Friday, October 30, 2009

வாழும் வரை போராடு


கோமங்கலம் புதூர் கிராமம் பொள்ளாச்சியில் இருந்து உடுமலை செல்லும் வழியில் இருக்கிறது. ஓரளவு பெரிய கிராமம். பகல் நேரத்தில் நின்று செல்லும் மப்சல் பேருந்துகள் இரவில் நிறபதில்லை. ஒரு அவசர வேலையாக வெளியூர் சென்று நள்ளிரவில் திரும்பும் நீங்கள் பொள்ளச்சியில் ஏறி கோமங்கலம்புதூரில் இறங்க வேண்டுமென டிக்கட் கேட்கிறீர்கள். நடத்துனர் அதற்கு கோமங்கலம் நிற்காது எனக் கறாராகச் சொல்லி உடுமலை டிக்கட் கொடுத்து உங்களை உடுமலையில் இறக்கி விட்டுச் செல்கிறார்.

இந்தச் சூழ்நிலையில் உங்கள் எதிர் விளைவு என்னவாக இருக்கும்?

இரவு முழுவதும் உடுமலை பேருந்து நிலையத்தில் காத்திருந்து அதிகாலை முதல் பேருந்தைப் பிடித்து வீடு வந்து சேருவீர்கள்; மனதிற்குள் அந்த நடத்துனரை திட்டியவாறே. சில நாட்களில் இதை மறந்துவிட்டு வேறு வேலைகளில் ஈடுபடுவீர்கள்.

ஆனால் கோமங்கலத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் ராஜு வித்தியாசமானவர். அவருக்கு நேர்ந்த இச்சம்பவத்தை நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்து நடத்துனருக்கு அபராதம் விதிக்குமாறு செய்திருக்கிறார்.

இதிலென்ன இருக்கு? அவருக்கு வேறு வேலை இல்லை. எனக்கு எவ்வளவோ முக்கியமான வேலைகள் இருக்கு என்கிறீர்களா? நீங்கள் சொல்லுவதும் ஒரு விதத்தில் ஞாயம்தான். அவருக்கு வேறு வேலை எதுவும் இல்லை.

ஏனெனில் அவர் கோவைச் சிறையில் ஆயுள் கைதி. 6 நாட்கள் பரோல் லீவில் ஊருக்கு போனபோது நேர்ந்ததுதான் இது. பரோல் முடிந்து அவர் மீண்டும் சிறைக்கு வந்ததும் கோவை நுகர்வோர் நீதி மன்றத்திற்கு ஒரு கடிதம் எழுதுகிறார். தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல், உடல் நலக் குறைவு போன்றவற்றைச் சொல்லி 10,000 ரூபாய் இழப்பீடும் கேட்கிறார்.

அந்தக் கடிதத்தையே பிராதாக எடுத்துக் கொண்டு நீதிபதி நடத்துனர் முருகனுக்கு சம்மன் அனுப்புகிறார். முருகன் ஆஜரானதும் நீதிபதி முன்பாக சமரசம் செய்து கொண்டு 10,000 க்குப் பதிலாக 3,000 என பைசல் ஆகிறது.

அபராதத் தொகையை கோவையிலுள்ள உடல் ஊனமுற்றோர் விடுதிக்கு நன்கொடையாக அளித்துவிட்டு மீண்டும் சிறைக்குத் திரும்புகிறார் ராஜு.

எத்தனை படிப்பினைகள் இவ்வொரு சம்பவத்தில்.

1. போராடும் குணத்தை எந்தச் சூழலிலும் விடக்கூடாது. ஆயுள் கைதியாக இருந்தாலும்கூட.
2. எந்தச் சூழலிலும் தாழ்வு மனப்பான்மை கூடாது. தானொரு ஆயுள் கைதி என்ற தாழ்வு மனப்பான்மையுடன் அவர் இதை அணுகவில்லை.
3. நீதி எல்லோருக்கும் பொதுவானது. ஆயுள் கைதி கொடுக்கும் பிராதெல்லாம் முக்கியமா என அதை உதாசீனப்படுத்தாமல், வெறும் கடித்ததை வைத்தே வழக்கை நடத்தி தீர்ப்பு வழங்கிய நீதிபதி.
4. தவறை ஒத்துக் கொள்வது. செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு தன்னைத் திருத்திக் கொண்ட நடத்துனர்.
5. உதவி செய்ய சூழ்நிலை ஒரு தடையல்ல. கிடைத்தவரை லாபம் என எண்ணாமல் பணத்தை நன்கொடையாக அளித்த ராஜு ஒரு பாடம்.


தண்டவாளக் கற்களுக்கிடையே கிளர்ந்தெழுந்த செடி மொட்டு விட்டு மலர்வதைப் போன்ற இவ்வித நிகழ்வுகள் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவதோடு வாழ்க்கையின் மீதான் நம்பிக்கையை முன்னெடுத்துச் செல்ல உதவுகிறதல்லவா?

****************************************************************************************

ramalingam said...

இதில் கைதி வழக்குப் போட்டது மட்டும்தான் பாஸிட்டி
வ். மற்றதெல்லாம் just coincidences. அவற்றில் எந்த வாழ்க்கை
ப் பாடமும் இல்லை. ஊழலும், லஞ்சமும் மலிந்து விட்ட இன்றைய
சூழ்நிலையில் இவை,
எல்லோரும் நல்லவரே என்ற தவறான நம்பிக்கையைக் கொடுத்து விடும். இதை வைத்து முடிவுகட்டி அந்தக் கைதி வெளியே வந்தால் ரொம்ப சிரமப்படுவார்.

**************************************************************************************

அன்பின் ராமலிங்கம்,

பிறர் போலல்லாது உங்களுக்கு மாற்றுப் பார்வை இருக்கிறாதென்பது மகிழ்வாக இருக்கிறது. என்றாலும் உங்கள் கருத்துக்கள் மீதெனக்கு விமர்சனமும் இருக்கக்கூடும் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களென நம்புகிறேன்.


//இதில் கைதி வழக்குப் போட்டது மட்டும்தான் பாஸிட்டிவ். //

நீங்கள் மட்டும்தான் அவரைக் கைதி என்றழைத்திருக்கிறீர்கள். உங்கள் அடிமனதில் அவர் கைதி என்பதாழப் பதிந்திருக்கிறது. ஆனால் நீதிபதி அவ்வாறில்லாமல் நீதியின் பால் நின்றிருக்கிறார். அதி பாஸிட்டிவ் அல்லவா?


//மற்றதெல்லாம் just coincidences. //

இல்லை என்பதுதான் என் தரப்பு. லட்சங்களில் சம்பளம் வாங்கும் பொழுது அளிக்கும் நன்கொடையை விட இதைப் போன்றோர் அளிக்கும் நன்கொடை மதிப்பு மிக்கது.

//அவற்றில் எந்த வாழ்க்கைப் பாடமும் இல்லை. //

உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு இருப்பதாகவும், இருக்கக்கூடுமெனவும் நம்பியதால் எழுதினேன். பின்னூட்டங்களும் அதை உறுதிப் படுத்துகிறது.

//ஊழலும், லஞ்சமும் மலிந்து விட்ட இன்றையசூழ்நிலையில் //

இது ஒரு வித பொது மனோபாவம். என்றாலும் வேறு விதத்தில் வளர்ந்துகொண்டுதானிருக்கிறோம். இப்படி இருக்கே என்று இடிந்து போய் யாரும் அவரவர் வேலைகளைப் பார்ப்பதிலிருந்து ஒதுங்கி விடுவதில்லை. எங்குதான் இல்லை லஞ்சம்? அதைப் புறந்தள்ளி அடுத்து இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும். லஞ்சம் லஞ்சம் எனப் புலம்புவதில் அர்த்தமில்லை. சில சமயங்களில் லஞ்சம் கொடுத்துத்தான் காரியம் சாதிக்க வேண்டும் அதனால் 10 பேருக்கு நல்லது நடக்குமென்றால் கொடுக்க வேண்டியதுதானே?

ஆனால் தனி மனிதனாக உங்கள் சுகத்திற்காக லஞ்சம் கொடுக்காமல் இருக்கலாம். அதை விட முக்கியம் லஞ்சம் வாங்காமல் இருப்பது.

//எல்லோரும் நல்லவரே என்ற தவறான நம்பிக்கையைக் கொடுத்து விடும். //

எல்லோரும் நல்லவெரே என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இன்னமும் இருக்கிறது. அவரவர் நிலையில் இருந்து பார்த்தால்தான் அது சரியா தவறா எனத் தெரியும். உங்களுக்குச் சரியெனப் படுவது எல்லோருக்கும் சரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

//இதை வைத்து முடிவுகட்டி அந்தக் கைதி வெளியே வந்தால் ரொம்ப சிரமப்படுவார்.//

மீண்டும் கைதி என்கிறீர்கள். அவர் ஏன் சிரமப்படுவார்? ஆயுள் கைதியாக இருப்பதைவிட வேறு என்ன பெரிய சிரமம் வந்துவிடப் போகிறது?அவர் கைதியாக இருக்கும்போதே போராடவும் போராடிக் கிடைத்ததை பிறருக்குக் கொடுத்து மகிழவும் தெரிந்திருக்கிறது.

இதைவிட வாழக்கைக்கான படிப்பினையை வேறு எந்தப் புத்தகமும் கொடுத்துவிட முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

25 பேரு பாராட்டியிருக்காங்க:

T.V.Radhakrishnan said...

நல்ல தகவல்..பகிர்வுக்கு நன்றி

PARTHIPAN said...

கோவை பற்றி மீண்டும் பதிவு.
நல்ல தகவல்.
நானும் இது பற்றீ கேள்விப்பட்டதுண்டு.
கைதியானாலும் ராஜு பாராட்டப் பட வேண்டியவர்.
நன்றி.
பார்த்திபன்

பழமைபேசி said...

அடக் கொடுமையே? அந்தியூர்ல நிக்கச் சொன்னா, கோமங்கலம் புதூர்ல நிறுத்துவாங்க; அங்குட்டு இருந்து வரும்போது பூலாங்கிணறுல நிறுத்துவாங்க.... இப்ப அதுக்கும் ஆப்பா?

அடுத்த மாசம் ஊருக்கு வரும்போது, இந்த இடுகையோட நகலோடத்தோடத்தான் வாறதே! அந்தியூர்லயும் வண்டி நின்னாவணும்!!

செல்வேந்திரன் said...

எத்தனை பாஸிட்டிவான பதிவு... அட்டகாசம்...!

Rajalakshmi Pakkirisamy said...

Very nice.. Thanks for sharing

பின்னோக்கி said...

அருமையான விஷயம். பகிர்வுக்கு நன்றி.

இராகவன் நைஜிரியா said...

மிக அருமையான, தேவையான இடுகை அண்ணே...

சின்ன அம்மிணி said...

அட்டகாசமான பதிவு. ஆனால் உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி போகும் பெரும்பாலான எல்லா வண்டியும் டவுன் பஸ் மாதிரி எல்லா நிறுத்ததில் நிற்கவும் செய்யும்.

மணிநரேன் said...

நல்லதொரு பகிர்வு. நன்றி.

Mahesh said...

Interesting and inspiring...

நிகழ்காலத்தில்... said...

ஒரு செயலை எப்படி எல்லாம் ஆக்கப்பூர்வமாக செய்வது, அதை எப்படி பார்ப்பது என்ற அழகாக உணர்த்தி விட்டீர்கள் வேலன்

வாழ்த்துக்கள்,,

தியாவின் பேனா said...

1. போராடும் குணத்தை எந்தச் சூழலிலும் விடக்கூடாது. ஆயுள் கைதியாக இருந்தாலும்கூட.
2. எந்தச் சூழலிலும் தாழ்வு மனப்பான்மை கூடாது. தானொரு ஆயுள் கைதி என்ற தாழ்வு மனப்பான்மையுடன் அவர் இதை அணுகவில்லை.
3. நீதி எல்லோருக்கும் பொதுவானது. ஆயுள் கைதி கொடுக்கும் பிராதெல்லாம் முக்கியமா என அதை உதாசீனப்படுத்தாமல், வெறும் கடித்ததை வைத்தே வழக்கை நடத்தி தீர்ப்பு வழங்கிய நீதிபதி.
4. தவறை ஒத்துக் கொள்வது. செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு தன்னைத் திருத்திக் கொண்ட நடத்துனர்.
5. உதவி செய்ய சூழ்நிலை ஒரு தடையல்ல. கிடைத்தவரை லாபம் என எண்ணாமல் பணத்தை நன்கொடையாக அளித்த ராஜு ஒரு பாடம்.
///


உண்மைதான்

யாழினி said...

நல்ல பகிர்வு..
இந்த பதிவு எல்லார் கண்களிலும் பட்டு மனஸ்ல இருக்கணும்....
வாழ்த்துக்கள்

Cable Sankar said...

நல்ல பதிவு.. தலைவரே..

கதிர் - ஈரோடு said...

ராஜூ பாராட்டுக்குரியவர்

அருமையான தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி...

இது பகிர்வு என்பதை விட பாடம் என்றே சொல்லலாம்

ramalingam said...

இதில் கைதி வழக்குப் போட்டது மட்டும்தான் பாஸிட்டி
வ். மற்றதெல்லாம் just coincidences. அவற்றில் எந்த வாழ்க்கை
ப் பாடமும் இல்லை. ஊழலும், லஞ்சமும் மலிந்து விட்ட இன்றைய
சூழ்நிலையில் இவை,
எல்லோரும் நல்லவரே என்ற தவறான நம்பிக்கையைக் கொடுத்து விடும். இதை வைத்து முடிவுகட்டி அந்தக் கைதி வெளியே வந்தால் ரொம்ப சிரமப்படுவார்.

தண்டோரா ...... said...

பகிர்வுக்கு நன்றி .அண்ணாச்சி

பித்தன் said...

நல்ல பகிர்வு.., பகிர்வுக்கு நன்றி

மங்களூர் சிவா said...

நல்ல தகவல்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

வாழ்க்கையின் மீதான் நம்பிக்கையை முன்னெடுத்துச் செல்ல உதவுகிறதல்லவா?
//

நிச்சயமாய்..

வாத்துக்கோழி said...

ராஜுவின் முக்த்தில் சிரிப்புடன் இன்றைய பேப்பரைப்பார்த்தேன். நன்று.

க.பாலாசி said...

//அபராதத் தொகையை கோவையிலுள்ள உடல் ஊனமுற்றோர் விடுதிக்கு நன்கொடையாக அளித்துவிட்டு மீண்டும் சிறைக்குத் திரும்புகிறார் ராஜு.//

ஐந்தாம் படிப்பினை எல்லாவற்றையும் விட சிறந்ததாக எண்ணுகிறேன்.

நல்ல சிந்தனை பகிர்வு இடுகை....அன்பரே....

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயுள் கைதியாக இருப்பதைவிட வேறு என்ன பெரிய சிரமம் வந்துவிடப் போகிறது?அவர் கைதியாக இருக்கும்போதே போராடவும் போராடிக் கிடைத்ததை பிறருக்குக் கொடுத்து மகிழவும் தெரிந்திருக்கிறது //

பதிவில் சொல்லப்பட்டதை விட, இந்த பதில் மிகவும் ஆழமாகவும் அர்த்தமாகவும் இருக்கிறது.

கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

யுவகிருஷ்ணா said...

தன்னம்பிக்கை குளூகோஸ் ஏற்றும் பதிவு. பகிர்வுக்கு நன்றி.

ஜோசப் பால்ராஜ் said...

சுமா நச்சுன்னு சொல்லியிருக்கீங்க அண்ணாச்சி.