Saturday, July 31, 2010

குறும்படம் - மஹாதேவன்

.

மதம் மாறியது புரியாமல் ஒரு சிறுவன் ”தின்னூறு இட்டு விடும்மா ”என்று அடம்பிடிப்பதிலிருந்து ஆரம்பமாகிறது குறும்படம். அந்தச் சிறுவனின் அம்மா அவனைப் போட்டு அடிக்கிறாள். சிறுவனின் அக்கா ஆசை ஆசையாக பூ, பொட்டு வைத்துக் கொள்ள முய்ற்சி செய்கிறாள். அந்தக் குழந்தையையும் அடித்து பூவைத் தூக்கி எறிகிறார்கள். அந்த ஊரில் மாரி அம்மன் கோவில் திருவிழா நடக்கிறது. எல்லா சிறுவர்களும் துள்ளிக் குதித்து சந்தோஷமாக கோவிலில் விளையாடிக் கொண்டிருக்க பெந்தேகோஸ்தேவுக்கு மாறிய குடும்பத்தினரின் குழந்தைகள் மட்டும் ஏக்கத்துடன் தொலைவில் இருந்து அவர்களைப் பார்த்தபடி இருக்கின்றன.

இப்படியாக சம்பவங்கள் நடந்து கொண்டிருக்க ஒருநாள் அரசுப் பணி ஒன்றுக்கு தேர்வு நடக்கவிருக்கும் தகவல் வருகிறது. பெந்தேகோஸ்தேவைச் சேர்ந்த ஒருவரும் வின்ணப்பிக்கிறார். இந்து-ஆதிதிராவிடர் என்று இருப்பவர்களுக்கு மட்டும்தான் சலுகை உண்டு. கிறிஸ்தவ-ஆதிதிராவிடருக்கு சலுகை கிடையாது என்று அரசு அலுவலகத்தில் சொல்லிவிடுகிறார்கள். பெந்தேகோஸ்தேவைச் சேர்ந்தவர் இந்து ஆதிதிராவிடர் என்று போலிச் சான்றிதழ் தயாரித்துக் கொடுத்துவிடுகிறார். தாசில்தார் அலுவலகத்தில் இருந்து சோதனைக்கு வரப்போகிறார்கள் என்ற செய்தி அவர்களுக்குக் கிடைக்கிறது.

பெந்தேகோஸ்தேயினர் வீட்டில் இருக்கும் ஏசுநாதரின் படங்கள், காலண்டர்கள், ஸ்டிக்கர்கள் அனைத்தையும் பிய்த்து எறிகிறார்கள். அந்த நேரம் பார்த்து பாதிரியார் அவர்களது வீட்டுக்கு வருகிறார். பிய்த்து எறியப்பட்ட ஏசுநாதர் படங்களை கையில் எடுத்தபடியே அந்த வீட்டுக்காரர்களை கூர்ந்து பார்க்கிறார். அவர்கள் அவமானத்தால் தலை குனிந்து நிற்கிறார்கள்.

"உங்களுக்கு இப்படிச் செய்யறதுல கொஞ்சம் கூட வெக்கமோ வேதனையோ இல்லையா..? கேவலம் ஒரு வேலைக்காக கர்த்தரையே தூக்கி எறிஞ்சிட்டீங்க இல்லியா?" என்று அவர்களைத் திட்டுகிறார்.

"நாங்க காலகாலமா கும்பிட்டு வந்த மாரியாத்தாவையும் மதுரை வீரனையும் எங்க மனசில இருந்தே தூக்கி எறியச் சொன்னீங்களே அது மட்டும் சரிதானா?" என்று கேட்கிறார் திண்ணையில் படுத்திருக்கும் கிழவி.

பாதிரியார் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.


*************************************************************************

இது மஹாதேவன் என்பவரின் வலயில் படித்த ஒரு பதிவு. இது அவர் பார்த்த குறும்படமா அல்லது அவரது கருவா எனத் தெரியவில்லை. குறும்படம் 1, 2,3,4,5 என 5 பதிவுகள் போட்டிருக்கார். ஐந்தும் அருமை.

குறும்படம் ஐந்தைத்தான் முதலில் படித்தேன்(நன்றி - ஹரன் பிரசன்னா) அருமையாக இருக்கு.

Thursday, July 29, 2010

கவலைகளால் கரையும் காலம்

.

பத்தாண்டுக்கொருமுறை வரும் கணக்கெடுப்பு. முப்பதிற்கும் மேற்பட்ட கேள்விகளுக்குப் பதில் வாங்க வேண்டுமென்பதால், இம்முறை மனைவியுடன் துணைக்குச் சென்றேன; விரைந்தவர் முடித்தல் வேண்டி. கேள்விகள் குடும்பத்தினரின் பொருளாதர நிலை குறித்தேவெனினும் அவர்களதை எதிர்கொண்டவிதம் வேடிக்கையாக இருந்தது.

வருமானவரித்துறைக்குத் தகவல் அனுப்புவீரோவெனவும் ஒரு கேள்வி. இன்னுமெதை இலவசமாகத் தர இந்தக் கணக்கெடுப்பெனக்கூட ஒரு வினவல்; வெளித்தொங்குமவர் நாக்கினை உள்ளிழுத்து.

அவ்வீட்டின் இல்லத்தலைவர் கல்லூரியொன்றின் துறைதலைவராக இருந்து ஓய்வுபெற்றவர். இரு மகன்கள். ஒருவர் கலிபோர்னியாவிலும் மற்றவர் இலண்டனிலும். மாதந்தோரும் வரும் பணம் பத்தாதோ என வியக்கும் வண்ணமிருந்ததவர் கேள்வி, “எங்களுக்கு இலவசத் தொலைக்காட்சி என்று கிட்டும்?”

இன்னொரு வீட்டில் இல்லமெங்கும் விதேசிப் பொருட்கள் சூழ சுதேசிகளாய் தலைவரும் இல்லக் கிழத்தியும். இம்மாதம் பார்சலில் வரும் பொருளை வீட்டில் வைக்க இடமேதுமில்லை. கேட்ட கேள்வியோ மூர்ச்சையாக்கியவொன்று, “உயிர் காக்க்கும் உயர் சிகிட்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் அடையாள அட்டை என்று கிடைக்கும்?”

இதுகுறித்து நண்பரிடம் விசனப்பட்டபோது சொன்ன அவரது அனுபவம் இன்னும் வேதனையளிப்பதாக இருக்கிறது.

தமிழகத்தின் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனமது. ஆண்டு விற்றுமுதல் (turn over) இரண்டாயிரம் கோடியைத் தாண்டும். எப்பொழுதும் தொழில்முனைவோரை பேட்டி எடுப்பதை விடுத்து அவர்தம் பெற்றோரை நேர்காணல் செய்தாலென்ன என்றொரு எண்னம் நண்பருக்கு. விரைகிறாவர் கிராமம்தேடி. காத்திருக்கிறார் சிறிது நேரம். காத்திருப்பில் நேரம் கரைய, ஊர் சுற்றிவரக் கிளம்புகிறார். காணவந்தவரைக் காண்கிறார் எதிரே, வெள்ளையும் சொள்ளையுமாக; ஓரடி பின்தொடரும் ஏவலாள் தலையில் அரசு வழங்கிய இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி. “கிடைக்கும்போது வாங்கிடணும் தம்பி” என்றொரு அறிவுரையுடன்.

இலவசங்களினால் கட்டமைக்கப்படும் இச்சமுதாயத்தின் எதிர்காலம் எப்படி அமையும் என்ற கவலைகளால் கரைகிறது காலம்.


Monday, July 26, 2010

கலைடாஸ்கோப் - 26/07/2010

.

நீண்ட நாட்களுக்குபிறகு கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் போயிருந்தேன் குடும்பத்தோடு. பழைய நாகர்கோவில், நெல்லை முகங்களைக் காணவில்லை. இருந்த சிறுவர்களுக்கும் நாம் பேசுவது புரியவில்லை, அவர்கள் பேசுவது நமக்குப் புரியவில்லை.

“தும் பிஹாரிஹே க்யா?” என்றேன் என் உடைந்த ஹிந்தியில்.

“நஹி நஹி ஒரியா” என்கிறான்.

பாதிக்கு மேல் வெளி மாநில ஆட்கள். முன்பெல்லாம் சீருடை அணிந்திருப்பார்கள். பையன்கள் பார்வைக்கு மிகவும் பொடியன்களாக இருப்பதால் சீருடை கொடுத்துச் சிக்கலில் மாட்டவேண்டாம் என விட்டுவிட்டார்கள் போல இருக்கிறது.

வடவள்ளியில் காலை 8 முதல் 9 மணி வரை பாதிக்குப் பாதி வெளிமாநில ஆட்கள் முகம்தான் தென்படுகிறது. இவர்கள் தட்டிப் பறித்த வேலையைச் செய்து கொண்டிருந்தவர்கள் தற்பொழுது எங்கே?

*****************************************************************

”ஒம்மக்கிட்ட நான் என்னத்தச் செல்லியதுக்கு? நாம குடிச்சதுக்கு, வண்டியில கொலேரம் சந்தைக்குப் பெய் அவ சரக்கெடுத்து தந்ததுக்கு, இப்ப வாண்டினதுக்கு எதுக்குமே நீரு நயாபைசா குடுக்கேல. இனிமேலும் கனவாயிட்டே வெறுங்கையோட பெய் நின்னா அவ சீலையை உரிஞ்சி தலையில கெட்டீற்ரு ஆடுவான்னு உள்ள சங்கதி உமக்குத் தெரியாதா?”

மேலே உள்ள உரையாடல் உங்களுக்குப் புரிந்தால் நீங்கள் தயங்காமல் குமாரசெல்வா எழுதிய கயம் சிறுகதைத் தொகுப்பைப் படிக்கலாம். நல்ல சிறுகதைகள், ஆனால் குமரி மாவட்டத்தின் விளவங்கோடு பகுதியில் பேசப்படும் பேச்சுவழக்கில் எழுதி இருக்கிறார்; அச்சு அசலாக. பக்-192-196 வட்டாரச் சொற்களுக்கு விளக்கமும் சொல்லி இருக்கிறார்.

கயம் சிறுகதை நன்றாக இருக்கிறது. கதை, கதைக்குள் கதை, அதற்குள் ஒரு கதை என ஒரு சிக்கலான கதை. குறுவெட்டி என்ற கதையைத் தவறவிடாதீர்கள். தனக்கு பால்வினை நோய் இருக்குமோ என்ற அச்சத்தில் ஆட்படுபவன் எத்தனை மன உளைச்சலுக்கு ஆளாகிறான் என்பதுதான் கதை. அதை வைத்து கம்யூ தோழர் ஒருவர் செய்யும் அரசியல் சிரிப்பை வரவழைக்கிறது.

காலச்சுவடு பதிப்பகம் - விலை ரூ. 150

*******************************************************************

நானும் செல்வாவும் மதராசபட்டிணம் பார்த்தோம். எனக்குப் பிடித்திருந்தது. பீரியட் படம் எடுப்பதன் சிரமங்களைப் புரிந்து கொண்டால் இந்தப் படத்தில் விஜயின் உழைப்பு புரியலாம்.

படத்தில் சில குறைகள் இருந்தாலும் காட்சி அமைப்பிலும், குறிப்பாக எடிட்டிங்கிலும் அதை சரி செய்து விடுகிறார்கள். ஆர்யாவின் உடை விஷயத்தில் கவனம் செலுத்தி இருக்கலாம். மற்றபடி கிராபிக்ஸ் துணையுடன் நன்றாகவே எடுத்திருக்கிறார்கள். என் தனிப்பட்ட அபிப்ராயம் ஜி வி பிரகாஷின் இசை படத்திற்குப் பொருந்தி வரவில்லை என்பதே.

Music should create and complement a mood for the frame என்ற கூற்று நினைவு கொள்ளத் தக்கது.


*******************************************************************

வெக்கை


வெந்து புழுங்கியத்தில்
விசிறியை ஓடவிட்டேன்

வட்டப் படலமாய்த்

தொங்கிச் சுழன்ற
மின்விசிறி இறக்கைகள்
மூன்றாகப் பிரிந்து
ஒன்றை ஒன்று
துரத்தத் துவங்கியதில்
சாயம் போயிருந்த
அந்த இறக்கைகள்
என்னைக் கடப்பதை
எண்ணத் தொடங்கியது காலம்

என்னைச் சூழ அடர்ந்த காற்று

காதோரங்களில் நரை ஏற்றியதில்
பதட்டமாகி விசிறியை நிறுத்தினேன்

வெந்து புழுங்கியது வெளி


அனுஜன்யா எழுதிய கவிதை இது.

சென்ற மாதம் நேரில் சந்தித்தபோது அவரது ஆதங்கம் வெளிப்பட்டது. “அனானிப் பின்னூட்டங்கள்கூடச் சரி அண்ணாச்சி, ஆனால் நான் மிகவும் மதித்த சிலரே அப்படி எழுதியதால் வருத்தமாக இருக்கு” என்றார்.

மீண்டு(ம்) வாருங்கள் நண்பரே.

Friday, July 23, 2010

நான் குரங்கு


நான் குரங்கு.
பானைக்குள் விழுந்து கள் குடிக்கும்குரங்கு.
வாலைக் கண்டு பாம்பென்று பதறும் வழிவந்ததில்லை.
நுனிவாலில் எழுந்து படம் விரிக்கும் பாம்பை
பகடி சொல்லும் குரங்கு.

நான் குரங்கு.
காண்பதையெல்லாம் களவுண்டு தின்றும்
கும்பிக்குள் தடநெருப்பு அடங்காத குரங்கு.

நான் குரங்கு.
நினைவுக் கோளாறால் மதியழிந்த குரங்கு.
எல்லா மரத்திற்கும் தாவி
எல்லா கிளைகளையும் உலுக்கி
எல்லா இலைகளையும் உதிர்த்து விட்ட பின்னும்
நினைவடங்காப் பெருவெறியில்
மண்ணைக்கீறி வேரைக் கடிக்கும் மூடக்குரங்கு.

நான் ஒரு குரங்கு.
தீங்கொன் றறியாத அப்பாவிக் குரங்கு.
ஒடிந்த கிளைகளை ஆட்டிப்பார்க்கும்,
நைந்த கனிகளை முகர்ந்து பார்க்கும்,
உதிர்ந்த இலைகளை அள்ளிக்கொண்டு போய்
மரத்திலேயே ஒட்டப்பார்க்கும் பேதைக் குரங்கு.


நான் ஒரு குரங்கு.
அடிக்கடி ஆப்பில் அகப்பட்டுழலும் அழுமூஞ்சிக்குரங்கு.
மருந்தில்லாக் கொடுநோயால் தாக்குண்ட குரங்கு.

நான் ஒரு குரங்கு.
கரணமிட்டு கையேந்தும் குரங்கு.
மலத்தினும் புழுத்த யாரினும் கடைய இழிக்குரங்கு.

ஆனாலும் நான் குரங்கு.

பானைக்குள் விழுந்து கள்குடிக்கும் குரங்கு.
படம் விரிக்கும் பாம்பை பகடி சொல்லும் குரங்கு.
பெருவெறி மூளும் கடுவளிக்குரங்கு.
ஊழியை வாலில் கட்டி இழுத்து வரும் குரங்கு.
தென் இலங்கை தீக்குரங்கு.
பதின்மதக்களிறு ஓருடலின் உள்ளே புகுந்திட்ட குரங்கு.
நான் குரங்கு...


என்னடா இந்த ஆளு சுயசரிதைக்கவிதை எழுதறானேன்னு யோசிக்கிறீங்களா? இல்லைங்க இது நண்பர் சத்யமூர்த்தி என்ற இசை எழுதியது. கொஞ்சமா எழுதினாலும் நிறைவா எழுதும் ஆள். இவரது பல்சர் கவிதையைப் படிங்க அதிலுள்ள படிமக் குறியீடு அசத்தலா இருக்கு.



Wednesday, July 21, 2010

நமக்கு நாமே குத்து - எப்ப?

.


1) வழக்கமா சூப்பரா சமைக்கிறவங்க, நண்பனைக் கூட்டிட்டு வர்ரேன்னு 2 நாளைக்கு முன்னாடிச் சொன்னதுக்கபுறமும் சொதப்பலா சமைச்சு வைப்பாங்களே, அப்ப.

2) வாஸ்துபடி பீரோ கிழக்க பாக்க இருந்தாத்தாங்க நல்லதுன்னு ஒரு ஞாயித்துக்கிழமை லீவக்கூடஅனுபவிக்கவிடாம நம்ம உயிரை வாங்கிட்டு, வாஸ்து சரியில்லைன்னு ஒரு மாசத்துலயே வீட்டையே மறுபடி தலைகீழா மாத்த முயற்சிப்பாங்களே, அப்ப

3) ரெண்டே ரெண்டு லார்ஜுக்கு பெரிய அலைப்பற பன்ணுவாங்க ஆனா அவஙக அண்ணனோ மாமாவோ ஃபுல் மப்புல அலப்பற பண்ணுறப்ப கம்முன்னு இருப்பாங்களே, அப்ப

4 - அ) குழந்தைகளைக் கூட்டீட்டு எங்கயாவது போலாம்ன்னு ப்ளான் பண்ணுனா அம்மாவாசை, சஷ்டின்னு எதையாவது சொல்லுவாங்களே, அப்ப

4 -ஆ) டூர் முழுவதும் ஆகுற செல்வ அடுத்து 3 மாசத்துக்குச் சொல்லி சொல்லிக் காட்டிட்டே இருப்பாங்களே, அப்ப

5) பட்டுச்சேலை நல்லா இருக்கேன்னு ஒரு ஆளப்பாத்தா குத்தமாய்யா? அது மாதிரி ஒண்ணு வாங்கிக் கொடுக்கலாமேன்னு யோசிக்கிறப்ப, “என்ன ஜொள்ளு”ம்பாங்களே, அப்ப

6)அவங்க அம்மாவோ, அப்பாவோ வரும்போது இருக்கிற குஷி, நம்ம வீட்டு ஆளுக வரும்போது இல்லாட்டக் கூடப் பரவாயில்லைங்க, இந்த இடுப்பு வலியும் மத்த வலியும் அந்த சமயத்துல வந்து உக்காருமே, அப்ப்

7) பையனோ, பொண்ணோ ஆசையா வந்து நம்ம மேல விழுவாங்க அதுதான் நமக்கு ஆறுதலே, ஆனா அப்ப “ஏய் போய் ஹோம் வொர்க்க முடி. என்னவோ பெரிய அதிசய அப்பா”ம்பாங்களே, அப்ப

8) நல்லா அடிக்கிற கலர்ல மேட்சே இல்லாத டிசைனை எடுத்து வச்சுக்கிட்டு நம்மகிட்ட அபிப்ராயம் கேப்பாங்க. நல்லா இருக்குன்னாலும் பிரச்சினை, இல்லைன்னாலும் பிரச்சினை. அந்த மாதிரி சமயத்துல


9) எங்கயாவது ரொமாண்டிக்கான டூர் போயிருக்கப்ப, ஏங்க பால் பைய எடுத்திட்டிங்களா, பாத்ரூம் கதவச் சாத்தீட்டீங்களா? பேப்பர்காரங்கிட்டச் சொல்லீட்டிங்களான்னு நச்சரிப்பாங்க, அப்ப

10) ஆஃபீஸ் விட்டு வீட்டுக்கு வந்து ஏதாவது நாலு வார்த்தை பேசி சிரிச்சு இருக்கலாம்னு பார்த்தா, எப்பப் பாத்தாலும் சீரியல் பாக்குறாங்களே, அப்ப


இதையும் ஒருக்காப் படிங்க






.