Tuesday, March 31, 2009

சட்டெனச் சொல்லிய பொய்கள்

.

சட்டுன்னு பொய் சொல்லுறது நம்ம ஆளுகளுக்குக் கைவந்த(வாய் வந்த?) கலை.

ந்தக் கதை எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.

ஒரு டிராயிங்க் மாஸ்டர் மாடு புல்லு மேயுறதப் படமாப் போடச்சொன்னாரு. நம்ம குசும்பன மாதிரி ஒருத்தன் வெறும் வெள்ளைப் பேப்பரை வச்சிக்கிட்டு இருந்தான்.

மாஸ்டர், “என்னப்பா வரையலையா”ன்னு கேட்டத்துக்கு, “வரைஞ்சிட்டேன் சார்”ன்னான்.

“புல்லை எங்க?”
“மாடு மேஞ்சிருச்சு சார்”
“சரி, மாட்ட எங்க?”
”புல்லு இருக்க எடம் தேடிப் போயிருச்சு சார்”


து மாதிரித்தான் அன்னைக்கு நம்ம எக்ஸிக்க்யூட்டிவ் 10.30 மனி அப்பாயிண்ட்மெண்ட்டுக்கு போக வேண்டியவரு 11.00 மணி வரை ஆபிஸ்லயே இருந்தாரு. “என்னப்ப்பா போகலயா?”ன்னா “போகனுங்க”ன்னாரு.

அதுக்குள்ள கஸ்டமரே கூப்பிட்டாரு லேண்ட் லைன்ல “இதோ வந்திட்டிருக்கேங்க அக்ரி காலேஜ் தாண்டியாச்சு”. அவரும் “சரி சரி”ன்னுட்டு வச்சுட்டாரு போனை.

கூப்பிட்டவருக்கும் அது லேண்ட்லைன்னு உரைக்கல. சொன்னவரும் அதப் பத்திக் கவலைப் படாம அடிச்சு விடுறாரு.


ன் நண்பன் சரவணன் ஹோம் லோன் கலக்சன்ல இருக்கான். இது நடந்தப்ப அவன் மதுரை டிவிஷன்ல இருந்தான்.

சனி இரவு 7 மணிக்கு கோவையில என் பிரஸ்ல இருந்துட்டு அவனோட ஜூனியருக்குப் போன் பண்ணிப் பேசுறான்.

சரவணன் : “என்னப்பா ரிப்போர்டெல்லாம் ரெடியா?”

ஜூனியர் : ”ரெடியாகிட்டு இருக்குங்க. இன்னும் அரை மணி நேரத்துல ரெடியாகிரும்”

சரவணன் : “நான் தூத்துக்குடில இருந்து வர நேரமாகும்னு நினைக்காதே பக்கத்துல வந்துட்டேன் இன்னும் 20 நிமிஷத்துல வந்திருவேன்.”

ஜூனியர் : ”வாங்க சார். நான் வெயிட் பண்ணுறேன்”

அதுக்கப்புறம் போன ஆப் பண்ணீட்டு எங்கூட பாருக்கு வந்திட்டான். 9 மணிக்கு ”என்னடா நீ வருவேன்னு அவன் வெயிட் பண்ண மாட்டானா?”ன்னு கேட்டா, “நான் எப்படி டுமீல் விட்டனோ அதப்போலத்தான் அவனும். பேசும்போது அவன் பஸ்ஸுல போற சத்தம் கேக்குது. இன்னேரம் அவனும் ஏதாவது பார்ல செட்டில் ஆயிருப்பான். சனிக்கிழ்மை எவண்டா ரிப்போர்ட்டெல்லாம் பாக்குறது?”


த்யம்ல சிவாஜி பாத்துட்டிருந்தப்ப என் பக்கத்து சீட்ல இருந்தவர் சொன்னது, “ சார் நான் கஸ்டமரப் பாத்துட்டேன். 5 மணிக்கு வரச்சொல்லியிருக்காரு. இப்பத்தான் சாப்பிடலாம்னு வீட்டுக்கு வந்தேன். ”

எதிர்முனை : “........”

இவர் : அதுவா வீட்டுல சத்தமா டி வி ஓடுதுசார் குழந்தைங்க பாக்குறாங்க.


Monday, March 30, 2009

குள்ளதாராவக் கண்டுபிடிங்க


பதிவர்களே நீங்க உலகத்தில பல மூலையில இருந்தும் என் பதிவப் படிக்கிறீங்க. நான் தேடுற ஒரு பொண்னு(அடக் கல்யாணம் பண்ண இல்லீங்க. அந்த வயசத் தாண்டி 20 வருசம் ஆச்சுங்க. ஆனா இது நான் கல்யாணம் பண்ணியிருக்க வேண்டிய பொண்ணுதாங்க) உங்க பக்கத்து வீட்டிலோ, மாடி வீட்டிலோ, கீழ் ஃப்ளோரிலோ, உங்கள் அலுவலகக்திலோ, உங்கள் பகுதியிலோ ஏதோ ஒரு இடத்தில் நீங்கள் அவளைச் சந்திக்ககூடும்ங்க.

அப்படிப் பார்த்தீங்கன்னா கீழே இருக்க லெட்டர ஒரு காப்பி எடுத்து அவகிட்டக் கொடுங்க, ப்ளீஸ். எதுக்குன்னா கேக்குறீங்க? அத லெட்டர்ல எழுதியிருக்கேன் படிச்சுக்குங்க. என்னது? அடுத்தவங்க லெட்டர எப்படிப் படிக்கிறதா?

ஹலோ நான் சொல்லலைன்னாலும் நீங்க படிச்சுட்டுத்தான் கொடுப்பீங்கன்னு எனக்குத் தெரியும்.

அவளோட உண்மையான பேரு ராதா. குள்ளமா இருக்கதால செல்லப் பேரு ”குள்ள தாரா”. மூன்று முகம்னு ரஜனிகாந்த் படம் ஒன்னு பாத்திருப்பீங்க அதுல ராஜலஷ்மினு ஒரு நடிகை வருவாங்க பாருங்க அவள மாதிரி இருப்பா.

அன்புள்ள குள்ள தாரா,

உனக்கு இன்னமும் இந்தப் பேருதானா இல்லை உன் வீட்டுக்காரர் வேற செல்லப் பேரு வச்சிட்டாரா?

எப்படி இருக்க?. நான் நல்லா இருக்கேன்னுதான் சொல்லனும். என்ன உன்னைக் கல்யாணம் பண்ணியிருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருப்பேன். நீ எப்படி இருக்கேன்னு ஒரு தகவலும் தெரியல.

நேத்துத்தான் பிரிஞ்ச மாதிரி இருக்கு, அதுக்குள்ள 23 வருஷம் ஓடிப் போயிருச்சு. நீ கடைசியாப் பார்த்த பார்வை, சொன்ன வார்த்தைகள் பிரியும்போது அணிந்திருந்த டிரஸ் எல்லாம் இன்னும் ஞாபகம் இருக்கு. உனக்கும் அப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.


முதல் ரெண்டு வருஷத்துக்கப்புறமா உன்னோட தொடர்பு சுத்தமா அற்றுப் போயிருச்சு. நீ திருச்சிக்குப் போயிட்டேன்னு கிரிஜா சொன்னா, ஆனா அதுக்கப்புறம் கிரிஜாவத் தொடர்பு கொள்ள முடியாம அவளும் அமெரிக்கா போய்ட்டா. சரி எங்க இருந்தாலும் நீ நல்லா இருப்பன்னு தெரியும். நல்லா இருக்கியா?


'அலை பாயுதே கண்ணா' இன்னும் பாடுறியா இல்ல குடும்பம் நடத்துற ஆயாசத்துல எல்லாத்தையும் ஏறக்கட்டியாச்சா? சரி உங்குழந்தைக்குச் சொல்லிக் கொடுத்திருப்பே. ஒரு மகன்னு தெரியும். கிரிஜா சொன்னா. அவ்வளவுதானா மகள்தான் வேணும்னு சொல்லுவியே?


ஆனா நீ ஆசைப்பட்ட மாதிரியே எனக்கு ரெண்டு பொண்ணுங்க. பெரியவ காலேஜ் போறா சின்னவ 8 ஆவது. ஓரளவுக்கு செட்டிலாயிட்டேன்னுதான் சொல்லனும்.
சரி இவ்வளவு நாள் கழிச்சு இப்ப ஏனிந்த லெட்டர்னு கேகுறியா. இல்ல என் மகளுக்கும் 18 வயசாச்சு. உன் மகனுக்கு 21 இருக்கனும். அவஙக் ரெண்டு பேரும் பழகிட்டு நாளைக்கு நம்ம ரெண்டுபேருக்கும் அது ஒரு எம்பரேசிங்க இருக்கக்கூடாது பாரு அதுக்காகத்தான். இப்பத்தான் படிக்கிறது ஒரு இடம் வேலை பாக்குறது ஒரு இடம்னு எல்லாம் வாய்க்குதே. அதையும் தாண்டி நெட்ல சேட் பண்ணுறாங்க. ஆர்குட்ல, பேஸ்புக்குல பழகுறாங்க.

என் மகள்கிட்டச் சொல்லியிருக்கேன். ”யாரை வேணும்னாலும் காதலி, ஆனா அவங்க அம்மா பேரு ராதான்னா கொஞ்சம் உஷாரா இரு”ன்னு. நம்ம விஷயம் எல்லாம் அவளுக்குத் தெரியும்.


நீ எப்படி?


இப்படிக்கு
உன் முன்னள் காதலனும், உன் சம்பந்தி ஆகிவிட வாய்ப்புள்ள ஆனால் அதைத் தவிர்க்க விழையும், ஒரு பெண்ணின் தகப்பனும் ஆன, ஜாரா என்ற ராஜா.

டிஸ்கி : இத மனசில வச்சிட்டு யாருகிட்டயாவது பேசி அடிவாங்கினீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பு இல்ல இப்பவே சொல்லீட்டேன்.

டிஸ்கி 1: இது உங்க சொந்தக் கதையான்னு கேக்குறவங்க லேபிளைப் பாருங்க.

டிஸ்கி 2 : சம்பவங்களும் பெயர்களும் கற்பனையே. ஏதும் ஒப்புமை இருப்பின் அது தற்செயலே.


.

விட்டுக் கொடுத்தலும் கேட்டுப் பெறுதலும்


எல் கே ஜி படிக்கும் குழந்தைகளைக் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? அது பெண் குழந்தையாக இருந்தால் தன்னை ஒரு டீச்சராகக் கருதிக் கொண்டு டீச்சரைப் போலவே நடை உடை பாவனைகளை அமைத்துக் கொள்ளும். ஆண் குழந்தையாக இருந்தால் அவனது ஹீரோ வேன் டிரைவராகவோ அல்லது கார்ட்டூன் கேரக்டராகவோ அல்லது தல, தளபதி போன்றவர்களாகவோ இருப்பர்,

இது முதன்முதலில் குழந்தையின் மனதில் ஏற்படும் ஆதர்ச பிம்பம். நம்மால் முடியாததை சாதிப்பதின் மீது கட்டமைக்கப்படுவது.நாளாக நாளாக வேறு வேறு ஆட்கள் வயதைப் பொறுத்து அந்த இடத்தைப் பிடிக்கிறார்கள்.

ஆனால் எப்போதும் அப்பாவோ அல்லது அம்மாவோ அவர்களுடைய பங்களிப்பைப் பொறுத்து நமது வாழ்நாள் ஹீரோ ஆகிவிடுகிறார்கள். இதில்தான் பிரச்சினைகள் தோன்றுகிறது இப்போது.

எனக்குத் தெரிந்த தம்பதியர். அவனது அப்பாவின் பிம்பமாக குடும்பம் நடத்த முயலுகிறான். அப்பாவின் நடவடிக்கையைப் போலவே அனைத்தயும் அமைத்துக் கொள்கிறான். அவனது அம்மா கிராமத்து ஆள் என்பதால் வீட்டில் அப்பா சொல்வதை அம்மா கேட்பதுதான் வழக்கம்.

மனைவி கதை நேர்மாறு. அவளது அப்பா குடும்பப் பொறுப்பற்றவர். தனது சம்பளத்தை மாதாமாதாம் வீட்டிற்குக் கொடுத்தால் போதும் என்பது அவரது எண்ணம். அவளது அம்மா உத்தியோகத்திற்கும் சென்று வந்து வீட்டு நிர்வாகம் அனைத்தையும் திறம்படச் செய்கிறார். இரண்டு குழந்தைகளுக்கும் திருமணம் செய்து வைத்து இப்பொழு கடைக் குழந்தையை நல்ல முறையில் படிக்க வைக்கிறார்.

எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது எங்கு பிரச்சினை?

தம்பதியர் இருவரும் அவரவர் குடும்பம் போலவே தங்கள் குடும்பத்தையும் நடத்த முயலுகின்றனர். ”எங்க வீட்டுல் எல்லாம் இப்படி இல்லை. நாங்க எல்லாம் அப்படிச் செய்ய மாட்டோம்.” எது ஒன்று நடந்தாலும் அவனது அப்பாவிடம் சொல்லி விடுகிறான் அவர் நல்லது செய்கிறேன் என மேலும் விரிசலை உண்டாக்குகிறார். அவளும் அம்மாவிடம் சொல்லுகிறாள், அம்மாவும் அப்படியே. இருவர் சொல்லுவதும் ஒன்றே, “ஆரம்பத்துலேயே பிடிய விட்டுக் குடுத்துடாத, பின்னால சிரமம்.”

இல்லறம் என்பது எத்தனை காரணிகளை உள்ளடக்கியது? வாழிடம், செய்யும் வேலை, மன நிலை, உடல் நிலை, பொருளாதாரம், நண்பர் வட்டம், படிப்பு, வேறு ஆர்வங்கள் என எண்ணிலடங்கா. உங்களுக்குச் சரியாக வந்த ஒன்று எல்லோருக்கும் அவ்வாறே என நினைப்பது சரியல்ல.

மேலும் தம்பதியர் இருவரும் கூடிப் பேசி மனம் விட்டு சிலதை முடிவு செய்து அதன்படிதான் நடக்க வேண்டும். இப்படித்தான் இருப்பேன் என ஆரம்பத்திலியே செய்யும் பிடிவாதமான முடிவுகள் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும்.

சில வருடங்கள் கழித்து நினைத்துப் பார்த்தால் இந்தச் சில்லறை விஷயத்திற்கா அன்று பிரிந்து போகும் அளவுக்குச் சண்டை போட்டோம் என வெட்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுதான் இல்லறத்தின் அடிநாதம்.



.

Saturday, March 28, 2009

விடையற்ற வினாக்கள்



என்ன பதில் வேண்டும்
என்னிடமிருந்து
என முன் கூட்டியே
முடிவு செய்து
தேர்ந்தெடுத்த கேள்விகளை
வீசுகிறீர்கள் எனை நோக்கி

உங்கள் உள் நோக்கம்
வேறொன்றாக
இருக்கக்கூடுமென
என் பதிலகளை
மாற்றி அமைக்கிறேன்

உங்களுக்குக் கிடைத்ததும்
நீங்கள் விரும்பியதும் வேறு வேறு
நான் சொல்ல நினைத்ததும்
சொன்னதும் வேறு வேறானதைப் போல


எனக்கான கேள்விகளை
அடுக்கி வைத்துக்
காத்திருக்கிறீர்கள்.
எல்லாவற்றிற்கும்
பதிலுண்டு என்னிடம்.

இருந்தபோதிலும்
அவைகளுள் ஒன்றை
உங்கள் மீது வீசினால்
உங்கள் பதில்
“தெரியாது”

கேட்கும் உயரத்தில் நீங்களும்
சொல்லும் நிலையில் நானும்

என்றாலும்,
கரைகளால்
அறியமுடியாதது
கடல்



.

Tuesday, March 24, 2009

சில விபத்துக்களும் எதிர்பாராத விளைவுகளும்

.

நல்லா நின்னு பேசிட்டிருந்தவர், திடீர்னு தலை சுத்திக் கீழே விழுகிறார். மருத்துவமணையில் லோ பிரஷர் எனக் கண்டுபிடித்து, தேவையான முதலுதவிகளைச் செய்து, காரமடையில ட்ரீட் பண்ண வசதியில்லன்னு சொல்லி கோயமுத்தூருக்கு அனுப்புறாங்க. ஆம்புலன்ஸாகச் செயல்படும் ஆம்னி வேனை டிரைவர் ஓட்டிச் செல்ல பின்பக்கம் பேஷண்ட் படுத்தவாறும் மனைவி மற்றும் மகன் ஆகிய இருவரும் அமர்ந்தவாறும் கோவை நோக்கிப் பயணம்.

வழியிலுள்ள பாலம் மீது ஆம்புலன்ஸைச் செலுத்துவதற்குப் பதிலாக சைடில் செலுத்திவிட்டார் டிரைவர். பள்ளத்தில் கவிழ்ந்து விடுகிறது.

பலன்?

டிரைவர் ஸ்தல மரணம். பேஷண்ட் உயிர் பிழைத்தார். பேஷண்டும், குடும்பத்தினரும் வேறு வேன் ஏற்பாடு செய்து டிரைவர் உடலை வீடு கொண்டுவந்து சேர்த்தனர்.

**************************************************************************

தாராபுரம் ஊருக்கு வெளியே இருக்கும் அமராவதிப் பாலத்தின் மீது ஓடிய லாரி தறிகெட்டு பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு முன் பாதி பாலத்துக்கு வெளியேயும் பின் பாதி ரோட்டிலுமாக ஊஞ்சலாடுகிறது.

டிரைவர் தப்பிக்கும் முன் கிளீனரைப் பார்த்து, ”குதிச்சிர்ரா, தப்பிக்க முடியாது, சீக்கிரம்” எனச் சொல்லிவிட்டு் ஆற்றினுள் குதித்து விடுகிறார். அந்த ஆற்றில் ஒரு விசேசம் என்னன்னா தலை கீழ நின்னா கழுத்தளவு தண்ணீர் ஓடும்.

டிரைவர் குதித்த அதிர்ச்சியில், ஊஞ்சலாடிய லாரி, ஆற்றினுள் விழுந்து விடுகிறது. கை எலும்பு முறிவுடன் கிளீனர் தப்பி விடுகிறார்.

டிரைவர்? ஸ்தல மரணம்.


**************************************************************************

டெக்ஸ்டைல் மில்ல் முதலாளி ஒருவர் என் நண்பர். திருமணமாகி ஆறு வருடமாகியும் குழந்தை இல்லை. கவுண்ட் குறைவுதான் காரணம். விளையாட்டாகச் சொல்லுவார், ”நமக்கு மில்லிலும் கவுண்ட் பிரச்சினை, வீட்டிலும் கவுண்ட் பிரச்சினை”.

ஒரு முறை ஈரோடு கலக்சன் முடித்துவிட்டு காரில் வேகமாக வந்திருக்கிறார். முன் சென்ற லாரி திடீரென்று பிரேக் போட கண்ட்ரோல் இல்லாமல் லாரியின் பின்புறம் மோதி விட்டார். இறங்கிப் பார்த்த டிரைவரும் கிளீனரும் எஸ்கேப்பாகிவிட, இரவானதால் முதலுதவி கிடைக்கத் தாமதமாகி அன்கான்சியஸ் ஆகிவிட்டார்.

ஒரு வழியாக அவரை மீட்டு கோவையிலுள்ள மருத்துவமணையில் சேர்த்தனர். வலது முழங்காலுக்குக் கீழே கூழாகிவிட்ட எலும்புகளைச் சேர்த்து பிளேட்டுகள் வைத்து சரி செய்து அவர் நடக்கவே 9 மாதமாகி விட்டது.

நல்ல ஓய்வில் இருந்ததால் அவரது கவுண்ட் பிரச்சினை சரியாகி, அந்த விபத்திற்குப் பிறகு அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது.

மில்லில் கவுண்ட் பிரச்சினை சரியானதா எனத் தெரியவில்லை.

**************************************************************************

”யோவ் நீ பதிவு எழுத வந்ததே விபத்துதானே?” கேட்டது என்னோட தங்கமணி.

”அப்படின்னா எதிர்பாராத விளைவு?”

”உன்னையும் மதிச்சு 4 பேரு பின்ன்னூட்டம் போடுறாங்களே அதுதான்”

அவ்வ்வ்வ்வ்

**************************************************************************

Sunday, March 22, 2009

ஒலக அதிசயம்


ஒலக அதியசயமாம்ல
ஊருக்குள்ள பேசுதாவ

அன்னாடம் கஞ்சி காய்ச்சி
அரை வயிறு குடிச்சாலே
அதியசம் எங்களுக்கு

மொளைக்கப் போட்டா
மழை இல்ல
மொளச்சு வந்தா
களை தொல்லை
அதுக்கு மேல
பூச்சி மருந்து
எல்லாம் முடிஞ்சா
ஆளில்லை அறுக்க
அறுத்து வந்தா
விலை இல்லை
கணக்குப் பார்த்தா
கை நஷ்டம்

இதுல
மும்தாசக் கண்டமா?
சாசகானக் கண்டமா?

பசிக்குது சாமி
கொஞ்சம் தண்ணியாச்சும்
குடிக்க விடுங்க


.

Saturday, March 21, 2009

சீரியல் கில்லர்கள்



Doordarshan’s social objectives include that it has to:
a) act as a catalyst for social change;
b) promote national integration;
c) stimulate a scientific temper in the minds of the people;
d) disseminate the message of family planning as a means of population
control and family welfare;
e) provide essential information and knowledge in order to stimulate greater agricultural production; and
f) promote and help preserve environment and ecological balance
-(Doordarshan Handbook 1997, p.23).


தமிழ் தொலைக்காட்சிகளில் ச்மீபத்தில் வருபவை எல்லாம், சீரியல் கில்லர்களே.நம்மைக் கொல்வதாலும், ஒருவரை ஒருவர் மாத்தி மாத்திக் 'கொல்லுவதாலும்'

பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பதில்லை. இருபாலரும்தான். பெண்கள் அதிகமாகப் பார்க்கிறார்கள் அவ்வளவுதான் அதன் பின்னுள்ள மனநிலை ஆராயப்படவேண்டும்.

வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு சுவராஸ்யம் தேவைப்படுகிறது. அதை சினிமாவில் அனுபவித்துக் கொண்டிருந்தோம். இப்பொழுது தொ கா தருகிறது. இப்பொழுதெல்லாம் சினிமாவிற்குச் சென்று வருவதே ஒரு வேலையாக இருக்கிறது. . சினிமாவிற்கு ஆகும் செலவு எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாததாக இருக்கிறது.

இவை எல்லாம் புறக்காரணங்கள், அகக்காரணம் புறக்கணிக்கப்படுதலைத் தாங்க முடியாதது.

திருமணமான புதிதில், நிறைய வேலை இருக்கும். கணவன் மீது ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆண்களும் ஒரு கவர்ச்சியின் காரனமாகவும், புது சொந்தம் என்பதாலும், அதிக நேரம் மனைவியுடன் செலவிடுகின்றனர். நாட்கள் செல்லச் செல்ல இது படிப்படியாகக் குறைகிறது. இடைப்பட்ட காலத்தில் ஒரு குழந்தையும் பிறந்த்து விடுகிறது. புது வரவினால் வந்த கூடுதல் வேலை, குழந்தை பெற்றுத் தந்ததால் கணவனிடமிருந்து கிடைக்கும் திடீர்ப்பாசம் மற்றவர்களின் கூடுதல் அன்பு என்று சிறிது காலம் சென்றுவிடும்.

பிறந்த குழந்தை பள்ளி செல்ல ஆரம்பித்தவுடன், திடீரென்று ஒரு வெறுமை சூழ்கிறது. நிறைய நேரம் இருப்பது போல் தெரிகிறது. மெதுவாக தொ.கா வில் ஆர்வம் செல்கிறது. யாரும் இல்லாத பொழுது பார்க்க ஆரம்பித்து, யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பார்த்தே தீருவது என்ற நிலைக்கு அடிமையாக்குகிறது.

ஆண்கள் மட்டுமே அதிக சிரமப்படுவதாகவும், பெண்கள் அவர்களைப் பராமரிக்கவே பிறந்தவர்களாகவும் சிறு வயதிலிருந்தே இருபாலருக்கும் போதிக்கப்பட்டு வருகிறது. எனவே அலுவலகத்திலிருந்து வருபவன், வீட்டிலிருப்பவளைக் கண்டு கொள்வதில்லை. He takes her for granted. பெண்களுக்கும் அவனுக்குச் சேவை செய்தே பழக்கப்பட்டுவிடும். பரஸ்பரம் சேர்ந்தே இருந்தாலும், மனதளவில் பிரிந்துதான் இருக்கிறார்கள்.

கொஞ்சம் சுவராஸ்யம், திகில், சஸ்பென்ஸ், சவால் செண்டிமெண்ட் என்று கலந்து சீரியல்களில் வருவதால் தனக்குப் பிடித்ததில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.

இடம் மாறிய டைனிங் டேபிள், புதிதாக விரித்த படுக்கை விரிப்பு,ஸ்பெசலாகச் செய்து கொண்ட அலங்காரம் எதுவ்ம் எதிர்பார்த்த பாராட்டைப் பெற்றுத் தருவதில்லை. மனைவிக்குப் பிறந்த நாள் பரிசாக சர்ப்ப்ரைஸாக என்ன வாங்கித் தருவாய் என்று கேட்டால் ஆண்கள் சொல்லும் பதில் சிரிப்பைத்தான் வரவைக்கும். சொல்லப்படும் பதில், பெரும்பாலும், அவர்களுக்குத் தனிப்பட்ட பரிசாக அல்லாமல், மொத்தக் குடும்பத்திற்கானதாகவே இருக்கும்.


இது இளவயதினருக்கானது. முதியவருக்கோ வேறு விதமான சிரமங்கள். ஒரு குடும்பத்தையே தாங்கியவர்கள், எந்தவிதமான முக்கியத்துவமும் இல்லாதவர்களாக ஆகிவிட்டோமோ என்று யோசிக்கத் துவங்குகிறார்கள். புறக்கணிக்கப்படுவதாகவும், ஒதுக்கப்படுவதாகவும் நினைத்து உள்ளுக்குள் சுருங்கி விடுகிறார்கள்.

தன் மகனுடன் அளவாகப் பேசும் பெரியவர்கள், மகனின் நன்பர்களுடன் தோழமையுடன் பேசிப்பழகுவதைப் பார்க்கலாம். காரணம்?. மகனின் நன்பன், அவரது வயது கருதி அனுசரித்துப் போவதும், அவரைப் பற்றிய விமர்சனங்களை நேருக்கு நேர் சொல்லாததுமாகும். அதை விட முக்கியம் மகனின் தயவில் வாழ்வது ஒரு தாழ்வு மனப்பாண்மையை உருவாக்கியிருப்பதுதான்.

புறக்கணிப்பின் வேதனையும், ஒதுக்கப்படுதலின் வலியும், வாழ்க்கை குறித்த நிச்சயமின்மையும் அதனால் வரும் நம்பிக்கையின்மையும்தான் காரணம். அவர்களுடன் அமர்ந்து பேசினாலே பிரச்சினையின் வேர்கள் புலப்படும், சரி செய்ய வழியும் தென்படும். செய்ய முனைவதில்லை என்பதுதான் நிதர்சனம்.

மேலும் சீரியலல்லாத மற்ற எந்த நிகழ்ச்சியும் குடும்பத்துடனமர்ந்து பார்க்கும் தரமன்று. போர்வக்குள் பூப் பூக்கச் செய், வேர்வைக்குள் விவசாயம் செய் என்று பாடும் பொழுது அம்மா(60), மகள்(18), இள்யவள்(13) முதலியவர்களுடன் அமர்ந்து எப்படிப்பார்ப்பது? நெளிய வைக்கிறது.

ஜோடி நெ 1 போன்ற நிகழ்சிகளில் தங்கள் அங்கங்கள் குலுங்க ஆடுபவர்கள் எதைச் சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இவர்களது குழந்தைகள் என்ன பாடுபடப்போகின்றனரோ?

என் வீட்டில் 2001 முதல் கேபிள் கனெக்க்சன் இல்லை. நாங்கள் இழந்தது எதுவுமில்லை. என் மனைவி பள்ளி ஆசிரியை. காலையும் மதியமும் சேர்ந்து சாப்பிட முடியாது. இரவு இருவரும் குழந்தைகளுடனும் என் அம்மாவுடனும் சேர்ந்த்தே சாப்பிடுவோம். அப்பொழுது பள்ளியில் நடந்தது அல்லது அலுவலகத்தில் நடந்தது என்று ஏதாவது பேசிக்கொண்டே சாப்பிடுவோம். சில நேரம் யாராவது ஒருவரை எல்லோரும் சேர்ந்து ஓட்டுவோம். பெரும்பாலும் மாட்டிக்கொள்வது நானாகத்தானிருக்கும். கேபிள் இருந்திருந்தால் இது சாத்தியமில்லை. எல்லோரும் தட்டில் போட்டுக் கொண்டு தொ கா முன் அமர்ந்து மெளனமாகத்தான் சாப்பிடக் கூடும்.

ஒருமுறை உறவினர் வீட்டிற்கு இரவு 10 மணிக்குச் செல்ல வேண்டி இருந்த்தது. வெளியே இருந்து எவ்வளவு கத்தியும் யாரும் வரவில்லை. இருட்டில் காலிங் பெல் எங்கிருகிறது என்று தெரியவில்லை. மெயின் ச்விட்சை ஆப் செய்தால் மொத்தக் குடும்பமே அலறியடித்து வருகிறார்கள். அவ்வளவு பேரும் (அம்மா, அப்பா, பையன், மருமகள், பேரன்) சீரியஸாக சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

Disclaimer : All logos are properties of respective owners. Logos acknowledged with thanks.

.

Thursday, March 19, 2009

மாடு மேய்க்கத்தான் லாயக்கு


.
ராமேஸ்வரத்திலிருந்து திரும்பிவரும் வழியில் பஞ்சரான டயரை மாற்றிக் கொண்டிருந்தார் டிரைவர். பக்கத்துல எங்க வல்கனைசிங் இருக்குன்னு விசாரிக்கலாம்னு அருகே வந்த காரை நிறுத்தினேன். காரில் இருந்தவரின் முகம் ஏற்கனவே பழகிய முகம் போல இருந்தது.

”நீங்க பஷீர்தானே?” சந்தேகத்தை நிவர்த்திக்கக் கேட்டேன்.

பஷீர் டிப்ளமாவில் என் கிளாஸ்மேட். பார்த்து 20 வருடங்கள் ஆகிவிட்டன.

”ஆமா நீங்க?”

“என்னைத் தெரியலையா? A24" அது ஹாஸ்டலில் கடைசி வருடம் என் அறை எண்.

”அட நீயா எப்படி இருக்கே? என்ன செய்யுறே?”

”நான் நல்லா இருக்கேண்டா. கோவையில ஒரு ஆப் செட் பிரஸ் வைத்திருக்கேன். ஓரளவுக்கு வசதியா இருக்கேன்.”

“நீ என்னடா பண்ணுறே பஷீர்?”

“நானும் எங்க ஆளுக மாதிரி துபாய், சௌதி போயிறலாமானு பார்த்தேன். ஒரு தடவ சிங்கப்பூர் போயிருந்தப்ப அங்க ஜெராக்ஸ் மெஷின் சீப்பாக் கிடைக்கும். எடுத்துட்டு வந்து ரிகண்டிசன் பண்ணி வித்தா நல்ல காசு பாக்கலாம்னு எங்க பெரியப்பா பையன் சொன்னான். இப்ப அதுவே என் முழுநேரத் தொழிலாப் போச்சு.”

“வருமானம்லாம் பரவாயில்லையா?”

“ஏதோ மாசம் 10 மெஷின் விப்பேன். மெஷினுக்கு 15 ஆயிரம் கிடைக்கும்”

“அப்புறமென்ன மாசம் ஒரு லட்சத்துக்கு மேல சம்பாதிக்கிறியே? குழந்தைகள் எத்தனை”

”ரெண்டு பசங்கடா, பெரியவன் +2 படிக்கிறான் சின்னவன் 9ஆவது”




அசைன்மெண்ட் சப்மிட் செய்ய அன்றுதான் கடைசி நாள். சப்மிட் செய்யாதவங்களை எழுப்பி நிறுத்தித் திட்டினார் ஹெச் ஓ டி.

“நீங்கல்லாம் எதுக்குடா வர்றீங்க? படிக்கிறதுல அக்கறை வேணுண்டா. சும்மா வந்து உக்காந்து பெஞ்சத் தேச்சுட்டுப் போனாப் படிப்பு வராது. சும்மா ட்ராமா கிளப்ல இருக்கேன். மெஸ் கமிட்டியில இருக்கேன். ஸ்போர்ட்ஸ் கிள்ப்ல இருக்கேன்னா ஒன்னுத்துக்கும் உதவாது. உருப்படற வழியப் பாருங்கடா “

மூச்சு வாங்கிவிட்டு மறுபடியும் தனி ஆவர்த்தனம் தொடர்ந்தார்.

“இவனிருக்கானே பஷீர் மாடு மேய்க்கத்தான் லாயக்கு. வந்துட்டான் ராமனாத புரத்திலருந்து. காலேஜுக்கு, ஹாஸ்டலுக்குன்னு இவனுக்குச் செலவு பண்ணுன பணத்துக்கு ரெண்டு மாடு வாங்கி விட்டிருந்தாக் கூட இன்னேரம் பால் கறந்து காசப் பார்த்திருக்கலாம். ”

“இவனப் பாரு” துரையரசனைக் கைகாட்டித் தொடர்ந்தார், “இவனும் உங்க ஊர்க்காரன்தானே. எவ்வளவு அக்கறையாப் படிக்கிறான். இப்பவே 90% வச்சிருக்கான். படிச்சு முடிச்ச உடனே அவன் நல்ல வேலையில் இருப்பான் அவங்கிட்ட பியூனாச் சேரக்கூட நீ லாயக்கில்லை”

கடைசி செமஸ்டர் ரிசல்ட் எதிர்பார்த்தது போலத்தான் இருந்தது. துரையரசன் 93% ஓவராலா. பஷீர் மொத்தமா 3 பேப்பர் கைல வாங்கிட்டான்.


”டே ஒங்க ஊர்க்காரன் ஒருத்தன் படிச்சானே. அவம்பேருகூட என்னவோ ராசான்னு வரும்?”

“யாரு துரையரசனா?”

”ஆமா அவந்தான். என்னடா பண்ணிக்கிட்டு இருக்கான்?”

“அதையேங் கேக்குற. அவன் சென்னையில கொஞ்ச நாள் இருந்தான். அப்புறம் ஹைதராபாத்துல இருந்தான். ஒன்னும் சரியில்லன்னு இங்க வந்து சும்மாதான் இருந்தான்”

“சரி இப்ப என்ன பண்ணுறான்”

“ எங்கிட்ட சர்வீ்ஸ் என்ஜினியரா இருக்கான்.”


டிஸ்கி : வகுப்பில் முதல் பெஞ்சில் அமர்ந்து நன்கு படிக்கும் மணவர்கள் இரண்டாம் பெஞ்சில் அமர்ந்து ஆவரேஜாகப் படிக்கும் மாணவர்கள் தொடங்கும் நிறுவனங்களில் பணி புரிகிறார்கள். இவர்கள் இருவருக்கான முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் மூன்றாவது பெஞ்ச்காரர்கள் இருக்கிறார்கள்.

இத சமீபத்துல ஒரு வார இத்ழ்ல(குங்குமம்?) படிச்ச ஞாபகம். அத வச்சு முயற்சி பண்ணுனது. சீரியஸா எடுத்துக்காதீங்க, தயவு செஞ்சு.


.

Tuesday, March 17, 2009

கதம்பம் - 17/3/09

.

ஆசையின் விளைவுகள்

கண்ணாடி அலமாரிகளில்
அடுக்கி வைத்த புதுப்புடவைகள்
ஆவலுடன் காத்திருந்தன
பெண்களின் இடுப்பை சுற்றிக்கொள்ள;
பின்னால் துவைக்கப்படப்போவது
பற்றி துளியும் அறியாமல்

இந்தக் கவிதையை எழுதியவர் மிகவும் பிரபலமானவர். (“யூத்” என்று தன்னைதானே சொல்லி கொல்பவர்).

**************************************************************************

மாதவராஜுடன் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு கேள்வி கேட்டார், “உங்க குழந்தை என் குழந்தைகளுக்கு கிடைத்த பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சின்னம்மா, தாய்மாமா, அத்தை போன்ற உறவுகள் இனிவரும் தலைமுறைக்குக் கிடைக்குமா?”

பதில் ”தெரியவில்லை.”


**************************************************************************

ஒரு அறையில் நீங்கள் நான் இருவர் மட்டும் இருந்தால், உண்மையில் இருப்பது அறுவர்.

நான் என்னைப் பற்றி உண்டாக்கிக் கொண்ட பிம்பம்
நீங்கள் என்னைப் பற்றி வைத்திருக்கும் பிம்பம்
உண்மையான நான்.

இதே போல உங்களுக்கும்.

இம்மதிரியான கற்பிதங்கள்தான் மணமுறிவுக்கு அல்லது ஒவ்வாமைக்குக் காரணமாக இருக்கக்கூடும்; வலையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் கூட.

**************************************************************************

சமீபத்தில் ஒரு பேக்கரியில் அமர்ந்து தேனீர் அருந்திக் கொண்டிருந்தோம். இரு காவலரும் ஒரு பெண் காவலரும் ஒரு கைதியை கையில் விலங்கிட்டு அழைத்து வந்து அடுத்த மேஜையில் அமர்ந்தனர்.

பெண் காவலருக்கு 23 வயதிருக்கும். மற்ற இரு காவலரும் 35 வயதிற்கு மேற்பட்டவர்கள். கைதியின் வயது 30க்குள்தான் இருக்கும்.

ஒரு காவலர் சொன்னார், “ நாம்தான் வெயிலில் கறுத்து விட்டோம் மேடம் பாருங்க எவ்வளாவு ஃப்ரெஷா இருக்காங்க?”

பெண்காவலர் நெளிய ஆரம்பித்தார். இப்படி ஆரம்பித்த பேச்சில் கைதியும் சேர்ந்து கொண்டு பெண் காவலரைக் கிண்டல் செய்யத் தொடங்கினார்.

உச்சகட்டமாகக் கைதி கேட்டார், “நீங்க பரவாயில்ல சார் ஸ்டேசனுக்கு போனதும் சட்டையைக் கழட்டிக் காத்து வாங்குவீங்க, மேடம் பாவம் என்ன செய்வாங்க?”

என்னதான் சக ஊழியர் என்றாலும் கிண்டல் செய்வதற்கு ஒரு எல்லை இருக்கு இல்லையா. அதிலும் கைதி ஒருவர் பெண் ஊழியரைக் கிண்டல் செய்வதை இருவரும் ரசித்தைப் பார்க்க வெறுப்பாக இருந்தது.

அந்தப் பெண் காவலர் வெறுமனே அமர்ந்திருந்தார். சுயமரியாதை என்று ஒன்று உண்டா இல்லையா?


**************************************************************************

உங்க கிரிடிட் கார்டு கம்பெனியவோ அல்லது மொபைல கம்பனியவோ அழைக்கும்போது உங்களுக்கு காது கேக்காதுன்னா எண் ஒன்றை அழுத்தவும், கண் தெரியாதுன்னா எண் இரண்டை அழுத்தவும், வாய் பேச வராதுன்னா எண் மூன்றை அழுத்தவும், அப்படின்னு டார்ச்சர் பண்ணுவாங்க. அழுத்த வேண்டியத அழுத்தி ஒரு உயிருள்ள ஜீவன் கிட்ட பேசுறதுக்குள்ள தாவு தீர்ந்திடும்.

இந்தக் கஷ்டத்தப் போக்க ஒருத்தர் வழி பண்ணியிருக்காரு பாருங்க. எந்த நிறுவனத்தை அழைக்கிறீர்களோ அங்க ஆப்பரேட்டர்கூட பேச அழுத்த வேண்டிய எண்ணைத் தொகுத்துத் தந்திருக்கார்.

என்ன ஒரு சிரமம்னா இந்தியாவுல யாரும் இன்னும் இது போலத் தொகுக்கல.
யாராவது செய்யுங்கப்பு அவங்களுக்கு நன்றி சொல்லும் விதமா சிக்கிம் லாட்டரி டிக்கட் ஒன்னும் கூடவே பூட்டான் ராயல் டிக்கட் ஒன்னும் அனுப்பி வைக்கிறேன்.

**************************************************************************

இம்முறை தேவதச்சன் கவிதை ஒன்று.

எனக்கு ஞாபகமுள்ள பௌர்ணமிகள் நான்கு
ஒன்று
எதிர்விட்டு அம்மாளின்
துஷ்டிக்கு
சுடுகாடு சென்று
திரும்புகையில் பார்த்தது.
நள்ளிரவில்
பஸ் கிடைக்காமல்
லாரி டாப்பில்
பிரயாணம் செய்கையில்
பிரகாசித்தது.
ஐந்து நட்சத்திர ஹோட்டல் வாசலில்
அரசு அதிகாரி ஒருவரைக் காண
காத்திருக்கையில் கண்டது.
இண்டு இடுக்கு
மாடிக் குடித்தனத்தில்
மின்வெட்டு இருள்வேளையில்
ஜன்னல் வழியே
வந்து விழுந்தது.

முதல் வாசிப்பில் வெகு சாதாரணமாகத் தோன்றும் இக்கவிதை ஏற்படுத்தும் படிமமும் அதன் பின்னெழும் நினைவுகளையும் அசைபோடத் தெரிந்தால் கவிதை அருமை.

நீங்கள் பார்த்த பௌர்ணமிகள் என்ன விதமான் ஞாபகங்களைக் கிளர்த்துகிறது உங்களுக்கு?

**************************************************************************

மும்பை செல்லும்போது ரயிலில் படித்த Everyday ath the call Centre (BPO and Call Centre Stories) புத்தகம் சுவராசியமாக இருந்தது.

யாராவது படிச்சிருந்தீங்கன்னா ஒரு விமர்சனம் எழுதி மெயில் பண்ணுங்க. என்னோட நூல் நயம் வலையில போடலாம்.

இல்லன்னா நானே எழுதிடுவேன்.

**************************************************************************

"பில்லை நானே கொடுக்கிறேன்னு சொன்னவன நம்பி ஹோட்டலுக்குப் போனது தப்பாப் போச்சு."

"என்ன ஆச்சு?"

"பில்லை நான் கொடுக்கிறேன். பணத்தை நீ குடுன்னுட்டான்”

**************************************************************************

Monday, March 16, 2009

மெய் வருத்தக் கூலி

மும்பைப் பயணம் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு படிப்பினையைத் தந்தவாறே அமைகிறது. இம்முறை நேரம் காலம் பாரமால் உழைப்பது பற்றிய படிப்பினை கிட்டப் பெற்றேன்.

பொதுவாக நாம் எல்லோரும் நம்மை அதிகமாக உழைப்பவர்களாகக் கருதிக் கொண்டு படம் காட்டுகிறோம் வீட்டிலும், வெளியிலும்; உண்மை அதுவல்லவென்பது ந்மக்கே நன்றாகத் தெரிந்தாலும்.

நான் ரயிலில் சந்தித்த ஒருவர் திருச்செங்கோட்டுக்காரர். கடலை வியாபாரி. மொத்தமாகக் கொள்முதல் செய்து சில்லறையில் வியாபாரம். வயது 63, இரு முறை பைபாஸ் ஆபரேசன் நடந்திருக்கிறது. இருப்பினும் சோர்ந்து போகாமல், சிறிது ஓய்வுக்குப் பின் மீண்டும் லைனுக்குக் கிளம்பி விட்டார்.

“ஏனுங்கையா இந்த வயசில இவ்வளவு கஷ்டப் படனுமா? அதான் இப்ப காரு பங்களாவுன்னு நல்லா செட்டில் ஆகீட்டிங்க. பசங்க புள்ளைகளுக்கெல்லாம் கல்யாணம் நல்ல முறையில செஞ்சு வச்சுட்டீங்க. அப்புறமெதுக்கு இந்தப் பாடு?”

“அதுதான் தம்பி உங்களுக்கும் எங்களுக்கும் வேறுபாடு. உங்களுக்கு வேலை ஒரு சுமை. எனக்கு சும்மா இருக்கதுதான் சுமை. நீங்க சொன்னமாதிரி எல்லாக் கடமையும் முடிஞ்சுருச்சுன்னாலும் வெட்டியா வீட்டுல இருந்தாத் துருப் புடிச்சுப் போயிருவோம். இப்படி நாலு எடத்துக்குப் போய் நாலு மக்க மனுசங்களப் பார்த்தாலே நம்ம கஷ்டம் சின்னதாப் போயிரும்.”

“இப்பல்லாம் என்ன தம்பி பெரிய கஷ்டம்? செல் போன் இருக்கு அப்பப்ப வீட்டுக்கு பேசிக்கிடலாம், எனிவேர் பேங்கிங்க் இருக்கு போன் பண்ணிச் சொன்னதும் பணத்தப் போடறாங்க. நான் எடுத்து பொருள வாங்குறேன். தங்குறதுக்கு நல்ல லாட்ஜெல்லாம் இருக்கு. ஆனா 80கள்ல இந்த வசதி ஏதுமில்லாம நாங்க பட்ட கஷ்டம் அதிகம் தம்பி. அப்ப எனக்கு கன்னடமும் தெரியாது, தெலுங்கும் தெரியாது, ஹிந்தியும் தெரியாது. உள்ள போட்டிருக்க கதர் பணியனுக்குள்ள பை வச்சுத் தச்சிருப்போம். குறைஞ்சது ரெண்டு அல்லது 3 லட்ச ரூபாய் எடுத்துட்டுப் போவோம். உயிருக்கு உத்திரவாதம் கிடையாது. போற இடத்துல தங்கவும் நல்ல ஏற்பாடு இருக்கது அங்க இருக்க தரகர் குடோன்ல தங்கிக்கிடுவோம். சரக்க ஏத்திக்கிட்டு லாரியிலேயே கூடவே வருவோம். இல்லன்னா நம்ம முதல் நம்மளுது இல்ல. இப்ப அப்படியா? லாரில புக் பண்ணிட்டு L R காப்பிய ஊருக்கு அனுப்பிச்சுட்டு அடுத்த ஊருக்குப் போய்ட்டே இருக்கலாம்.”

”ஆனா இப்ப எனக்கு என்ன கஷ்டம்னா. அந்தக் காலத்துல இருந்த நேர்மை இப்ப கொஞ்சம்கூட இல்லங்கிறதுதான். 3 லட்ச ரூபாய தரகர்கிட்டவோ அல்லது அவரோட அப்பா, அம்மா கிட்டவோ கொடுத்து வச்சுட்டு ஒரு வாரம் கழிச்சுக் கூட வாங்கிக்கிடலாம். அந்தத் தரகர்கிட்ட சரக்கு வாங்கலன்னாலும் பரவாயில்லை ஒன்னும் சொல்லாம நாம கொடுத்த பணத்த பைசா சுத்தமாத் திருப்பித் தருவாங்க. இப்ப முடியுங்களா?”

தர்மாவரம் ஸ்டேசனில் இறங்கியவர் இன்னும் என் மனதை விட்டு இறங்கவில்லை.


**************************************************************************

அந்தேரி எக்ஸ்பிரஸ் ஹைவேகிட்ட நில்லுங்க நான் 7:30க்கு வந்துவிடுவேன் என்று சொன்ன அனுஜன்யா, ஒரு வெளி நாட்டு வங்கியில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் மிக எளிய மனிதர். சொன்னது போலவே வந்தார்.

“டெய்லி இவ்வளவு நேரம் ஆகிடுமா?”

”இன்னைக்கு நீங்க வர்றிங்கன்னு நேரத்துல கிளம்பினேன். இல்லன்ன 8 மணிக்குக் கிளம்புவேன்”

“எவ்வளவு நேரமாகும் வீடு செல்ல?”

“காலேலன்னா ஒன்னே முக்கால் மணி நேரம் ஆகும். மாலைன்னா இரண்டரை மணி நேரம் ஆகும்”

“அப்ப பத்தரைக்குத்தான் வீட்டுக்குப் போவீங்க. காலை எத்தனை மணிக்குக் கிளம்புவீர்கள்?”

“ஏழரைக்கெல்லாம் கிளம்பிடுவேன்”

“ஒரு நாளைக்கு 15 அல்லது 16 மணி நேரம் உழைக்கிறீங்களே? பொறாமையா இருக்குங்க அனு”

“அட இதென்னங்க என் டிரைவரப் பாருங்க, 60 வயசாச்சு அவருக்கு. என்னைக் கண்டிவளியில் இறக்கி விட்டுட்டு அவரு மட்டுங்கா போகனும். இங்க இருந்து ஒரு மணி நேரப் பயணம். காலையும் அதே போல. பார்த்தா அவரு என்ன விட அதிகமா உழைக்கிறாருங்க. கிட்டத்தட்ட 18 மணி நேரம். ”

உழைப்புக்கு நேரம் காலம் கிடையாதுன்னு சரியாத்தான் சொல்லியிருக்காங்க.


**************************************************************************

எப்படி உழைப்பில்லாமப் பொருள் கிடைக்காதோ அதுபோல திறைமையில்லாம புகழ் கிடைக்காதுங்க. திறமையில்லாமல் வரும் புகழ் தங்காதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. இருந்தாலும் சில பெரிசுகளுக்கு எப்படியாவது புகழ் பெறனுங்கிற ஆவல்ல என்னத்தையாவது செய்யுறாங்க. தன்னெஞ்சறிவது பொய்னு அவங்களுக்கும் தெரியும். இருந்தாலும் புகழ்மீதான காதல் அவங்கள வழி மாறத் தூண்டுது.

பாவமாவும் இருக்கு; சில சமயம் பரிதாபமாகவும்.



.

Friday, March 13, 2009

அப்பனே புள்ளையப் பாத்து வகுறு எரியுறானா?

.

சமீபத்தில் நண்பரின் மகனுடன் பேசிக்கொண்டிருந்தேன்.

“அங்கிள், சின்ன வயசுல நீங்க பட்டாசு வெடிக்கும்போது உங்களுக்குச் சந்தோசமா இருந்திச்சா?”

“கண்டிப்பா அதுக்குத்தானே வெடிக்கிறது.”

“நீங்களே வெடிச்சீங்களா? இல்ல உங்கப்பா வெடிச்சாரா?”

”சிலத நான் வெடிச்சேன் கொஞ்சம் பெரிய வெடிகள அப்பா வெடிச்சாரு”

“இப்ப?”

“இப்ப எங் குழந்தைகள் வெடிக்கிறாங்க அதப் பார்த்து நான் சந்தோஷப் படுகிறேன். ஏம்ப்பா?”

“எங்கப்பாகிட்டக் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க அங்கிள்”

“என்ன பிரச்சினை”

“என்னோட சட்டைகள எடுத்துப் போட்டுக்கிறார், இன்னும் மைனர் மாதிரி மோதிரம் தொப்புள் வரைக்கும் செயினுன்னு அவரு பண்ணுற ராவடி தாங்க முடியல”

“சட்டையப் போட்டா என்னப்ப்பா பிரச்சினை?”

“அங்கிள் சிலதப் பூடகமாத்தான் சொல்ல முடியும். இருந்தாலும் உடைச்சே சொல்லிடுறேன். என்னத் தேடி எந்தப் பொண்ணு வந்தாலும் அதுகூட உக்காந்து பிளேடு போடுறார். அவ அப்புறம் என்ன ஒரு நாய் அளவுக்குக் கூட மதிக்க மாட்டேங்கிறா இதுகூடப் பரவாயில்ல இந்தவாரம் உன்னத் தேடி
நாலு புள்ளீங்க வந்தாங்க என்னத் தேடி ஒருத்தியும் வரலன்னு பொலம்புறாரு.”

“அடக் கொடுமையே அப்பனே புள்ளையப் பாத்து வகுறு எரியுறானா?”

“இன்னும் கேளுங்க வீட்டுக்கு வந்தவிக எல்லாம் அவருகூடவே பேசனுமாம. இவரு வெளி எடத்துக்குப் போனா எல்லாரும் இவருக்கு மட்டுமே மரியாதை கொடுக்கனுமாம். இவரு மத்தவிகள மதிச்சாத்தானே மத்தவுக இவர மதிப்பாங்க?”

”அதுவும் சரிதான். இந்த வயசுல உனக்குத் தெரிஞ்சது கூடவா உங்கப்பாவுக்குத் தெரியல?”

“தெரியலயா? இல்ல வயசாயிருச்சுங்கிறத ஒத்துக்க முடியலயா? ஒன்னுமே புரியல அங்கிள் . இப்பல்லாம் 24 மணி நேரமும் கம்பூட்டர் முன்னாடிதான் இருக்காரு. சின்னப் பையன்மாதிரி ஐடி கிரியேட் பண்ணி வச்சுகிட்டு சின்னச் சின்னப் புள்ளைகளோட சாட் பண்ணுறேன்ன்னு தொல்லை தாங்க முடியல ”.

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. ராமயணக் காட்சிதான் ஞாபகம் வந்தது.

கும்பகர்ணன் ராவணனப் பார்த்துக் கேப்ப்பான், “அண்ணே, நம்ம மகன் ஒரு பொண்ணுமேல ஆசப்பட்டு அதத் தூக்கீட்டு வந்திட்டான், அந்த ராசா கூட நாம சண்டை போடனும்னா அது ஞாயம். தர்மமான போர். ஆனா நீ செஞ்சிருக்கிற காரியம் என்ன? உனக்கே கல்யாண வயசில மகன் இருக்கும்போது நீ ஒருத்திய அதுவும் இன்னொருததன் பொண்டாட்டியத் தூக்கீட்டு வந்திருக்கியே, அதுக்கு நானும் உன் மகனும் போர் செய்யப் போறமே இதவிட இழுக்கு வேற என்ன இருக்க முடியும்?”

இப்படித்தாங்க வயசானா சிலருக்கு புத்தி பேதலிச்சுப் போயிடுது. வயசுக்குத் தகுந்த மரியாதை நாம நடந்துக்கிறதுலதான் கிடைக்குமே தவிர ஆர்டர் போட்டு வாங்க முடியாது. அது நாம வேலை பாக்குற அரசாங்க உத்தியோகத்துல கிடைக்கலாம் அது அந்தப் பதவிக்குத்தானே தவிர நமக்கு இல்ல. நாளைக்கு அந்தப் போஸ்டுல வேற கழுதை வந்து உக்காந்தா அதுக்கும் இந்த மரியாதை சல்யூட் எல்லாம் கிடைக்கும்.

நமக்கு?



.

Monday, March 09, 2009

முக(ம்)மூடி

.





மகளாய், அக்காவாய், தங்கையாய்
மனைவியாய், அம்மாவாய்,
வாங்குபவளாய், விற்பவளாய்
எடுப்பவளாய், கொடுப்பவளாய்
எண்ணற்ற அவதாரம்.

எல்லாவற்றுக்கும் கைவசமுண்டு
பொருத்தமான முகமூடிகள்
அநிச்சையாய் அணியவும்
ஆனவுடன் அகற்றவும்

எந்த முகத்தைத்
தரிசிக்க வந்தீர்களென்பதை
முன்கூட்டியே சொல்லுதல் உசிதம்
தோதான முகமூடி தேடியெடுக்க

அணியவும், அகற்றவும்
மீண்டும் மீண்டும்
அணியவும், அகற்றவும்
ஆனதில்
எனக்கே மறந்து போனது
என் சுய முகம்.

முகமூடியற்றிருபதை விட
முகமற்றிருப்பது மேலோ?



டிஸ்கி : அப்துல்லா அழைப்புக்காக எழுதுன கவிதை.

டிஸ்கி1 : இந்தக் கவிதை பிடித்திருந்தால், என்னுடைய இந்தக் கவிதைகளும் பிடிக்கக் கூடும். தக்கைகள் அறியா நீரின் ஆழம். இடம் பெயர்(த்)தல்.





.

இடம் பெயர்(த்)தல்



நாலு எட்டு வைத்து பின்
இடுப்பொடித்து கைதட்டிச்
சிரித்த குரங்கு பொம்மையை
இடம்பெயர்த்து இடம் பிடித்தது
நம்மை நோக்கியும்
நம்மிலிருந்து விலகியும் பறந்த
ஹெலிஹாப்டர் பொம்மை.

ஐந்தாம் வகுப்பு
ஊளமூக்கன் பாண்டுரங்கனையும்
ஒத்தைக்கை ராகவனையும்
இடம் பெயர்த்தனர்
எட்டாம் வகுப்பு
எம்பாலனும், ஜெயராமனும்

உயர்நி்லையில் அவர்களை
ஜெயசீலனும், வன்னியப்பனும்
இடம்பெயர்த்த
மேல்நிலையில் அவர்களை
இடம் பெயர்த்தனர்
ராமசாமியும் பாலாஜியும்

ஆட்டுக்கல் கிரைண்டராகவும்
அம்மிக்கல் மிக்சியாகவும்
இடம்பெயர
அவ்வண்ணமே பிறவும்
ஆயின;ஆகும்.

ஒன்றினை ஒன்று
இடம் பெயர்த்தும்
இட்டு நிரப்புவதும்
வாழ்க்கையின் வசீகரம்

என்றாலும்
இன்னமும்
நிரப்பமுடியவில்லை
என் பாட்டி
விட்டுச் சென்ற




வெற்றிடத்தை.

.