தங்க நாற்கரத் திட்டம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. முன்பெல்லாம் கோவையிலிருந்து 7 மனி நேரம் பயணம் செய்து அடைந்த தூரத்தை இப்பொழுது 5 மணி நேரத்திலேயே அடைய முடிகிறது.
சிவகாசிக்கும் கோவைக்கும் உள்ளதூரம் 350 கி மிக்குள்தான் இருக்கும். ஆனால் பயணம் செய்யும் சாலை சரியில்லமல் இருந்ததால் 7 மணி நேரம் ஆனது. மேலும் மதுரைக்குள் நுழைந்து வெளியேற எல்லவிதமான சாகசமும் தெரிந்திருக்க வேண்டும்.
திடீரென்று குறுக்கே திரும்பும் டூ வீலர்காரரை மன்னித்து பெரிய மனிதன் ஆவது உசிதம். இல்லையெனில் கீழ்க் கண்ட சம்பாஷனை உத்திரவாதம்.
“என்னண்ணே சடார்னு திரும்பீட்டீங்க?”
“அதான் திரும்பீட்டமுல்ல, பேசாமப் போய்ட்டேருங்கண்ணே”
“இல்லண்ணே ஏதாவது ஆயிருந்தா?”
“அதான் ஒன்னும் ஆவலைல்ல, போய்ட்டேருண்ணே”
முதல் பதிலில் இருந்த “ங்க” இரண்டாவில் மிஸ் ஆனதைக் கவனிக்கவும்.
திருமங்கலத்திலிருந்து சமயநல்லூர் வந்து சேருவது போல ஒரு பைபாஸ் ரோடு மதுரையைச் சுற்றிப் போட்டிருக்காங்க. தூரமும் குறைகிறது. சிட்டிக்குள் டிரபிக்கில் ஓட்டுவதால் ஏற்படும் மன அழுத்தமும் குறைகிறது.
வாஜ்பாய் அரசுக்குத்தான் நன்றி சொல்லனும்.
*********************************************************************
சென்ற வாரம் தங்கமணி தங்கத்துல ஒரு வளையல் வாங்கலாம்னாங்க. சரின்னு ரெண்டு பவுன்ல ஒரு வளையல் தேர்வு செஞ்சு எஸ்டிமேசன் கேட்டா 28,000 போட்டுக் கொண்டு வந்தார் சேல்ஸ் மேன். அன்றைய தங்க விலை நிலவரம் பவுன் ஒன்றுக்கு ரூ 11080/-.
விளக்கச் சொல்லிக் கேட்டா வேற ஒருத்தர்கிட்டக் கை காட்டினார். அவர் கிட்டப்போனா, ”அது கம்ப்யூட்டர் போட்டது அதுல தப்பே வராது” ன்னார். ”பரவாயில்லைங்க எனக்குப் புரியுறா மாதிரிச் சொல்லுங்க”ன்னு சொன்னதுக்கப்புறமா வேற பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வந்தாரு. ”சாரி சார் மிஸ்டேக் ஆயிருச்சு”ன்னுட்டு. அதுக்கப்புறம் அதுல செய்கூலியக் கழிச்சு சேதாரம் 20% இருந்தத 15% ஆக்கி மொத்தத் தள்ளுபடின்னு எல்லாம் செஞ்சு 25,500க்கு வாங்கினோம். இதுவே அதிகம்தானோ?
*********************************************************************
எங்குழந்தைக, தம்பி குழந்தைக, மச்சினன் குழந்தைகன்னு ஒரு பட்டாளம் விடுமுறைக்குச் சேர்ந்த்ததால 'பட்டாளம்' படம் பார்த்தோம்.
பசங்கன்னா தண்ணியடிப்பாங்க, ஈவ் டீஸிங் பண்ணுவாங்க, ரவுடிக மாதிரி ஊரச்சுத்துவாங்கன்னு தமிழ்ச் சினிமாவுல இருந்த பிம்பத்த உடைச்சதுக்காகப் பாராட்டினாலும், பாத்திரத்ங்களைச் சித்தரிச்சதுல கோட்டை விட்டுட்டாங்க. கதைன்னு ஒன்னு இல்லவே இல்லைங்கிற மாதிரித்தான் இருக்க ஒரு வரிக் கதையும் இலக்கில்லாம நகருது. சில சமயம் நகரவே இல்லை. நதியா மாதிரி தேர்ந்த நடிகை, நடிப்பில முதிர்ச்சி இருக்கது பத்தாதுன்னு முகத்திலயும் முதிர்ச்சியக் காட்டுற மாதிரி மேக்கப்.
பாட்டுக்கள்ல ஒண்ணு கூட மனசுல நிக்கல. அதே போல ரீ ரிக்கார்டிங் கொடூரம். யாராவது இதுக்கு ஒரு பொதுநல வழக்குப் போட்டா நல்லா இருக்கும். சத்தமாப் போட்டாத்தான் நல்ல ரீரிக்கார்டிங்னு முடிவு பண்ணீட்டாங்களோ?
மொத்தத்துல நல்லா வந்திருக்க வேண்டிய படத்த எல்லோரும் உழைச்சுக் கெடுத்திருக்காங்க.
*********************************************************************
தங்கள் பால்யத்தைக் கிராமங்களில் கழித்தவர்கள் பாக்கியவான்கள் எனச்சொல்லலாம். குழிவண்டுன்னு ஒரு வண்டு பாத்திருக்கீங்களா? மண்ணுக்குள்ள போய் தன்னைச் சுற்றி அழகிய வட்டம் ஒன்றை ஏறபடுத்தும். அது தோண்டி எடுத்த மண்ணை ஒரு கூம்பின் கீழ்ப்பகுதி போன்ற அமைப்பில் போடும். சரியான வித்ததில், காம்பஸ் கொண்டு வரைந்தது போல அது போட்டிருக்கும் வட்டம் ஆச்சர்யமான ஒன்று. அதைபோல காணாமல் போனவைகள் பற்றிய கவிதை ஒன்றை சமீபத்தில் படித்தேன் உங்களுக்காக இங்கே.
குழிவண்டு என்று ஒன்றிருந்தது தெரியுமா?
சிட்டுக்குருவிகளைப் பார்க்க முடிவதேயில்லை தெரியுமா?
கரிச்சான்குருவிகளைப் பார்க்க முடிவதேயில்லை தெரியுமா?
கம்பளிப்பூச்சிகளைக்கூட அவ்வளவாகக் காணவில்லை தெரியுமா?
ரயில்பூச்சிகளைக்கூட அவ்வளவாகக் காணவில்லை தெரியுமா?
குழிவண்டு என்று ஒன்றிருந்தது தெரியுமா?
மலஉருட்டி என்று ஒன்றிருந்தது தெரியுமா?
மூஞ்சுறுகள் அரிதாகி வருகிறது தெரியுமா?
பன்றிகள் அரிதாகி வருகிறது தெரியுமா?
ஓணான்கள் நிற்க இடமில்லாமல் தலைமறைவு
ஓட்டத்திலேயே இருக்கிறது தெரியுமா?
அரணைகளும் அப்படியேதான் தெரியுமா?
ஈக்கள்கூட எப்போதாவதுதான் வருகிறது தெரியுமா?
புழுக்கள்கூட எப்போதாவதுதான் கண்ணில் படுகிறது தெரியுமா?
இரவில் படைபோல சூழ்ந்து ஒலியெழுப்பிய பூச்சிகளில்
பாதியைக்கூட இப்போது காணவில்லை தெரியுமா?
கருக்கலில் ஒரேயரு மரத்திலிருந்துகூட
ஆயிரக்கணக்கான பட்சிகளின் முதல் சிறகடிப்போசையை
முன்னெல்லாம் கேட்கலாம் தெரியுமா?
மிதிபட்டு செத்த எறும்புகளின் சிரிப்புகளோடு
சிற்றுண்டி உரையாடல் முடிந்தது.
-
த. அரவிந்தன், 'கனவு - 2008' சிற்றிதழில்.
*********************************************************************
கதம்பத்தில் வரும் சிரிப்புகளை கொஞ்ச நாட்களுக்கு நிறுத்திவிடலாம் எனத் தோன்ற வைக்கிறது அரசியல்வாதிகள் அடிக்கும் கூத்து.
தேர்தலை இரண்டாம் பட்சமாக வைத்து இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து போராடுவோம். தமிழினத்தைக் காப்போம்.
சொன்னது யார்?
*********************************************************************
டெம்ப்ளேட் வெயிலான் பரிந்துரை செய்தது. நன்றி அவருக்கு.
.