Sunday, September 28, 2008

கதம்பம் - 28-09-08




வலையில் தற்பொழுது நடக்கும் பிரச்சினை ஒன்றின் என் தனிப்பட்ட கருத்து இது.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதனிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

பிரச்சினையோட மூலகாரணம் என்ன? என்ன செஞ்சாச் சரியாகும்னு கண்டுபிடிச்சு அதச் செய்யனுங்கிறதுதான் இந்தக் குறளோட கருத்து.

சிலர் பிறர் மாதிரி எழுத முயற்சி செய்வது தவறு. அதுக்குத்தான் அவரு இருக்காரே. நமக்குன்னு ஒரு தனித்தன்மை இருக்கு அத செம்மைப் படுததுவதுதான் சரி.

அவருக்கு அதிக ஹிட் வருது நமக்கு வரலையேங்குற ஏக்கமும் சிலருக்கு இருக்கு. இதுவும் தவறானதுதான். வலையில பதிவு எழுதறதே, நமக்குத் தோனுனத எழுத ஒரு வசதிங்குறதுனாலதான். அத எழுத மத்தவங்க மாதிரி பிரபலமா இருக்க அவசியமில்ல.

இவ்வளவு ஹிட் வாங்குன ஒரு ஆள நான் எப்படி கேள்வி கேட்டு மடக்குறேன் பாருன்னு ஒரு நோக்கத்தோட கேள்வி கேட்பதும் தவறு.

அதேபோல இன்னாரு இன்னாருக்கு ஜால்ரா, அல்லக்கை என்பதெல்லாம் வெட்டிப் பேச்சு. இருந்தா என்ன தப்பு?. அது உங்கள நேரடியாப் பாதிக்குதா? ஒருவருக்கு நண்பர்கள் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களில் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருப்பது இயல்புதானே.

நம்ம பின்னூட்டத்த அவரு வெளியிடல, பின்னூட்டத்துக்குப் பதிலே தரலன்னும் சொல்றது தப்பு. வலையில இருக்க சுதந்திரமே அதுதானே. பிடிச்சாப் போடு, இல்ல போய்கிட்டே இரு.

ஒரு பொது விவாதத்துக்கு நீங்க ஒரு கேள்வி வச்சு அதுக்குப் பதில் வரல்லன்ன அத ஒரு பதிவா உங்க வலையில போடலாம். இது அவர் சொன்ன கருத்து, இது நான் கேட்ட கேள்வி உங்க கருத்து என்னன்னு, அத மேலும் பொதுவாக வைக்கலாம்.

உணர்ச்சி வசப்பட்டு பின்னூட்டமிடுவது குறித்து அசிங்கமா பேசியிருக்கவும்கூடாது; இத ஒரு பெரிய விஷயமா எடுத்துக்கிட்டு மனவருத்தப்படவும் அவசியமில்ல. இதுல ரெண்டு சைடுலயும் கொம்பு சீவ ஆள் இருப்பது கண்கூடு.

இரண்டு தரப்பிற்கும் நான் சொல்வது இதுதான். வெற்றிகளை உங்க தலைக்கும் தோல்விகளை உங்கள் இதயத்திற்கும் எடுத்துச் செல்லாதீர்கள்.

******************************************

புதுகை அப்துல்லாவப் பாராட்டி பரிசல் போட்ட பின்னூட்டத்துல சுட்டு(ம்) விரலால் தீராப் பசியடங்கியவன் கதை தெரியுமான்னு கேட்டிருந்தேன். அதச் சொல்லச் சொல்லி நேரிலும், செல்லிலும், மெயிலிலும் கோரிக்கை வைத்த உங்களுக்காக இதோ.

ஒரு ஊர்ல ஒரு பண்ணையார். மகாக் கஞ்சன். அதுகூடப் பரவாயில்லை, அவருக்கு ஒரு வினோதப் பழக்கம். அவரு சாப்பிடும்போது வேலையாட்கள் எல்லாம் சுத்தி நின்னு அத வேடிக்கை பாக்கனும்.

எல்லாரும் சாவதைப் போல அவரும் ஒரு நாள் இறந்துவிடுகிறார். நம்மாளுக்கு நரகம்தானே கிடைக்கும். கூடவே ஒரு வித்தியாசமான தண்டனை கிடச்சது. எண்ணைக் கொப்பரையில போட்டு எடுக்க இடத்துல வரிசையில காத்திருக்க வேண்டியதாப் போச்சு. இவர் முறை வர கொஞ்சம் தாமதமாகும்.

இவருக்குக் கிடைச்ச வித்தியாசமான தண்டனை தீராப் பசி எடுப்பதுதான். தவியாத் தவிச்சார். என்ன பண்ணன்னு தெரியல. அப்ப அந்தப் பக்கமா வந்த சித்திர குப்தன்கிட்ட கேக்குறார். எதையாவது பண்ணி இதக் கொஞ்ச நேரம் நிறுத்துங்க தாங்க முடியலன்னு. சி.கு உடனே அவன் ஏட்டப் புரட்டிப் பாத்துட்டு உன் சுட்டு விரல எடுத்து வாயில் வைன்னுட்டுப் போயிட்டாரு. இவர் வச்ச ஒடனே பசி அடங்கிருச்சு.

என்ன காரணம்னு தெரிஞ்சுக்க ஆர்வமாகி சி.கு கிட்ட கேட்டா, அவரு சொன்னாரு ஒரு தடவை அண்ணதானம் எங்க நடக்குதுன்னு கேட்ட ஒருவனுக்கு இதோ இந்தப் பக்கம்னு உன் சுட்டு விரலாலச் சுட்டிக் காட்டிச் சொன்னாய் அதனால அந்தச் சுட்டு விரலுக்கு புண்ணியம் இருக்கு.

ஒரு பக்கமாச் சுட்டுனதுக்கே அப்படி, நம்ம பரிசல் உலகம் பூரா சுட்டியிருக்காரு, அப்ப எவ்வளவு புண்ணியம் சேத்துருக்காரு பாருங்க.

******************************************************

வாலி புத்தகத்தைப் படிச்சு முடிச்சாச்சு. மனுசன் ரெம்ப ரோஷக்காரர்தான். அவரு சண்டை போடாத ஆளே இல்ல போல. இருக்கட்டும் கர்வப் படுபவன்தானே கலைஞன். வித்யா கர்வம் பெருமைதான். வெறும் கர்வம்தான் சிறுமை.

இன்னொரு சுவராசியமான சம்பவம் அந்தப் புத்தகத்திலிருந்து.

எம்ஜியார் உலகம் சுற்றும் வாலிபன் படம் எடுத்துக் கொண்டிருந்த நேரம்.

வாலி எம்ஜியார்கிட்ட கேட்டாரு ”பாட்டு ரெக்கர்டிங் எப்பண்ணே”

எம்ஜியார் பொய்க் கோபத்துடன், ”இந்தப் படத்துக்கு உங்க பாட்டு இல்ல, பட டைட்டில்ல உங்க பேரு வராது”

“எம்பேரு இல்லாம நீங்க படத்துக்கு டைட்டில் கார்டே போட முடியாதுண்ணே” அப்படின்னு வாலி சவால் விட்டாரு.

“ஏன்”

“எம்பேரு இல்லாமப் போட்டா 'உலகம் சுற்றும் பன்' அப்படீன்னுதான் போடனும்”

**************************************************

இவரு எழுதுன பல கவிதைகளை அந்தப் புத்தகத்தில் கொடுத்திருக்கார். எனக்குப் பிடிச்ச கவிதை.

மனிதர்களை எங்களால்
மந்திரிகளாக்க முடிகிறது
மந்திரிகளைத்தான் மீண்டும்
மனிதர்களாக்க முடியவில்லை.

******************************************

நமது வலை நண்பர் ராஜ நடராஜன் photocbe.com என்ற வலைச் சேவைத்தளத்தை தொடங்கியுள்ளார். நமது தயாரிப்புகளையும் சேவைகளயும் அதன் மூலம் விளம்பரப்படுத்தலாம். கட்டணம் இன்னும் தீர்மாணிக்க வில்லை. என் நிறுவனம் குறித்த தகவல்களை இணைப்பது குறித்து தேவையான விபரங்களைத் தருமாறு சொல்லியிருக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற உங்கள் வாழ்த்துக்களை rajanatcbe@gmail.com அனுப்புங்கள்.

***************************************************

இரண்டு நாட்கள் வெளியூர் செல்வதால் ஆசிப் அண்ணாச்சி, தமிழ்ப் பிரியன், புதுகை அப்துல்லா போன்றவர்களுக்கும் மற்ற வலை அன்பர்களுக்கும் என் இதயம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துக்கள்

Saturday, September 27, 2008

கோடி ரூபாய் புராணம் - வால் பையன்


எனக்கு பேங்க் அக்கவுண்ட் அறிமுகமானது நண்பன் அனந்த ராமன் மூலமாக. அதன் பிறகு சில நாட்கள் பேங்க் ஸ்டேட்மெண்ட் படிக்க மட்டும் செய்தேன். சென்ற நவம்பர் மாதத்தில் ஒரு நாள் (தேதி கிழமை ஞாபகம் இல்லை, பழைய பாஸ்புக் தொலைந்து விட்டது) ஒரு பேங்க் அக்கவுண்ட் ஆரம்பித்தேன். தற்செயலாகத்தான் இந்த பேங்கில் ஆரம்பித்தேன். 1000 ரூபாயுடன் ஆரம்பித்த எனது அக்கவுண்டில் இன்று ஒரு கோடி ரூபாய் இருக்கிறது.

ஆனால் சில நாட்களாக இத்தோடு இந்த அக்கவுண்டைக் குளோஸ் செய்துவிடலாமா என்னும் அளவுக்கு மன உளைச்சல். நான் ஏதோ பேங்க் ஊழியர்களிடம் விளையாட்டாகப் பேசப்போய் பன்முனை தாக்குதலில் மாட்டி கொண்ட மான் போல ஆகிவிட்டேன். நான் செய்த தவறு பேங்க் சீனியர் மேனேஜரிடமே வாதம் செய்தது.

சில மாதங்களுக்கு முன்னாள் அக்கவுண்டில் வரிசையாக பத்து சலான்கள் நிரப்பி கலக்சன் போட்டேன். ஆனால் ஒரு சலான் கவுண்டர் பாயில் எனக்குக் கிடைத்தது. உடனே அவரது அலைபேசிக்கு அழைத்துக் கேட்டேன். அவ்வளவு சலான்கள் தேவையில்லாதது, 10 செக்காக இருந்தாலும் ஒரே சலானில் எழுதலாம், அதனால் ஒன்றை மட்டும் கலக்சன் அனுப்பினேன் என்று கூறினார், அவருக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். அப்பொழுதெல்லாம் அவருக்கு என் அக்கவுண்ட் பிடிக்காது என்று நினைத்தேன், அவருக்கு என்னையவே பிடிக்காது என்று இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்.

கடைசியாக வந்த சர்ச்சைக்குரிய ட்ரான்ஸாக்சன் பற்றி நான் ஏதும் தவறாக கூறவில்லை. ஸ்டேட்மெண்டில் இறுதியாக "இந்த ஸ்டேட்மெண்டுக்கு நீங்கள் கன்ஃபர்மேசன் கொடுத்து என்னை பெரியாளாக்க வேண்டாம், அதை உங்கள் அசிஸ்டண்ட் பார்த்து கொள்வார்" என்று எனது ஆடிட்டருக்கு எழுதியிருந்தார்.
நான் "என் அக்கவுண்டில் கிரிடிட் வரவில்லையே என்று பார்த்தேன் வந்து விட்டது" என்று தான் எழுதியிருந்தேன். அது முதல் நான் எப்பொழுது பேங்கில் பணம் போட்டாலும் எடுத்தாலும் என் மொபைலுக்கு SMS வருவது போல் செட் செய்து விடுவேன், அப்போதும் அதைத் தான் செய்திருந்தேன். மற்ற ட்ரான்சாக்சன்கள் மட்டும் வந்ததால், என் அந்த குறிப்பிட்ட ட்ரான்ஸாக்சனை ரெக்கர்டு செய்வீர்களா என்று கூட கேட்டிருந்தேன்.

அதற்கு பதில் அவர் வித்தியாசமாய் கொடுத்ததால் அங்கே செய்யும் விவாதத்திற்கு பதிலாக நானே ஒரு கம்ளெயின்ட் எழுத வேண்டியதாயிற்று. சமீபத்தில் நண்டு நாகேந்திரன் , யாரு நிவேதிதா, ரமணா சுதாகர் போன்றவர்களின் ஸ்டேண்ட்மெண்டில் ட்ரன்சாக்சன்கள் சரியாக இருந்தன.

நான் என்ன துரோகம் அவர்களுக்கு செய்தேன், நான் ஸ்டேட்மெண்ட் கேக்கும்போதெல்லாம், ஸ்டேசனரி இல்லை, பிரிண்டர் வேலை செய்யவில்லை என்று சொல்கிறார்கள். எனக்கு வேறு பெயரில் பேங்க் அக்கவுண்ட் இருப்பதாகவும் சொல்லி ஒரு கும்பல் புரளியை கிளப்பி கொண்டு திரிகிறது.

அது போல் நான் செய்வதில்லை என்று பலமுறை சொல்லியிருக்கிறேன், என் செக்குகளை என் அக்கவுண்டில் போடமுடியாமல் பினாமி அக்கவுண்ட் வைத்திருக்கும் அளவுக்கு இன்கம் டேக்ஸ் பிரச்சினை இல்லை.

இவர்களுக்கு நான் எப்படி தான் நம்ப வைப்பது, எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் சத்தியம் என்ற வார்த்தை உண்மையுடன் இணைந்துள்ளது என்று நம்புகிறேன். நான் கட்டிய ஒரே வீட்டின் மீது ஆணையாக நான் பினாமி அக்கவுண்ட் வைத்ததில்லை, வைத்திருக்கவில்லை, வைக்கப் போவதுமில்லை. இதற்கு மேல் நம்பினால் நம்புங்கள் நம்பாட்டி போங்கள்.

இந்த வீணாய் போன பேங்க் அக்கவுண்ட் உனக்கு என்ன தந்தது என்று கேட்டால் வசதியும், பாதுகாப்பும் என்று சொல்லி வந்தேன். ஆனால் நான் கொஞ்சமும் எதிர்பாராத, நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் ஒரு நண்பர், நான் தான் அனில் அம்பானி பெயரில் அக்கவுண்ட் வைத்திருக்கிறேன் என்று சொல்லி வருவது பெருத்த காயத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டது.

எனக்கு SB அக்கவுண்டைத் தவிர வேறொரு அக்கவுண்ட் உண்டு. அதுவும் இதே பேங்கில் தான் இருக்கிறது, எனது வியாபார நிமித்தமாக அதை பயன்படுத்தி வருகிறேன், பல ஊர்களிலிருந்து நான் வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்குவதால், அந்த பணத்திற்குன்டான தனிக் கணக்கு வைக்க வேண்டியுள்ளது. கணக்குச் சரி பார்க்க , அந்த அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட்டை எனது வாடிக்கையாளர்கள் கேட்கும் போது அளிக்கிறேன். இது தவிர நான் வேறு எந்த அக்கவுண்டிலும் போடுவதில்லை, எடுப்பதில்லை.

பொதுவாக நான் எந்த கட்சிக்கும் ஆதரவாளன் இல்லை, வாழ்க, ஒழிக கோஷம் போடுவது எனக்கு பிடிக்காது, ஆனால் வங்கி அரசியல் அதை வி்ட கேவலமாக இருக்கிறது. ஒரு சில நபர்களால் நான் மற்ற நண்பர்களையும் இழந்து விடுவோனோ என பயம் வருகிறது எனக்கு.

நான் பேங்க் அக்கவுண்ட் தொடங்கி எந்த புரட்சியையும் செய்து வி்டப் போவதில்லை, சர்ச்சைக்குரிய அக்கவுண்டில் யாரும் எனக்காகப் பணம் போடப் போவதில்லை. எனக்கு மன உளைச்சலே மிச்சமாகிறது.

இருப்பினும் என் மீது அவதூறு பரப்புவதற்கு அவர்களுக்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும். நானே விவாதம் என்ற பெயரில் சுப்பையா வாத்தியார், நண்பர் கூடுதுறையின் ஸ்டேண்ட்மெண்டுகளில் சந்தேகம் எழுப்பி மன உளைச்சலுக்கு உள்ளாக்கியிருக்கிறேன். அதே போல் வேறு எங்கும் தவறு நடந்திருக்கலாம்.
இந்த இடத்தில் நான் அப்படியேதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று பகிரங்க மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

இவ்வளவு நடந்தும் என் மீது நம்பிக்கை வைத்து என்னை நம்பும், எனக்கு கடன் கொடுக்கும் நண்பர்களுக்கு நான் கோடான கோடி கடன் பட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

இத்துடன் எனது கோடி ரூபாய் புராணம் முடிந்தது.



டிஸ்கி : வால் பையனின் இந்தப் பதிவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பரிசல்காரனின் இந்தப் பதிவுக்கு சம்பந்தம் இருக்கான்னு நீங்கதான் சொல்லனும்

Friday, September 26, 2008

ஓவியக் கைகள்


கைகளால் ஒவியம் தீட்டிப் பார்த்திருக்கோம். கைகளின் மீதே தீட்டப்பட்ட ஓவியங்கள் இவை.


இந்த ஓவியங்களை வரைய ஒரு கைக்கு மட்டும் நான்கு மணி நேரம் ஆகுமாம்.
சில ஓவியங்களைத் தீட்ட 10 மணி நேரத்திற்கு மேலும் ஆனதாம்




















உங்களுக்குப் பிடித்ததைப் பட்டியலிடுங்கள்.

டிஸ்கி : வலையில் தேடிப்பார்த்ததில் இது பற்றி பதிவு எதுவும் காணப்படவில்லை. அப்படி இருப்பின் பின்னூட்டதில் சுட்டி கொடுங்கள்.

Tuesday, September 23, 2008

கதம்பம் - 22/09/08

கோர்ட்ல வசூல் பண்ணும் அபராதப் பணத்துல கள்ள நோட்டாம். அதனால அந்தப் பணத்த வங்கிகள்ல செலுத்தும் போது, கள்ள நோட்டுகளக் கிழிச்செறிஞ்சுட்டு அத அந்த கோர்ட் ஊழியர் கணக்குல பிடித்தம் செய்யுறாங்களாம்.

இந்தப் பணம் எங்க இருந்து வருதுன்னு பார்த்தா ATM மூலமாவாம். ATM ல பணம் செலுத்துறது நானும் நீங்களும் இல்ல. அந்தந்த வங்கிகள்தானே. அதுவும் நேரடியா இல்ல. இதுக்குன்னு தனி ஏஜென்சி இருக்கு அவங்கதான் ATM நிலவரத்த மானிட்டர் பண்ணித் தேவையான பணத்த செலுத்துறாங்க. அப்ப அங்க செக் பாயிண்ட் வச்சு அதத் தடுக்க வேண்ட்டியதுதானே. அத விட்டுட்டு அப்பாவி ஊழியர்கள பலியாக்குறது என்ன ஞாயம்?

வங்கிப் பணியில் இருக்கும் பதிவர்கள் யாராவது தெளிவு படுத்துங்கப்பா.

*************************************************

வாலி எழுதிய ’நானும் இந்த நூற்றாண்டும்’ புத்தகம் படிக்கிறேன். பரிந்துரைத்த பரிசலுக்கு நன்றி.

ஒரு பெரிய எழுத்தாளர் வாலிய மட்டம் தட்ட நெனைச்சு, ”நீங்க ஏன், வாலின்னு பேர் வச்சுருக்கீங்க” ன்னு கேட்டாரு.

அதுக்கு வாலி, “ எதிராளி ஒருவன் வாலிக்கு முன் வந்து நின்றால், அவனது பலத்தில் பாதி வாலியை வந்தடையும் என்பது ராமாயண வழக்கு. அது மாதிரி எந்த அறிவாளி என் முன்னால் வந்து நின்றாலும் அவரது அறிவில் பாதி என்னை வந்து சேர வேண்டும் என்பதற்காகத்தான்.”

உடனே எழுத்தாளர் கிண்டலா, “ உம்மைப் பார்த்தால் பெரிய அறிவாளி மாதிரித் தெரியலையே?” ன்னாரு.

அதுக்கு வாலி , “என்ன செய்ய இன்னும் நான் அறிவாளி யாரையும் பார்க்கலயே”ன்னாரு.


**************************************************

ஒரு அப்பாவும் பையனும் அவங்க கழுதைய விக்க சந்தைக்குப் போனாங்க.

எதுக்கால ஒருத்தர் வந்து, “என்ன அண்ணாச்சி தூரமோ?” ன்னாரு.

“இந்தக் கழுதைய வித்துட்டு கொஞ்சம் மளிகைச் சாமான் வாங்கலாம்னு” அப்படீன்னாரு அப்பா.

“போறதுதான் போறிய இந்தச் சின்னப் பயல கழுத மேல உக்கார வையுங்க” ன்னாரு.

சரீன்னு பையன கழுதமேல உக்கார வச்சு, கொஞ்ச தூரம் போயிருப்பாங்க, இன்னொருத்தர் சொன்னாரு, “ஏம்பா வயசாளி நடந்துவாராரு, நீ சின்னப் பையன் ஓடுற பாம்ப மிதிக்க வயசுல உக்காந்து வாறீயே?”


அதூம் சரிதான்னு, பையன இறக்கி விட்டுட்டு அப்பா ஏறி உக்காந்துட்டாரு. கொஞ்ச தூரம்தான் போயிருப்பாங்க இன்னொருத்தர் வந்து, “ஒன்னையெவே தாங்குற இந்தக் கழுத கேவலம் இந்தச் சின்னவனையா தாங்காது?” ன்னு ஒரு கொக்கிய போட்டாரு.

பையனும் ஏறிக் கழுதமேல உக்காந்து ஒரு பத்தடி தூரம் போயிருப்பாங்க, பேப்பய கழுத பப்பரப்பான்னு நாலு காலையும் விரிச்சுப் படுத்துருச்சு.

கெட்டுது கதைன்னு ஒரு மூங்கில் கம்பெ எடுத்து கழுதையக் காலைக் கட்டித் தூக்கீட்டுப் போனாங்க.

இது ஒரு கிராமியக் கதை. இதன் பல்வேறு வடிவங்களை வெவ்வேறு சமயத்தில் கேட்டிருக்கிறேன்.

இந்தக் கதையச் சொல்லுங்கன்னு மெயிலனுப்பிக் கேட்ட புதுகை அப்துல்லாவுக்கும், திருப்பூர் சிம்பாவுக்கும் இந்தப் பதிவ டெடிக்கேட் செய்யுறேன் (காசா? பணமா?)


********************************************************

வாழ்க்கையின் பெரிய சுவராசியமே அத வாழ்ந்துதான் தீரனும்கிறது. சில விசயங்கள முன்கூட்டித் தீர்மாணிக்க முடியாம, போற போக்குல அட்ஜஸ்ட் செஞ்சுதான் ஆகனும். புகாரியின் இந்தக் கவிதையப் பாருங்க.

ஓரணி உதைக்கும்
பந்து எதிராளியின்
வலைக்குள் விழுந்தால்
ஒரு புள்ளி
என ஆரம்பமானது
அந்த ஆட்டம்!

ஒருவன் பக்கவாட்டில்
தூரமாய்ச் செல்ல
துரத்தமுடியாமல் திணறினார்கள்
எதிர்முகாம் ஆட்கள்!

கோடுகள் குறிக்கப்பட்டு
எல்லைகள் வரையறுக்கப்பட்டன!

அடுத்ததாய் கால்தடுக்கி
விழவைத்து முட்டியிலும்
நெற்றியிலும் ரத்தப்பொட்டு
வைத்து வெற்றி
தட்டினார்கள்! - நடுவர்கள்
நடுவில் வந்தார்கள்!

கொஞ்சமாய் தவறு
செய்தவன் எச்சரிக்கப்பட்டான்
திரும்பத் திரும்ப
செய்பவன் வெளியேற்றப்பட்டான்!

ஒவ்வொரு தவறிலும்
தப்பிலும் ஆட்டம்
கற்றுக் கொண்டது
புது விதி!

அவ்வாறே வாழ்க்கையும்!

- புகாரியின் 'ஆடுகளக்கோடுகள்


********************************************************

மிஸ்டர் எக்ஸ் கிட்ட டாக்டர் சொன்னாரு,'”உங்க உடம்பு கண்டிசனுக்கு வரனும்னா தினமும் 5 கிலோ மீட்டர் நடக்கனும். இத ஒரு மாசம் பாலோ பண்ணுங்க”.

ஒரு மாசம் கழிச்சு எக்ஸ் போன்ல டாக்டரக் கேட்டாரு, “ டாக்டர் நா இப்ப வீட்டுக்குத் திரும்ப வரலாமா?”.

Friday, September 19, 2008

சார் நான் வேலைய விட்டு நின்னுக்குறேன்

ரேஸ் கோர்ஸ் ஏரியாவில் ஆபிஸ் போடுவதற்ககே ஒரு தகுதி வேண்டும். அதிலும் என் ஃப்ரெண்ட் நல்ல பணக்காரன். பணத்த என்ன பண்றதுன்னு தெரியாம கிரானைட்லயும், மார்பிள்லயும் இழைச்சிருக்கான். எல்லாம் இம்போர்டட் ஃபர்னிட்சர். நம்மள மாதிரி ஆளுகளுக்குத் தாழ்வு மனப்பான்மை வரனும்னே இவ்வளவு செலவு பண்ணுவாம் போல.

பூசாரியிடம் சொல்லி சாமி தரிசனத்துக்கு காத்திருந்தேன். அங்க இருந்த மேகசின்கள வெளிய வேற எங்கயும் பாக்க முடியாது. சுவத்துல இருக்க ஓவியத்தப் புரிஞ்சுக்க, அத வரைஞ்சவருக்கிட்ட டூசன் போகனும்.

பூசாரி அனுமதித்ததும் கதவைத்திறந்து உள்ளேறினேன்.

”டே ராசு, பாத்து ரெம்ப நாளாச்சு?”

“இல்ல தொழில் ஆரம்பிச்ச பின்ன கொஞ்சம் சுத்தரதக் கொறைச்சிட்டேன், அதான்”

“சரி சரி, வராதவன் வந்திருக்கே என்ன சாப்பிடுறே?”

“பிளாஸ்க்குல அண்ணபூர்ணா காப்பி வாங்கி வரச் சொல்லு”

“கோல்டு ஃபில்டர்?”

“இப்ப இல்ல, விட்டுட்டன்”

மணி அடித்து, வந்த பையனைடம் வாங்கிவரச் சொன்னான்.

“சரி சொல்லு. ஏதும் விசயமா வந்தியா?” என்றான் என்னிடம் திரும்பி.

“ஆமா, இரும்பு விலை தினம் தினம் ஏறுது. ஒரு பெரிய ஆர்டர் கையில இருக்கு. மொத்தமா மெட்டீரியல் எடுத்துப் போட்டா கொஞ்சம் லம்பா பாக்கலாம். அதுதான் நீ ஏதாவது?”

“எவ்வளவு?”

“ஒரு அம்பது....இருக்குமா? உனக்கேதும் சிரமமில்லையே”

“அடச்சே, நானே இன்னொரு பிஸினஸ் ஏதாவது பண்ணலாமான்னு இருக்கேன், பேங்கில இருக்கதுதானே. எவ்வளவு நாளுக்கு வேணும்”

“சப்ளை பண்ணா 15 நாள்ல பணம் வந்திரும். ஒரு மாசம்னு வச்சுக்கோயேன்”

“சரி, இருந்து வாங்கீட்டுப் போறயா? இல்ல அப்புறமா வந்து வாங்கிக்கிறியா?”

“இருந்தே வாங்கீட்டுபோறன். அப்படியே சரக்கு எடுத்துட்டுப் போயிடுவேன்.”

இண்டர்காமில் அக்கவுண்டண்டை அழைத்தான்.

வந்தவருக்கு 50 வயது இருக்கும், “நம்ம ராசுக்கு 50,000 தேவைப்படுது. என்னோட SB அக்கவுண்ட்லருந்து எடுக்கனும்.”

“சரவணன இப்பத்தான் P F ஆபீசுக்கு அனுப்ச்சன். வேற யாரு போவான்னு பாத்துச் சொல்றன். செக் எழுதுங்க” என்றார் அக்கவுண்டண்ட்.

அக்கவுண்டண்ட் திரும்ப வந்து, “சார், யாரும் இப்ப இல்ல, எல்லாம் ஃபீல்டுக்குப் போய்ட்டாங்க. நம்ம செல்வத்த அனுப்பலாமா? ஜாய்ன் பண்ணி 2 மாசந்தான் ஆச்சு, அதுதான் யோசிக்கிறேன்”

“பையன் எப்படி? உங்களுக்குச் சரின்னு பட்டாச் செய்யுங்க” என்று சொல்லியபடியே செக்கைக் கொடுத்தான்.

அரைமணி நேரம் இருக்கும், பிள்ளைகளோட படிப்பு, மச்சினிச்சி கல்யாணம், வேறு நண்பர்களைச் சந்தித்த விபரம் எல்லாம் பேசினோன்.

அக்கவுண்டண்டை அழைத்து, “என்ன இன்னும் பையனக் காணோம்?”

“வந்துருவான் சார், ஏதாவது ட்ராபிக் பிரச்சனையா இருக்கும்”

கொஞ்ச நேரம் கழித்து, கார் டிரைவரை அழைத்து, “பைக் ஏதும் இருக்கா? இருந்தா எடுத்துட்டு நம்ம பேங்க் வரைக்கும் போய் வா. புதுப் பையன அனுப்ச்சன் இன்னும் வரல்ல”

அடுத்த கால் மணி நேரத்துக்குள் இன்னும் இருவரை அழைத்துப் பையனப் பத்தி விசாரிச்சான்.

கொஞ்ச நேரத்தில் செல்வம் பணத்துடன் வந்து “ சாரி சார், பேங்க்ல சிஸ்டம் பிராப்ளம் அதுனால கொஞ்சம் டிலே ஆயிருச்சு”

“சரி சரி ஓக்கெ” னு சொல்லி பணத்த வாங்கி எங்கிட்டக் கொடுத்தான்.

கிளம்பும் போது, செல்வம் வேகமாக உள்ளே வந்து, “சார் நான் வேலைய விட்டு நின்னுக்குறேன்” அப்படின்னான். எனக்கு ஒன்னும் புரியல.

“ஏம்பா என்ன ஆச்சு” னு கேட்டான்

”இல்ல சார். எப்பவும் சரவணன் அண்ணந்தான் போவாரு. இன்னைக்கு என்னக் கூப்ட்டு போகச் சொல்லவும் நானும் சந்தோஷப் பட்டேன். நம்ம மேல நம்பிக்கை வைக்குறீங்க. இன்னும் நல்லா வேல செய்யனும்னு முடிவெல்லாம் எடுத்தேன். ஆனா உங்களுக்கு எம்மேல நம்பிக்கை இல்லாம எல்லாத்தையும் கூப்ட்டு விசாரிச்சுருக்கீங்க. எனக்கு இந்த மாதிரி இடத்துல வேலை செய்யப் பிடிக்கல சார்.”

“அட இருப்பா” என்று பையனைச் சமாதானப் படுத்த ஆரம்பித்தான்.

“இல்ல சார். எதுக்கு என்ன நம்பனும், அப்புறம் சந்தேகப் படனும். இதுக்கு நீங்க பேங்க் மேனேஜருக்கு ஒரு போன் பண்ணிக் கேட்டிருந்தா இவ்வளவு கஷ்டம் இல்லையே?” சொல்லிவிட்டு விருட்டென்று வெளியேறினான்.




டிஸ்கி : இந்தக் கதைக்குப் பொருத்தமா ஒரு திருக்குறள் இருக்கு. யாராவது சொல்ல முடியுமா?

அப்டேட் : நமக்கல் சிபி அதச் சரியாச் சொல்லீட்டாரு.

Tuesday, September 16, 2008

கதம்பம் 15-09-08

ஜீவாவின் முந்தைய இரண்டு படங்களும் அவர் மீது ஒரு எதிர்பார்ப்பைத் தோற்றுவித்திருக்க, அவரது தாம் தூம் பயங்கர ஏமாற்றம்.

கதாநாயகன், பாவம் ஓடுகிறார், தாவுகிறார், அடுத்த கட்டிடத்திற்கு பறக்கிறார், தாவுகிறார், ஓடுகிறார். நடு நடுவே கொஞ்சம் காதல் மாதிரி ஏதோ முயற்சிக்கிறார். காப்பி அடித்துப் பாஸ் பண்ணியவன் முதல் முறை வேலைக்குப் போய்த் திருதிருன்னு முழிப்பது போல முழிக்கிறார்.

இரண்டே முகபாவம்தான். டாய்லெட் போகும்முன் இருப்பது, முடிந்ததும் இருப்பது. முதலாவது சீரியஸ் வகைக்கு, பின்னது காதலுக்கு. கொடுமைடா சாமீ.

கதா நாயகி, திருவிழாவில் தொலைந்தவர் மாதிரி என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறுகிறார். நல்ல ஹேன்ட்சம். தமிழ்ப் படங்களில் கதானாயகியாக இருக்க இனிமேல் கீழ்ப்பாகக்த்திலிருந்து கூட்டிவந்தால் ஒரிஜினாலிட்டி இருக்கும். அதெப்படி கதானாயகின்னா லூசாத்தான் இருக்கனும்னு யார் முடிவு பண்ணுனாங்கன்னு தெரியல? அப்பா மாமா எல்லாம் கண்டிப்பான பேர்வழிகளாம் இவர் மட்டும் பொடிப்பசங்களோட கும்மி அடிப்பாராம். அதிலும் அவர் கலரும், டிரசும், முகபாவமும்(?) கொஞ்சம் கூட ஒட்டவில்லை. கருவாட்டுக் குழம்பில் தவறி விழுந்த முந்திரிப் பருப்பு போல.

ஹாரிஸ் 4 ஹிட் பாட்டு் போட்டுட்டமேன்னு தன்பாட்டுக்கு ரீரிக்கர்டிங்க் போட்டுட்டாரு. இது மாதிரி கேவலமான ரீரிக்கார்டிங் இதுவரை நான் பார்த்ததில்லை. படத்துக்கு ரீரிக்கார்டிங் ஒரு மைனஸ். ஜீவா இருந்திருந்தா நல்லா வேலை வாக்கியிருப்பார்.

ஹாரிஸுக்கும் பாட்டுக்கள் படமாக்கப்படும் விதத்துக்கும் ஏழாம் பொருத்தம் போல. ஹிட்டான பாட்டுக்கள் திரையில் பார்க்கும் போது ஒன்னு கொடுமையா இருக்கு இல்லன்னா காமெடியா இருக்கு.

படப்பிடிப்பு மிக ரம்யமாக இருப்பது போதும் என்று ஜீவா முடிவெடுத்து இருப்பார் போல.

***************************************************

இதுக்குப் பரிகாரமா இருக்கட்டும்னு, திலீப் நடிச்ச வேட்டம்-னு ஒரு மலையாளப் படம் பார்த்தேன். (வேட்டம் - வார்த்தை உச்சரிப்பு சரியா?; என்ன அர்த்தம்?) பிரியதர்ஷன் இயக்கம். அருமையான காமெடி. திலீப் முக்கிய வேடத்தில் நடித்திருந்தாலும், மற்ற எல்லோரும் அவரவர் பாத்திரத்தைச் சிறப்பாகவே செய்திருந்தனர்.

காமெடிப் படம்ங்கிறதால லாஜிக்கெல்லாம் பார்க்காம நல்லா எஞ்சாய் பண்ணலாம். மைக்கேல் மதன காமராஜன் படக் கிளைமேக்ஸ் இங்க முக்காவாசிப் படம். ஆள் மாறாட்டம் காரணமா வருகிற குழப்பம்தான் அடிநாதம்.

ஆனாலும் இவ்வளவு பாத்திரங்களையும் வச்சுக்கிட்டு கையாண்டது, நிறைவாகச் செய்தது சாதனைதான்.

***********************************************************

தூர்

வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய நடக்கும்

ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்

கொட்டாங்கச்சி, கோலி, கரண்டி
கட்டையோடு உள் விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே

சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள் என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

பகை வென்ற வீரனாய்
தலை நீர் சொட்டச் சொட்ட
அப்பா மேலே வருவார்

இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க

- நா முத்துக் குமார் - பட்டாம்பூச்சி விற்பவன்


******************************************************

வழக்கமாக வாங்கும் சேவிங் கிரீம் இல்லாததால் வேறு ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன்.

Mrp Rs. 50 என்றிருந்தது.

கீழே பொடி எழுத்தில்,

for combination of two packs.

இரண்டை எடுத்து பில் போட்டு வாங்கி வந்தேன்

இப்படித்தான் நிறைய விஷயங்களில் ஏமாறுகிறோம்.


*****************************************************

அதிஷா வீட்டுக் காது குத்து விழா இனிதே நடைபெற்றது. நம்ம குடும்ப விழாவில் பங்கேற்றது போல் நிறைவாக இருந்தது.

அவர்கள் வீட்டுக்கு வரப்போகும் மருமகனையும் அறிமுகப் படுத்தினார்கள். மனிதர் இயல்பாகப் பேசிப் பழகினார். காது குத்தியபின், சின்னவளுக்குப் போட்டுவிட்ட நகையின் திருகாணி கழண்டு தொலைந்து விட்டது. இனிக் கிடைக்காது என்று எல்லோரும் நம்பிக்கை இழந்து, அவரவர் அபிப்ராயத்தைச் சேர்த்து அறிவுரை சொல்ல ஆரம்பித்தனர்.

குழந்தையைப் போட்டோ எடுத்த இடத்தில் தேடச் சென்றார் மருமகன் சார். எல்லோரும் நின்ற வாக்கில் தேடியதால் கிடைக்கவில்லை. இவர் சட்டெனத் தரையில் அமர்ந்து தேடி எடுத்துத் தந்தார். மற்றவர்களைபோல் வீனாகப் பேசிக் கொண்டிராமல் அவர் செயலில் காட்டியது சந்தோஷமாக இருந்தது. திருமணத்திற்கு முன் ஆண்கள் எல்லோருமே ஷார்ப்பாத்தான் இருந்திருக்கோம்.

மேலும், ஒரு மெகா சீரியலுக்கான கதை எப்படி கிடைக்கிறது என்பது புலனாகியது.

Saturday, September 13, 2008

கோவை வலைப் பதிவர்கள் சந்திப்பு - 14/09/08 (ஞாயிறு)

கோவையில் வலைப் பதிவர்கள் எல்லாம் சந்திச்சு ரெண்டு மாசம் ஆச்சு. மறுக்கா ஒரு சந்திப்பு நடத்தலாமான்னு யோசிச்சா, இன்ப அதிர்ச்சியாக பதிவர் அதிஷா கோவையில இருக்காருன்னு தகவல்.

சரி அவரையே சிறப்பு விருந்தினராக வச்சு ஒரு பதிவர் சந்திப்பு நடத்தீரலாம்னு முடிவு செஞ்சாச்சு.


நாள் : 14/09/08

கிழமை : ஞாயிறு


இடம் : மருதமலை


நேரம் : காலை 10:மணி




இதையே அழைப்பாக கொண்டு எல்லோரும் வாங்கப்பா. அவங்கவங்க முடிஞ்சவரை எல்லாத்துக்கும் தகவல் சொல்லுங்க.

அனேகமா உயர்ந்த இடத்துல நடக்கிற பதிவர் சந்திப்பு இதுவாத்தான் இருக்கும்னு தோனுது. அத சிறந்த பதிவர் சந்திப்பா மாத்த வேண்டியது உங்க வேலை.

ரெடி ஸ்டார்ட் மீஜிக்

Monday, September 08, 2008

அம்மாவுக்கும் அக்காவுக்கும் சண்டை

வீட்டினுள் நுழையும் போதே சின்னவள் ஜாடை காட்டினாள். கை கால் கழுவிவிட்டு டிரஸ் மாத்தும் போது சின்னவள் வந்து சொன்னாள், “ அக்காவுக்கும் அம்மாவுக்கும் சண்டை”

“எதுக்கு?”

“வழக்கம் போலத்தான், நோ சால்ட்” - உப்பில்லாத விஷயம்னு அர்த்தம்.

மெதுவாகச் சமையலறையில் நுழைந்தேன். பெரியவள் தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். நானும் டைனிங் டேபிளில் அமர்ந்தேன். எனக்கும் வந்து விழுந்த தோசையில், கோபத்தின் அளவு தெரிந்தது. இப்ப ஏதும் பேசக்கூடாது என முடிவு செய்தேன்.

அரை மணி நேரம் சென்றிருக்கும். சமையல் மேடையை ஒழித்துவிட்டு வந்தாள் சங்கரி.

“என்னப்பா பிரச்சினை?”

”பின்ன என்னங்க நானும் நாள் தவறாமச் சொல்லுதேன், ஷூவ ரேக்குல வை, டிபன் பாக்ஸ சிங்க்ல போடு, ஷாக்ஸத் தொவைக்கப் போடுன்னு. ஒன்னுகூடச் செய்ய மாட்டேங்கா. ஒரு உதவியும் செய்தது இல்ல.”

”ஆமா நான் வந்ததும் கை கால் கழுவிப் பாலக் குடிச்சிட்டு டியூசன் போகத்தான் நேரமிருக்கு என்னைய என்ன செய்யச் சொல்லுதீங்க?” பெரியவள்.

ரெண்டுபேரு சொல்றதும் சரியாத்தான் இருக்கு.

“இல்லீங்க வயசு 17 ஆவுது. இன்னும் பொறுப்பு வர மாட்டெங்குதுன்னுதான் கவலையா இருக்கு”

“செரி செரி விடு அந்தானிக்கு. எல்லாம் வேண்டிய சமயத்துல வரும்.”

“ஆமா இப்படிச் செல்லம் குடுத்து குடுத்துக் கெடுத்து வச்சிருக்கிய. வேறென்ன நாஞ்சொல்ல. நீங்களாச்சு உங்க புள்ளயாச்சு. அன்னிக்கு அப்படித்தான் எங்க அம்மா வந்திருக்காங்க இவ பாட்டுக்கு கால் மேல கால் போட்டுட்டு கத புஸ்தவம் படிக்கா. எங்க அம்மாதான் காய்கறி நறுக்கிக் கொடுத்தாங்க. என்னத்தானே நல்லா வஞ்சாங்க, உங்களையா?”

கோபத்தின் ரூட் காஸ் தெரிந்தது. ”அந்தக் காலத்துல நாங்க எவ்வளவு வேல செஞ்சோம். எனக்குப் பதினேழு வயசுல உனக்கு அடுத்தவ பொறந்துட்டா” வகை, தலை முறை தாண்டிய, பொருந்தாப் பேச்சு.

தூக்கம் கண்ணைச் சுழட்டியது.

ரு வாரம் கழித்து ஒரு நாள், அதிகாலை 4 மணி இருக்கும், சங்கரி எழுப்பினாள்.

“என்னங்க ஏதும் பெயின் கில்லர் இருக்கா”

“ஏங் கேக்க?”

”வயித்து வலிங்க”

”இன்னும் நாள் இருக்கில்ல”

“அது இல்லீங்க வயிறு குத்திக் குத்தி வலிக்கி”

“கண்ட மாத்திரயப் போட வேண்டாம். சரியாச் சொல்லு எங்கன வலிக்கி?”

மெதுவாகச் சேலையைத் தழையச் செய்து அடி வயிற்றில் தொட்டுக் காட்டினேன்.

“அங்கனதாம், அய்யோ”

“இது செரிப்படாது, ஏதும் கேஸ் ட்ரபுளா இருக்குமா?”

“அது மாதிரி இல்ல. குத்திக் குத்தி வலிக்கி”

“இரு வாரேன்” னு சொல்லி பெரியவள எழுப்பினேன்.

“தங்கம், அம்மாவுக்கு வயித்துவலி, ஹாஸ்பிடல் போகனும். பெரிய கேட்டத் திற. கார்ல போய்ட்டு வாரோம்.”

“சுடு தண்ணி ஏதாவது வச்சுத்தரட்டுமாப்பா?”

“வேணாம்”

ஸ்ரீராம் ஹாஸ்பிட்டல், தூங்கி வழிந்து கொண்டிருந்தது. காரை நிறுத்தி ரிசப்ஷனுக்குப் போவதற்குள் மேலும் வலி அதிகமாகி விட்டது.

“டுட்டி டாக்டர் இருக்காராமா”

“இருக்கார், முதல்ல இந்த பெட்ல படுக்க வைங்க”

நர்ஸ் பல்ஸ் பார்ப்பதற்குள், டாக்டர் வந்துவிட்டார். என்னவென்று சொன்னதும், “நீங்க கொஞ்சம் வெளிய இருங்க”

10 நிமிடம் கழித்து வந்தார். “கல் இருக்கும்னு சந்தேகமா இருக்கு. எதுக்கும் பெரிய டாக்டர் வரட்டும் கேட்டுருவோம். ஒரு ஸ்கேன் எடுத்துக் கன்ஃபர்ம் பண்ணிக்கிடலாம். இப்பதைக்கு ஊசி போட்டிருக்கேன் வலி குறையும். ரூம்ல அட்மிட் பண்ணுங்க.”

கொஞ்ச நேரம் அனத்திக் கொண்டிருந்து விட்டுத் தூங்கிவிட்டாள். செல்லில் பெரியவளை அழைத்து தகவல் சொன்னேன்.

“செரிங்ப்பா, நீங்க அம்மாவப் பாத்துக்குங்க.”

மணி 4:30 சேரில் அமர்ந்தவாறே கட்டிலில் தலை வைத்து தூங்கிவிட்டேன். முழித்துப் பார்த்தால் மணி 7:00. குழந்தைகள் என்ன செய்தனரோ என்ற கவலையில், சங்கரியைப் பார்த்தேன். ஊசியின் தயவில் நல்ல உறக்கத்திலிருந்தவளை எழுப்ப வேண்டாம் என்று, நர்ஸை அழைத்தேன், “ வீடு வரைக்கும் போய் வருகிறேன், அதுக்குள்ள எந்திரிச்சா என் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுங்க”


காலிங்க் பெல் அடித்ததும் பெரியவள்தான் வந்து திறந்தாள். “அம்மாவுக்கு இப்ப எப்படிப்பா இருக்கு?”

“தூங்கிட்டு இருக்கா. உங்களுக்கு டிபனுக்கு என்ன செய்யன்னுதான் வந்தேன்”

“ஒன்னும் பிரச்சினை இல்லப்பா. தோச மாவு எடுத்து வச்சிருக்கேன். சட்னி அரைச்சாச்சு. மதியத்துக்கு தக்காளி சாதம் செஞ்சுடுறேன். ரெண்டு குக்கர் வச்சிருக்காங்க எதுல எப்படின்னுதான் தெரியல. ”

“பெரிய குக்கர எடுத்து வை. இதுல ஒரு டம்ளர் அரிசி தலை தட்டிப் போடு, இந்த சொம்புல ஒரு சொம்பு தண்ணி வை செரியா இருக்கும் ”

“இந்தாங்க இதைக் குடிங்க. பிளாஸ்க்குல அம்மாவுக்குக் கலந்து வச்சிருக்கேன்”

அதற்குள் செல்லில் மிஸ்டுகால் வந்தது. “சரி தங்கம் நான் ஹாஸ்பிடல் போகிறேன். சின்னவள எப்படிக் கூட்டீட்டுப் போற?”

“அம்மா ஸ்கூட்டிய எடுத்துக்கிறன். ஒன்னும் பிரச்சினை இல்ல”

அன்றும் அதற்கடுத்த இரு தினங்களும், அவளேதான் சமையல் வீட்டுப் பராமரிப்பு எல்லாம். நடுவில் அப்பப்ப அம்மாவுக்குத் தேவையானதைக் கேட்டுச் செய்து கொடுத்தாள். இரு நாட்களும் தங்கைக்குத் தேவையானதையும் பார்த்துக் கொண்டாள்.

ஹாஸ்பிடலுக்குத் தன்னைப் பார்க்க வருபவர்களிடம் சங்கரி , “எம் மகள் நலல பொறுப்பா இருக்குதால எனக்கு ஒரு கவலையும் இல்லை” என்று பெருமையாக சொன்னாள்.

ரு வாரம் போயிருக்கும்.

வீட்டினுள் நுழையும் போதே சின்னவள் ஜாடை காட்டினாள். சங்கரி கோபமா இருக்கான்னு அர்த்தம். கை கால் கழுவிவிட்டு டிரஸ் மாத்தும் போது சின்னவள் வந்து சொன்னாள், “ அக்காவுக்கும், அம்மாவுக்கும் சண்டை”

“எதுக்கு?” “வழக்கம் போலத்தான், நோ சால்ட்”

Sunday, September 07, 2008

கதம்பம் - 7/9/08

காமராஜரை தற்பொழுது நாடார் சங்கம் தத்தெடுத்துக் கொண்டது போல் அவரது படம் அவர்கள் சங்க விழாக்களிலும் மற்றவைகளிலும் தென்படுகிறது. ஆனால் நாடார் என்பதற்கு கண்ணதாசன் என்ன பொருள் சொல்கிறார் பாருங்கள்.

சொத்து சுகம் நாடார், சொந்தந்தனை நாடார்
பொன்னென்றும் நாடார், பொருள் நாடார், தான் பிறந்த
அன்னையையும் நாடார், ஆசைதனை நாடார்,
நாடொன்றே நாடித்தன் நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்.


*************************************

இந்த முறை ஊருக்குப் போனபோது உடன் நண்பனொருவனை அழைத்துச் சென்றிருந்தேன். ரெம்ப நாள் கழிச்சுப் போனதால நல விசாரிப்புக் கொஞ்சம் பலம். ஆனா நண்பன்தான் கடுப்பயிட்டான்.

ஆருடே பச்சைமுத்து பேரனா? சும்மாயிருக்கியா?
நல்லா இருக்கேன் பாட்டா
தொழில் எப்படிடே இருக்கு.
நல்லா இருக்குப் பாட்டா.

செரிடே சூதானமா இரு.



ஆரது பேச்சியம்மை மவனா?
ஆமா ஆச்சி.

ஏலே சும்மாயிருக்கியா?

நல்லா இருக்கேம் ஆச்சி
அம்மை சும்மா இருக்கால்லா?
ஆமா ஆச்சி சும்மா இருக்காவ.
சாக்கிரதையாப் பாத்துக்க.


ன்ன மருமகப்பிள்ள தூரமா?
இல்ல மாமா விளை வரைக்கும்.
சும்மா இருக்கியா? பிள்ளியோ சும்மா இருக்கா?

நல்லா இருக்கம் மாமா, பெரியவ காலேஜ் போறா சின்னவ 7 ஆவது.

இதே மாதிரி சும்மா இருக்கியா விசாரிப்புத்தான் அதிகம்.

ஒரு கட்டத்தில் பொறுமை இல்லாமல் கேட்டான், “ஆமா சும்மா இருக்கியான்னா என்னடா?”

”சுகமா இருக்கியா என்பதின் மரூஉ.”

************************************************

நான் சென்ற திருமணம் ஒரு கோவிலில் நடந்தது. திருமணத்திற்கு என் அண்ணன் மகள் கல்லூரியில் படிக்கும் தன் தோழியரை அழைத்து வந்திருந்தாள். அவர்களை எனக்கு அறிமுகப் படுத்திச் சொன்னாள், “எங்க சித்தப்பா நல்லா ஜோக் சொல்லுவாரு. சித்தப்பா இப்ப ஒரு ஜோக் சொல்லுங்க”

ஒருத்தன் சாமிகிட்ட ரெம்ப வேண்டிக்கிட்டு தவம் இருந்தான். சாமியும் அவன் தவத்தை மெச்சி, ”பக்தா உன் பக்தியை மெச்சினேன். உனக்கு 3 வரம் தருகிறேன். உனக்கு வேண்டியதைக் கேள்”

நம்மாளு ரெம்ப நேரம் யோசிச்சான்.

பிறகு கேட்டான், “சாமி, எனக்கு ஒரு பை நிறையக் காசு, எனக்கு ஒரு பெரிய வாகனம், என்னைச் சுற்றிப் பெண்கள் கூட்டம், அம்புட்டுத்தேன்”

சாமியும் ரெம்ப நேரம் யோசிச்சுச் சொன்னார், “ சரி ஒரு 5 நிமிஷம் கண்ணை மூடித்திற”

கண்ணத்திறந்து பார்த்தா நம்மாளு லேடிஸ் பஸ் கண்டக்டர்.

**************************************************

இருப்பு

உங்களுக்கு சாத்தியமாகிறது
நண்பனின் வீடு செல்வதும்
உரையாடுவதும்
நட்பையே சுற்றமாய்
வரித்துக் கொள்வதும்

இருப்பினும்
சுதந்திரக் காற்றின் போதாமை
அவ்வப்போது வெளிப்படத்தான் செய்கிறது.

எங்களை ஒப்பிட்டு
உங்களைப் பாவம் எனும் போக்கு
மிகச் சிறந்த அங்கதம்

அவ்வப்போது கேட்பதுண்டு
என்னகுறை உமக்கென?
சரிதான்.

என்றேனும்
அருகாமையிலிருக்கும்

நெருங்கிய நட்பின்
இறுதி அஞ்சலியில்
பங்கேற்காமல் போனதுண்டா?

ஒரு முறை தவிர்த்துப் பாருங்கள்
உணர்வீர்கள் எங்கள் இருப்பை

நன்றி: "பெருவெளிப்பெண்"
ஆசிரியர்: ச.விசயலட்சுமி
வெளியீடு: மித்ர ஆர்ட்ஸ்& கிரியேஷன்ஸ்


**************************************************


80 கள்ல வந்த பாட்டு ஒன்னு. ரெண்டாவது சரணம் மட்டும் மனசில இருக்கு பல்லவி பிடிபடல. ஓரிரவு நாமக்கல் சிபியுடன் சாட் செய்யும்போது சட்டுனு எடுத்துத்தந்தார். நீங்களும் கேளுங்க. சூப்பரா இருக்கும்.


me: 80களில் வந்த பாட்டுக்கள் பரிச்சயமிருக்கிறதா?
22:46 namakkalshibi: எல்லாப் பாடல்களும் இல்லை
ஃபேமஸ் பாட்டுக்கள் சில தெரியும்
me: ஒரு பாட்டு சரணம் சொன்னால் அந்தப் பாட்டுத் தேடித் தர முடியுமா?
namakkalshibi: டிரை பண்ணலாம்
22:48 me: முதுமை ஒரு நாள் நமை வந்து தீண்டும், மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும். முடியைப் பார்த்தால் முழு வெள்ளை.மடியில் தவழும் மகன் கிள்ளை. நீ ஏந்திக் கொஞ்ச நான் கொஞ்சம் கெஞ்ச, இருக்கும் வரைக்கும் எனை தினசரி அனுசரி.
namakkalshibi: ம் டிரை பண்ணுறேன்
இந்த லிங்க் பாருங்க
22:51 குங்குமச் செங்கமலம்
இள மங்கையின் தங்க முகம்
me: ரெம்ப காலமாத் தேடுனேன். நன்றி சிபி.
namakkalshibi: நன்றி
22:52 எல்லாப் புகழும் கூகிளாண்டவருக்கே
அதுவுமில்லாம பாடும் நிலா பாலு பிளாக் குழுவினருக்கும்
22:53 me: அந்தப் பாட்டுக் கேட்டிருக்கீங்களா?
namakkalshibi: இல்லை இப்பத்தான் கேட்கிறேன்
நல்லா இருக்கு
அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி
22:56 me: சரணம் முடியாமலே மீண்டும் பல்லவி எடுப்பார் பாருங்க சூப்பரா இருக்கும்.
namakkalshibi: ஆமா


Saturday, September 06, 2008

கும்மியும் தொடர் சைக்கிளோட்டமும்





கால ஓட்டத்தில் மறைந்து போனவைகள் பற்றி எழுதுமாறு என்னைக் கோர்த்து விட்டிருக்காங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன்.

சின்ன வயசுல நான் வளர்ந்தது லைன் வீட்டுலதான். மொத்தம் 14 வீடுகள். ஒரு குடும்பத்தில் குறைந்தது ஒரு வயசுப் பெண்ணாவது இருக்கும். அவங்கெல்லாம் சேந்து அடிச்ச கும்மி இன்னும் மறக்க முடியவில்லை.

மாலை மயங்கி இரவு வரும் 6 மணியிலிருந்து 8 மணி வரைதான் கும்மி அடிப்பாங்க. யாரு வீட்டு முன்னாடி அடிக்கிறதுன்னு சாயங்காலமே முடிவு பண்ணிச் சொல்லிடுவாங்க. அவங்க வீட்டுல அன்னிக்கு கொஞ்சம் விசேசமாச் சமைப்பாங்க.

கும்மி மூனு பிரிவா அடிப்பாங்க. முதல்ல, 10-13 வயசுப் பெண்கள், பிறகு 13-20 வயது அதன் பிறகு கல்யாணம் ஆன மற்றவர்களும் கலந்துப்பாங்க. எங்கள மாதிரிப் பசங்க எல்லாம் வீட்டுல சுடு சோறு செய்யச் சொல்லி அடம் பிடித்து எடுத்துச் சொல்வோம். ஒரு நாள் தக்களிச் சாதம் ஒரு நாள் புளிச்சாதம் இப்படி வகை வகையா இருக்கும். அந்தச் சாப்பட்டை நடுவில் வைத்து கும்மி அடிப்பார்கள்.

ஒன்னாந்தேன் திங்களிலே
ஒரு குடம் பூப்பறிச்சு
பூப்பறிச்சு பந்தலிட்டு
பொன்னமான சப்தமிட்டு
வாருங்கடி தோழிகளா
வட்டமிட்டுப் பந்தடிப்போம்
பந்தடிப்போம் பந்தடிப்போம்
பார்வதியைத் தோறகடிப்போம்.

ரெண்டாந்தேன் திங்களில்லே....

என்ற இந்தப் பாட்டு மிகவும் பிரபலம்.

கல்யாணமானவர்கள் பாடுவது கொஞ்சம் தமாஷாக இருக்கும். வார்த்தைகள் ஞாபகம் இல்லை. புதிதாகக் கல்யாணமான பெண்ணைக் கலாய்ப்பது போலவும், உள்குத்தாக வேறு சில விசயங்களைச் சொல்லித்தருவதாகவும் இருக்கும்.

பாடி முடிந்ததும் சாப்பாட்டைப் பகிர்ந்து சாப்பிடுவோம். அதே மாதிரி மத்தவங்க கொண்டுவர சாப்பாடுகளையும் கலந்து கட்டிச் சாப்பிடுவோம். சுவையாக இருக்கும்.

தொலைகாட்சிப் பெட்டி ஏதும் இல்லாத ( 70 களின் ஆரம்பம்) பெண்களுக்கு நல்ல பொழுது போக்கு இந்தக் கும்மி.

கும்மிக்குப் பெண்கள் தயாராவதே ஒரு விழா போல் இருக்கும். எந்தப் பாவாடை
தாவணி, ஜாக்கெட் என்று ஒரே களேபரமாக இருக்கும்.

கும்மி மூலம் எல்லா பெண்களையும் ஒரே இடத்தில் பார்க்கமுடியும் என்பது இளைஞர்களுக்கு ஒரு வசதி. அதன் மூலம் முடிவான திருமணம் ஒன்று; அந்தத் தம்பதியினர் பேரன் பேத்தி எடுத்து இன்றும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

வேற மதிரின்னாலும், இன்னைக்கு வலை தவிர்த்து வேற எங்க கும்மி அடிக்கிறோம்?

இதே போல் 3 நாட்கள் அல்லது 5 நாட்கள் தொடர்ந்து சைக்கிள் ஒட்டுவதும் இப்பொழுது இல்லையெனத் தோன்றுகிறது.

நல்ல மைதானமாகத் தேர்ந்தெடுத்து நடுவில் குழல் விளக்கு அமைத்து, சவுண்ட் சர்வீஸ் ஒன்றும் இருக்கும். பொதுவாக சைக்கிள் ஒட்டுபவரது தம்பியும் மனைவியும் உடனிருப்பர். ஒரு கோமாளியும் சில சமயங்களில்.

சைக்கிள் வித்தியாசமானதாக இருக்கும், சர்க்கஸ் சைக்கிள் போல மட்கார்டு, செயின் கார்டு எதுவும் இல்லாமல் எலும்புக்கூடாக இருக்கும். அதை ஓட்டிக் கொண்டே அவர் செய்யும் சாகசங்கள் ஆச்சரியமளிக்கும். சைக்கிளின் முன் சக்கரத்தில் காலை வைத்து நிறுத்தி தேனீர் சாப்பிடுவது, இரண்டு கைகளிலும்
இரண்டு வாளி நிறைய நீரைத் துக்கிக் கொண்டே ஓட்டுவது.

அவரைத் தவிர மீதியுள்ளவர்கள் ரிக்கார்டு டான்ஸ் ஆடுவார்கள். அந்த நேரம் பிரபலமான பாட்டாக இருக்கும். ஆடலுடன் பாடலைக் கேட்டே என்ற MGR பாட்டு கட்டாயம் இருக்கும். எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது என்ற SPB யின் ஹஸ்கி வாய்ஸில் பாடிய பாட்டும் இருக்கும்.

நகைச்சுவக்காக ரேடியோ நியூசை மாற்றிச் சொல்வர்.

ஆகாசவானி செய்திகள் வாசிப்பது தண்டச்சோத்துக் குண்டுராமன்.

பொள்ளாச்சியிலிருந்து பழனி வந்த லாரி ஒன்று ரோட்டைக் கிராஸ் செய்த பாப்பாத்தி பாட்டி மீது மோதியதில் பாட்டிக்கு இரண்டு போல்ட்டுகள் கட்டாகிவிட்டன. லாரிக்கு எலும்பு முறிவு என்றும் 60 நாட்களுக்குப் புத்தூர் கட்டுப் போட வேண்டும் என்று கூறினார் மருத்துவர், போன்ற வகை.

இரவு 11 மணிவரை நீளும் இந்த விளையாட்டை ஒரு நாளும் 9 மணிக்கு மேல் பார்த்ததில்லை. அப்பொழுதெல்லாம் 9 மணி என்பதே நடுநிசி போலத்தானே.

சிறு பிராயம் என்பதால் ஓட்டுபவரது வலியும் வேதனையும் உணர்ந்ததில்லை அப்போது.

தொடர வெயிலான் மற்றும் தமிழ்ப் பிரியன் இருவரையும் அழைக்கிறேன்.