும் ஆணிகளையும்
தேர்ந்த மரத்தில் சிலுவைகளையும்
தயாரிக்கச்சொல்லி உத்தரவு

குளிர்காய மரபுத்தர் சிலைகளும்
நல்ல விற்பனை

உயிர்த்தெழுதல் வேண்டி நிற்கும்
அனேகர்கள் மன்னிப்பீர்களாக

வணிகம் முடிந்து
பாவமன்னிப்போ
பங்கு காணிக்கையோ

குற்றவுணர்வு பீடிக்காதிருக்க
வழிகள் அனேகம்

சாமர்த்தியமாய் பிழைத்தலே முக்கியம்


*************************************************************************

”பதவியில் இருந்தால்தான் மக்களுக்குச் சேவையாற்ற முடியும் என்பதில்லை

சொன்னவர் யார்?

1. வைகோ
2. தங்கபாலு
3. ஈ வி கே எஸ்
4. சரத்குமார்


.



Wednesday, May 13, 2009

பிறந்தநாள் வாழ்த்துகள் பரிசல்.


உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் கிருஷ்ணா.


அன்புடன்


வடகரை வேலன்
செல்வேந்திரன்

Tuesday, May 05, 2009

கதம்பம் - 5/5/09

”அண்ணாச்சி”

“சொல்லு சஞ்சய்”

“முரளிக்கண்ணன் லைன்ல இருக்காரு. அவருகிட்ட இவ்வளவு நேரம் நாந்தான் வடகரை வேலன்னு பேசிகிட்டு இருக்கேன். அவரு சஞ்சய்கிட்டப் பேசனும்னு சொன்னதால உங்களக் கான்ஃப்ரன்ஸ்ல போடுறேன். அப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்க”

“சரி சரி “

“அலோ சஞ்சய் எப்படி இருக்கீங்க?” கேட்டது முரளிக்கண்ணன் எங்கிட்ட(!?)

“நல்லா இருக்கேன் முரளி. என்னல்லாம் சின்னப்பையன்னுதானே வந்ததும் அண்ணாச்சிகிட்டப் பேசுறீங்க?” நான்

“சேச்சே அப்படியெல்லாம் இல்லைங்க எங்கிட்ட அண்ணாச்சி நம்பர் இருந்திச்சி பேசினேன் ஞாபகமா உங்க நம்பர் வாங்கிப் பேசுறேன் பாருங்க”ன்னாரு முரளி.

இதுக்கு மேல அவரக் கலாய்க்கிறது நல்லால்லன்னு. “ அலோ முரளி அவ்வளவு அப்பாவியா நீங்க? இவ்வளவு நேரமும் நீங்க சஞ்சய் கிட்டத்தான் பேசிட்டிருந்தீங்க, அண்ணாச்சின்னு நெனைச்சு”

“அடப்பாவிகளா”ன்னு சிரிக்க ஆரம்பிச்ச முரளி வெகு நேரம் சிரிச்சிகிட்டே இருந்தாரு.

***********************************************************

தொண்டாமுத்தூர் எம் எல் ஏ கண்ணப்பன்(முன்னாள் மதிமுக இன்னாள் திமுக) கட்சி மாறியதால் அவரது பதவி பறி போகுது. அவரைத் தேர்ந்தெடுக்க அரசாங்கம் செலவிட்ட பணத்தை இப்பொழுது யாரிடம் வசூல் செய்வது?

இதுபோலத்தான் கம்பம் ராமகிருஷ்ணனும் இன்னும் சிலரும். இது குறித்து ஒரு விவாதம் நடத்த வேண்டும்.

இடைத் தேர்தல்ல என்ன கூத்துக்கள் அரங்கேறப் போகுதோ?

***********************************************************

ஜெயமோகனின் ”ஊமைச் செந்நாய்” சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். அதில் இரு கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. இரண்டுமே வலைத்தளத்தில் வாசித்திருந்தாலும் புத்தகமாகப் படிக்கும் அனுபவம் வலை வாசிப்பில் கிடைப்பதில்லை.

”ஊமைச் செந்நாய்”, ”மத்தகம்” இரு கதைகளும் வேறு வேறு தளமெனுனிம் வாசிக்க ஆரம்பித்த உடன் நம்மை உள்ளே இழுத்துக் கொள்வன. வாசித்துப் பாருங்கள்.

***********************************************************

மதுரை வட்டார வழக்குல ஒரு நல்ல கதை ரெஜோவாசனோட கம்பிகளுக்குப் பின்னாலுறங்கும் கடவுள்

***********************************************************

துன்பம்

இறைச்சிக் கடையைக் கடக்கும்பொழுது
கூடுதலாகத் துடிக்கிறது இதயம்
மலரைக் கிள்ளும்பொழுது
கூசுகிறது எலும்பு
விபத்துக் களத்தின் உறைந்த ரத்தம்
துயிலிரவைக் கலைக்கிறது
ஒழுகும் தர்மங்கள்
மீது அசூயை ஊட்டுகிறது
வதைபடும் கைதியின் நொய்ந்த உடல்
வரவரபொறுக்க முடியாமலாகிவிட்டது
மனசாட்சியின் அழுகை.

- மகுடேஸ்வரன்

***********************************************************

தேர்தல் சமத்துல நம்ம ஜோக்கு எதுவும் எடுபடாது போல இருக்கு.

”இந்தத் தேர்தலில் நான்தோல்வியுற்றால், அது தமிழக மக்களுக்குக் கிடைத்த தோல்வி” - ஈ வி கே எஸ் இளங்கோவன்.


.

Monday, May 04, 2009

நனையாத நிழல்



குல தெய்வம் கருப்பசாமி
கும்பிடுவது குமரனை
காரியசித்திக்கு கணபதி
காசு சேர பாலாஜி
காவலுக்கு அய்யனார்
எந்தச் சாமியிடமும்
வேண்டினாலும்
தீருவதாயில்லை
என் பாவம்.

கங்கையோ காவிரியோ
ராமேஸ்வரம் கடலோ
எதில் முங்கினாலும்
ஒரு போதும் நனையாத
என் நிழல் போல.

.

Saturday, May 02, 2009

அனுஜன்யாவை வாழ்த்துவோம்


நம்ம யூத் பதிவர் அனுஜன்யாவுக்கு இன்று (3/5/2009) திருமண நாள்.

அவருக்கும் அவரது தங்கமணிக்கும் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ நமது வாழ்த்துகள்.

அவரது கவிதைகளைப் பொறுத்துக் கொள்ளும் அவரது தங்கமணிக்கு் நமது சிறப்பு வாழ்த்துகள்.

வாருங்கள் வாழ்த்துவோம்.


.

Friday, May 01, 2009

வருத்தமான செய்தி

நமது சக பதிவர் ஜோசப் பால் ராஜ் அவர்கள் தந்தையார் இன்று இயற்கை எய்திவிட்டார்.


அவரது ஆத்மா சாந்தியடைய பதிவர்கள் அனைவர் சார்பாக பிரார்த்திக்கிறேன்.




.