Friday, January 30, 2009

சீனி முட்டாயும், சாத்தூர் சேவும்

தொழில் தொழில்நிமித்தம் முன்கூட்டியே தீர்மானிக்கமுடியாத வாழ்க்கையில், திட்டமிடாத பயணங்களைத் தவிர்க்கவியலாதென்பது சலிப்பூட்டக்கூடியது. புதன் இரவு 8.00 மனிக்கு முடிவு செய்து 9.00 மனிக்கு பேருந்தில் ஏறும்படி ஆயிற்று. அடுத்த நாளே திரும்பவேண்டும் என்பது அசதி தரக்கூடியதென்றாலும் மாதவராஜைக் கண்டுவரலாம் என்றொரு ஆறுதலுமிருந்தது.

சென்ற வேலை நினைத்ததைவிட சீக்கிரமே முடிந்துவிட்டதால், மாதவராஜ் பணிபுரியும் வங்கிக்குச் சென்று,

“மாதவராஜ் இருக்காருங்களா”, என்றேன் புருவத்திலேயே கேள்வி கேட்ட அவரது சக ஊழியரை நோக்கி.

“அவரு இன்னைக்கு லீவு ஆச்சுங்களே”, ஏமாற்றம் என் முகத்தில் படருவதைக் கண்ட அவர் மீண்டும் கேட்டார், “ அவரு மொபைல் நம்பர் தரட்டுங்களா?”

மொபைலில் அழைத்துப் பேசியதில் அடுத்த முனையிலிருந்து வந்த மாதவராஜின் உற்சாகம் கொப்பளிக்கும் குரல், மகிழ்ச்சி தருவதாகவிருந்தது. அவர் விடுப்பு எடுத்த காரணம் அவர்மீதான மரியாதையைக் கூட்டிச் சென்றது.

ஜனவரி 30 மகாத்மா நினைவு நாளை முன்னிட்டு சாத்தூர் ரயிலடியிலிருந்து ஒரு ஊர்வலம் ஏற்பாடு செய்து மதநல்லிணக்கத்திற்கான ஒரு முயற்சியை முன்வைத்திருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கவே விடுப்பு.

வீட்டுக்கு அழைத்த அவரது அன்பைத் தட்டமுடியாமல், விடுதியைக் காலி செய்து விட்டு அவர் வீடு நோக்கி நகர்ந்தேன். “சாத்தூர் பஸ்டாண்டில் இறங்கி என்னை அழையுங்கள் 5 நிமிடத்தில் வந்து விடுவேன்” என்று சொல்லியதுபோலவே வந்தார்.

வலைப்பதிவர்களைச் சந்திக்கும்போது பரஸ்பர அறிமுகம் ஏதுமின்றி உடனடியாகப் பேசலாம்; நெருங்கிய நண்பர்கள் இருவர் முதல் நாள் விட்ட இடத்திலிருந்து அடுத்த நாளுக்கான பேச்சை ஆரம்பிப்பது போல. அவரது வீட்டிற்கு சென்று பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் காமராஜும் எங்களுடன் இணைந்து கொண்டார். எங்கள் சந்திப்பை சுருக்கமாக இப்படிக் கூறலாம்.

5.00 மணி - பஸ்டாண்டில் பேசினோம்
6.00 மணி - மாதவராஜ் வீட்டில் பேசினோம்
7.00 மணி - காமராஜ் வீட்டில் பேசினோம்
8.00 மணி - மீண்டும் மாதவராஜ் வீட்டில் பேசினோம்
9.00 மணி - போட்டோ ஸ்டுடியோவில் பேசினோம்
10.00 மணி - உணவகத்தில் பேசினோம்
10.35 மணி - பஸ்ஸில் ஏறும்வரைப் பேசினோம்.

பேசியவற்றுள் சமகால இலக்கியம், சமகால அரசியல், பதிவர்கள் பின்புலம் மற்றும் திறமைகள் போன்றவை அடங்கும்.

சந்திப்பில் கலந்துகொண்ட இன்னுமொரு சுவராஸ்யமான நண்பர் ப்ரியா கார்திக். போட்டொ ஸ்டுடியோ ஒன்று வைத்து வீடியோ எடிட்டிங்கும் செய்யும் நணபர் இவர். இவருக்கு PIT வலைப்பூ அறிமுகம் செய்து இந்தமாதம் வெற்றிபெற்ற நிலாவின் புகைப்படத்தைக் காட்டினேன். சரியான தேர்வு முதல் பரிசுக்கு என்று அவரது கருத்தைச் சொன்னார். மாலை 5 மணிக்குப் பார்த்தபோது இருந்த அதே உற்சாகத்துடன் இரவு என்னைப் பேருந்தில் ஏற்றி விடும்வரை இருந்தார்.

காமராஜும், மாதவராஜும் மௌஸும் கீ போர்டும் போல ஒத்த சிந்தனையு்ம் தனிப்பட்ட ரசனைகளயும் உடைய இணை. வெகுகாலம் நண்பர்களாக அதுவும் எழுத்தாளர்களாக இருப்பது இன்னும் விசேசம். இவரது சிறுகதைத் தொகுப்பிற்கு அவர் முன்னுரையும் அவரது தொகுப்பிற்கு இவர் முன்னுரையும் எழுதியிருக்கிறார்கள். இருவரும் அருகருகே அடுத்தடுத்த வீடுகளில் வாசம்.

ஒரு பை நிறைய சாத்தூர் சேவும், ஒரு பெட்டி நிறைய இனிப்பு மிட்டாயும் (முட்டாசு) குடும்பத்திற்கும், எனக்கு மாதவராஜ் எழுதிய போதி நிலா - சிறுகதைத் தொகுப்பும், காமராஜ் எழுதிய ஒரு வனதேவதையும் ரெண்டு பொன்வண்டுகளும் - சிறுகதைத் தொகுப்பும் தணுஷ்கோடி ராமசாமி எழுதிய தோழர் நாவலும் மற்றும் மாதவராஜும், காமராஜும், ப்ரியா கார்த்திக்கும் இணைந்த உருவாக்கதில் தயாரான சிறகுகள் உடையும், இது வேறு இதிகாசம் ஆகிய இரு குறும்படத் தகடுகளையும் அடைத்து என்னை வழியனுப்பி வைத்தார்கள்.

என் மீது காட்டிய இந்த அன்பிற்கு கைமாறாக கொடுக்க என்னிடம் வேறெதுவுமில்லை அன்பைத்தவிர; உங்களளவுக்கு இல்லையெனினும் ஓரளவுக்கேனும்.




Sunday, January 18, 2009

தாமிராவும் பட்டாம் பூச்சியும்

'தாமிரா' அவ‌ருக்குக்கிடைத்த‌ ப‌ட்டாம்பூச்சி விருதை பெரிய மனசு பண்ணி ப‌ல‌ருக்கும் ப‌கிர்ந்து கொடுத்துருக்காரு. விதிமுறைக‌ள் ரெம்ப சுலபமாத்தான் இருக்கு. நாம ர‌சிக்கிற ப‌திவ‌ர்க‌ளுக்கு பாஸ் பண்ணனும், விருதை வ‌லைப்பூவில போடனும், கொடுத்த‌வ‌ர், கொடுக்க‌ப்ப‌டுப‌வ‌ர் ரெண்டுபேருக்கும் இணைப்புக‌ள் த‌ர‌னும், பின்னூட்ட‌த்துல அறிவிக்கனும்.

அவரு கொடுத்ததெல்லாம் சரி. ஆனா என்னைக் கரடு முரடான ஆளுன்னு சொல்லீட்டாரேன்னுதாங் கொஞ்சம் வருத்தமா இருக்கு(நாங்கூடத் தாங்கிக்குவேன், நர்சிம், அப்துல்லாவெல்லாம் கரடுமுரடான ஆளுகளா?) அப்படின்னு சொல்லித் தப்பிக்கவும் முடியாது. ஏற்கனவே அவரு கோர்த்துவிட்டதுல இருந்து ஒரு மொக்கப் பதிவு போட்டுத் தப்பிச்சிட்டேன். இப்ப முடியாது.

அதுனால பட்டாம்பூச்சி பத்தின நினைவுகள ஒரு பதிவாப் போட்டுறலாமான்னு ஒரு யோசனை.

சின்ன வயசுல (10-12) லைன் வீட்டுல குடியிருந்தப்ப பின்னால இருக்க தோட்டத்துல (சோளக்காடு) தும்பைப் பூச்செடியில (தும்பை தாமிரா பதிவுல படம் போட்டுருக்கார் - படம் - 5) வந்து உக்காரும் பட்டாம்பூச்சி கருப்புக் கலர்ல சிவப்பு டிசைன் போட்டு சூப்பரா இருக்கும்.

அதை புடிச்சி கொஞ்ச நேரம் கையில வச்சிருந்துட்டு விட்டுடுவோம். அப்புறம் பார்த்தா கையெல்லாம் மினுமினுங்கும். அதத்தாம் நம்ம நா முத்துக்குமார் பாட்டுல எழுதுனாரு.

ஒரு வண்ணத்துப் பூச்சி
எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும்
இன்று விரலோடு உள்ளது.

அடுத்து கொஞ்சம் வளர்ந்து 20 வயசிருக்கும்போது பட்டாம்பூச்சின்னு ஒரு நாவல் படிச்சேன்.

கென்றி ஷாரியர் எழுதிய Papillon னு ஒரு பிரெஞ்சு நாவலோட ஆங்கிலம் வழியான தமிழ் மொழிபெயர்ப்பு, பெயர்த்தவர் ரா.கி.ரங்கராஜன்.

நாவலாசிரியர் தன்னோட 25 வயசுல செய்யாத குற்றத்துத்துக்காக ஆயுள் தண்டனை குடுத்து அட்லாண்டிக் சமுத்திரத்தின் மறு கோடிக்கு, பிரெஞ்சுக் கயானாவில் இருந்த கொடிய தீவாந்தர சிறைல அடச்சுர்ராங்க. அடுத்த 13 வருசம் ஒவ்வொரு சிறையாகத் தப்பிப்பதும், பிடிபடுவதும், அடைபடுவதுமா போராடுறதுதான் நாவல்.

ஒரு தடவ ஒரு தீவுல மாட்டிக்குவாரு. மாலை மயங்கும் நேரமா இருக்கும். அங்க இருக்க ஒருத்தரு அவருக்கு டீ தருவாரு. இவரு டீயக் குடிச்சுட்டுருக்கும்போது இவருக்கு டீ குடுத்தவரு குடிக்காம எதையோ தேடுவாரு.

“என்னங்க தேடுறிங்க”ன்னு கேட்டா, “என் சுண்டு விரலக் காணவில்லை”ம்பாரு அவரு.

இவரு டீயக் கலக்கிப் பார்த்த அதுல அந்த விரல் கிடக்கும், எடுத்து வெளில போட்டுட்டுக் குடிப்பாரு. அதையும் விட்டா வேற எதுவும் சாப்பிடக் கிடைக்காது. அந்தத் தீவில இருக்கவங்க எல்லாம் தொழுநோயாளிகள்.

தமிழ்லயோ இல்லன்னா ஆங்கிலத்துலயோ இந்த நாவல ஒரு முறை கண்டிப்பாப் படிங்க.

அடுத்து கவிதைகளில் ஆர்வம் வந்தப்ப சுஜாதாவின் அறிமுகத்தால படிச்ச கவிதைத் தொகுப்பு நா முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி விறபவன். ஏற்கனவே பல கவிதைகளை என் வலைபூவுல எழுதியிருக்கேன். இந்த இட்லிக்கவிதை என்ன சொல்லுதுன்னு பாருங்க.

இட்லிப்புத்திரர்கள்

இட்லிகள் மென்மையானவை.
வெதுவெதுப்பானவை.
சைபர் சைபராய்
வட்டக்குழியில் வெந்தவை.
திடப்பொருளாய் தோன்றி
இளகிய நிலையில் திரவமாகி
வெப்பத்தால் இறுகியது
அதன் உருவம்.
மிகமுக்கியம்
இட்லிகள் கொள்கையற்றவை.
சாம்பாரில் மிதவையாகவும்,
சட்னியில் துவையலாகவும்,
ஏதுமற்றப் பொழுதுகளில்
எண்ணெய் மிதக்கிற
மிளகாய்த்தூளில் துணுக்கெனவும்
எதனுடனும் அமையும்
இட்லிகளின் கூட்டணி
கம்ப்யூட்டர் ‘சிப்ஸ்’ விற்கிற
அந்நிய நாடுகளில்
உள்ளூர் இட்லிகளுக்கு
அமோக வரவேற்பு
மேலும்
இட்லிகளை
அஃறினை என்று
அர்த்தப்படுத்த முடியாது
அவை
குட்டிப்போட்டுப் பாலூட்டும்
இனத்தைச் சார்ந்தவை.
- நா. முத்துக்குமார் (தொகுப்பு - பட்டாம்பூச்சி விற்பவன்)


வலையில் கிறுக்க ஆரம்பித்த பிறகு சில பதிவர்கள் என்னைப் பாதிக்கிறார்கள் அவர்களுள் பட்டாம்பூச்சி விற்பவன் (நா முத்துக்குமார் பாதிப்போ?) என்ற பெயரில் வலைப்பூ வைத்திருக்கும் ரெஜோவாசன் நல்ல கவிதைகள் எழுதுகிறார்.

அதிர்வுகள் என்ற தலைப்பில் இரயில் பற்றிய அவரது கவிதை முக்கியமானது.

தட தடத்துச் செல்கின்றன
ரயில் வண்டிகள்
நாடு நகரங்கள் தாண்டி
காடுகள் புகுந்து மீண்டு
சில மலைகளைத் துளையிட்டு
வெகுதூரம் அழைத்துச் செல்கின்றன
நம்மை

நம்முடன் ஏறிக்கொள்ள மறந்து போன
வழியனுப்பிகளின் முகங்களையும்
கடைசிச் சந்திப்புகளின் நினைவுகளையும்
நாம் ஏறிய
ரயில் நிலையங்களின்
நடை மேடைகளிலேயே விட்டுவிட்டு ….
தட தடத்துச் செல்கின்றன
ரயில் வண்டிகள்

தண்டவாளங்களின் மேலும்
நாம் இறங்கிய பின்னர்
நம்முள்ளும் ….


இனி நான் அழைக்கிறது
1. மகேஷ்
2. மாதவராஜ்
3. ச முத்துவேல்

வெயிலானுக்கும், அனுஜன்யாவுக்கும் கொடுக்கலாமுன்னு நெனைச்சா நமக்கு முன்னாலயே அவங்களுக்குக் கிடைச்சிருக்கு. வாழ்த்துக்கள்.

நன்றி தாமிரா.

Wednesday, January 14, 2009

பிளாக்கர்கள், பிரபல பத்திரிக்கைகளில்

இந்த வாரக் குமுதம் இதழில் (21-01-2009) டாப் 10 பிளாக்ஸ் என்ற பெயரில் பிரபலமான பிளாக்கர்கள் பட்டியல் வந்திருக்கிறது. பக்-78

1. இட்லி வடை
2. திணை இசை சமிக்ஞை
3. பி கே பி
4. எண்ணங்கள்
5. லக்கிலுக்
6. பரிசல்காரன்
7. அதிஷாவின் எண்ண அலைகள்
8. மொழிவிளையாட்டு
9. சத்தியக்கடதாசி
10. ஸ்மைல் பக்கம்

அதே போல் இந்தவார விகடன் இதழிலும் 3 பதிவர்களைப் பற்றிய அறிமுகம் வந்திருக்கிறது. பக் 26

1. சரவணக்குமரன்
2. அபிஅப்பா
3. செந்தழல் ரவி

பத்திரிக்கையில் இடம் பெற்றவர்களுக்கும், இடம் பெற இருப்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Wednesday, January 07, 2009

தன்மத்ராவும் கருத்த பக்‌ஷிகளும்

இந்தப் புத்தாண்டன்று இரு நல்ல திரைப் படங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது.
மோஹன்லால் நடித்த தன்மத்ரா மற்றும் மம்முட்டி நடித்த கருத்த பக்‌ஷிகள்.

மசாலாப் படம், அல்லது கலைப்படம் என்ற இரண்டே உட்கூறுகளைக் கொண்டதாகத்தான் இருக்கிறது நம் திரை உலகம். ஆனால் தேவையான அளவு மசாலாக் கூறுககளைக் கொண்டும் ஒருநல்ல கலைப் படத்தை அளிக்க முடியும் என்று மலையாளத் திரையுலகினர் நம்புவதால்தான் இம்மதிரியான படங்களும் சாத்தியமாகிறது.

மேலும் இப்படங்களின் தயாரிப்புச் செலவு குறைவாக இருப்பதால்(குறிப்பாக நடிகர்களின் சம்பளம்), மிகப் பெரிய அளவில்ல இல்லாவிட்டாலும் ஓரளவு லாபத்தை ஈட்டி விடுகின்றன. நம்ம ஊர் நடிகைகளின் சம்பளத்தைவிட கேரளத் திரைஉலகில் கதாநாயகன் வாங்கும் சம்பளம் குறைவு எனச் சொல்லப் படுவதுண்டு.

தன்மத்ரா பற்றி முன்பே கேள்விப் பட்டிருந்தாலும், ச்சின்னப் பையன் மற்றும் தமிழ்ப்பிரியன் பரிந்துரைத்ததாலும் பார்த்தேன்.



ஒரு ஆதர்ஷ குடும்பத்தலைவன்(நல்ல கணவன், நல்ல தந்தை, நல்ல ஊழியன்) அல்சைமர் வியாதியால் தாக்கப் பட்டால் அந்தக் குடும்பம் எப்படிச் சிதறும் என்பதோடு, அவன் அந்நோயின் தாக்குதலுக்குட்பட்டு கொஞ்சம் கொஞ்சமாகச் சிதறுண்டு போவதை இயல்பாகச் சித்தரிக்கிறது படம்.

பத்மராஜன், லோகிதாஸ் போன்ற சிறந்த டைரக்டர்களிடம் உதவி டைரக்டராக பயின்ற பிளெஸ்ஸி(Blessy) இயக்கிய படம்.

படத்தில் நடித்தவர்களை அவர்களின் நடிப்பின் அடிப்படையில் வரிசைப் படுத்ததினால், மோகன் லால், நெடுமுடி வேணு, மீரா வாசுதேவன், அர்ஜுன், சீதா, ஜகதிக்குமார் என்று சொல்லலாம். ஆனால் எல்லோரும் அவர்களுக்களிக்கபட்ட பாத்திரங்களை இதைவிட வேறெவராலும் சிறப்பாகச் செய்துவிட முடியாது என்ற விதமாகச் செய்திருக்கிறார்கள்.

எனக்கு மிகவும் பிடித்தது நெடுமுடி வேனுவின் பாத்திரம்தான். என் தந்தை போன்ற பாத்திரப் படைப்பு. மகனின் வசந்தத்தில் ஒரு பெருமிதமும் அவனின் இலையுதிர்கால வேதனையைத் தாங்க முடியாதவராகவும் என மிகப் பிரமாதப் படுத்தியிருக்கிறார்.

”இவன இந்த நிலைமையில் இங்க கொண்டுவரவா நான் வீடு வரை இந்த ரோட்டைப் போட்டேன்” என்று ஆதங்கப் படுமிடத்தில் தன் சீனியாரிட்டியை நிரூபித்திருக்கிறார்.

கேரள மாநில பரிசுகளை வென்ற படம். சப் டைட்டிலுடன் கிடைக்கிறது கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.



மம்முட்டி படம் வேறு தளம். படத்தில் மம்முட்டி செய்திருக்கும் கதாப்பாதிரத்தின் பெயர் முருகன், மூன்று குழந்தைகள், அழகப்பன், மயிலம்மா மற்றும் பிறவியிலிருந்தே கண் தெரியாத மல்லி. மூன்றாவது குழந்தை பிறந்ததும் மனைவி உடல்சுகவீனத்தில் மறைந்துவிட்டாள். தினமும் இஸ்திரி வண்டியை நகர்த்திக் கொண்டு அந்நகரத்தின் மேல்தட்டு மக்களின் வீட்டு வாசலில் நின்று அவர்கள் துணியை இஸ்திரி செய்து கொடுக்கும் அன்றாடங்காய்ச்சி. தங்கியிருப்பது ரயில் நிலையத்தின் ஓரத்தில் குடிசைப் பகுதியில்.

யாராவது கண் தானம் செய்தால் மல்லிக்குப் பொருத்திப் பார்வை வரவைக்கலாம் என்கிறார் கண்டாக்டர். முருகன் இஸ்திரி செய்யும் வீடுகளில் ஒன்றில் இருக்கும் மீனா ஒரு நோயின் பிடியில் சாவை எதிர் நோக்கிக் காத்திருக்கிறார். மல்லியைப் பற்றி அறிந்ததும், தன் கண்களைத் தானம் செய்ய முன்வருகிறார். இதை ஒட்டிய சம்பவங்களும் மனப் போராட்டங்களும்தான் கதை.

ஒரு சீரியல் ரேஞ்சுக்கு இருக்கும் கதையை தன் திறமையான திரைக்கதையால் நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார், இயக்குனர்.

கலவரமொன்றில் ரவுடிகள் சிலர் ஒருவனைக் கொலை செய்து முருகனின் தள்ளுவண்டியில் வைத்து எரிக்கப்படும்பொழுது, அங்கு எரிக்கப்பட்ட மனிதனைவிட தன் வண்டி எரிகிறதே எனப் பதைக்கும் காட்சியில் அழுவதற்கு வாய்ப்பிருந்தும் அழவில்லை. இதே தமிழ்ப் படமாக இருந்தால் அந்த இடத்தில் ஓலமிட்டு அழும் காட்சி ஒன்றை வைத்திருப்பர். மொத்தப் ப்டத்திலும் மம்முட்டி ஒரு இடத்தில் கூட அழவில்லை.

இப்படமும் ஆங்கில சப் டைட்டிலுடன் கிடைக்கிறது.

ஒரு கதாபாத்திரத்தை முன்னிறுத்தும் விதமாகக் கதையில் மாற்றங்களைச் செய்து கதையைக் கெடுப்பதுதான் நமது வழக்கம். படம் முடிந்ததும் யாராவது ஒருவர் தூக்கலாகத் தெரியும் வண்ணம் எடுக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இவ்விரண்டு படங்களிலும் கதைதான் கதாநாயகன்.

மொத்தத்தில் இம்மாதிரிக் கதா பாத்திரங்களை ஏற்று நடிக்க தமிழகத்தில் யாரும் இல்லை என்பதும் அவ்வாறு நடித்தால் இதில் பாதி அளவாவது நடிப்பார்களா என்பதும் பெரிய கேள்வி. விடையில்லாததும் விடை காணமுடியாததும்.

Monday, January 05, 2009

கதம்பம் - 5-01-09

காமராஜர் அமைச்சரவையில், கக்கன் போலீஸ் அமைச்சராக இருந்தார். அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் தமிழகத்திற்கு வருகிறார். அவ்விழாவில் கலந்து கொள்ள கக்கனும் அங்கு வருகிறார். ரயில் நிலையத்தில் நேருவை வரவேற்பதற்காக வந்த கக்கனின் காரை ஒரு போலீஸ்காரர் நிறுத்தி விடுகிறார். ஏனென்றால் அந்தக் காரில் வழக்கமான சிவப்பு விளக்கு இல்லை. வருபவர் அமைச்சர், அதுவும் போலீஸ் அமைச்சர் என்பதந்தப் போலீஸ்காரருக்குத் தெரியாது.

"பிரதமர் வருகிறார், அதனால் காரை இதற்கு மேல் உள்ளே விட முடியாது' என்கிறார் போலீஸ்காரர்.

உடனே,கக்கன் காரிலிருந்து இறங்கி, "அந்தப் போலீஸ்காரர் அவருடைய கடமையைத் தானே செய்கிறார்? சிவப்புச் சுழல் விளக்கு இல்லாமல் வந்தது நம்முடைய தவறு தானே?' என்றவாறே, இரண்டு பர்லாங் தூரமுள்ள ரயில் நிலையம் நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றிருக்கிறார்.

தற்காலமாக இருந்தால்?


************************************************************

விருத்தாசலம் அரசுப் போக்குவரத்துப் பனிமனைத் தொழிலாளியான கண்மணி குனசேகரன், 1993 லிருந்து எழுதி வருகிறார்.

தலைமுறைக் கோபம் - கவிதைத் தொகுப்பு
உயிர்த்தண்ணீர் - சிறுகதைகள்
அஞ்சலை - நாவல்
ஆதண்டார் கோயில் குதிரை - சிறுகதைகள்
காற்றின் பாடல் - கவிதைகள்
வெள்ளெருக்கு - சிறுகதைகள்
கோரை - நாவல்

இவற்றில் அஞ்சலை நாவலும், கோரை நாவலும் படித்திருக்கிறேன். தற்பொழுது வெள்ளெருக்கு படித்துக் கொண்டிருக்கிறேன்.

புதிய புத்தகங்கள் வாங்கினால் அதைப் பிரித்து முகர்ந்து பார்ப்பது ஒரு பழக்கம். அந்தத் தாளின் மணம் வீசுமே அதற்காகத்தான். ஆனால் குணசேகரனின் புத்தகங்களில் அவர் வசிக்கும் பகுதியில் நடமாடும் மனிதர்களின் வியர்வை வாடையும் அந்த மண்ணிலிருந்தெழும் கார நெடியும்தான் வீசுகிறது. இவ்வளவு இயல்பான எழுத்தில் மனிதர்களை நம்முன் உலவ விட முடியுமா என வியக்கவைக்குமெழுத்து அவருடையது.

காற்று கொஞ்சம் வேகமாக அடித்தது. ஊரில் அவனைப் பார்க்கிறேன், இவனைப் பார்க்கிறேன் என மார் தட்டிக் கொண்டவர்கள், வெட்டியவர்கள், குத்தியவர்கள், மண்ணைக் கவ்வியவர்கள், மண்ணை வாரி வீசியவர்கள், வேடப்பர் கோவிலில் சீட்டு எழுதிக் கட்டியவர்கள், அடுத்தவன் மனைவிக்கு ஆப்பு வைத்தவர்கள், கிண்டல் கீநூட்டு பேசியவர்கள், நல்லவர்கள், வல்லவர்கள் என ஓயாமல் ஓடித் திரிந்தவர்கள் எரிந்தும் புதைந்தும் எதுவுமற்றுப் போன இடம் இருட்டில் ஊமையாய்க் கிடந்தது.

என்ன ஒரு வீச்சு பாருங்கள். இவரது அஞ்சலை நாவலைப் படித்தவர்கள் சொல்லுங்கள் கருவாச்சி காவியத்திற்கு எந்த விதத்தில் குறைந்தது என்று. பிரபல வெளிச்சம் பாயத வெகு சில நல்ல எழுத்தாளர்களுள் இவருமொருவர்.


*************************************************************

பத்திரமாக இருக்கிறர் எனது கடவுள்
பக்தர்களின் தொந்தரவு ஏதுமின்றி
எந்தக் கருவறைக்குள்ளும்
அவரைச் சிறைவைக்கவில்லை நான்
இங்கே என்னோடுதான் வசிக்கிறார்
தற்சமயம் திண்ணையில்உட்கார்ந்துகொண்டு
காப்பி குடித்துக் கொண்டிருக்கிறார்
மாடு மயில் வாகனங்கள் ஏதுமின்றி
நிராயுதபாணியாக
என்னைப்போல சட்டை போட்டுக் கொண்டு
என்னோடு இருக்கிறார்
தூப தீபங்களால்
மூச்சுத் திணறவைப்பதில்லை நான்
அவர் பாட்டுக்கு வருகிறார் , போகிறார்
குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறார்
கொடுத்ததைச் சாப்பிடுகிறார்
அதிசயமோ அற்புதமோ நிகழ்த்தாமல்
சமர்த்தாக இருக்கிறார்
என் கடவுள்

- தஞ்சாவூர்க் கவிராயர் - எழுத்துக்காரத் தெரு கவிதைத் தொகுப்பிலிருந்து.


*****************************************************************

ஏங்க.. என்னுடைய சமையல் நல்லா இருக்கா? தினம் இதேமாதிரி சமைச்சா எனக்கு என்ன கிடைக்கும்?

என்னோட இன்சூரன்ஸ் பணம்.

******************************************************************

இந்த வாரம் வலைச்சரத்துல ஆசிரியரா இருக்கேன். முடிஞ்சா அங்கேயும் வந்து உங்க கருத்துக்களச் சொல்லுங்க மக்கா.



Thursday, January 01, 2009

தாமிராவும் தொடர் விளையாட்டும்

தாமிரா ஒரு தர்க்க ரீதியான விளையாட்டுக்கு என்னைக் கோர்த்து விட்டிருக்கார். குதர்க்கமாப் பேசுவதுன்னா சுலபம்; தர்க்கமான்னா கொஞ்சம் சிரமம்தான்.

என்னப் பத்தி இரு உண்மைகளும் ஒரு் பொய்யும் ஆக மொத்தம் 3 வாக்கியம் சொல்லனுமாம். ஹூ்ம் என்னத்தச் சொல்ல.எதையாவது சொல்லப் போய் எதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்கு.

ஒரு கப்பல்ல இருக்க பணியாளர்களப் பத்தின அன்றாட குறிப்புகளத் துணை மாலுமி எழுதுவாராம். துணை மாலுமியப் பத்தின குறிப்ப மட்டும் தலைமை மாலுமி எழுதுவாராம். ஒரு முறை துணை மாலுமி சரக்கடிச்சுட்டு ரகளை பண்ணுனத மாலுமி குறிப்பேட்டுல எழுதிட்டாரு. து மாலுமி எவ்வளவோ கெஞ்சியும் முடியாதுன்னு சொல்லீட்டாரு. சரி உன்னப் பாத்துக்கிறேன்னு சபதம் போட்ட துணை மாலுமி, அடுத்த நாள் குறிப்பு எழுதும் போது, “இன்று மாலுமி சரக்கு எதுவும் சாப்பிடவில்லை”ன்னு எழுதுனாராம்.

துணை மாலுமி உண்மையத்தாம் எழுதுனாரு. ஆனாலும் மாலுமி மத்த நாட்கள்ல குடிச்சாருன்னும் அன்னைக்கு மட்டும் குடிக்கலன்னும் அர்த்தம் வருது பாருங்க.

இதுகூடப் பரவாயில்லைங்க. இன்னொருத்தம் பட்ட பாட்டைப் பாருங்க. அவங்கப்பா சாகும்போது அவனக் கூப்பிட்டு, எலே ஏ ராசா, எங்காலம் எப்படியோ கழிஞ்சிருச்சு, இன்னமே நீதாம் நம்ம குடும்பத்தைக் கரையேதனும். நாஞ்சொல்லுததக் கேளுன்னு சொல்லி 3 அட்வைஸ் சொன்னாரு.

1. ஆத்தாளுக்குச் சாப்பாடு போடாத.
2. குடுத்த கடனத் திருப்பிக் கேக்காத
3. வயல்ல ஆடு மாடு மேய்ஞ்சா விரட்டாத.

இதச் சொல்லீட்டு தலை சாய்ச்சுட்டாரு. 10ஆம் நாள் காரியமெல்லாம் முடிஞ்சதும் அவங்கம்மாகிட்ட அப்பா இப்படிச் சொன்னாரு எனக்கு ஒன்னும் புரியல நீ கொஞ்ச நாளு அக்கா வீட்டுல இருன்னு அனுப்பி வைக்காம்.

அப்பா கொடுத்த கடனத் திருப்பி கேகாதேன்னுட்டுச் செத்துட்டாரே நான் என்ன செய்யன்னு மருவுதான். அதே போல வயல்லயும் பயிர் பச்சை
ஒன்னும் வளர்க்கல. ஆடு மாடு மேய்ஞ்சாத்தாம் வெரட்ட முடியாதே.

இப்படியே கொஞ்ச நாள் செல்லுச்சு. ஒரு தடவ வெளியூர்ல இருந்து வந்த வயசாளி ஒருத்தரு இவம் இருந்தக் கோலத்தப் பாத்து ஏல என்னல சமாச்சாரம்னு கேக்காரு. அதுக்கு இதுஇது இப்படி இப்படி ஆகிப்போச்சுன்னு எல்லாத்தையும் வெலாவாரியாச் சொன்னாம்.

அவரு சொன்னாரு ஏம்ல உனக்கு ஏதும் கோட்டி பிடிச்சிருக்கா. உங்கப்பனுக்குத்தான் வெவரமாச் சொல்ல அவகாசமில்லாம அவசரமாச் சொல்லியிருக்காம்னா, உங்க ஆத்தாளுக்கு எங்கல புத்தி போச்சுன்னு திட்டினாரு.

அவரு சொன்னதுக்கு அர்த்தம் என்னன்னு எனக்கு ஒன்னும் விளங்கல நீரு ஏதோ சொல்லுதீரேன்னாம்.

ஆத்தாளுக்குச் சோறு போடாதேன்னா, நீ சம்பாரிச்சி அவ கையில கொடுத்து அவதாம் உங்களுகெல்லாம் சொறு போடனும்னு அர்த்தம்.
கொடுத்த கடனத் திருப்பிக் கேக்காதேன்னா, கடன வாங்குறவம் நீ கேக்காமலே சொன்ன தேதில திருப்பித் தாராம்பாரு அந்த மாதிரி ஆளாப் பார்த்துக் கொடுன்னு அர்த்தம்.
வயல்ல ஆடு மாடு மேய்ஞ்சா விரட்டாதேன்னா, அது மேயுற அளவுக்கு விடாம சரியா வேலி போட்டு வெள்ளாமை பண்ணுன்னு அர்த்தம்.

இப்பத்தாம் இவனுக்கு வெளங்குச்சு. சே போ மோசம்லா போயிட்டோம்னு எல்லாத்தையும் சரி் செஞ்சாம். இது மாதிரித்தான் நானும் ஏதாவது சொன்னா அதுக்கு வேற அர்த்தம் வந்துருமோன்னுதான் யோசிக்கேன்.

பொய்தாம் சொல்லப் போறமுன்னாலும் ஒரு அளவு வேனும்ல?

நான் ரெம்ப அழகானவன்னு (அடப் பொய்தாங்க) சொன்னா கிருஷ்ணகுமார் திருப்பூர்ல சிரிக்கது இங்க கோயமுத்தூர்ல கேக்கும்.

நான் தொழிலதிபர்னு சொன்னா சஞ்சய், நந்து எல்லாம் கால் டாக்சி எடுத்துகிட்டு வந்திருவாங்க. அப்ப மாறன் பிரதர்ஸ என்னன்னு சொல்லுறதுன்னு நீங்களே கேப்பீங்க.

நான் டிப்ளமோ படிச்சிருக்கேன்னா. ஏன் பி ஈ படிச்சி டிஸ்கண்டினியூ பண்ணுனதச் சொல்லலன்னு வெயிலான் கோவிச்சுக்குவாரு. (10 பெயில் 8 பாஸ்)

நான் எழுத்தாளர் சுஜாதாவச் சந்தித்திருக்கேன்னு சொன்னா 500 பேரு இருந்த கும்பல்ல நீயும் ஒருத்தனா இருந்ததெல்லாம் ஒரு சந்திப்பான்னு, குருன்னு என் பிரண்ட் (என் பிளாகெல்லாம் படிக்கிறான்) டென்ஷன் ஆவான்.

எதுக்கு வம்பு வருஷப் பிறப்பும் அதுவுமா வம்ப விலைக்கு வாங்கி, தேர இழுத்துத் தெருவில விட வேண்டாமேன்னு பாக்குறேன். அதனால இதுக்கெல்லாம் சரியான ஆளு பாக்கி ரெண்டு பேரும்தாம்.

டிஸ்கி : புத்தாண்டு வாழ்த்துச் சொல்லக் கூப்பிட்டா ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்னு பொலம்புறாரு தாமிரா. ஆனா தங்கமணி சமைக்கிறது சரியில்லன்னு புலம்பல் பதிவு மட்டும் போடுவாரு.