Saturday, February 28, 2009

தக்கைகள் அறியா நீரின் ஆழம்.


9.00 மணி அலுவலகத்திற்கு
9.10 9.15 ஏன் 10.30க்குக்கூட
வருகிறீர்கள்.

நான் 8.00 மணிக்கே வருகிறேன்
அறைத்தனிமையின் அவலம் நீங்க.

வெண்டைக்காய் புளிக்குழம்பு
கத்திரிக்காய் காரக்குழம்பு
முள்ளங்கிச் சாம்பார்
முட்டைப் பொறியல்
முள்ளில்லா மீனும்
தென்படும் சில பொழுது
உங்கள் மதிய உணவில்.

எனக்கு மாதவன் நாயரின்,
உப்பு, சப்பு, உரைப்புமற்ற
மற்ற நாளை போலவே
சவ சவ சாப்பாடு.

மாலையில் திரும்பியடைய
அவரவருகென்றொரு கூடு
தார்சு வேய்ந்தோ அல்லது
ஓடு வேய்ந்தோ
குறந்தபட்சம்
கூரை வேய்ந்தேவானும்.

எனக்கிருப்பது ஒரு பொந்து
ஏன் போகவேண்டும் அங்கு
எனவெழும் கேள்வியோடு.


உங்கள் இணைகளோடு
கூடி முயங்கிப் பெற்ற
வேர்வைத்துளிகள் வடிய
விரியத் திறக்கிறீர்கள்
உங்கள் சாளரங்களை.

என்றேனும் நினைத்ததுண்டா
விளக்கணைததும் கவிழும்
இருட்டைப் போல
என் போல்வர் விரகத்தாபமும்
ஏக்கப் பெருமூச்சுகளும்
செரிந்தது அக்காற்றென.

தக்கைகள் அறிவதில்லை
நீரின் அடியாழம்;
ஒரு போதும்.


.

Monday, February 23, 2009

கதம்பம் 22/02/2009

.

தொலைந்தவன்

கண்டிப்பாய் இருக்கிறது
ஆனால்காணவில்லை.
மகனுக்கு அப்பன்.
மனைவிக்கு புருஷன்
அதிகாரிக்கு அடிமை
நண்பனுக்கு நடமாடும் வங்கி.
இப்படியாகத்தான் அது.
கண்ணில் படுவதேயில்லை
நீங்கள் கண்டதுண்டா
நிஜமான என்னை?


1994-ல் வெளியான இந்தக்கவிதையை எழுதியவர் அனந்த்பாலா.

இவர் யாரென்று சொல்ல முடியுமா. தற்பொழுது இவர் பிரபல வலைப்பதிவர். விடை பதிவின் இறுதியில்.

**************************************************************************

சமீபத்தில் நண்பர் ஒருவர் இக்கால இளைஞர்களைத் திட்டித் தீர்த்தார். இத்தனைக்கும் அவருக்கு வயதும் 50க்குள்தான். நாட்டுப்பற்று இல்லை, தாய்ப்பாசம் இல்லை, பெரியவர்களை மதிப்பதில்லை என சரமாரியாகப் புகார். எனக்குத் தாங்க வில்லை.

“சார் பாரதி இறந்த போது அவரது இறுதி அஞ்சலிக்குச் சென்றவர்கள் எத்தனை பேர்?”

“தெரியவில்லை”

“மொத்தம் 14 பேர்தான், பரவாயில்லை. வ உ சி விடுதலை ஆகி வரும்பொழுது அவரை வரவேற்கச் சென்றவர்கள் எத்தனை பேர்?”

“ஒரு பத்துப் பேர் இருப்பார்களா?”

“இல்லைங்க மொத்தம் மூனே பேர் அதிலும் இருவர் உறவினர் ஒருவர் நண்பர்”

இது போல நாமே நமது சுதந்திரப் போராட்ட வீரர்களையும் தலைவர்களையும், சுதந்திரத்திற்காக உடல் பொருள் ஆவி அணைத்தையும் தியாகம் செய்தவர்களையும் சுலபமாக மறந்து விட்டோம். அது இந்தத் தலைமுறையினருக்கு எப்படித் தெரியும்? அவர்களைப் பொருளாதார ஆதாயம் ஒன்றே குறிக்கோள் என வளர்த்த நம் மீதுதான் தவறு” என்றேன்.

சரிதானே?

**************************************************************************

கேரக்டர் சரியில்லை

இந்தக் குற்றச் சாட்டை ஆணின்மீது பிரயோகிக்கும் போது வரும் அர்த்தத்தையும் பெண்ணின் மீது பிரயோகிக்கும்போது வரும் அர்த்தத்தையும் யோசித்திருக்கிறீர்களா?

ஆணுக்குக் கற்பு தவிர்த்த எல்லா ஒழுக்கக் கேடுகளையும் அதன் மூலம் அர்த்தப் படுத்தும்போது, பெண்ணிற்கு அதைக் கற்பு சம்பந்தப் படுத்தி மட்டும் சொல்லுவது சரியா?

இதுக்கு யாராவது மேல் ஷாவனிஸ்டுன்னு எம் மேல சண்டைக்கு வரதீங்க.

**************************************************************************


"மயிர் நீப்பின் வாழாக் கவரி மாவன்னா
ருயிர் நீப்பர் மானம் வரின்!"

இந்தக் குறளுக்குப் பொதுவா கவரிமான் ஒரு மயிர் இழந்தாலும் உயிர் வாழாது அவ்வளவு மானமுள்ள மிருகம் எனப் ப்டித்திருக்கிறோம்.

ஆனால் இது உண்மையல்ல எனவும் ஒரு கருத்து இருக்கு பாருங்க.

'கவரி' ன்னா மயிர் 'மா'ன்னா மிருகம். குளிர் பிரதேசங்களில் வாழும் மிருகம், குளிரைத் தாங்க அடர்த்தியான ரோமங்களைக் கொண்டது. அந்த மயிரை இழந்து விட்டால் குளிரில் விரைத்துச் செத்து விடும் என்பதுதான் உண்மையான அர்த்தமாக இருக்கக் கூடுமோ.

இதைப்போலத்தானோ பாலையும் நீரையும் பிரிக்கும் பறவை?

**************************************************************************

”திரைக்கதா”ன்னு ஒரு மலையாளப் படம் பார்த்தேன். மிகவும் நல்ல படம்

பிரித்விராஜ் ஒரு வெற்றிப் பட இயக்குனர். அடுத்தப் படத்துக்கான கருவை யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவருக்குப் பரிசு வழங்கும் ஒரு பிரபல நடிகரைப் பற்றிய விபரங்களைத் தேடிப் படிக்கும்போது, முதல் படத்தில் அவருடன் அறிமுகமான நடிகையுடன் அவருக்குக் காதலும் அது கல்யாணத்தில் முடிந்ததும் தெரிய வருகிறது.

அந்த நடிகையை மையமாக வைத்து அடுத்த படத்தைச் செய்யலாம் என நடிகையைப் பற்றிய விபரங்களைச் சேகரிக்கத் தொடங்குகிறார். படத்தின் முதல்பாதி நடிகை பிரபலமாவதும், அவரது காதலும், கலயாணமும் எனச் செல்கிறது. .

நடிகையின் கல்யாண முறிவுக்கான உண்மையான காரணத்தையும் அவரது தற்போதைய நிலையையும் அறி்யும் பிருத்வி, அவரது கதையை படமாக எடுக்கும் வியாபார எண்ணத்தைக் கை விட்டுவிட்டு அவரது நலத்தில் அக்கறை் கொண்ட மனிதாபிமானமுள்ளவராக மாறுகிறார்.

ப்ளாஷ்பேக் உத்தி மிக அதிகளவில் பயன்படுத்தப் பட்டிருந்தாலும் உறுத்தாமல் இருக்கிறது. எடிட்டரின் திறமை பளிச்சிடுகிறது. பிருத்வி மிக முதிர்ந்த நடிப்பை அலட்டல் ஏதுமின்றி வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆனால் பெரும்பாலும் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட ப்ரியாமணி கதாநாயகி வேடத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அது என்னவோ நல்ல நடிப்பை வெளிப்படுத்த மலையாளப் படவுலகத்திற்குச் செல்லும் நடிகைகள், தமிழ் படத்துக்கு உடம்பை வெளிப்படுத்தினால் போதும் என நினைக்கின்றனர் போலும்.

ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையைச் சில இடங்களில் தொட்டுச் சென்றாலும் அவர்தான் என அறுதியிட்டுச் சொல்ல முடியாவண்ணம் திரைக்கதையில் சில மாற்றங்களுடன் எடுக்கப்பட்டுள்ளது.

சென்ற அக்டோபரில் (10/08) எடுக்கப்பட்ட இந்தப் படம் அதற்குள் சிடியில் கிடைக்கிறது, 70 ரூபயில். நல்ல திரைப்படம் பார்த்த அனுபவத்திற்கு உத்திரவாதம்.

**************************************************************************

சக வலைப்பதிவர், நண்பர் ச.முத்துவேலின் கவிதைகள் இந்த மாத உயிர் எழுத்து பத்திரிக்கையில் வந்திருக்கிறது.

கொஞ்சமாக எழுதினாலும் நல்ல கவிதைகள் எழுதும் இந்த இளைஞர் இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துக்கள்.

கரைகளைத் தாண்டி

எறிந்ததென்னவோ
ஒரு கல்தான்.
அதுவும் ஒரே முறைதான்.
தரை தொட்டுவிட்டதா
தெரியவில்லை.

அது கிளப்பிய
வட்ட வட்ட அலைகள்
விரிந்துகொண்டேயிருக்கிறது

நன்றி-உயிரெழுத்து
பிப்-2009

**************************************************************************


டாக்டர் நீங்க சொன்ன மாதிரி சிகரட்டுக்குபதிலா சூயிங்கம் பழக்கத்த ஏற்படுத்திக்கிட்டேன். ஒரே ஒரு பிரச்சினைதான்

அதுலஎன்னப்பா பிரச்சினை?

சூயிங்கத்தைப் பத்த வைக்க ரெம்ப நேரம் ஆகுது.

**************************************************************************

அந்தப் பதிவர் நம்ம பரிசல்.


**************************************************************************

Sunday, February 15, 2009

யார் கடவுள்?

12 வயதிருக்கும் எனக்கப்போது. காலை டிபனைச் சாப்பிட்டுவிட்டு புளிச்சாதத்தையோ அல்லது வேறு சாதத்தையோ டிபன் பாக்ஸிலும் அடைத்துக் கொண்டு, நானும் ராஜ சேகரனும் ஜெயபாலனும் பழனி மலை நோக்கி நடப்போம். எங்கள் ஊரிலிருந்து சரியாக 7 கி மீ தூரம் இருக்கும். 8 மணிக்கு ஆரம்பித்து 11 மணிக்குச் சென்று சேருவோம். மலை ஏற மேலும் அரை மணி நேரம். தரிசனம் முடிந்து சாப்பிட்ட பின் கீழிறங்கி ஏதாவது ஒரு திரைப்படம் பார்த்தபின் மீண்டும் நடையைக் கட்டுவோம். இது இரு வருடங்கள் தொடர்ந்தது, மாதம் ஒரு முறையென.

வெயில் அதிகமிருக்கும் காலங்களில், மலையேறும் சிரமத்திலிருந்து ஆசுவாசப் படுத்திக் கொள்ள நேர்வழியைத் தவிர்த்து யானைப்பாதை மூலம் செல்வோம். நேர்வழி நெட்டுக் குத்தாகப் படிகள் உள்ளதாகவிருக்கும் அய்ந்தாறு படிகள் சற்றுச் சமதளம் மீண்டும் படிகள் என முதியோரும் குழந்தைகளும் ஏறுவதற்குச் சுலபமாக இருக்கும் யானைப்பாதை. பாதையிலமைந்த ஒவ்வொரு இளைப்பாறும் மண்டபத்திலும் ஏதோவொரு ஊணமுற்றவர் யாசித்துக் கொண்டிருப்பர். ஆரம்பகால அருவெறுப்புகளைக் கடந்துஅவர்களைக் கவனிக்கும்போது ஒன்று விளங்கியது; தனக்கு விதிக்கப்பட்டவாழ்க்கை இதுவெனினும் அதை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தே தீருவெதென்ற வைராக்கியத்துடனிருப்பது.

+2 படிக்கும் பொழுது நண்பர்கள் தங்கள் தோழியரைச் சந்திக்க மலைக்கோவில் ஒரு நல்ல இடமாக இருந்தது. யாருடனாவது துணையாக அவனது தோழி வரும் முன்னரே சென்று காத்திருக்க நேரும் . அவ்வாறான சமயங்களிலும் யாசிப்பவர்களைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன். ஆனால் அவர்களை யாரோ இயக்கி வைக்கிறார்கள் என்ற அளவில் ஒரு புரிதல் இருந்ததது.

வெளியூர்களில் எங்காவது சிறு குழந்தை காணாமல் போனால் அவர்கள் முதலில் வந்து விசாரிக்கும் இடம் அடிவாரம்தான். அங்கு இல்லையெனில் அவர்கள் குழந்தை வேறு இடத்தில் சேதாரமில்லாமல் இருக்கிறதென்பது உறுதி என்ற ஆறுதல் அவர்களுக்குக் கிட்டும்.

அதன் பின் பழனியை விட்டு விலகி பல வருடங்கள் கழித்து உடுமலையிலிருந்து கோவைக்கு வேலை நிமித்தம் ரயிலில் தினசரி வந்து போக நேர்ந்தது, சுமார் இரு வருடங்கள். தொடர் பிரயாணத்தில் ரயிலில் வரும் பிச்சைக்காரர்கள் பழகிய முகமாகவும் அதில் சிலரை அறிந்து கொள்ளவும் வாய்த்தது. ஒரு ஒழுங்குக்கும் கட்டுப்பாட்டுக்கும் உட்பட்டே அவர்கள் வாழ்க்கை அமைகிறது. போகிற போக்கில் பார்க்கும் நமக்கது புலப்படுவதில்லை.

மீண்டும் சில வருடங்கள் கழித்து ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவல் வாசிக்கக் கிடைத்தது. அவரது காடு நாவல் வாசித்த பாதிப்பிலிருந்த எனக்கு இதுவும் அதைப் போன்றவொன்று என்றென்ணித்தான் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் இது முற்றிலும் வேறு தளம்மட்டுமல்ல தமிழில் வேரு எவரும் தொடாத தளமும் கூட. நாவல் வாசித்து முடித்தபின் கிட்டத் தட்ட ஒரு வார காலம் அதனால் பாதிக்கப் பட்டிருந்தேன்.

நான் கடவுள் படம் இந்நாவலின் அடிப்படையில் என்பதான தகவல்கள் கசிந்த போது, இதில் காசி எங்கு வருகிறதென்ற ஆச்சரியமும் கூடவே பாலா போன்ற எளிதில் திருப்தியடையாத இயக்குநர்தான் இந்தக் கதையை எடுக்க சரியான நபர் என்ற ஆறுதலும் ஏற்பட்டது.

படம் வெளியாகி ஆர்யாவின் ரசிகர்கள் எல்லாம் பார்த்து கைதட்டல்கள் எல்லாம் ஓய்ந்த பின் பார்க்க வேண்டுமென்ற முடிவின்படி நேற்றுப் பார்த்தேன். தன்னை நம்ம்பியவர்களைக் கை விட வில்லை பாலா. ஓவ்வொருவரிடமிருந்தும் அவர்களது சிறப்பான பங்களிப்பைக் கறந்திருக்கிறார். பாத்திரத் தேர்வும், நடிக நடிகையர், துணை நடிகர்கள், இசை(இளையராஜா), ஒளிப்பதிவு(ஆர்தர் ஏ வில்சன்), எடிட்டிங்(சுரெஷ் அர்ஸ்), கலை(கிருஷ்ணமூர்த்தி) என எல்லா விதத்திலும் நிறைவான படம்.

ஆர்யாவையும் பூஜாவையும் அவர்களது நட்சத்திர அந்தஸ்தை விடுத்து கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அவர்களது திறமையை மிளிரச் செய்திருக்கிறார் பாலா.

வசனத்தையும் இசையையும் தனியாகக் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒரு நல்ல பின்னணி இசை எவ்வாறு இருக்க வேண்டுமென்பதற்கு இப்படம் நல்ல உதாரணம். அதே போல் வசனம். ஒவ்வொரு பாத்திரமும் தான் பேச வேண்டியதற்கு அதிகமும் குறைவும் இல்லாது பேசுகிறது. பூஜாவுடைய கடைசிக் காட்சி ஒன்றைத் தவிர மற்ற இடங்களில் வசனம் படத்தின் வெற்றிக்கு பக்க பலமாய் நிற்கின்றது.

காசியையும் பழனியையும் இணைத்தவிதத்தில் கதாசிரியரின் புத்திசாலித்தனம் தெரிகிறது. கதைக் களம் பழனி என உடைத்துச் சொல்ல முடியாமலிருப்பது நமது சகிப்புத்தன்மை இல்லாமையைக் காட்டுகிறது.

காவல் நிலையக் காட்சி தவிர்க்கப் பட்டிருக்கலாம். தொப்பி என்றும் திலகம் என்றும் பகடி செய்ததைத் திரி கொளுத்திப் போட்டு ஜெமோவைப் பந்தாடியவர்கள் இந்தக் காட்சிகளப் பார்க்கும் போது கண்களை மூடிக் கொண்டிருந்தனரா எனத் தெரியவில்லை. அவர்களால் இதை ஒன்றும் செய்யவியாலாதென்பது சுடும் நிஜம்.

இந்தப் படமும் கதாநாயகன், நாயகி, வில்லன் என்ற ஒரு கட்டுக்குள் அமைந்த ஒன்று என்பதுதான் ஆயாசம் தரும் விதமாகவிருக்கிறது. இதை முதலில் உடைத்தெறிய வேண்டும்.

மாங்காட்டுச் சாமியாக வருபவர் கோவையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர். இவர் இரு கைகளும் கால்களும் இல்லாதிருந்த போதும் மிகச் சிறந்த கர்நாடக கச்சேரி செய்பவர் எனபதொரு கூடுதல் தகவலிங்கு.

இதுபோல குரூபிகளை வைத்து வியாபரம் செய்யும் ஆட்களும் இருக்கிறார்களா? இதெல்லாம் உண்மையா? அல்லது அதீத மிகைப்படுத்துதலா? என்ற கேள்விக்கெல்லாம் விடை ஒன்றுதான்; உண்மை இதனினும் கொடியது. திரைப்படத்தில் காட்டியது கொஞ்சம்தான். நான் முன்பே குறிப்பிட்டது போல குழந்தைகளைக் கடத்தி வந்து விற்கும் கும்பல் அதை வாங்கும் கும்பல் என எல்லோரும் இருக்கிறார்கள்; மறைந்தும், வெளியே தெரிந்தும் .

இதையெல்லாம் படமாக ஆக்கித்தான் தீர வேண்டுமா? என்பதாகவொரு கேள்வியும் உண்டிங்கு. புண்ணை மறைக்க ஆடை அணிவதால் புண் மறையலாமே தவிர இல்லமல் ஆகிவிடுவதில்லையல்லவா.

ஏதோ ஒரு மகிழ்ச்சிக்காகத்தான் திரைப்படத்திற்குச் செல்கிறோம் அந்த இரண்டு மணி நேரமும் இதே வேதனைதானா? என்போர் குருவி, வில்லு, குசேலன் போன்ற படங்களைக் கண்டு களியுங்கள்.

படைப்பை விமர்சிக்கலாம் இப் படைப்பே தேவையா என்பதெவ்வகை விமர்சனமென்பதெனக்குப் புரிவதில்லை;பெரும்பாலும்.

**************************************************************************

Wednesday, February 11, 2009

மாலா 9ஆம் வகுப்பு 'பி' பிரிவு

ங்களில் சிலருக்கு இந்த அனுபவம் இருந்திருக்கக் கூடும். உள்ளூரில் சொந்த செல்வாக்கோடு படித்து முடித்து மேற்படிப்புக்காக வெளியூர் பள்ளியில் சென்று சேரும் போது கண்ணக் கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கும்.

எனக்கும் அப்படித்தான் இருந்தது 9 B பிரிவில் சேரும் போது. புது பழக்க வழக்கங்கள், நடைமுறைகள், கட்டுப்பாடுகள், கண்டிப்புகள் இன்ன பிற. உள்ளூர் வாத்தியார்களில் பெரும்பாலும் அப்பாவுக்குத் தெரிந்தவர்கள் எனவே ஒரு செல்லப்பிள்ளையாகத்தான் படித்தேன். அதிலும் கண்ணன் வாத்தியாரும், ராமசாமி வாத்தியாரும் சீட்டு விளையாட எங்கள் வீட்டுக்கே வருவார்கள்.

ஒரு வழியாக நடைமுறைகள் பழக்கமாவத்ற்கும் முதலாம் இடைத் தேர்வு(?! mid term test) வந்தது. 50 பேர் படிக்கும் வகுப்பில் நான் 48 ஆவது ரேன்க். இத்தனைக்கும் cement ன்னு ஒரு essay வும் my prayerனு ஒரு poem மும்தான் ஆங்கிலப் பரிட்சைக்கு. பேப்பரில் புளுக்கலரில் நான் எழுதியதை விட சிவப்பில் ஆசிரியர் சுழித்ததுதான் அதிகம். நான் உட்படச் சிலரை கட்டம் கட்டி ஏதோ சொன்னார் வகுப்பாசிரியர்.

அன்றிரவு அப்பாவிடம் சொன்னேன், “ அப்பா வாத்தியார் உங்களக் கொண்டுட்டு வரச் சொன்னார்”

“என்னது கொண்டுட்டு வரச்சொன்னாரா?”

“ஆமா அப்படித்தான் சொன்னார், you must bring your fatherனு”

“அடப் பாவி கூட்டீட்டு வான்னுதான்டா அர்த்தம்.”

”அப்ப ஏன் bring me a cup of waterனு சொல்லுராங்க?”

தலையில் அடித்துக் கொண்டு என் எதிர்காலம் குறித்து வடமேற்கு மூலையில் சிலந்தி கட்டியிருந்த கூட்டை நோக்கித் தியானத்தில் அமர்ந்தார்.

அடுத்த நாள் வந்து ஆசிரியரைச் சந்தித்து அவரிடமே ட்யூசன் ஏறபாடு செய்துவிட்டார். பள்ளிக்கு 3 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் அக்கிரகாரத்தில் அவரும் மேலும் இரு ஆசிரியர்களும் சேர்ந்து எடுக்கு ட்யூசன் அந்த வட்டாரத்தில் பிரபலம். அவரகளிடம் படித்தவர்கள் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படித்துக் கொண்ட்டிருந்தனர்.

ட்யூசன் பலன் தர ஆரம்பித்தது கால் பரிட்சையில் 14, இரண்டாம் இடைத் தேர்வில் 4, அரைப்பரிட்சையில் 2 என ரேன்க்கில் நல்ல முன்னேற்றம். அரைப் பரிட்சை ரேன்க் கார்டு தரும்பொழுது வகுப்பாசிரியர் பாராட்டிச் சொன்னார் உன் முயற்சிக்குக் கிட்டிய வெற்றி என்று. அவர் பேசி முடிக்கும் வரைக்கும் நின்று கொண்டிருந்த என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த இரு விழிகளுக்குச் சொந்தக்காரிதான் மாலா. அது வரை இரண்டாம் ரேன்க்கில் இருந்தவள்.

அவளுடைய குறுகுறு பார்வை என்னை மேலும் பார்க்கத் தூண்டியது. மெதுவாக விசாரித்ததில் அவளும் அக்கிரகாரத்து பெண், அக்கா வீட்டில் தங்கிப் படிக்கிறாள், நன்றாகப் பாடக் கூடியவள், பள்ளி ஆண்டு விழாவிலும் பாட்டுப் போட்டியிலும் அவள் பாட்டு நிச்சயம் இருக்கும் என்றும் தெரியவந்தது.

பரஸ்பரப் பார்வை பரிமாறல்களுக்குப் பின் ஒரு நாள், “ ஏ பாய்ஸ், 2 ஆவது ரேன்க் எடுத்தது பெரிசில்லை. ஆனா 48 லிருந்து இவ்வளவு தூரம் வந்ததுதான் பெரிசு. வாழ்த்துக்கள்” என்றாள்.

இதைப் பேசுவதற்குள் அவளுக்குக் கைகால் எல்லாம் நடுக்கம். எனக்கும்தான், “தேங்க்ஸ், கேர்ல்ஸ்” என்று சொல்லி முடிப்பதற்குள்.

எங்க காலத்தில் பொண்ணுங்க பேரச் சொல்லிக் கூப்பிடுவதெல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது. ஏ கேர்ள்ஸ் ஏ பாய்ஸ்தான். சிங்குலராவது?, புலூரலாவது?.

இப்படியாக நாங்கள் ஒருவருக்கொருவர் பார்வையப் பரிமாறிக் கொள்ள ஆரம்பித்தோம். அடுத்த கட்டமா பாலோ பன்ண ஆரம்பிச்சேன். 3.40 க்கு பள்ளி முடிந்தால் 5.00 மணிக்குத்தான் ட்யூசன். முதலில் சைக்கிளில் சென்று பஸ்டாண்டுல காத்திருப்பேன். அவள் கிராசானதும், சண்முகாத்தியேட்டர், அங்க கிராசானதும் ரத்னா மில்லு, வண்ணாங்குளம், குமரன் மில்லு, அழகாபுரி பஸ்ஸ்டாண்டுன்னு இப்படியே தொடரும்.

4.30 லிருந்து 5.00 மணி வரை வாத்தியார் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டு இருப்போம். தெருவில குறுக்க மறுக்க நடப்பாள். அதன்பின் பாடம் படிப்பதில் நேரம் போய்விடும். இதே போல அடுத்த நாள் அதற்கடுத்த நாள் இப்படியே.

என்னுடைய புத்தகப் பையில் திடீர் திடீரென்று பலகாரங்கள் இருக்கும். பின்புதான் தெரிந்தது இடைவேளையில் யாருமில்லாத சமயம் மாலாதான் வைக்கிறாள் என. நானும் அவளுக்குப் பிடித்த நெல்லிக்காய், புளியம்பிஞ்சு என எதிர்மரியாதை செய்தேன்.

டென்த் அரைப்பரிட்சை விடுமுறை. விடுமுறை நாட்களில் காலை 10..0 மணி முதல் 12.மணி வரை ட்யூசன். அது போல ஒரு நாளில் மாலா வீட்டில் ஒரே கூட்டமா இருந்தது. கணேசனைக் கேட்டதில் மாலாவின் அக்கா இறந்து விட்டதாகச் சொன்னான்.

“எப்படிடா?”

“அதை ஏன் கேக்குற அவ புருஷன் ஒரு கிராதகண்டா. அதுக்குமேல என்னை எதுவும் கேக்காதே”ன்னு சொல்லிவிட்டான்.


விடுமுறை முடிந்து பள்ளி மீ்ண்டும் திறந்ததில் மாலாவைத் தவிர அனைவரும் வந்திருந்தினர். கணேசனிடம் கேட்டதில், “ அவங்க அக்கா குழந்தையைப் பார்க்க அவ படிப்ப நிறுத்தீட்டாங்க. இன்னும் ஒரு வருடத்துல அவங்க அத்திம்பேரையே அவ கட்டிக்கப் போறா”ன்னு சொன்னான்.

வாழ்க்கை தன் வலிய கரங்களால் சதுரங்கக்கட்டதிலிருக்கும் காய்களைப் போலத் தன் இஷ்டத்திற்கு இடமாற்றிப் போடுகிறது நம்மை. துயரத்தை மறக்க அவள் சில காலம் அக்கா குழந்தையுடன் சொந்த ஊரான மாயூரத்திற்கும், நான் மேலும் படிக்க கோவைக்கும், உத்தியோக நிமித்தம் சென்னைக்குமென பிரிந்தோம்.


மீபத்தில் மாலாவைப் பார்க்க நேர்ந்த்தது. நிறைமாதமாக இருக்கும் அக்கா மகள் பிரசவத்துக்கு நகரில் இருக்கும் பெரிய டாக்டரிடம் செக்கப்புக்காக அழைத்து வந்திருந்தாள். தோற்றம் எல்லாம் மாறி, கடந்துபோன வருடங்களின் ஆயாசம் முகத்திலும் உடம்பிலும் தெரிந்தது. மாறாதது அதே பார்வை.

இப்பவும் பேசத் தைரியமில்லை. எது தடுத்தது?



********************************************************************************

Tuesday, February 10, 2009

சிபி, வெண்ணிலா மற்றும் ஓம்கார் ஸ்வாமி

.


”ஹலோ வேலன் சாரா?”

”ஆமாங்க”

”நாங்க ICICI வங்கியிலிருந்து பேசுறோம்”

”பேசுங்க”

”உங்களுக்கு 10 கிரிடிட் கார்டு அலாட் ஆகியிருக்கு”

”எங்கிட்ட ஏற்கனவே கார்டு இருக்குங்க.”

”இந்தக் கார்டுல என்ன விசேசம்னா, நீங்க எவ்வளவு வேனும்னாலும் பர்ச்சேஸ் பண்ணலாம். பணம் எதுவும் கட்டத் தேவையில்ல.”

”அப்படின்னா எனக்கு இன்னும் 10 கார்டு கொடுங்க நம்ம பசங்களுக்கும் கொடுப்பம்.”

”காந்திபுரம் வந்து வாங்கிக்கிறீங்களா.”

”இவ்வளவு சலுகை பண்ணுறீங்க, டோர் டெலிவரியும் கொடுத்துடுங்க.”

”ஹலோ நான் சிபி பேசுறேன்.”

”சொல்லுங்க சிபி, பிளாக்கத் தவிர வெளிய யாரும் என்ன வேலன்னு சொல்ல மாட்டாங்க. எங்க இருக்கீங்க.”

”உங்க ஊர்லதான் காந்திபுரத்துல இருக்கேன்.”

”எங்க தங்கியிருகீங்க?”

”சிவாகூட இருக்கேன்.”

”சரி அப்ப மாலை சந்திப்போம்.”

*******************************************************************************

மாலை நானும் சிவாவும் சிபியும் செல்வாவுக்காக் காபி ஷாப்பில் காத்திருந்தோம். செல்வா வந்ததும் பரஸ்பர அறிமுகத்திற்குப் பின் பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். செல்வா சொன்னார்,”சிபி வலையிலதான் கலாய்க்கிறார். நேர்ல ரெம்ப சாப்டா இருக்காரே”

”அடப் பாவி அவரை உசுப்பி விடாதே அப்புறம் சிரம்ம்”னு சொல்லி வாய் மூடல செல்வா மாட்டிகிட்டாரு.

“நீங்க என்னவா இருக்கீங்க”ன்னு சிபியப் பாத்துக் கேட்டாரு செல்வா

“நான் சிபியா இருக்கேன்”

இது தாங்காதுன்னு எல்லோரும் கிளம்பி பாட்டியம்மா கடையில சாப்பிட்டோம். சேவை, தோசை, ஆப்பம் என வீட்டுச் சாப்பாடு போல இருக்கும். ஒரு பிடி பிடித்தோம். பின் வெண்ணிலா கபடிக் குழு திரைப்படம் பார்த்தோம்.

*******************************************************************************

நல்ல படம். கபடியின் நுட்பம் அறிந்தவர்களால் பாராட்டப் படக் கூடும். தெளிவான திரைக்கதை. நேர்த்தியான ஒளிப்பதிவு. ஒலிப்பதிவு செய்தவரைத் தனியாகப் பாராட்டியே தீரவேண்டும். கிராமத்துத் திருவிழாவில் சாத்தியமான அனைத்து ஒலிகளையும் நல்ல கற்பனையுடன் இணைத்திருக்கிறார். கண்களை மூடிக் கொண்டு ஒலிக்கோவைகளைக் கேட்டாலே ஒரு கிராமத்து திருவிழாவின் நடுவில் இருப்பது போல் உணரலாம்.

ஓரிருவரைத் தவிர அணைவரும் புதுமுகங்கள். அந்தச் சுவடே தெரியாமல் தங்களது பங்களிப்பைத் திறம்படச் செய்திருந்தனர். சரண்யா மோகனுக்கு அதிக வாய்ப்பிலையெனினும் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார். கதாநாயகன் என யாரும் இல்லை எனச் சொல்லலாம். கதைதான் நாயகன். கோச்சாக நடித்திருந்தவர், கிஷோர் என நினைக்கிறேன், நன்றாகச் செய்திருக்கிறார்.

சுசீந்திரன் அறிமுக இயக்குனராம். நலல படங்களை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம் எனபதற்கு இப்படம் ஒரு சாட்சி. தேவையில்லாமல் நுழைத்த காமெடி ஏதுமில்லாமல் படத்தில் இயல்பாகவே அங்கங்கே நகைச்சுவை கொப்பளிக்கிறது. வெள்ளந்தியான கிராமத்து மக்களப் படம் பிடித்து நம் கண்முன்னே நடமாட விட்டிருக்கிறார்கள்.

படத்துல நேராகச் சொன்னத விட சொல்லாமல் சொன்னதுதான் அதிகம் (sub text). அதை உணர்ந்து பார்த்தால் நல்ல படம். கிராமத்து மேடையில பெரிசுகள்ளாம் உக்காந்து ஆடு புலி ஆட்டம் ஆடுவார்கள், மேல் சட்டை இல்லாமல், அழுக்கு வேட்டியுடன். திருவிழாப் பற்றி அறிவிப்பு மைக்கில் கேட்கும்போதே (நோம்பி சாட்டுதல்) பெரிசுகள் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையுடன் அமர்ந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். சட்டென்று மாறும் இந்தக் காட்சி போல கவிதைகள் படத்தில் ஏராளம்.

சென்னை போன்ற நகரங்களில் இப்படம் வரவேற்பைப் பெறுமா எனப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

படம் துவக்கத்தில் 35 MM படமாகத்தான் இருக்கும் பிளாஷ்பேக்கைச் சொல்ல. வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது படம் 70MM க்கு மாறும். இதைக்கூடப் புரிந்து கொள்ளமுடியாமல் திரையரங்கில் சலசலத்தது ரசனைக் குறைவைக் காட்டியது.

********************************************************************************

அடுத்த நாள் இரவு ஸ்வாமி ஓம்காரைப் பார்க்கலாம் என முடிவு செய்து அவரது பீடத்தைத் தேடிப் போனால் பூட்டி இருந்தது. போனில் அழைத்தால் 20 நிமிடத்தில் வருகிறேன் என்று சொன்ன்வாறே வந்தார்.

பார்க்க ஒரு சாமியார் போலிருந்தாலும் எங்களுடன் பேசிக்கொண்டிருந்த 1 மணி நேரம் சாதாரண ஆ(!)சாமியாகத்தான் பேசிக் கொண்டிருந்தார்.

குழந்தைகள் வளர்க்கப் படும் விதம் பற்றிய ஆதங்கத்தை ஆழமாகவும் தக்க உதாரணங்களுடனும் சொன்னார். பொதுவாக வளர்ப்புப் பிராணிகளைப் போலத்தான் குழந்தைகளை வளர்த்துகிறோம் என்பது அவரது கருத்து.

பிற விஷயங்களை உலக நடைமுறைகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. 9 மணி அளவில் அவரிடமிருந்து கிளம்பி நானும் சஞ்சயும் சிபியும் கணபதி மெஸ்ஸில் நல்ல உணவை உண்டபின் பிரிந்து சென்றோம்.

இரண்டு நாட்கள் நல்ல இனிமையான அனுபவங்களைத் பெற்றுத்தந்த சிபிக்கு நன்றி.


*******************************************************************************

Monday, February 09, 2009

தபால்காரர்



மூனாங்கிளாசுல ஊளமூக்கன்
அஞ்சாங்கிளாசுல தபால்பெட்டி
எட்டுல கூளையன்
பத்துல கட்டையன்
பன்னெண்டுல குண்டன்
டிப்ளொமால பழனியான்
வேலைக்குச் சேந்தப்ப வீயார்
படிப்படியா மேனேஜர்னு ஆகி
இப்ப ஓனரும் ஆயாச்சு.
வலயில நம்ம பேரு அண்ணாச்சி.
அப்பாவுக்குத் தம்பி
அம்மாவுக்கு ராசா
வீட்டுக்காரிக்கு ..... (வேனாம்)
பிள்ளைகளுக்கு லூசு அப்பா
இன்னார் வீட்டுக்காரன்
இன்னார் மருமகன்
இன்னார் அப்பா
என்றெல்லாம் அழைக்கப்படும்
எனக்கும் உள்ளதொரு
இயற்பெயர் என்று
அவ்வப்போதேனும்
நினைவூட்டிச் செல்லும்
தபால்காரர்.



Sunday, February 08, 2009

வத்துன மாட்டுக்கு வைக்கப் பில்லு

ஞாயிறு காலை 6.00 மணி இருக்கும் படித்துக் கொண்டிருந்த பேப்பரில் நிழலாடியது.

”அண்ணாச்சி சொகமா இருக்கியளா?

”நல்லா இருக்கம்லே. என்ன ஏம்பக்கமாக் காத்து வீசுது?”

”சும்மா உங்களப் பார்த்துட்டுப் போலாம்னுதாம் ”

”எலேய் என்னமாது வார்த்தை பேசிடப் போறேன். போன வட்டம் வந்து ஆஸ்பத்திரிச் செலவு இழுத்து விட்டுட்ட இப்ப எந்தத் தேர இழுத்துத் தெருவில விடப் போறீயோ.”

”எப்பப்பாத்தாலும் என்ன இடக்குப் பண்ணுறதே சோலியாப் போச்சு உங்களுக்கு. ”

”அப்படித்தாம்ல நீயும் நடந்துக்கிடுதே. சரி சரி வந்த சோலி என்ன அதச் சொல்லு முதல்ல.”

“எனக்கும் வயசு ஆச்சு பாத்துக்கிடுங்க. அம்மை எனக்கு ஒரு பொண்ணயும் பாக்குற மாதிரித் தெரியல”

”எலேய் உனக்கு சோறுபோடுததே வத்துன மாட்டுக்கு வைக்கப் பில்லு வைக்க கணக்கு. இதுல உனக்குச் சோடிதாங் கேடு”

“அதாம் பாத்தேன் நானே ஒரு புள்ளையக் கரக்ட் பண்ணீட்டேன்”

“அடப் பாதரவே, யாருல அந்தப் பாவப்பட்ட சென்மம்”

“நம்ம படிக்கல் பண்ணை பேத்தி.”

“ ஏலே அவுகளுக்கு 7 பையன் 6 பொண்ணுல்லா. எந்தப் பேத்தி?”

“அவுக கடைக்குட்டி ராசா இருக்ககள்ள அவுக மகதான்”

“எலே அந்தப் புள்ளைக்கு கண்ணா அவிஞ்சு போச்சு உன்ன பாத்து சொக்குனா?”

“போங்க அண்ணாச்சி இதுதான் எதையும் உங்ககிட்டச் சொல்லக் கூடாதுங்கது. மதினி இல்லியா”

“மதினி உழவர் சந்தைக்கு போயிருக்கா. சரி அந்தப் பொண்ணப் பாத்த பழகுன ஆனா அவ உன்னத்தா விரும்புறாளாலே?”

“இல்லன்னா எங்கூடக் கிளம்பி வருவாளா?”

“எலே என்ன சொல்லுத? அந்தப் புள்ளையக் கூட்டீட்டு வந்திட்டியா? புள்ளைய எங்கல?”

“இங்கனதாம் வெளிய நிக்கா”

“வெறுவாக்கெட்டவனே, வயசுப்ப்புள்ளைய இப்படியா தெருவில நிறுத்துவ? கூப்புடுல உள்ள”

பயந்த படியே உள்ள வந்த பொண்ணுக்கு 18க்குள்தான் இருக்கும் வயசு. கிராமத்து அழகு. இரவு பயணம் வந்தக் களைப்பு முகத்தில். கலைந்த கேசம், உடை என இருந்தாலும் லட்சனமாக இருந்தாள். என் முகம் பார்த்துப் பேசத் தயங்கினாள்.

“உங்கப்பனும் நானும் ஒம்பதுல ஒண்ணாப் படிச்சிருக்கோம் தெரியுமா?”

“அப்பா சொல்லியிருக்காக”

“தெரிஞ்சுமா இங்க வந்த?”

“இவுக மெட்ராஸ் போலாம்னுதான் என்னக் கூப்பிட்டாக. கார்சாண்டுல வச்சு கோயமுத்தூர் போலாம்னாக எனக்கு வேற வழி தெரியல”

“வச்சு காப்பாத்துவான்னு நம்பி இவங்கூட வந்த உன்னை எதால அடிக்க. காக்காசு சம்பாரிக்கத் துப்பு இருக்கா இவனுக்கு?”

”மெட்ராஸ்ல சேக்காளி இருக்கான். நோக்கியாக் கம்பேனியில. அங்க வேல ரெடியா இருக்குன்னாக”

“ஆமா தட்டுல வச்சுகிட்டு தொர வரக் காத்திருக்காக. அவஞ்சொன்னானாம் இவ நம்ம்புனாளாம். சரி சரி இப்பம் அவ வந்துருவா. இனி அவ என்ன சாமியாடப் போறாளோ தெரியல. நீ முதல்ல குளிச்சு துணி மாத்து.”

பாத்ரூமைக் காட்டிவிட்டு துண்டு மற்றும் சோப்பு எடுத்துக் குடுத்தேன். ஹாலில் மனைவி அதற்குள் வந்திருந்தாள்

“யாருங்க பொம்பளச் செருப்பு இருக்கு ஆளக் காணோம்?”

“உங்கொழுந்தன் பண்ணுன காரியத்த அவங்கிட்டவே கேட்டுக்கோ?”

நல்ல வேளை அவளுக்குத்தான் சொந்தக்காரன். என் தலை தப்பிச்சது. அவங்களுக்குள்ள பேசி முடிவுக்கு வரட்டும்னு வெளியே கிளம்பினேன்.

அரைமணி கழித்து வரும்போது வீடு அசாதாரண அமைதியில் இருந்தது. அந்தப் பெண் விசும்பும் ஒலியைத் தவிர வேறெதுவும் இல்லை.

“ஏங்க ஒரே பேச்சுத்தான். டிபனச் சாப்பிட்டுட்டு நீங்க கெளம்பி இவளக் கூட்டீட்டுப் போய் அவங்க வீட்டுல விட்டுட்டு வந்திடுங்க. அம்புட்டுத்தான்”

“ஏம்பா ராத்திரி அவங்கூட வந்திருக்கா. ஏதும் ஏடாகூடாமா”

“அதெல்லாம் ஒன்னுமில்ல. நான் விசாரிச்சுட்டேன்”

“சரி அப்படியே செய்யிறேன். முதல்ல எல்லோரும் சாப்பிடுவோம்”

இட்லியும் கொஞ்சம் சட்னியும் எடுத்து வைத்துக் கொண்டே கேட்டேன் அந்தப் பெண்ணிடம், ”ஏமா உங்க அப்பா இப்ப என்ன வேல பாக்குறான்.”

“மத்த பெரியப்பா மாமா எல்லாம் நல்லா செட்டில் ஆகிட்டாங்க. அப்பாவுக்குத்தான் ஒன்னும் அமையல். விவசாயம்தான். அதுல என்ன வருது? கொஞ்சம்தான்”

“சரி வீட்டுல போன் இருக்கா”

“அப்பா கிட்ட செல் இருக்கு”


டிபனை முடித்து விட்டு ராசவை அழைத்தேன், “ ராசா நல்லா இருக்கியா?”

“யாரு இது?”

“ஏ உங்கூட ஒம்பதாங்கிளாஸ்ல் படிச்சேனே பாதியில் கோயமுத்தூருக்கு வந்திட்டேனே? ”

“அட மில்லுக்காரர் மகனா? நீ எப்படி இருக்கே?”

“நல்லா இருக்கேன். சரி ஒம்பொண்ணக் காங்கலியா? வருத்தப் படாத அவ இங்கதான் இருக்கா.”

“அங்க எப்படி வந்தா? “

”வீரையா இருக்காம்லா அவங்கூட வந்தா”

“செறுக்கிவிள்ளைய என்ன செய்ய?”

”ஒன்னுஞ்செய்ய வேண்டாம். உங்க அக்கா ஒருத்தி திருப்பூர்ல இருக்காள்லா அவ நம்பரக் கொடு அங்கன கொண்டு போய் விடுதேன். படிக்கச் சொன்னதுக்குக் கோவிச்சுகிட்டு அத்த வீட்டுக்குப் போய்ட்டான்னு ஊர்ல மத்தவங்க்கிட்டச் சொல்லு. என்ன?”

“சரிப்பா இப்பத்தான் எனக்கு உயிரே வந்தது. நம்பர எழுதிக்கோ. நானும் அக்ககிட்டச் சொல்லுதேன். திருப்பூருக்கு வந்து அவளப் பாத்துட்டு உன்னப் பாக்க வாரேன்”

போனை வைத்ததும் நிமிர்ந்து பார்த்தேன் அந்தப் பெண்ணை. உடன்பாடு இல்லை என்பது முகத்தில் தெரிந்தது.

“உங்க அப்பா பாவம்மா. ஏற்கனவே உங்க பெரியப்பா அத்தைகள் எல்லாம் அவன உண்டு இல்லைன்னு ஆக்கீட்டாங்க. நல்லா வெளையுற நெம்மேனி வயல அவங்க பங்குக்கு வச்சுகிட்டு. ஆலமரத்து வயல உங்க அப்பனுக்கு எழுதி துரோகம் பண்ணீட்டாங்க. அதுக்கு மேல உங்கம்மா. எங்கருந்துதா உங்க தாத்தா அவளப் புடிச்சிட்டு வந்தாங்களோ? வேற யாரும் அவனுக்கு வாக்கப்பட்டிருந்தா இவ்வளவு சீரழிஞ்சிருக்க மாட்டான். இதுக்கு மேல நீயும் இப்படிப் பண்ணினா அவந்தாங்க மாட்டான். சரி ஒரு வேலையில இருக்கவனாப் பாத்துத்தான் ஆசப்பட்டியானா அதுவும் இல்லை. படிப்பும் இல்ல. பணமும் இல்ல. எத நம்பி அவங்கூட நீ வீடு விட்டன்னு இதுவரைக்கும் எனக்குப் புரியல. நாங்க சொல்லுதது இன்னைக்கு உனக்குக் கஷ்டமா இருக்கும் ரெண்டு மூனு வருசம் கழிச்சாப் புரியுமோ என்னவோ. இதுக்கு மேலயும் உனக்குப் புரியறாப்ல சொல்ல எனக்கு ஏலல.”

மனைவியைப் பார்த்தேன். ஆமோதித்துத் தலையாட்டினாள்.

ஏனோ ஹாஸ்டலில் இருக்கும் மகள் ஞாபகம் வந்தது.



***************************************************************************

Friday, February 06, 2009

ட்ராப்பா? ரிடர்னா? பார்ட் - 2

போன பதிவுக்கு வந்த பின்னூட்டம் எல்லாமே ஆரோக்கியமான விதமா இருந்தது மனதுக்கு நிறைவா இருக்கு.

ஆட்டோக்காரார், சக ஆட்டோக்காரார் ஒருவரை அழைத்து ஆட்டோவைச் செலுத்தச் சொல்லி, அமரராகிவிட்ட பெரியவரை அமர்ந்த நிலையில் வைத்துத் தன் தோளில் சாய்த்தவாறே வீடு நோக்கிச் சென்றார். பாஸ்புக்கில் இருந்த முகவரியை அடைந்து வெளியே சென்றிருந்த மகள் மற்றும் மனைவிக்குத் தகவலனுப்பி அவர்கள் வந்ததும் பொறுப்பாகப் பணத்தையும் (ரூ 1.5 லட்சம்) சேர்ப்பித்து விட்டார்.

10 வருடம் முன்பு நடந்த இந்த நிகழ்ச்சியை சமீபத்தில் படித்த ஒரு செய்தி பதிவாக எழுதி உங்களுடன் பகிரச் செய்தது.

சிக்னலைப் பார்க்காமல் சடாரெனக் கிராஸ் செய்த பெரியவர் பைக் ஒன்றினால் மோதப் பட்டு கிழே விழுகிறார். தலையில் அடிபட்டு ரத்தம் வருகிறது. உடனே அருகிலிருந்தவர்கள் ஒரு ஆட்டோ ஏற்பாடு செய்து அவரை மருத்துவமணைக்கு அனுப்புகிறார்கள்.

ஆட்டோ சற்று தூரம் சென்றதும் பெரியவர் மயக்கமாகி சீட்டில் சரிகிறார். ஆட்டோவை நிறுத்திப் பின்புறம் வந்து பார்க்கிறார் ஆட்டோக்காரர். கைப்பையில் இருக்கும் ரூ.40 ஆயிரம் அவரை உறுத்துகிறது. உடனே ஆட்டோவை ஆள் நடமாட்டம் அதிகமில்லாத சந்து ஒன்றுக்குள் திருப்புகிறார். பெரியவரைத் தன் ஆட்டோவிலிருந்து கீழே இறக்கி படுக்க வைத்து விட்டு பணத்துடன் தப்பிக்கிறார்.

அந்த வழியாக வரும் இருவர் பெரியவர் நிலை கண்டு அவரை ஒரு ஆட்டோ(மீண்டும்?) அமர்த்தி அரசாங்க ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார்கள். நினைவு திரும்பியது பெரியவர் கேட்ட முதல் கேள்வி, “என் பணம் 40 ஆயிரத்த எங்கே?”

அடிபட்டுக் கிடந்தவரை ஆஸ்பத்திரியில் சேர்த்த பாவத்துக்கு பணத்தக் காணோம்னு நம் மீதே புகார் சொல்றாரே என்ற வருத்தத்துடன், “ அய்யா நீங்க சந்துக்குள்ள நினைவில்லாமக் கிடந்தீங்க நாங்கதான் இங்க கொண்டுவந்து சேர்ததோம். பணம் எதுவும் நாங்க பார்க்கலையே” என்றனர்.

“ஆக்ஸிடெண்ட் ஆகி என்னை ஆட்டோவில் ஏற்றி விட்டது ஞாபகம் இருக்கு. சந்துக்குள்ள எப்ப, எப்படி வந்து விழுந்து கிடந்தேன்னு புரியலையே?”

“என்ன நடந்ததுன்னு ஆரம்பத்திலிருந்து சொல்லுங்க”ன்னாங்க ரெண்டு பேரும்.

நடந்ததைப் பெரியவர் சொன்னதும், “முதல்ல் உங்க வீட்டுக்குத் தகவல் தருவோம் அவங்க வந்து செய்யிறதை செய்யட்டும்”, என்று வீட்டு தொலைபேசி எண்ணை அழைத்து விபரத்தை சொல்கின்றனர்.

பெரியவரது மூத்த மகன் வந்து அணைத்து விபரத்தையும் அறிந்து போலீஸாரிடம் புகார் கொடுக்கிறார். போலீஸார் விபத்து நடந்து இடத்திற்கு சென்று விசாரித்து ஒரு துப்பும் கிடைக்காமல் தவிக்கின்றனர். மீண்டும் பெரியவரிடமே அவர் சென்ற ஆட்டோவின் உட்புறம் ஏதாவது வித்தியாசமாக இருந்ததா? ஆட்டோவை ஞாபகப் படுத்தி முடிந்த்வரைச் சொல்லுங்கள் என விசாரித்துத் தகவலின் அடிப்படையில் குற்றவாளி ஆட்டோக்க்காரரைப் பிடித்துப் பணத்தை மீட்கின்றனர். ஆட்டோக்காரர் மீது கொலைக் குற்றம் சுமத்தப் பட்டிருக்கிறது.

ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட இரு சம்பங்களின் மூலம் சில்வற்றைப் படிக்க முடிக்கிறது.

வக்கிரங்களும், வசீகரங்களும் பொதிந்ததாகவே இருக்கிறது வழ்க்கை. எதைத் கண்டெடுக்கிறோம் என்பதில்தான் வேறுபாடு.

மனிதமும் மிருகமும் கலந்த கலவைதான் மனிதன் எனினும் விகிதாச்சாரம்தான் வித்தியாசப்படுத்துகிறது ஒருவரை மற்றொருவரிடமிருந்து.

தனியாக இருப்பவனிடமும் இடுட்டில் இருப்பவனிடமும் ஜாக்கிரதையாக இரு அவனது உண்மை குணம் அப்பொழுதுதான் பல்லிளிக்கும் என்பதொரு மூதுரை.

ஒரு சிறுகதைதான் ஞாபகம் வருகிறது. ஞானி ஒருவர் தன் சீடர்களை அழைத்து ஆளுக்கொரு மாம்பழம் கொடுத்து இதை பிறர் அறியாமல் உண்ணவேண்டும் எனச் சொல்கிறார். ஒருவனைத்தவிர அணைவரும் திரும்ப வந்து அவ்வாறே செய்துவிட்டதாகச் சொல்கின்றனர். அவன் மட்டும் சிறிது நேரம் கழித்து வந்து ”என்னல் முடியவில்லை குருவே. எங்கு சென்றாலும் கடவுள் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்கிறான்.

குரு, “அதைக் கடவுள் எனவும் சொல்லலாம்”

Thursday, February 05, 2009

ட்ராப்பா? ரிடர்னா?

17 ஆம் எண் பேருந்திலிருந்து இறங்கியவரின் முகத்தில் ஒரு வாழ்நாளுக்கான ஆயாசம் தெரிந்தது. மெதுவாக நடந்து ஆட்டோ ஸ்டேண்ட் பக்கம் வந்தவர் வரிசையில் முதல் ஆட்டோக்காரரை நோக்கி, “ இந்தியன் பேங்க் வரைக்கும் போகலாமா? ”

“ட்ராப்பா? ரிடர்னா?”

“கூட்டம் அதிகம் நேரமாகும்னா ட்ராப், இல்லன்ன திரும்பி வரனும்”

“சரி ஏறுங்க”

ஆட்டோ நகர்ந்து வேகமெடுத்ததும், ட்ரைவர் தோளைத் தொட்டு், “ ஏம்ப்பா உனக்கு எத்தனை குழந்தைகள்?”

“ஒரு பொண்ணுங்க, 13 வயசாச்சு 7 ஆங்கிளாஸ், ஏங்கேக்குறீங்க?”

“நல்ல கதியா இருக்கும்போதே உம்பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வச்சுடுப்பா. வயசான காலத்துல என்ன மாதிரி சிரமப் படவேண்டாம்”

“என்ன ஆச்சுங்க? உங்க பையன் யாரும் உதவலயா?”

“எல்லாம் பணம் அனுப்ச்சா அப்பா பார்த்துக்கிடுவாருன்னு ரெண்டுபேரும் வெளியூர்ல இருக்காங்க. இங்க நாந்தான் எல்லாத்துக்கும். சிரமம். இப்பக்கூடப் பாரு பணம் எடுக்க கூட யாராவது வாங்கன்னா பொண்ணும் சரி பொண்டாட்டியும் சரி பத்திரிக்கை வைக்கிறேன்னு போய்ட்டாங்க.”

“சரி சரி விடுங்க. இதானே கடைசிக் கல்யாணம்?”

”ஆமாப்பா”

வங்கியின் முன்னே ஆட்டோவை நிறுத்திப் பெரியவர் இறங்கியதும் மரநிழல் பார்த்து பார்க் செய்தார் ஆட்டோவை.

உள்ளே சென்று பெரியவரிடம், ”கூட்டம் அதிகமில்லைங்க, காத்திருக்கட்டுமா?”

“வெயிட் பண்ணுப்பா. சீக்கிரம் வந்துடுறேன்”

சொன்னதுபோல் 15 நிமிடத்தில் வந்தார் பெரியவர். கைப்பயைப் பத்திரமாகப் பிடித்திருப்பதே சந்தேகத்தைத் தூண்டியது. ஆட்டோவில் ஏறி அமர்ந்ததும், “ பஸ் ஸ்டாண்டுக்குக்கா?” என்றவாரே ஸ்டார்ட் செய்தார் டிரைவர்.

“ஆமா தம்பி பணத்தை பத்திரமாக் கொண்டு சேர்க்கனும். அது வரைக்கும் உயிரைக் கையிலதான் பிடிச்சிருக்கேன்”

”சரிங்க” என்றவாரே ஆட்டோவை நிதானமாக ஓட்டினார். தோளில் படர்ந்த கையை உணர்ந்து திரும்புமுன் பெரியவர் குரல், “எனக்கு ஒரு சோடா வாங்கித் தர முடியுமா” என்றது.

ஆட்டோவை நிறுத்தி அருகிலுள்ள பொட்டிக் கடையில் சோடா வாங்கி வருமுன் பெரியவர் தலை சாய்த்துவிட்டார்.


இது ஒரு உண்மைச் சம்பவம். மீதியை எழுதுமுன் ஒரு சிறு இடைவேளை.


உங்களை அந்த ஆட்டோ ட்ரைவர் இடத்தில் கற்பனை செய்து இந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும் எனச் சொல்லுங்கள்?

Tuesday, February 03, 2009

தள்ளாடிய தன்மானம்



அலங்கார் ஓட்டல் எதிர்புரமுள்ள அந்த டாஸ்மாக் முன்பு வந்து நிற்கிறது பஜாஜ் பைக் ஒன்று அதிலிருந்து இறங்கிய கணவர், தன் மனைவியையும் இரு குழந்தைகளயும் ( 1 வயது மற்றும் 3 வயதிருக்கும்) ஓட்டல் காம்பவுண்டை ஒட்டிய நடைபாதை மீது காத்திருக்கச் சொல்லிவிட்டு எதிரே உள்ள டாஸ்மாக் நோக்கி நகர்கிறார்.

சரி சரக்கு வாங்கிச் சென்று வீட்டில் குடிப்பார் போல. நல்ல புரிதலுள்ள மனைவி என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அவர் சரக்கை வாங்கிக் கொண்டு பாருக்குள் சென்று விட்டார்.

கிட்டதட்ட 30 நிமிடம் ஆகியும் வெளியே வந்த பாடில்லை. அதற்குள் டாஸ்மாக்கிலிருந்து வெளியே வருபவர்களின் காமப் பார்வையிலிருந்து
அப்பெண்மணி தப்ப மிகச் சிரமப்படுகிறார்.

இதற்கிடையில் அந்தக் காம்பவுண்டை ஒட்டிய நடைபாதையில் இரு சொறிநாய்களுக்கிடையே ஏற்படும் சண்டையில் இரு குழந்தைகளையும் சேதாரமில்லாமல் காப்பாற்றச் சிரமப் படுகிறார்.

அந்த நபரைப் பார்க்கும் போது தனியார் வங்கி மேலாளர் அல்லது மொபைல் கம்பெனி சீனியர் எக்சிக்யூட்டிவ் போன்ற தோற்றம். அப்பெண்மனியும் நல்ல படித்த பெரிய இடத்தை சேர்ந்த்தவராகத்தான் இருக்க வேண்டும்.

குடிப்பது தவறா சரியா என்பது தனியாக விவாதிக்கப்படவேண்டிய ஒன்று. எனினும் நமக்கு ஏற்படும் சில சந்தேகங்கள்.

குடிப்பது அவரது உரிமை எனினும் சொந்த மனைவியையும் மக்கட் செல்வங்களையும் தவிக்க விடுவது சரியா?

மற்றவர் தவறான எண்ணத்தில் தன் மனைவியை நோக்கும் நிலைக்கு அவரைத் தள்ளி, அவரைக் காட்சிப் பொருள் ஆக்கியது சரியா?

இரு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு மனைவி வெளியே சிரமப் படும்பொழுது உள்ளே அமர்ந்து எப்படி குடிக்க முடிகிறது?

குடிப்பதற்காக தன் குடும்பத்தாரின் தன்மானத்தை இழக்க வைக்கலாமா?

இதற்குபதில் அவர் அவர்களை வீட்டில் விட்டுவிட்டு வந்து குடித்திருக்கலாமே, அல்லது வீட்டிற்கு வாங்கிச் சென்று குடித்திருக்கலாமே.

Monday, February 02, 2009

கதம்பம் - 2/2/09

ஒருநாள் இரவு ஓய்வு இல்லத்தில் காமராஜர் தங்கியிருக்கிறார். இரவு உணவுக்குப் பின் காமராஜர் உறங்க ஆரம்பிக்கிறார். அவருக்குப் பாதுகாவலாக இருந்தவரும் உறங்கி விடுகிறார்,

காலையில் எழுந்த காவலர், காமராஜரை அறையில் காணாமல் பதறிப் போகிறார்.

ஓய்வு விடுதியின் வெளியே போட்டிருந்த மணலில் காமராஜர் நிம்மதியாத் தூங்கிக் கொண்டிருக்கிறார். அதைப் பார்த்ததும்தான் காவலருக்கு உயிர் வருகிறது.

அவரை எழுப்பி “ அய்யா நான் பயந்தே போயிட்டேங்க, என்ன இங்கே வந்து படுத்திருக்கிறீங்க?” என்றார்.

அதற்கு காமராசர் , “ ஆமா நீ பாட்டுக்கு குளிர் மெசின போட்டுட்டு போய்ட்டே எப்படி நிறுத்தனும்னு எனக்குத் தெரியல. குளிர் தாங்கமுடியல அதான் இப்படி வெளியில வந்து படுத்துட்டேன்”


*************************************************************************************


முத்துக் குமார் பத்தி எல்லாரும் பதிவு எழுதீட்டாங்க. உணர்ச்சி வசப்பட்டிருக்காங்கன்னு அவங்கவங்க எழுத்துல தெரியுது. ஆனா இது மாதிரி ஒரு நிகழ்வுலயும் தரமான எழுத்தை வெளிப்படுத்தனும். ஷார்ட்டாச் சொல்லி டக்குனு மனசுல பதிய வைக்கனும்

அந்த வகையில என்னக் கவர்ந்த பதிவு லக்கி எழுதியதுதான். சம்பவத்தைச் சரியாச் சொல்லி அவருடைய கருத்தை நிதானமா, தேர்ந்தெடுத்த சொற்களில், கடைசியில் பதிந்திருக்கார் பாருங்க. அதனாலதான் அவர் வெற்ரிகரமான பத்திரிக்கையாளரா இருக்கார். பரிசல் போன்று அடுத்த தளத்திற்குச் செல்ல முனையும் பத்திரிக்கையாளர்களுக்கு இது மிக முக்கியம்.

*************************************************************************************

இம்முறை ஆதவன் தீட்சனண்யாவின் கவிதை ஒன்று.

ஆள்வோருக்கு...


மளிகை பாக்கி தொட்டு
மற்றோரன்ன செலவினங்களில்
கரைந்து போனது மாலையே
நேற்று பெற்ற சம்பளம்

கன்னக்கோலிட்டு
களவாட வந்தவர்கள்
மற்றவர்கள் முந்திக்கொண்ட
ஆத்திரத்தில்
விளாசிவிட்டனர் இரவில்
வெற்றாளாய் நின்ற என்னை

புகாரிட
“கவனிப்புக்கும்”
காசில்லை

இவர்களெல்லோரும்
தங்களுக்கு
தெரிந்தவர்களும்
வேண்டியவர்களும்தானே

சொல்லிவையுங்கள்
மாதாமாதம் கொடுப்பதை
அன்று மாலையே நீங்கள்
பறித்துக் கொள்வதை
அடிபடுவதாவது மிஞ்சும்.

- ஆதவன் தீட்சண்யா

இவரது மற்றப் படைப்புகளைப் படிக்க இங்கே செல்லுங்கள்.


*************************************************************************************

சுற்றுலா சென்று வந்தபின் ஒரு நாள் செல்வேந்திரன் அறைக்குச் சென்றிருந்தேன். மற்ற விஷயங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று கேட்டார், “ சார் மொத்தம் எத்தன பாட்டில் வாங்கீட்டுப் போனோம்”

”ஏம்பா” ன்னு கேட்டேன்.

“இல்ல எத்தனைப் பாட்டிலோ அதே அளவுக்கு குளிர்பானம் வாங்கியிருபோம். மேலும் பயணம் முழுவதும் குடிக்க நீரும் வாங்கினோம். ஒரு ஆளுக்கு 2 குடிநீர் பாட்டில்னு வச்சாலே நம்ம போட்ட குப்பை ஒரு கோணிப்பை நிறையத் தேறும் போல இருக்கே” ன்னாரு.

“சரி என்ன செய்ய தவிர்க்க முடியாதே”

“அடுத்த முறை போகும்போது இங்கிருந்தே ஒரு கோணிப்பை எடுத்துட்டுப் போயிறலாம்.”

பிரச்சினையை மட்டுமல்லாது அதற்கான தீர்வையும் சேர்த்தே யோசிக்கும் இவரைப் போன்ற இளைஞர்களைப் பார்க்கும்போது எதிர்காலம் குறித்த நம்பிக்கை பிறக்கிறது.

*************************************************************************************

போலீஸ்கார அப்பாவப் பார்த்து மகன் , “ அப்பா லஞ்சத்துக்கும், மழைக்கும் என்ன சம்பந்தம்”

“ ஒன்னுமில்லையே ஏண்டா?”

“ பின்ன எதுக்கு மழையால மாமுல் வாழ்க்கை பாதிப்புன்னு போட்டிருக்கு பேப்பர்ல?”



*************************************************************************************