Tuesday, October 27, 2009

எழுத மறந்த கதை


நண்பர்கள் முரளிக் குமார் மற்றும் ஜோசப் பால்ராஜ் இருவரும் நான் எழுத வந்த கதை தொடர் பதிவுக்கு அழைத்திருந்தனர். இருவருக்கும் நன்றி. இன்றைய ராகு கேது பெயர்ச்சிப் பலனில் ஒத்தி போட்டிருந்த வேலைகளெல்லாம் உடனடியாக முடியும் எனப் போட்டிருந்தது. முதல் வேலையாக இதை முடித்து விட்டேன்.

வாசிக்கும் பழக்கம் சிறுவயதிலேயே தொடங்கி விட்டது. குமுதம், கல்கி, விகடன், குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, சினிமா எக்ஸ்பிரஸ் என எல்லா வார மாத இதழ்களும் எங்கள் வீட்டில் இருக்கும். என் தந்தை ஒரு சர்குலேசன் லைப்ரரி நடத்தினார். உடன் வேலை பார்க்கும் 10 பேரைச் சேர்த்துக் கொண்டு ஆளுக்கு ஒரு இதழ் என வாங்கி பரிமாறிக் கொள்ளும் ஏற்பாடு அது. பாடப்புத்தகங்களை விட இந்தப் புத்தகங்களைத்தான் அதிகம் படித்திருக்கிறேன்.

மறக்க முடியாத இரு இதழ்கள் மயன் மற்றும் திசைகள்.(பதிவர்கள் யாரிடமாவது இதன் பிரதிகள் இருக்குமா?) மயனில் சுஜாதா எழுதிய கம்ப்யூட்டரை எளிதாகக் கற்றுக் கொள்ளுங்கள் கட்டுரை கம்ப்யூட்டர் பற்றிய ஆர்வத்தைத் தூண்டியது. பைனரியை எளிதாகச் சொல்லித்தர இரண்டு டம்ளர்களை உபயோகப்ப்டுத்தியிருப்பார். திசைகள் வித்தியாசமான பத்திரிக்கை. இளைஞர்களைக் குறி வைத்து சாவி நடத்தியது. மயன் இதயம் பேசுகிறது மணியன் நடத்தியது. கொஞ்ச காலமே வந்தாலும் இவ்விரு பத்திரிக்கைகளும் ஏற்படுத்திய பாதிப்பு அதிகம். திசைகள் பத்திரிக்கையிலிருந்து உருவானவர்களில் மாலனும், இயக்குனர் வசந்தும் ஞாபமிருக்கிறார்கள் மற்றவர்கள் பற்றித் தெரியவில்லை. சுப்ரஜா, சாருப்பிரபா சுந்தர், இரவிச்சந்திரன் எல்லாம் என்ன ஆனார்கள்?

அதன்பிறகு 9 ஆம் வகுப்புப் படிக்கையில் பழனிக்குக் குடி பெயர்ந்தோம். அங்கிருந்த நூலகரிடம் என்னை அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினார் என் தந்தை. என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி அது. நாவல்களைத் தொடர்கதையாகப் படித்த எனக்கு முழு நாவலையும் ஒரே வீச்சில் படிக்கக் கிடைத்தது.

எல்லோரையும் போல குறும்பூர் குப்புசாமி, சாண்டில்யன் என ஆரம்பித்து சுஜாதா, மாலன், பாலகுமாரன், சுப்ரமண்யராஜு என விரிவடைந்தது. என்றாலும் எழுதும் நோக்கம் ஒரு போதும் தோன்றியதில்லை. முதலில் நல்ல வாசகனாக இருந்து பிறகுதான் எழுத வரவேண்டும் என வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சுஜாதா சொல்லியிருக்கிறார். எனவே எழுதும் ஆசையின்றிக் கிடைத்தையெல்லாம் படித்துக் கொண்டிருந்தேன்.

2007 நவம்பர் வாக்கில் வார இதழ் ஒன்றில் வந்த பிளாக் அறிமுகம் மூலம் சிலரது பதிவுகளை படிக்கவும் பலரது வலைகளை மேயவும் வாய்த்தது. புது உலகம் கண்முன்னே விரிந்தது. எழுதவதற்கான எளிதான வாய்ப்பு எனப் புரிந்தது. என்றாலும் என்ன எழுதுவது எப்படி எழுதுவது என்ற தயக்கம் அடிமனதில் இருந்தது. சிலருக்குப் பின்னூட்டம் மட்டும் இட்டுக் கொண்டு காலத்தைக் கடத்தினேன்.

பிறகுதான் 2008 மே வாக்கில் இத்தளத்தை ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் எழுதிய பதிவுகளெல்லாம் குப்பைதான். அது ட்ரையல் பால் போடுவது போல. முதலில் பரிசல், வெயிலான் என சிறிது சிறிதாக நட்பு வட்டம் சேர்ந்தது. எனக்கு மிகப் பெரிய பலமாக அமைந்தது நான் எழுத வந்த அதே வேளையில் எழுத வந்த நண்பர்கள் பரிசல், ஆதி, வெண்பூ, அப்துல்லா, நர்சிம், அனுஜன்யா என இன்றையப் பிரபலப் பதிவர்கள்தாம். மொய் செய்தும் எதிர் மொய் செய்தும் வளர்த்துக் கொண்ட இந்த வட்டத்திற்கு வெளியே பெயர் தெரிய ஆரம்பித்ததும் அதன் பின் நானும் எழுதுகிறேன் என எழுதிக் கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரியும்.

எழுதிச் சாதித்தது எதுவும் இல்லை என்றாலும், 100 க்கு 100 பதிவுக்கு எதிர்பாராத இடங்களில் இருந்து உதவி செய்யத் தயாராக இருப்பதாக வந்த மின்னஞ்சல் மிக முக்கியமானது. இதன் மூலம் அனுஜன்யாவுடன் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. நியூக்ளியஸ் சாப்ட்வேர் நிறுவனத்தின் ஹெச் ஆர் மேனஜர் சுகன்யாவிற்கு வேலை தரவும் மேற்படிப்புக்கு உதவி செய்யவும் தயாராக இருப்பதாக அனுப்பிய மின்னஞ்சல் ஆத்ம திருப்தியைத் தந்தது.

நட்சத்திர வாரத்தில் எழுதிய பதிவுகளும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. விகடன், நவீன விருட்சம் வார்த்தை போன்ற சிற்றிதழ்களில் எனது எழுத்துகள் வெளியாகி இருக்கின்றன. எதையும் சாதிக்காவிட்டாலும் ஒன்றும் சோடை போகவில்லை என்று சொல்லிக் கொள்ளலாம்.

The fishermen know that the sea is dangerous and the storm terrible, but they have never found these dangers sufficient reasons for remaining ashore.

Vincent Van Gogh

.

17 பேரு பாராட்டியிருக்காங்க:

அபி அப்பா said...

தூள் அண்ணாச்சி! குறுகிய காலத்தில் மூத்த பதிவராக ஆகிட்டீங்க! வாழ்த்துக்கள்!!

T.V.Radhakrishnan said...

அருமை ராஜேந்திரன்

இராகவன் நைஜிரியா said...

சூப்பர் அண்ணே..

velji said...

short and sweet.

Cable Sankar said...

கடைசி வரி கொட்டேஷன் அருமை.. த்லைவரே

அனுஜன்யா said...

ரொம்ப கச்சிதமாக வந்திருக்கிறது. உங்கள் வாசிப்பு பரவலானது. வெகுஜன இதழ்களிலிருந்து சிற்றிலக்கிய இதழ்கள், இலக்கிய ஆளுமைகள், அவர்கள் எழுத்துகள் என்று நீங்கள் வாசிப்பை செப்பனிட்டு வளர்த்துக்கொண்டதையும் விரிவாகப் பகிர்ந்து கொண்டிருக்கலாம். அல்லது இன்னொரு இடுகையாகவும் எழுதலாம். பலருக்கு உதவும்.

அனுஜன்யா

நர்சிம் said...

அனுஜன்யா சொன்னதை மொழிபெயர்க்கிறேன்..ஸாரி..வழிமொழிகிறேன்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.

வடகரை வேலன் said...

நன்றி தொல்ஸ்.
நன்றி TVRK சார்.
நன்றி ராகவன்.
Thanks Velji.
நன்றி கேபிள்.

நன்றி அனுஜன்யா. தற்பெருமையாப் பார்க்கபடும் அபாயம் இருப்பதால் எழுதவில்லை. ஆனால் நூலறிமுகம் எழுத்தாளர் அறிமுகம் என எழுதலாம்.

நன்றி நர்சிம். நல்ல வேளை என் முழியப் பெயர்க்கல.

நன்றி அமித்து அம்மா.

கிரி said...

பழைய நினைவுகளை ஒட்டி பார்ப்பது சுகமான அனுபவம் தான் :-)

விக்னேஷ்வரி said...

நல்ல அனுபவப் பதிவு அண்ணாச்சி.

PARTHIPAN said...

கோவை நண்பரே வணக்கம்
புதியவன் நான் ப்திவுலகிற்கு
கோவை என்றதும் பின்னூட்டம் இட துணிந்தேன்
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.
கடைசி கொடேஷன் அருமை.
நன்றி.

மாதவராஜ் said...

ரத்தினச் சுருக்கம் என்பது இதுதானோ! எழுதாமல் விட்ட கதை நிறைய இருக்கணும். சேர்ந்து பயணிப்போம்... தோழரே!

ஆதிமூலகிருஷ்ணன் said...

அபி அப்பா said...
தூள் அண்ணாச்சி! குறுகிய காலத்தில் மூத்த பதிவராக ஆகிட்டீங்க! //

அபி அப்பா சார்,

அண்ணாச்சி மூத்த பதிவர் இல்லை.. பதிவ மூத்தவர்.! ஹிஹி..

ஆதிமூலகிருஷ்ணன் said...

அனுஜன்யா அங்கிள் சொன்னாமாதிரி இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம் அங்கிள்.!

கொஞ்சம் தன்னடக்கமாகவும் இருந்தது.

நீங்களே சொல்லிவிட்டபடியால் (அடிக்கடி சொல்லுங்க.. இல்லைன்னா நம்ப முடியலை) நானும் பரிசல், நர்சிம் மாதிரி பிரபல பதிவர்தான் என நம்பிக்கொள்கிறேன்.. ஹிஹி.!

வெண்பூ said...

நல்ல பதிவு அண்ணாச்சி.. சுருக்கமா தெளிவா எழுதுனது பிடிச்சிருந்தது.

ஜோசப் பால்ராஜ் said...

நன்றி அண்ணாச்சி.
இப்பதான் ரொம்ப நாளைக்கு அப்பறம் பதிவுகளை படிச்சுக்கிட்டு இருக்கேன்.
அதான் மிக தாமதமான பின்னூட்டம்.